Total Pageviews

Friday, November 25, 2011

குடும்ப வன் முறைகள் எங்கு துவங்குகின்றன


குடும்ப வன் முறைகள் எங்கு துவங்குகின்றன… இதற்கு தீர்வு தான் என்ன? மதுரை கே.கே.நகர் ஹன்னா ஜோசப் மருத்துவ மனை மனநல டாக்டர் கவிதா பென் கூறுகிறார்:

ஆண்களில் குடிப்பழக்கம், சந்தேக வியாதி உடையோர் சாதாரணமாக இருப்பர்; நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரியாது. முதற்கட்டமாக மனைவியை தனிமைப்படுத்துவர். எந்த வகையிலும் ஆதரவு கிடைக்காத படி செய்துவிடுவர். அன்பு செலுத்துமாட்டார்கள்; பாராட்டமாட்டார்கள். உடன் பிறந்த ஆண்களுடன் பேசுதல் அல்லது பக்கத்து வீட்டு குழந்கைளை மடியில் வைத்து கொஞ்சினால் கூட சந்தேகப்படுவர்.

யாரிடம் பேசலாம், பேசக்கூடாது, எப்படி ஆடை அணிவது என அனைத்திலும் தனது கட்டுப்பாடுகளை திணிப்பர். பணிபுரியும் இடங்கள் அல்லது வெளியில் பிறர் திட்டுவதை சகிக்க முடியாமல் அவமானமாக கருதி மனைவியிடம் கோபத்தை காட்டுவர். அடி, உதை விழும்.

பின் “இப்படி செய்துவிட்டோமே’ என வருந்தி பாசமழை பொழிவர். இப்படி சில மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் பிரச்னை படிப்படியாக வாரந்தோறும் தலைதூக்கும். விவாகரத்து பெற முயற்சித்தாலும் மிரட்டல் விடுவர். இறுதியில் கொலை செய்வர்; சிலர் தற்கொலையை நாடுவர். இவர்கள் முதிர்ச்சி இல்லாதவர்கள்.

கணவனின் துன்புறுத்தலிலிருந்து தற்காத்துக்கொள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் அடி விழுந்ததுமே தாய் வீட்டிற்கு சென்றுவிட வேண்டும். தனது ஆதரவு வட்டத்தை பெண்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். வக்கிரபுத்தியுடைய ஆண்கள் (ஆன்ட்டி சோசியல் பெர்சனாலிட்டி டிசார்டர்) சமூகத்தின் சட்ட, திட்டங்களை மதிக்க மாட்டார்கள். இவர்கள் முற்றிலும் சுயநலவாதிகள்; ஆனால் தெளிவாக இருப்பர். தனது தேவைக்கு பிறரை பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிவர். இரக்க குணம் அறவே இருக்காது. சிறு வயதில் நாய்வாலில் பட்டாசை கட்டி வெடிக்கச் செய்வர்.

 அடுத்தவர் படும் சிரமத்தை கண்டு ரசிப்பர். 10 முதல் 13 வயதில் பள்ளி வகுப்பை பாதியில் “கட்’ அடித்தல், திருடுதல், புகைத்தல், மது, போதைக்கு அடிமையாதல், புளூபிலிம் பார்த்தல், மாணவிகளை சீண்டுதலில் ஈடுபடுவர். இவர்களுடன் ஒத்த குணமுள்ள சிலர் சேர்ந்துவிட்டால் விளைவுகள் படுமோசமாக இருக்கும். இவர்களை திருத்துவது கடினம்.

இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. வக்கிரபுத்தி கொண்ட பெண்களிடம் ஆளுமை குறைபாடு (பெர்ஸனாலிட்டி டிஸார்டர் – personality disorder) இருக்கும். 12 முதல் 15 வயதில் மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்கான செயல்களில் ஈடுபடுவர். தாய்மை இவர்களுக்கு ஒத்துவராது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை பின்பற்றமாட்டார்கள். மன அழுத்தம், போதைக்கு அடிமையாவர். தற்கொலை செய்துகொள்ள கைகளை கத்தியால் வெட்டிக்கொள்வர்; தூக்க மாத்திரைகளை சாப்பிடுவர். தான் செய்வதுதான் சரி என நினைப்பர். அறிவுரைகள் பிடிக்காது. சமூகத்தில் வெறும் 5 சதவீதமே உள்ள இவர்களை திருத்துவது கடினம்.

இவற்றை எல்லாம் தவிர்க்க குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை வளரும் போதே வக்கிரத்துடன் வளர்கிறது. குழந்தைகளை பொறுப்புள்ளவர்களாக மாற்ற சிறுவயதிலிருந்தே பெற்றோரின் கண்காணிப்பு, கண்டிப்பு அவசியம். ஆடம்பரமாக வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

 தாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் “டிவி’, இன்டர்நெட் பார்க்க அனுமதிக்க கூடாது. யாருடன் பழகுகிறார்கள், பிள்ளைகளுடன் பழகும் நண்பர்கள் யார், அவர்களது குடும்ப பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment