Total Pageviews

Monday, July 22, 2013

நேர்காணலை எதிர் கொள்ளும் போது செய்யக்கூடாத விஷயங்கள்



வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றி கரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.
இவ்வாறான கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த நிலையான நேர்காணலை எதிர் கொள்ளும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் சில தவறுகளை செய்ய நேர்ந்தால் அது நமது பணிவாய்ப்பை பாதித்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் எந்த முக்கிய தவறுகளை செய்யக்கூடாது என்பதை தருவதே இந்த படைப்பின் நோக்கம்.
1. போதுமான தயாரிப்பின்மை: பணி வாய்ப்பாளர்களால் பெரிதும் வெறுக்கப்படும் தவறு இதுதான். ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் தங்களிடம் நேர்காணலை எதிர்கொண்டு வேலை தேடி வரும் ஒவ்வொருவரும் போது மான தயாரிப்புகளுடன் தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவே முனை கிறார்கள். அதனால் வேலை தேடுபவர்கள் இதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர வேண்டும். உங்கள் பணியின் தன்மை, பணி வாய்ப்பாளர் பற்றிய விபரங்கள், எதிர்பார்க் கப்படும் கேள்விகளுக்கான தயாரிப்புகள் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
2. தாமதமாக செல்லுதல்: ஒரு நேர் காணலுக்கு தாமதமாக வருவது பணி வாய்ப்பாளரால் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கப்படும். நமது தாமதத்திற்கு என்னதான் காரணங்களை கூறி நியாயப்படுத்த நாம் முயன்றாலும், அது நமது பணி வாய்ப்பை பாதிக்கும். எனவே நேர்காணலுக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்.
3. பொருத்தமற்ற உடை அணிதல்: ஒரு நேர்காணல் அறைக்குள் நாம் நுழையும் போது நம்மைப்பற்றிய முதல் பதிவை நமது ஆடைகளே செய்கின்றன என்பதை கவனத்தில் வைக்கவும். இதன் பின்னரே நமது திறமை, தகவல் பரிமாற்றத்திறன் போன்ற இதர விஷயங்கள் உள்ளன. அதனால் உங்களுக்கு மன நிறைவைத் தரும் பொருத்தமான உடைகளை மட்டுமே அணியவும்.
4. உங்கள் ஊதியத்தைப் பற்றி பேசத் தயங்காதீர்கள்: இன்றைய வேலை தேடுபவர் களில் பலரும் தங்கள் ஊதியம் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். அதே போல் இது தொடர் பான கேள்விகள் உங்களிடம் எழுப்பப்பட்டால் அவற்றுக்கு எப்படி பதில் சொல்வது என்பதிலும் போதுமான தயாரிப்புகள் கட்டாயம் தேவைப் படும். நாம் பதில் தேடும் தொழில் அரங்கில் நடப்பில் உள்ள ஊதிய விகிதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடியான பதில்களைத் தருவது நல்ல பயன் தரும்.

மருத்துவர்கள் தினம் ஜுலை 1




மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் இறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தி யாவில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவர் பி.சி.ராய் (பிதான் சந்திர ராய்), பீகாரில் உள்ள பான்கிபூரில் 1888ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர். மருத்துவ படிப்பை முடித்து விட்டு, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2ஆவது முதல்வராக பதவி வகித்தார்.

1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண் டுகள் காங்கிரஸ் முதல்வராக தொடர்ந்து இருந்தார். பி.சி.ராய் சுதந்திர போராட்ட வீரராக மட்டும் இல்லாமல், சிறந்த மருத்து வராகவும் சேவை புரிந்துள்ளார். ஏழை,எளிய மக்களுக்காக பல மருத் துவமனைகளை தொடங்கினார்.

பி.சி.ராய் முதல்வராக இருந்த போதும், எழை,எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என்று பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார். இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப் படுகிறது. பி.சி.ராய் தனது 80ஆவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி இறந்தார்.

அவரது நினைவாகவே அந்த நாளை மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கடைபிடிக்கிறோம்.

கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் வெடித்து எண்ணெய் சிதறும் ஏன்?



கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் பலத்த சத்தத்துடன் வெடித்து எண்ணெய் சிதறும். அதே நேரத்தில் கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இது ஏன்? எண்ணெய் கொதிக்கும் போது அதன் வெப்பம் 150 டிகிரி சென்டி கிரேடுக்கும் அதிகமாக இருக்கும். தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி சென்டிகிரேடு தான்.

இதனால் தான் கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் துளி பட்டதும் அதன் வெப்பம் அதிகரித்து உடனடியாக ஆவியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது தண்ணீர் சூடாகி ஆவியாவது ஆயிரம் மடங்கு வேகத்தில் நடைபெறுகிறது. இந்த திடீர் மாற்றம் காரணமாக கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் பட்டதும் அது சிதறி வெடிக்கிறது. இதற்கு காரணம் தண்ணீரின் கொதிநிலையை விட எண்ணையின் கொதிநிலை அதிகம்.

இதனால் தண்ணீரில் படும் எண்ணெய் மிக விரைவாக ஆவியாவது இல்லை. எனவே தான் தண்ணீரில் எண்ணெய் கொட்டினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.

Thursday, May 9, 2013

காந்திஜி


காந்திஜியைப் பற்றி அனைவரும் பெரிய அளவில் எழுதி விட்டார்கள். அவருடைய சுயசரிதை போதும் அவரைப் பற்றி சொல்வதற்கு, இன்றும் சுயசரிதைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது காந்தியுடைய சுய சரிதை (சத்திய சோதனை) தான். பெயரே பாருங்கள் சத்திய சோதனை. அதுவும் அவரே கைப்பட எழுதியது அதை படிக்குபோது சில சமயங்களில் மெய் சிலிர்க்கும் என்பார்களே அதை அனுபவிக்கலாம்.

எல்லோரும் அவரை மகாத்மா என்கின்றனரே ஏன்? -  ஒரு சின்ன நிகழ்ச்சி,

காந்திஜி ஒரு சமயம் ரயில் வண்டியில் ஏறும் சமயம் அவர் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்து விட்டது. அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா தன்னுடைய மற்றொரு காலின் செருப்பை கழற்றி அந்த தண்டவாளங்களுக்கிடையே வீசிவிட்டார். அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு இந்த வண்டி புறப்பட்டவுடன் இங்கே இருக்கும் செருப்பை எடுத்து செல்பவன் எப்படி பயன்படுத்துவான் அவன் உபயோகபடுத்த மற்றொரு செருப்பு தேவையல்லவா அதனால் தான் மற்றொரு செருப்பை வீசினேன் என்றார். அதாவது அந்த சமயத்திலும் அவரின் சமயோசித செயல் வியப்புக்குரியதே.

அதே போன்று காந்திஜி அவர்கள் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அங்கிருந்த ஏழை விவசாயிகள் ஒரேயொரு துண்டினை மட்டும் கட்டி வேலை செய்வதை கண்டவுடன் நமது நாட்டில் இவ்வளவு பேர் மேல்சட்டையில்லாமல் இருக்கிறார்கள் நான் மட்டும் எதற்கு இப்படி மேலாடை தரிக்க வேண்டும் என்று மேலாடையை உதறித் தள்ளினார், ஆனால் இதே காந்திஜி இங்கிலாந்தில் வக்கீலாக வேலை பார்க்குபோது பட்டுத் தொப்பி கணுக்கால் உறை (பேன்ட்) தரித்து கையில் ஒரு பிரம்பும் வைத்து இளவரசனாகவே இருந்து வந்தார். அவர் தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக இருக்கும்போது ஆண்டுக்கு 15000 டாலர் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால்  அதையெல்லாம் விட்டு நம் நாடு இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது அது சுதந்திரமடைவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இந்தியா வந்து சத்தியகிரகம் என்ற உயர்ந்த ஆயுதத்தை கையில் எடுத்து சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தையே ஒரு ஆட்டம் காட்டி அவர்களை இங்கிருந்து ஓட்டி நாமெல்லாம் இவ்வாறு நடக்கவேண்டும் என்று நம்மை வழி நடத்திசென்ற அந்த ஆத்மாவை மகாத்மா என்று கூறுவது நியாயந்தானே.

Tuesday, April 23, 2013

பூம்புகார் – தமிழ்ப் பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்





சுமார் 11 500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1,800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்ட பூம்புகார் நகரின் அழகிய தோற்றத்தை, புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன், பிரமாண்ட ஓவியமாகத் தீட்டி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்.  "டிரை பேஸ்டல்' எனும் வண்ணக் கட்டிடங்களை கொண்டு, 12 அடி நீளம், 6 அடி அகலமுள்ள காகிதத்தில், இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில், பூம்புகாரின் அன்றைய காட்சிகளை இலக்கிய நயத்தோடு மிகப்பெரிய ஓவியமாகத் தீட்டியுள்ளார்.

பூம்புகார் நகரின் பிரதான வீதி, வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள் உள்ளிட்டவை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.மேலும், சாலையோர கடைகளும், கடலில் நங்கூரமிட்டுள்ள வர்த்தக கப்பல்களும், பரபரப்பான பண்டக சாலைகள் என ஓவியக் காட்சிகள் நீள்கிறது. ஓவியத்தின் இடதுபுறம் சோழ மன்னரின் யானையும், அருகில் பாதுகாப்புக்காக அரேபிய குதிரையில் யவன வீரர் செல்லும் காட்சியும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நெடிய அகன்ற வீதியில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறு தேசத்தவர்கள் தமிழர்களுடன் நடந்து செல்வதும், அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த சதுக்க பூதம் (நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது) என, பூம்புகாரின் எழிலான காட்சிகளை ராஜராஜனின் ஓவியம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கு, "டிரை பேஸ்டல்' ஓவியம் தீட்டும் நுட்பத்தையும், இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கும் முறையைக் கற்பிற்கும் நோக்கிலும் இந்த பூம்புகார் நகர ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மூன்றாமாண்டு ஓவிய பட்டப்படிப்பு வகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.

பூம்புகாரை கலைக் கண்களோடும் வரலாற்றுப் பார்வையோடும் காணச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு, ஒரு நாள் மாலைப்பொழுது இனிமையானதாக அமையும்.

நாகப்பட்டணம் மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ளது பூம்புகார். சீர்காழியிலிருந்து 21 கி.மீ. தூரம். மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ. தூரம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பூம்புகாருக்கு வரலாம். காரில் வருபவர்களுக்கு பயணம் மேலும் வசதியாக இருக்கும்.

மாலை 4 மணியளவில் பூம்புகாருக்கு வந்தால் கலைக்கூடம் உள்ளிட்ட ஒவ்வொரு கட்டடத்தையும் ரசித்துவிட்டு, 6 மணியளவில் கடற்கரைக்கு வரலாம். அந்தி சாயும் பொழுதை கடல்காற்றுடனும் அலைகளுடனும் கழித்துவிட்டு உற்சாக மனநிலையுடன் திரும்பலாம்.

பூம்புகாருக்கு அருகே தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மயிலாடுதுறை நகரத்தில் தங்குவதற்கு பல ஹோட்டல்கள் உள்ளன.

மழையும் வெயிலும் அதிகமில்லாத ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணிப்பது சிறப்பு.

கடல் கொண்ட நிலப்பகுதிகளால் தமிழகம் இழந்தவை ஏராளம்.

1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாளன்று வீசிய புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகால 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால்  ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான வர்கள் பலியாயினர். சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்பவர்கள் தனுஷ்கோடி வரை போட்மெயில் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குச் செல்வது அன்றைய வழக்கம். அந்த போட்மெயில் எக்ஸ் பிரஸையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது, அந்த ஆழிப்பேரலை.  கடல் கொண்ட தனுஷ்கோடியில் இன்று எஞ்சியிருப்பது, சிதிலமடைந்த ஒருதேவாலயமும் சிலகட்டிடங் களும் மட்டுமே.

புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகம் கண்ட ஆழிப்பேரலையை அறிவோம். 26-12-2006-ல் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் தொடங்கி, அந்தமான்-நிகோபர் தீவுகளின் இந்திரா முனை வழியாக தமிழகக் கடற்கரையைத் தாக்கிய அந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தின் 1000 கி.மீ. நீள கடலோரப்பகுதிகளில் பெரும்பாலானவை பெரும் பாதிப்புக்குள்ளாயின. ராமேஸ்வரம், திருச்செந்தூரைத் தவிர மற்ற கடலோரப் பகுதிகளில் பெரும் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டன.  பல மீனவ கிராமங்கள்  மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகளற்றுப் போயின. தமிழகத்தின் கடல் எல்லைகள்  இயற்கையின் கரங்களால் திருத்தியமைக்கப்பட்டன.

இப்படித் திருத்தியமைக்கப்படுவது நெடுங்கால மாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில பகுதிகள் கடலுக்குள் சென்றதுபோல, சில பகுதிகள் கடலிலிருந்து வெகுதூரம் சென்றிருப் பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்னை கடற்கரையின் மணற்பகுதி கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்திருப்பதாக நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு கடலோரமாக இருந்த சீர்காழி தற்போது கடற்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் உள்ளடங்கியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியின் ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலிருந்து சத்தியவேடுவரை காணப்படும் கடலால் உரு வாக்கப்பட்ட மணல் திட்டுகளும், நேராகப் பாயும் பாலாற்றில் செங்கல்பட்டுக்கு அருகே காணப் படும் திடீர் வளைவும், கடலைச் சந்திக் காமல் திருவெண்ணைநல்லூர் அருகே புதையுறும் மலட்டாறும், வேதாரண்யத் திலிருந்து திருத்துறைப்பூண்டிவரை காணப்படும் மணல் திட்டுகளும், வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்களும் இங் கெல்லாம் ஒருகாலத்தில் கடல் இருந்தது  என்பதைக் காட்டுவனவாக இருக்கின்றன என்கிறது, ஆய்வு முடிவு.

சுமார் 65ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் தாழ்ந்ததால் தமிழகமும், இலங்கையும் ஒரே நிலப்பரப்பாகச் சேர்ந்திருந்தன என்றும், சுமார் 27ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும், தமிழகமும் பிரிந்தன என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 17ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இதேபோல கடல் மட்டும் தாழ்ந்தும், உயர்ந்தும் மாறுபாடுகளை உருவாக்கியதால் தமிழக-இலங்கை நிலப்பரப்பு சேர்ந்து-பிரிய வேண்டிய சூழல் மறுபடியும் ஏற்பட்டது, என்கின்றனர்.  இப்படி இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. இராமர் இலங்கைக்குச் செல்ல, அனுமன் கட்டிய பாலம் என்று சொல்லப் படுவது இந்த மணல் திட்டுகளைத்தான்.

புவி அமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அண்டார்டிகா-க்ரீன்லாந்து-ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்தால், தாழ்வான கடற்கரையைக் கொண்டி ருக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பல மூழ்கடிக்கப்படுமாம். இந்த எச்சரிக்கை,  தமிழகத் தின் கடலோர வரைபடம்- இயற்கையின் கைகளால் மீண்டும் திருத்தியமைக்கப்படும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வொரு கடற்கோளும் மண்ணோடு சேர்த்து பண்பாட்டு-வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் தமிழகம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குள்ளாகிறது. இயற்கையைச் சிதைக்காமல் வாழும் கலையையும் கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியையும் கைக்கொண்டால், முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் காப்பாற்றலாம்.

பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியதென்றும், இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது என்றும், மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது என்றும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதல்-இடைச் சங்கங்களை வளர்த்த தென்மதுரையும், கபாடபுரமும் கடலுக்கு இரையானதால் தமிழின் தொன்மையான நூல்கள் பல அழிந்து போயின. மருத்துவம், வானியல், கணிதம், அறநெறி என ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்களை கடல்தாய் தன்னகத்தே கைப்பற்றிக்கொள்ள, நிலத்தோடு சேர்த்து பல சிந்தனை வளங்களின் குவியலையும் இழந்தாள், தமிழ்த்தாய். இன்று தமிழர்களிடம் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் கடைச்சங்கம் அமைந்திருந்த இன்றைய மதுரையிலிருந்தும் சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களுமேயாகும் என்கின்றனர், புலவர் பெருமக்கள்.

அன்றைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள், காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி  போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார். சோழர்களின் ஆட்சிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந் நகரத்தைப் பற்றி சிலப்பதிகாரம்,  பட்டினப்பாலை, மணி மேகலை ஆகிய நூல்கள் விவரித்துக் கூறுகின்றன. பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்ட நகரத்தில் சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் என பூம்புகார் நகரத்தின் எழிலை விளக்கும் பட்டினப்பாலை- அந்த எழிலை கடற் கரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. கிரேக்கத் திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் வருகைதரும் வணிகர்களோடு கடல்வாணிபம் நடத்தும் சிறப்பைப் பெற்றிருந்திருக்கிறது அன்றைய பூம்புகார்.

நான்காம் கடற்கோளில் பூம்புகார் நகரத்தை கடல்கொண்டதை கிரகாம் குக் என்ற ஆய்வாளர் வீடியோ படமாகவே எடுத்திருக்கிறார். மொழி ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் இப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்பதை கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ படங்கள் நிரூபிக்கின்றன. மீனவர்களின் உதவியுடன் இந்திய நிலவியல் வல்லுநர்களால் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் இருப்பதும் மண் மற்றும் கல்லால் செய்யப்பட்ட கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர்கள், முற்றங்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், பெரிய குதிரைவடிவ பொம்மைகள் ஆகியவை படம் பிடிக்கப்பட்டுள்ளன என்று கிரகாம் குக் தெரிவிக்கிறார். கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வல்லுநர்களுக்கு கிரகாம் குக்கின் வீடியோ படம் புதிய அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத் திருக்கிறது.

தமிழர்களின் நாகரிக சிறப்பின் அடையாளமாக விளங்கிய பூம்புகாரை மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில், தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1973-ல் தற்போதைய பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டை யும் விளக்கும் நினைவுச் சின்னங்களை உரு வாக்கினார். எழு நிலை மாடம், நெடுங்கல் மன்றம், மகர தோரணவாயில், இலஞ்சி மன்றம், கொற்றப்பந்தல், பாவை மன்றம் என இலக்கி யங்கள் காட்டும் பூம்புகாரை சிற்பி கணபதி ஸ்தபதியின் துணையுடன் அமைத்தார். பண்பாட்டு- நாகரிகச் சின்னமாக  பூம்புகார் கலைக் கூடம் விளங்குகிறது. முதல்வர் கலைஞரின் பெருமுயற்சி, இன்றைய தலை முறையினருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத்தைப் புரிய வைக்கிறது. அதேவேளையில், கடலில் மூழ்கிய பூம்புகார் குறித்து மேலும் பல கடலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால்; மேலும் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும்.

Thursday, April 18, 2013

திருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா?

ஒன்றரையடி  குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர்  திருவள்ளுவர்.இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும் , கருத்துகளை மக்களுக்காக தந்தவர்.

 
 
திருவள்ளுவர் சிலை உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு  மட்டும்  நான்கடியில் ஒரு பாட்டு  எழுதியுள்ளார் . யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவி க்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின்  துணைவியாரின்  பெயர் வாசுகி அம்மையார்.

 

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு விமர்சனமும் செய்ததில்லை.ஏனெனில் அவர்  கணவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்ததே காரணம். தனது கணவர் செய்யும் எந்த செயலும் நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும் என்று  நினைத்தவர். தனது  கணவர் உணவு உண்ணும் போது ஒரு சிறிய ஊசியினை கையில் வைத்திருப்பார். அவர் உண்ணும் போது கீழே சிந்தும் உணவு பருக்கையினை அந்த ஊசியின் மூலம் குத்தி பின்பு தண்ணீர் நிரம்பிய குவளையில் போடுவார். பின்பு தண்ணீரினை வடித்து விட்டு பின்பு அதனை தனது சாப்பாட்டுடன் கலந்துகொள்வார். இதற்கான காரணத்தை  அந்த அம்மையார் தனது  கணவராகிய திருவள்ளுவரிடம், தாம் இறக்கும் தருவாயில்  தான்  கேட்டு  தெரிந்துகொண்டார்.

திருவள்ளுவரின் இல்லத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தார். பின்பு  இருவரும்  பழைய சாதம் உண்டனர். அப்போது வள்ளுவர் தனது  மனைவி வாசுகியிடம்  "சாதம் சூடாக உள்ளது விசிறிவிடு" என்றார்.

நாமாக இருந்தால் " பழைய சாதம் எப்படி சுடும் " என்ற கேள்வியினை கேட்டிருப்போம்.

ஆனால் வாசுகி அம்மையார் அதுபோன்று எந்த கேள்வியினையும் கேட்கவில்லை கணவரின் சொல் படி விசிற ஆரம்பித்துவிட்டார்.  இதனால் அம்மையார் ஏதும் அறியாதவர் என்ற அர்த்தமில்லை, தனது கணவர் கூறினால் அதில் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்குமமென நம்பினார். வள்ளுவர் இதன் மூலம் நிருபித்தது என்னவெனில் வாதம் செய்யாமல் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தனது துணைவியார் பெற்றிருந்தார் என்பதே.

வாசுகி அம்மையார் ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளுவர் அவரை அழைத்தார். உடனே அம்மையார் கிணற்றுக்கயிற்றினை  விட்டுவிட்டு சென்றார். ஆனால் அந்த கயிற்றுடன் கூடிய குடம் கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால் நிச்சயம் அந்த கணவன் பாக்கியசாலி தான். இப்படிப்பட்ட வள்ளுவரின் துணைவியார் வாசுகி அம்மையார் ஒருநாள் உடல்நிலை குறைவால் இறந்துபோனார்.

இந்த உலகிற்கே தனது குறள்  வரியின் மூலம்  பலம் சேர்த்தவர்
  

          " நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

            பெருமை  உடைத்துஇவ் வுலகு "                                                                         

என்ற குறள் மூலம்  அறிவுரை வழங்கிய  தெய்வப்புலவர் தனது மனைவி வாசுகியின் பிரிவினை தாங்காமல் கலங்கிவிட்டார்.

இந்த குறளின்  பொருள் என்னவெனில் " நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகிற்கே பெருமை" என்பதாகும். ஆகையால் அம்மையாரின் பிரிவினை அவர் இயற்கையின் நியதியாக எடுத்துக்  கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்மையாரின் பிரிவினை தாங்காமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே 

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி 

பின்தூங்கி  முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ]ய் 

என்  தூங்கும்  என்கண்  இரவு" 

-  என்று அவரின் பிரிவை  நினைத்து நாலுவரி  பாட்டெழுதினார். இந்த பாட்டு வரியின் பொருள் என்னவெனில்

" அடியவனுக்கு இனியவளே!  அன்புடையவளே ! என் சொல்படி நடக்க தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே ! பின்  தூங்கி முன் எழுபவளே! பேதையே!  என் கண்கள் இனி எப்படிதான் இரவில் தூங்கப் போகிறதோ! " என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.

எவ்வளவு  அருமையான இல்லறத்தை வாசுகி அம்மையார் நடத்தியிருந்தால், அவ்வளவு பகுத்தறிவு சிந்தனையை தந்த வள்ளுவர் அவரின் பிரிவுக்காக வருந்தியிருப்பார்.

 

இன்றைய காலங்களில் தேவையில்லாத சிறு சிறு காரணங்களால்  கணவன்,மனைவி இடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு,வாக்குவாதம் பெருகி திருமண முறிவு  ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இன்று எதனை விவாகரத்து வழக்குகள் உள்ளன நமது குடும்ப பெருமையினை நீதிமன்றங்களில்  விவாகரத்து என்ற பெயரில் புதைத்து  விடுகின்றோம்.  இது தேவையா?


 


"மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

 எனைமாட்சித் தாயினும் இல்" - குறள்-52

வள்ளுவர்,வாசுகி அம்மையாரின் வாழ்க்கையினை நமது மனதில் நிறுத்தி

குறைந்தபட்சமாவது ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.

நன்றியுடன்
நா சுரேஸ்  குமார்   
 

Friday, April 12, 2013

இமயமலை ஆழ்கடலுக்குள் இருந்ததா ?

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.

உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

நமது உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.

ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.

பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்' பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு' நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.

நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல்கொண்டுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.

இதேபோல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இநëதப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.

இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

Friday, March 29, 2013

மாபாவியோர் வாழும் மதுரை

சங்கரதாஸ் சுவாமிகள் மதுரையில் நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் “மாபாவியோர் கூடி வாழும் மதுரை” என்று ஒரு வசனம் வந்தது.


இதைக் கேட்ட ரசிகர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்தனர். கற்களையும், நாற்காலிகளையும் வீசி எறிந்தனர். பெரும் அமளி ஏற்பட்டது.

இதை உணர்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் மேடையில் ஏறினார். அனைவரையும் அமைதியாய் இருக்கும்படி வேண்டினார். யாரும் கேட்கவில்லை.

”முதலில் “மாபாவி” என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்கள்.

உடனே சுவாமிகள், “முதலில் மாபாவி என்பதற்கு விளக்கம் தருகிறேன். அது தங்களுக்கு சரியாகப்படவில்லையென்றால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்” என்றார்.

ரசிகர்கள் சற்று அமைதியானார்கள்.

பின் அதை சுவாமிகள் விளக்கினார்.

“மா” என்றால் மலைமகள், “பா” என்றால் கலைமகள், “வி” என்றால் திருமகள். ஆக வீரம், கல்வி மற்றும் செல்வம் கூடி வாழும் மும்மாடக் கூடல் என்பதைத்தான் மாபாவி என்றோம்.

கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.