Total Pageviews

Sunday, February 26, 2017

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் !



பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகிவிடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால்,

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் கோயிலைப்பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில்கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்துகொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள்  மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்துவிடுகிறது!

Friday, February 24, 2017

மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்

ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம்
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம்
திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

"பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், 


எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?" 


மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்

ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான். இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார். சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.

எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை
ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான்
கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!

கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட...
அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.

இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

Thanks to Malathi.C

கடல் !




கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.

பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு. தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.

நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.

சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு.

வாழ்வியல் நீதி!

எமதர்மராஜன் ஒரு குருவியை
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த
கருடபகவான்,

உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.

அந்த பொந்தில் வசித்து வந்த
ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில்
அந்த குருவியை விழுங்கிவிட்டது.

குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த
குருவிக்கே எமனாகி விட்டோமே என்று
கருடபகவான்,

குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்"

நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம்,

அந்த குருவி சில நொடிகளில்
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்
வசித்த ஒரு பாம்பின் வாயால்
இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது;

அது எப்படி நிகழப் போகிறது?
என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்.

அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.

வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ
அது நிகழ்ந்தே தீரும்.
அதனால்
அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல்,
செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே
வாழ்வியல் நீதி!

நேர்மையை விதையுங்கள்...

நேர்மையை விதையுங்கள்...

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால், நிறுவனத்தின் பொறுப்பை தன்னிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லாரும் தன் அறைக்கு வருமாறு உத்தரவிட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் நான் வைக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்களே அந்த அரியனையை அலங்கரிப்பர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கு ஒன்று கொடுக்கிறேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரமிட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம், இதே நாள் எடுத்து வந்து என்னி டம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் அடுத்த எம்.டி. என்றார்.

அனைவரும் விதையை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்னதையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் சென்றது.

நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்துவிட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ராமு. ஆனால், தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் உருண்டோடிவிட்டது.

எல்லாரும் முதலாளியிடம் பூத்தொட்டியை காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போக மாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.

செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்கு கொண்டு வந்தான். அவனுடன் பணிபுரியும் ஊழியர்களின் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள். உங்களில் ஒருவர்தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகிறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வையிட்டார்.

ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான். அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்தபடியே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உர மிட்டு தண்ணீர் விட்டதை விலா வாரியாக சொன்னான். முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டு கொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பினான். நான் உங்களுக்கு கொடுத்த விதைகள் அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds].

அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்.

ஆகவே, 

***அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

***நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்..!

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது! நேர்மையை விதையுங்கள்! பதவியும் பணமும் தேடிவரும்.

Thanks to Malathi.C

"கன்னிகாதானம்" என்றால் என்ன?

"கன்னிகாதானம்" என்றால் என்ன?


வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...

மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் !

வாழ்க்கை போதனை.....



வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
 

தேவைக்கு செலவிடு........
 

அனுபவிக்க தகுந்தன அனுபவி......
 

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......
 

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
 

போகும்போது எதுவும் கொண்டு 

செல்லப்போவதுமில்லை......
 

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .
 

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
 

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....
 

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.
 

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......
 

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....
 

உன் குழந்தைகளை பேணு......
 

அவர்களிடம் அன்பாய் இரு.......
 

அவ்வப்போது பரிசுகள் அளி......
 

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
 

அடிமையாகவும் ஆகாதே.........
 

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
 

பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை 

கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
 

இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
 

அதைப்போல
 

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
 

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
 

உன் சொத்தை தான் அனுபவிக்க,
 

நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
 

வேண்டிக் கொள்ளலாம்
 

பொறுத்து கொள்.
 

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
 

கடமை ,அன்பை அறியார்
 

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
 

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,
 

ஆனால்......
 

நிலைமையை அறிந்து
 

அளவோடு கொடு
 

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
 

கை ஏந்தாதே,
 

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
 

வைத்திராதே
 

நீ
 

எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
 

காத்திருப்பர்.
 

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
 

தரவேண்டியதை பிறகு கொடு.
 

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,
 

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் 

வதங்காதே.....!!!
 

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......
 

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..
 

நண்பர்களிடம் அளவளாவு.
 

நல்ல உணவு உண்டு.....
 

நடை பயிற்சி செய்து.....
 

உடல் நலம் பேணி......
 

இறை பக்தி கொண்டு......
 

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி 

மனநிறைவோடு வாழ் இன்னும்......
 

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக 

ஓடிவிடும்...!!
 

வாழ்வை கண்டு களி...!!
 

ரசனையோடு வாழ்.....!!
 

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!
 

பொறுமையைவிட மேலான தவமுமில்லை
 

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
 

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை
 

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை
 

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்
 
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

அற்புதமான வாழ்க்கை போதனை.....

 
இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,

 
சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!