Total Pageviews

Monday, April 20, 2026

தஞ்சை பெரிய கோயில் !

 

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."

என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...

இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

படித்ததில் பிடித்தது

10 வகையான கணவர்கள் ! உங்கள் கணவர் இதில் எந்த வகை ?

 1: பேச்சிலர் கணவர்

 மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கித்துவம் தராதவர்.

2: அமிலக் கணவர்

எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.

3: அடிமை கணவர்

ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.

4: சராசரி கணவர்

பெரும்பாலான பெண்ணுக்கும் அமையும் கணவர் இவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும் மேலும் பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம்.

5: உலர் கணவர்

மிகவும் உலர்ந்த மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்குவதில்லை. ஊடல் இல்லை. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.

6: சந்தர்ப்ப கணவர்

மனைவியை பிரச்சனை தீர்பவராகப் பயன்படுத்துகிறார், அவரிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவின் பலவீனங்களை பயன்படுத்துவார்.

7: ஒட்டுண்ணி கணவன்.

சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லை மற்றும் வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவுவதில்லை.

8: குழந்தை கணவர்

பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு, ஏதாவது தவறு நடந்தால் எப்போதும் உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ ஓடிவிடுவார்.

9: வருகை பதிவேடு கணவர்:

பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காதவர்.

10: அக்கறையுள்ள கணவர்

அக்கறையும் அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.

இப்போது உங்களுக்குத் தெரியும்,

உங்கள் கணவர் எந்த வகை என்று !

Saturday, April 18, 2026

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த #சும்மா.

 

சும்மா ‌படிச்சி தான் பாருங்களேன்..

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த #சும்மா.

அது சரி சும்மா என்றால் என்ன?

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா..

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1 . கொஞ்சம் சும்மா இருடா?

( அமைதியாக/Quiet)

2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது!

(அருமை/in fact)

4. இது என்ன சும்மா கிடைக்கும்னு

நினச்சியா?

(இலவசமாக/Free of cost)

5. சும்மா கதை அளக்காதே?

(பொய்/Lie)

6. சும்மா தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்.

(உபயோகமற்று/Without use)

7. "சும்மா "சும்மா" கிண்டல் பண்ணுறான்.

(அடிக்கடி/Very often).

8.இவன் இப்படித்தான்.. சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பான்.

(எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன்.

(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை சும்மா தான் இருக்கிறது.

(காலி/Empty)

11.சொன்னதையே சும்மா சொல்லாதே.

(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் சும்மா போகக் கூடாது.

(வெறுங் கையோடு/Bare)

13. சும்மா தான் இருக்கின்றோம்.

(சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் சும்மா ஏதாவது உளறுவான்.

(வெட்டியாக/idle)

15.எல்லாமே சும்மா தான் சொன்னேன்.

(விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் சொல்லும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது.

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்

😏😏😏

Monday, April 13, 2026

நடிகர் விஜய்யை ஏன் பலர் வெறுக்கிறார்கள்?

விஜய் அவர்கள் சினிமாவில் அறிமுக ஆக பெற்றோர்கள் தேவைபடுகிறார்கள்.

விஜய் வளரும் போது ரஜினிகாந்த் தேவை படுகிறார்.

விஜய் தோல்வி பெரும் போது, அவரை ஊக்குவிக்க விஜயகாந்த் தேவை படுகிறார்.

விஜய் வளர்ந்த பிறகு தற்போது அரசியலுக்கு எம்ஜிஆர் தேவைபடுகிறார். இவர் முதல்வர் ஆனால் எம்ஜிஆர் கூட விஜய்க்கு தேவைப் பட மாட்டார் என்பதே நிதர்சனம்!!

ஆக மொத்தம், விஜய் என்னும் குதிரை வெற்றி பெற பலர் திரைக்கு பின்னால் உழைக்கிறார்கள்.

விஜய் வைத்திருக்கும் தளபதி பட்டமும் சரி, தற்போது ஆசைப்படும் சூப்பர் ஸ்டார் பட்டமும் சரி, ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமானது!

விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ரஜினிகாந்த் பாணி தான். விஜய் அவர்களுக்கு என்று தனிப்பட்ட பாதை இல்லை. சுயமாக சொல்ல ஒன்றுமில்லை!!

விஜய் அவர்கள் நல்ல நடிகர், அபாரமான உழைப்பு இதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் அவருடைய நன்றி மறந்த செயல்பாடுகளும் சுயமாக பாதையை உருவாக்காமல், ரஜினிகாந்த் பாதையை பின்பற்றி தற்போது நான் தான் தலைவர், சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களை உசிப்பிவிடுவதும், குட்டி கதைகள் சொல்வதும் தான் அவரை வெறுக்க காரணமாக இருக்கிறது!!

விஜயின் நடனம் பிடிக்கும் அவ்வளவே!!

இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை இந்த படமாக தான் இருக்கும்!!

நடிகர் விவேக் !

 

சினிமாவுலகில் எந்த வலுவான பின்புலமும் இல்லாத சாமானியர்களும் திறமையிருந்தால் நுழைய முடியும், தாக்கு பிடித்து வெற்றி பெறலாம் என்று இன்னமும் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும் நம்பிக்கை விதையை விவேக் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் விதைத்தவர்.

  • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். வகுப்பில் அடிக்காத லூட்டியில்லை.
  • மதுரை மக்களுக்கே உரிய லந்து, டைமிங் சென்ஸ் இவரிடமும் இருந்தது, கொஞ்சம் அதிகமாகவே..
  • சரியாக K.பாலசந்தரிடம் சென்று அடைக்கலம் ஆனார்.
  • கவுண்டமணியும் செந்திலும் கொடி கட்டி பறந்த காலம்.
  • Intellectual Comedy என்பது மக்களுக்கு தெரியாத நிலையில், மெல்ல மெல்ல ஒரு நகைச்சுவை கலைஞன் மனம் தளராது முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
  • சுற்றுசூழலை பாதுகாக்க, ஒரு கோடி மரங்கள் நடுவதை இலக்காக கொண்டு தீவிரமாக இயக்கம் நடத்தி வந்தார்.
  • கலாமின் தீவிர ரசிகர். கலாமுடன் இவரது பேட்டி மிகவும் கேஷுவலாக இருக்கும்.
  • சாலமன் பாப்பையா, பரவை முனியம்மா, பட்டிமன்றம் புகழ் ராஜா போன்றவர்கள் திரை துறையில் நுழைய ஒரு காரணியாக இருந்தார்.

நாகேஷ், மனோரமா, விவேக் இவர்களுக்குள் என்ன ஒற்றுமை தெரியுமா?

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலை தான்.

  • பிற நடிகர்கள் தங்கள் முக தோற்றத்துக்கு மேக்கப் போடுவார்கள்.
  • நகைச்சுவை கலைஞர்கள் மட்டும் தங்கள் மனசுக்கு மேக்கப் போட்டுக் கொண்டு தங்கள் சோகங்கள் வெளியே தெரியாதவாறு பிறரை மகிழ்விப்பார்கள்.

துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது

மக்கள் மனம் போலே பாடுவேன் நானே!

என் சோகம் என்னோடு தான்!

டெங்கு காய்ச்சலில் தன் அருமை மகனை வாரி கொடுத்து விட்டு, அதிலிருந்து மீண்டவர் போல தம்மை காட்டிக் கொண்டார்.

"எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்?"

இவர் சொன்னது வெறும் நகைச்சுவை வசனமல்ல. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தவை.

பொது வெளி என்றும் பாராமல் இவர் மகன் இறப்புக்கு வந்திருந்த அஜித் கதறி அழுதார். சில விஷயங்களை சிலரால் தான் உணர முடியும்.

"இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" - வாழ்க்கையின் நிதர்சனத்தை ஒரு வரியில் சொன்ன வசனம் இது.

இவர் நடத்தி வந்த மரம் நடும் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருவதே நாம் இவர்க்கு செலுத்தும் உண்மையான மரியாதை.

நடிகர் முரளி !

 

முரளி என்கிற நடிகர் நடித்து 'பூவிலங்கு' வந்த போது முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் கவரது இயல்பான நடிப்பு. இயல்பு என்றால் வாழ்க்கையின் வாசலுக்கு அருகிலே நிற்பது.

பூவிலங்கு படத்தில் எம்.எல்.ஏ மகன் என்கிற ஆணவத்துடன் அவர் திமிராக நடப்பதும் பின் காதலில் விழுந்து தந்தைக்கு எதிராக மாறுவதிலும் அவரிடம் உண்மைத்தன்மை இருந்தது. தன் தந்தையோடு உதவி இயக்குனராக இருந்து அவர் கற்ற பாடம் அந்த அழகான நடிப்புக்கு உதவி இருக்கலாம்.

ஆனந்தம் படத்திலேயே பாருங்கள். சகோதரர்கள் எல்லோரும் கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பார்கள். முரளி கேரக்டர் மட்டும் உண்மையாக இருக்கும். மளிகைக்கடையில் வேலை செய்து மளிகைக்கடை வாடையுடன், பழைய மளிகைக்கடை விளம்பர பனியனை அணிந்து கொண்டு அண்ணன் சொல் பேச்சு மீறாத தம்பி. பின் மனைவி பேச்சை கேட்டு தனியாக கடை வைப்பது என முரளி மனித வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக பிரதிபலித்திருப்பார்.

புதுவசந்தம் படத்தில் நான்கு பேர் நடித்திருந்தாலும் முரளி ஒருவர் மட்டும் நடிப்பில் நம்மை கரையச்செய்வார்.

பாலம் படத்தில் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் கோபக்கார இளைஞனாக அவர் தமிழ் சினிமாவில் செய்த ரீ-என்ட்ரி மகத்தானது. பாலம் மாதிரியான ஒரு படம் அன்றைய புதுமுக இயக்குனரின் அட்டகாசமான முயற்சி.

இதயம் படத்தில் காதலை கடைசி வரை சொல்லாமல் அவர் தவிக்கும் போது படம் முழுக்க நாமும் தவித்துப்போய் விடுவோம். அந்தக்காதல்கள் இன்று இல்லை.

அதர்மம் படத்தில் வீரப்பனின் தம்பியாக அவர் வந்த போது அந்த கிராமத்து கேரக்டருக்கு முரளி நன்றாக பொருந்தி இருந்தார்.

முரளிக்கு தொடக்கம் முதலே ஒரு ஆச்சர்ய நிகழ்வு தமிழ்சினிமாவில் நிகழ்ந்தது. அது முரளிக்காக டியூன் கம்போஸ் செய்து இளையராவே பாடியது. ராஜாபின்னணிப்பாடிய நடிகர்கள் என லிஸ்ட் போட்டால் அதில் முரளி முதலில் நிற்பார். 'ஆத்தாடி பாவாட காத்தாட(பூவிலங்கு)', 'ஒரு ஜீவன் அழைத்தது'(கீதாஞ்சலி), 'பூமாலையே தோள் சேரவா?(பகல் நிலவு)', மாதுளங்கனியே (சாமி போட்ட. முடிச்சு), பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா(இதயம்), 'என் பாட்டு என் பாட்டு'(பூமணி) என பெரிய லிஸ்ட்டே போடலாம்.

ராஜாவின் பாடல் உணர்வுகளை தன் முகத்தில் அழகாக பிரதிபலித்து நடித்த நடிகர்களில் முரளி முதலில் வருவார். பூந்தோட்டம் படத்தில் ஒரு பாடல் மிக அழகு. 'வானத்தில் இருந்து குதிச்சி வந்தேனா?' நல்ல ராஜாபாடல்.

நடிகர் முரளி மறைந்தது ரசிகர்களுக்கு பெரிய இழப்பு என்பதை விட தமிழ்த்திரையுலகுக்கே பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

முரளியின் காலங்களில் கூட இருந்த மோகன், பிரபு, கார்த்திக் இவர்களை விட முரளி அதிக சம்பளம் வாங்கவில்லையென்றாலும் ஒரு விஷயத்தில் முரளி தான் நம்பர் ஒன்.

எந்த இணை, துணை இயக்குனரும் நேரடியாக சென்று கதை சொல்லி இயக்குனராக ப்ரமோஷன் பெற வேண்டுமானால் முரளி வீட்டு கதவை தட்டலாம். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் ஏராளம். இதனால் வேறு வேறு பார்வையுடைய திரைப்படங்கள் வரத்தொடங்கியது அப்போது.

இன்று எல்லா நடிகர்களும் வெற்றி பெற்றவரின் பின்னால் தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். முரளி இருந்திருந்தால் நிறைய இயக்குனர்கள் வந்திருக்கலாம்.

தன் சொந்த தந்தை சித்தராமலிங்கையாவையே தமிழில் அறிமுகப்படுத்திய சிறப்பு முரளிக்கு உண்டு.

பூவிலங்கு - அமீர்ஜான்

பகல்நிலவு - மணிரத்னம்

மனோஜ்குமார் - மண்ணுக்குள் வைரம்

வளையல் சத்தம் - ஜீவபாலன்

மீண்டும் மகான் - உத்தமன்

நினைவு சின்னம் - அனுமோகன்

புதுவசந்தம் - விக்ரமன்

பாலம் - கார்வண்ணன்

சிலம்பு - நேதாஜி

நானும் இந்த ஊரு தான் - சேகர் ராஜா

நம்மஊரு பூவாத்தா - மணிவாசகம்

இரவு சூரியன் - நாதன்

பூமணி - களஞ்சியம்

காலமெல்லாம் காதல் வாழ்க - பாலு

ரோஜாமலரே - ஜெயமுருகன்

மனுநீதி - தம்பி ராமையா

ஆனந்தம் - லிங்குசாமி

பாணா காத்தாடி - பத்ரி வெங்கடேஷ்

இதயம் - கதிர்

தினந்தோறும் - நாகராஜ்

சுந்தரா டிராவல்ஸ் - தாஹா.

கனவே கலையாதே - கௌதமன்.

அதர்மம் - ரமேஷ்

எங்கராசி நல்ல ராசி - ரவி-ராஜா

அறிவு மணி - எம்.ஏ.கென்னடி

காமராசு - பி.சி.அன்பழகன்

அள்ளி தந்த வானம் - அருண்பிரசாத்

கண்ணுக்கு கண்ணாக - தயாளன்

ஊட்டி -அன்வர்

ரத்னா - இளஞ்செழியன்

மஞ்சுவிரட்டு - வளையாபதி

மணிக்குயில் - ராஜவர்மன்

அவள் மெல்ல சிரித்தாள் - ஜெய்சுந்தர்

சிறையில் சில ராகங்கள் - ராஜேந்திரகுமார்

நாங்கள் புதியவர்கள் - இளங்கோவன்

நானும் இந்த ஊரு தான் - சேகர்ராஜா

90 படங்களே நடித்தாலும் பல டைரக்டர்களை திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவருக்கு அப்படி ஒரு ராசி இருந்தது. முரளி இன்னும் வாழ்ந்திருக்கலாம்.

...


Monday, April 6, 2026

“சைவத்தை இழந்த மதுரை”

சைவத்தை இழந்த மதுரை”

சாப்பாடுன்னா மதுரை தான்யா! அதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க. அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நம்பினா மாதிரி. விதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டா கடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ் பெற்ற ஊரு தான். 

கறிதோசை, நண்டு ஆம்லெட், அயிரைமீன் குழம்பு வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை. சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியா? இல்ல மதுரை மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறிட்டாங்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை..

வித விதமான சைவ உணவு வகைகளிலும் ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் மதுரை தான் டாப்.. உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போது மதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடு எனும் நேதாஜி ரோட்டில்..

மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும் சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல அத்தெருவெங்கும் மணக்கும். அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லி போன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும்.. 

தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும் வெங்காய சட்னியும், முறுகலான நெய் ரோஸ்ட்டும், ஆனியன் ரவா தோசையும், சூடான பூரியும், வெண்ணை போன்ற கிழங்கு மசாலாவும் பொன்னார் மேனியன் போல உளுந்தை அரைத்திசைத்த தங்க நிற உளுந்து வடையும், நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடா! அதிகாலையில் மீனாட்சி அம்மனை கையெடுத்து தரிசிக்க நிற்கும்..

அதே கூட்டம் தரிசனம் முடிந்த கையோடு மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து கால் கடுக்க நிற்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தில் நிற்க விருப்பம் இல்லாதவர்கள் மேலமாசி வீதி உடுப்பி ஓட்டலுக்கு படையெடுப்பார்கள். அதிகாலையில்  நெய் ஒழுக, வறுத்த முந்திரி திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சு நிறத்தில் அவர்கள் தரும் கேசரியே ஆஹா ரகம்.

இதனால் தான் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டென நம்பிவிடலாம். ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம், ஒரு ஃபில்டர் காபி, இந்த மூன்றை மட்டுமே காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவிலேயே அதை ருசித்து வாழ்கின்றன. 

உடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும். சாம்பாரைக் கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு அந்த காலத்தில் மாடர்னும், உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தன. எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர். மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது.. 

உடனிருந்த ஷேவாக் போல அதிரடி காட்டியது. கோபு அய்யங்காரின் நெய் மினு மினுக்கும் ரோஸ்ட், ஜீரா போளி, வெள்ளையப்பம், மிளகாய் சட்னி வகைகள் தனித்துவம் மிக்கவை. இந்த உணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம். பட்டணம் பக்கோடா..

காரக்கறி கிழங்கு, மிளகு சேவு, சீரணி, தவள வடை, இனிப்பு அப்பம், முட்டாசு, நெய் இட்லி சாம்பார், மெது போண்டா, கீரை வடை இப்படி மதுரையின் புகழ் பெற்ற சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்! சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளி, லெமன், புளியோதரை, வெண் பொங்கல் மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே பிரத்யேகமாக, 

சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும் மஹால், அலங்கார் தியேட்டர், தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள் துவங்கி அதில் சில இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றன. இத்தனை உணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில் சத்தமே இல்லாமல் மேலகோபுரத் தெருவில் மதுரை நாக்குகளை சமோசா, கச்சோரி, வித விதமான.. 

சப்பாத்தி வகைகள், சப்ஜி, அஜ்மீர் மசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடுத்து தன் வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலா ஸ்வீட்ஸ். பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும் உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில் வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த ‘ஆரியபவன்’ உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லி வாலா. 

ஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் ஸ்வீட்டுகளில் அல்வா, லட்டு, மைசூர்பாக், ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரை மக்கள் ஞானம் பெற்றனர். ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர். பட்டிக் காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானது. இட்லி, பொங்கல், தோசை என்று வழக்கம் போல இல்லாமல்..

ஆலு சப்பாத்தி, கீரை சப்பாத்தி, அவித்த முள்ளங்கி சப்பாத்தி என சப்பாத்திகளில் மட்டுமே பல வகை. பாலிலேயே அரிசியை வேக விட்டு பால் பொங்கல்,  அரைத்துவிட்ட சாம்பார், பெசரட் தோசை & உப்புமா, செட் தோசை கேரட் குருமா, பாண்டிய நாட்டில் சோளாப்பூரி & சென்னா புரோட்டா நவரத்ன குருமா என்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பல வகையான உணவுகளை அறிமுகப்படுத்தியது! 

இதுவரை ஸ்வீட் காரம் காபி எனில் உடுப்பியின் கேசரியும், வெள்ளையப்பமும், ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள் இப்போது பாஸந்தியும், சமோசாவும், மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு ஆதரவளித்தனர். ஆரியபவன் ஸ்வீட்ஸ், செயின் ஓட்டல்கள் என விரிவடைந்து ஆரியபவன் பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது! 

நவரத்தின குருமாவும், மில்க் பரோட்டாவும், பால் பொங்கலும், சாம்பார் வடையும், தயிர் வடையும், ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவா தோசையும், ஆந்திர பெசரட் தோசையும் அதற்கு உப்புமாவும், கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தன. சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும். 

1989இல் ஒரு அன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்! நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரை அப்படி அத்தனை மெனுக்கள். இடையில் இதே உடுப்பி தங்கள் கடையை ஆரியபவனிடம் தந்து விட்டு தமது கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஆரிய பவன் தங்களது மதிய மீல்ஸ் செக்‌ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள் தம் வெற்றிக் கொடியினை..

பசி போக்க பறக்கவிட்டனர். மதுரையில் ஆரிய பவன் எனும் கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் கீழச் சித்திரை வீதியில் இருந்த மனோரமா ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் கீதா கஃபே, வடைகளுக்கு புகழ் பெற்ற KBS, வசந்த பவன், பரசுராம், குருபிரசாத் என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவ ஓட்டல்கள் மினுக்கிட்டன.

டவுன் ஹால் ரோட்டில் பழைய தங்கம் தியேட்டர் போகும் வழியில் சைடு வகிடு எடுத்தது போல இருக்கும் இடம் ‘காக்கா தோப்பு’ அங்கே ஶ்ரீராம் மெஸ் ஒரு குறிப்பிடத்தக்க சைவ சாப்பாடு ஓட்டல்! மதுரையர்களின் சாப்பிடும் கெப்பாசிட்டி பற்றி நன்கு அறிந்து இருந்தும் தைரியமாக 90களில் 25 ரூபாய்க்கு அன்லிமிடெட் வெரைட்டிகளுடன் அன்லிமிடெட் மீல்ஸ் தந்த உணவகம். 

கிரேப் ஜூஸில் துவங்கி இறுதியில் தரும் பாயாசம் வரை அத்தனை வெரைட்டிகள். வடை, இரண்டு பொரியல், இரண்டு கூட்டு, அவியல், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், அப்பளம் & ஊறுகாய் கூட அபாரமாக இருக்கும். ஶ்ரீராமில் சாப்பிட்ட திருப்தி என்பது சொல்லில் புரியாது. அதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும். அந்த ஹோட்டல் இருக்கும் தெருவில் ஜெய் ஶ்ரீராம் எனும் கோஷம்..

சாப்பிட்ட ஒவ்வொருவரின் திருப்தியான ஏப்பமாக அந்தத் தெருவெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இத்தனைக்கும் ஆரியபவனுக்கும் ஶ்ரீராமுக்கு இடையேயான இடைவெளி 700 அடிகள் கூட இருக்காது. சைவத்தில் கோலோச்சிய உடுப்பி ஓட்டல் போலவே ஆரியபவனின் வெற்றிக் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கியது. அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லை. 

மாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறது. கோபு அய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சரணடைய ஹோட்டல் மனோரமாவும் இப்போது இல்லை.  இன்று மதுரையில் சபரிஷ், டெம்பிள் சிட்டி, நடிகர் பரோட்டா சூரியின் அம்மன் & அய்யன் போன்ற உணவங்கள் பேருக்கு இருந்தாலும், அந்த காலத்து உடுப்பி, மாடர்ன் போல அல்லது.. 

அன்றைக்கு சுனாமியாய் வந்த ஆரியபவன் போல உயர் தரமான சைவ ஓட்டல்களோ அல்லது வித விதமான ருசி மிகுந்த புதிய சைவ மெனுக்களோ மதுரையில் அருகிவிட்டது. கோவை போல பாரம்பரியம் மிக்க சிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு தேர்ந்த தொழில் முறையான ஓட்டல் கடை மதுரை மாநகரில் தற்போது இல்லவே இல்லை. இதுவே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்.

விடுபட்டு போனவை : சோலைமலை தியேட்டர் அருகேயிருந்த கெளரி கிருஷ்ணா, கோரிப் பாளையம் கிங் மெட்ரோ & குயின் மெட்ரோ, பீபீ குளம் நாராயணா, திடீர் நகர் பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அசோக் பவன்.. மஹால் ரோட்டில் இருந்த வாஸன் டிபன் ஹோம்.. பெரியார் கீஷ்டுகானம் எதிரில் வசந்த விஹார், அண்ணா பஸ் ஸ்டாண்ட் இராஜேஸ்வரி,, டவுன் ஹால் ரோட்டில் இருந்த சரஸ்வதி.. 

{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள் இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்}

 🟣மீள்பதிவு🟣

நடிகர் பிரசாந்த் !

 

நடிகர் பிரசாந்த் அவர்களை தான் மிகவும் பரிதாபமாக நடிகராக பார்க்கிறேன்!!

தனது முதல் படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கும் போது வயது 17 தான். மருத்துவம் படிக்கவே ஆசைப்பட்டார் அவரது தந்தை தியாகராஜன் அவர்கள், ஆனால் பிரசாந்த் அதற்குள் நடிகராகி புகழ் பெற்று விட்டார்.

பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த முதல் இளம் நடிகர் பிரசாந்த் மட்டும் தான். அதேபோல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என வேற்று மொழி திரைப்படங்களில் நேரடி கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதுவும் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்திலும், ஒரு பாடலில் ஏழு உலக அதிசயங்களுடன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களுடன் ஆடிய உலகில் ஒரே நடிகர் பிரசாந்த் மட்டும் தான், இன்று வரை அது எட்டாம் அதிசயம் தான்!!

90களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார் பிரசாந்த் அவர்கள். இளம் கதாநாயகிகளுடன் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்திய இளம் கதாநாயகன் பிரசாந்த் மட்டும் தான். இளம் கதாநாயகர்களில் முதன் முதலில் பெண் வேடம் போட்டு நடித்தவர் பிரசாந்த் அவர்கள் தான். அதேபோல் காதல் இளவரசனாக திரைப்படத்தில் காதல் கவிதை பேசி நடித்திருந்தாலும் காதல் கிசுகிசுக்களில் சிக்காத நடிகர் பிரசாந்த் மட்டும் தான்.

தனது திரைப்படங்களில் காதலியை பார்த்து ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன், என்று உருகி உருகி காதலித்தாலும் நிஜத்தில் யாரையும் காதலிக்காமல், தனது பெற்றோர் பார்த்த பெண்ணை தான் மணந்தார்! ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை.

திருமண வாழ்க்கை பெரும்பாலும் பல நட்சத்திர நடிகர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இதற்கு பலர் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் இதிலும் பிரசாந்த் மட்டும் தான் விதிவிலக்காக இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு டாப் ஸ்டாராக இருந்தார் பிரசாந்த். கிரகலட்சுமியை திருமணம் செய்த பிறகு, சில பிரச்சினைகள் காரணமாக, நீதிமன்றம் வழக்கு, விவாகரத்து வழக்கு என்று தனது தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் திரைவாழ்க்கையும் மணவாழ்க்கையும் சரியாக அமையாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

தனது தந்தை இயக்கத்தில் பல படங்களில் நடித்தார் பிரசாந்த். குறிப்பாக தந்தையின் வெற்றி படமான மலையூர் மம்பட்டியான் ரீமேக் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வெற்றி பெறவில்லை. கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில் பொன்னர் சங்கர் திரைப்படத்தில் நடித்தார், இதுவும் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதன் பிறகு பல படங்களில் நடித்தார். ஆனாலும் எதுவும் வெற்றி படமாக அமைய வில்லை.

2019 ஆண்டு வெளிவந்த வினய விதேய ராமா எனும் தெலுங்கு படத்தில் ராம் சரண் அண்ணனாக நடித்திருந்தார் பிரசாந்த் அவர்கள். நம்ம பிரசாந்த் அவர்களா என்று கண்களால் நம்ப முடியவில்லை. மனம் ஏற்ற வில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி இருந்த நடிகர், தனது மணவாழ்க்கை தோல்வியால் திரைப்பட வாழ்க்கையும் சரிந்து, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில்… நேரம் சரியில்லை என்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பது எவ்வளவு உண்மை!!

இந்தியில் ரித்திக் ரோஷன் அவர்கள் போன்று தான் தமிழில் நடிகர் பிரசாந்த் அவர்களும். சினிமாவிற்காக பல விஷயங்களை கற்று கொண்டவர் பிரசாந்த் அவர்கள். சிறுவயதில் தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் வாங்கியவர். பியானோ இசைப்பதில் வல்லவர் பிரசாந்த். சிறப்பாக வர வேண்டிய நடிகர். காலத்தின் கோலம் வேறு மாதிரியாக அமைந்தது. வாழ்க்கையில் வெற்றி பெற திறமை மட்டுமே போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினர்களில் பிரசாந்த் அளவிற்கு அழகிலும், உடல் பலத்திலும், நிறத்திலும், நடிப்பிலும், பணத்திலும், பிரசாந்த் அவர்களுக்கு நிகராக யாருமில்லை. குறிப்பாக திநகரில் உள்ள பிரசாந்த் கோல்டு டவர் போதும், பிரசாந்த் அவர்களின் செல்ல செழிப்பான வாழ்க்கைக்கு…

தற்போது 50 வயதாகும் பிரசாந்த் அவர்களுக்கு பல பிரச்சனைகள் தாண்டிய பிறகும் ரசிகர்கள் பக்க துணையாக இருக்கிறார்கள். பிரசாந்த் அவர்களுக்கு பெரிய உதவியாக இருப்பது அவர் தந்தை தியாகராஜன் அவர்கள் தான். அடுத்ததாக அவர் இயக்கத்தில் அந்தகன் படம் வெளிவர உள்ளது. அந்தகன் திரைப்படம் நல்ல வெற்றி படமாக அமைய வேண்டும். இன்னும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரசாந்த் அவர்கள் புகழ் பெற வேண்டும். அவரது தனிப்பட்ட வாழ்வும் சிறக்க வேண்டும்!! மீண்டும் டாப் ஸ்டாராக ஜொலிக்க வேண்டும்!!

தீதும் நன்றும் பிறர் தர வாரா..,பஞ்சு அருணாசலம்!

 

பஞ்சு அருணாசலம் தன் வீட்டு பங்சன் வரவேற்பு இன்னிசை நிகழ்ச்சிக்கு சங்கர்-கணேஷ் அவர்களை அழைத்திருந்தார்!

வரவேற்பு நாளன்று சங்கர்-கணேஷ் அவர்களை எதிர் பார்த்து வாசலிலே பார்த்துக் கொண்டு இருந்தவர் கடைசியில் ஏமாந்து போனார்.

ஆம் அவர்கள் கடைசி வரை சொன்ன படி நிகழ்ச்சிக்கு வரவில்லை!

காரணம்,அவர்கள் அப்போது இசையமைப்பாளர் விஸ்வநாதன்- இராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளர்களாக இருந்தனர்.ஏற்கனவே பஞ்சு அருணாசலத்தின் மீது ஏதோ காரணத்திற்காக கோபமாக இருந்ந விஸ்வநாதன்,சங்கர்-கணேஷ் அவர்களை தடுத்து விடுகிறார்.

இந்த அவமானம் பஞ்சு அருணாசலத்திற்கு மனதில் தீராத வடுவாக பதிந்து விடுகிறது!

இசையமைப்பாளர் விஸ்வநாதனோடு தீராத கோபத்தில் இருந்த பஞ்சு அருணாசலம்,வைராக்கியதோடு பல தடைகளை கடந்து இளையராஜாவை அறிமுகப்படுத்துகிறார்!

அதன் பிறகு விஸ்வநாதன் அவர்களுக்கு இறங்கு முகமாகிறது.

0

புது புது அர்த்தங்கள் படத்தில் இசைஞானி இளையராஜா -க்கும்,பாலசந்தர் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வருகிறது.

ஏதோ ஒரு விசயத்தில் இளையராஜா பிடிவாதமாக இருந்ததால் அவர் மீதான பாலசந்தரின் கோபம்,

தன் தயாரிப்பான ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகப்படுத்துகிறார்!

அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏறுமுகம்தான்!

சிங்கார வேலன் படப்பிடிப்பில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கும் கவுண்டமணியிடம்,ஒருவர்"இந்த படத்தில் உங்களுடன் செந்தில் இல்லையா"என கேட்கிறார்!

"அதான் சிவப்பு செந்திலுடன் நடிக்கிறேனே"என கமலை சிகப்பு செந்தில் என கிண்டலடித்ததை காதில் வாங்கிய கமல்,கவுண்டமணி மீது பயங்கர கோபமாகிறார்.

இந்த கோபத்தின் வெளிப்படாக சின்ன,சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்த வடிவேலுக்கு,தனது தேவர் மகன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கிறார்.

அதன் பிறகு வடிவேலுக்கு படி படியாக ஏறுமுகம்தான்!

வாழ்வில் வெற்றியாளராக உச்சத்தில் இருக்கும்போது திடீரென சறுக்கலை ஒருவர் சந்திக்கிறார் என்றால்,அதற்கு ஏதாவது ஒரு வகையில் அவரே காரணமாக இருப்பார்.

இதைத்தான் பெரியவர்கள் இப்படி சொல்வார்கள்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர்  ுப்பிரமணியன்.