Total Pageviews

Saturday, March 29, 2025

இப்பல்லாம் நிறைய பேருக்கு கல்யாணம் ஆகறதே பெரிய குதிரை கொம்பா போயிடுச்சு.

 

இப்பல்லாம் நிறைய பேருக்கு கல்யாணம் ஆகறதே பெரிய குதிரை கொம்பா போயிடுச்சு!

பொண்ணு சராசரியா 70 ஆயிரத்திலேருந்து ஒரு லட்சம் சம்பாதிக்குது.

பையன் 50 ஆயிரத்தை தாண்ட மாட்டேங்குறான். இதான் பிரச்சினைன்னு நிறைய பேரு நினைச்சுக் கிட்டு இருக்காங்க.

ஆனா, உண்மையான காரணம் இது இல்ல...

ஒரு பெரியவரு, அனுபவஸ்தரு சொன்னதை கேளுங்க....

முன்னாடிலாம், டிகிரியோ இல்ல PG யோ முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க. அப்ப      20 அல்லது 30 ஆயிரம்தான் சம்பளம் இருக்கும்.

அதுக்கப்புறம் ஒரு 2, 3 வருஷத்துல ரெண்டு பேருக்குமே கொஞ்சம் சம்பளம் கூடும். அப்பதான் ஒரு சொந்த வீட்டை கஷ்டப்பட்டு வாங்குவாங்க!

இன்னொரு அஞ்சு வருஷம் ஆன பிறகு நிதி நிலைமை நல்லா இருந்தா கார் வாங்குவாங்க. அதுக்குள்ள ஒண்ணு இல்லேன்னா ரெண்டு குழந்தை பிறந்து இருக்கும்!

கஷ்டமோ நஷ்டமோ முடிஞ்சா அந்த குழந்தைகளை சிபிஎஸ்இ இல்லேன்னா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைப்பாங்க. அதாவது இன்பம் துன்பம் ரெண்டையுமே புருஷன் பொண்டாட்டி சேர்ந்து ஷேர் பண்ணிக்கிட்டு வாழ்ந்தாங்க.

அதனால கல்யாணம் நடக்கிறது அவ்வளவு கஷ்டமான விஷயமா இல்ல!

இப்பல்லாம் என்ன நடக்குதுன்னா, பொண்ணு வீட்ல அவளுக்கு கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே அதாவது அவ வேலைக்கு சேர்ந்த பிறகு ஒரு அஞ்சு வருஷமோ இல்ல எட்டு வருஷமோ வெயிட் பண்ணி முதல்ல அவ சம்பாத்தியம், சேவிங்ஸ்ல முன் பணம் கட்டி ஒரு பெரிய வீடா வாங்கிடறாங்க!

இதனால பொண்ணோட மார்க்கெட் வேல்யூ பயங்கரமா எகிறுடுது. அவ சம்பளம் வேற ஒரு லட்சம் இல்ல ஒன்றரை லட்சமா உயர்ந்துடுது. இதே கால கட்டத்துல பசங்களோட பொருளாதார நிலை இப்படி முன்னேறுதான்னா, நிச்சயம் இல்ல!

ஒரு டிகிரியோட படிப்பை முடிச்சிக்கிறான்!

40 or 50 ஆயிரம் சம்பளம் வர்ற வேலையில செட்டில் ஆயிடறான்!

பொண்ணு சம்பளம் ஒரு லட்சம்னா அவங்க எப்படி  50 ஆயிரம் சம்பளம் வாங்கற பையனுக்கு பொண்ணு குடுப்பாங்க? இதுல பொண்ணுக்கு சொந்த வீடு இருந்துச்சுன்னா சுத்தம்!

ஒரு பக்கம் financially இந்த ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் போது, பொண்ணை பெத்தவங்க நூத்துக் கணக்கான terms and conditions சோட வர்றாங்க!

பையனுக்கு அம்மா இருக்கக் கூடாது. தங்கச்சி இருக்கக் கூடாது!

பொண்ணுக்கு சமையல் தெரியாது. பையன் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்!

பொண்ணை விட பையனுக்கு அதிக சம்பளம் இருக்கணும். சொந்த வீடு, கார் இருக்கணும்னு லிஸ்ட் பெரிசா போயிக்கிட்டே இருக்கும்!

இந்த எதிர்பார்ப்புகளை மீட் பண்ற மாப்பிள்ளைகள் 10% கூட இருக்க மாட்டாங்க. அப்படியும் சிக்கி 30, 40 லட்சம் செலவு பண்ணி கல்யாணம் செஞ்சி வெச்சா ரெண்டு பேருக்குமே ஒத்து போகலன்னு டைவர்ஸ்சுக்கு பொண்ணு வீட்டுக் காரங்க ஈசியா வந்துடறாங்க!

செகண்ட் மேரியேஜ்ங்குறது ஒரு தனி ட்ராக்!

அதிகம் படிக்காத, அதிகம் சம்பாதிக்காத லோ மிடில் கிளாஸ்லதான் கல்யாணம் சீக்கிரமா நடந்து முடியுது

அதுக்கு பெண் வீட்டார் 10 லட்சம் மினிமம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வெக்கணும்!

ஆக,

கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து வாழ்க்கையில படிப்படியாக முன்னேறணும்கிற கான்செப்ட் எப்ப ஒழிஞ்சதோ அப்பவே கல்யாண சிஸடமும் அழிஞ்சு போச்சு. இதுல ரொம்ப பாதிக்கப் பட்டது 90's கிட்ஸ் தான்.

இதுக்கு என்ன தீர்வு இருக்குங்குறதே புரியல...

எந்த கண்டிஷனும் போடாத லவ் மேரேஜ் அதிகமானா ஓரளவு பிள்ளைங்க நிம்மதியா இருப்பாங்க!

இதுக்கு மாற்றாக உங்ககிட்ட தீர்வு இருந்தா தாராளமாக சொல்லலாம்......

உங்களது பெற்றோர் உங்கள் திருமணத்தை பற்றி எவ்வளவு யோசிப்பார்கள்?

#தாய் தகப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டு போகும் பெண்களுக்கு இந்த பதிவு...

நம்மை பெற்றெடுக்கும் போதே நம் அன்னை ஒரு வலியை தாங்கி இருப்பாள்,

பால் ஊட்டி, சீராட்டி, கோவிலில் பிரசாதம் கொடுத்தல் கூட தன் பிள்ளைக்காக பத்திர படுத்தி எடுத்து வருவாள்,

கொஞ்சம் முகம் வாடி இருந்தாலும் "என்ன கண்ணு பசிக்குதா" என்று ஆயிரம் முறை கேட்டு விடுவாள்.

நீங்கள் தூங்காமல் படிக்க அவள் தூங்காமல் இருப்பாள்,

தன் பிள்ளை தப்பே செய்திருந்தாலும் யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டாள்,

அதே போன்று தான் அப்பாவும்,

பெண் பிள்ளை என்றால் அப்பாவுக்கு தான் அதிக பாசம்,

தன் பிள்ளையின் பாதம் கூட மண்ணில் படகூடாது என்று நினைப்பார்,

என்ன கேட்டாலும் வங்கி தருவார்,

பிள்ளைக்காக மனைவியிடம் சண்டை கட்டுவார்,

பிள்ளையின் படிப்புக்காக பல லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருப்பார்.

ஒரு விசேசங்களுக்கு துணி எடுக்கவேண்டும் என்றால் அம்மா, அப்பா இருவருமே பல துணிக்கடைகள் ஏறி இறங்குவார்கள்.

ஒரு துணி எடுக்கவே இவ்வளவு யோசிக்கும் உங்களது பெற்றோர் உங்கள் திருமணத்தை பற்றி எவ்வளவு யோசிப்பார்கள்?

அதை பற்றி எதையும் யோசிக்காமல் சில பெண்கள்.

தலைமுடியில் சாயம், கிழித்துவிட்ட ஜீன்ஸ் பேன்ட், இடுப்பு தெரியும் அளவு சட்டை, அழகான இருசக்குற வாகனம் இதை மட்டுமே வைத்திருக்கும் ஒரு சிலரிடம் காதல் வயபடுகிரர்கள்.

அதற்காக தன் பெற்றோரையே தூக்கி எறிகிறார்கள்,

பத்து நாள் பழகிய ஒருத்தனுக்காக பெற்றவர்களை தூக்கிஎறிந்து திருமணம் செய்துகொண்ட பலர் பிழைக்காமல் பெற்றவரை தேடி வந்துள்ளனர்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தால் நீ எப்போதும் வேண்டுமானாலும்

உன் தாய் வீடு வரலாம்..

யோசித்து பார்......

பெற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நம் குடும்பத்தை பற்றி உங்களது பெண்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

முக்கியமாக தந்தைகள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஓடினது போதும், தன் பிள்ளைக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்துகொள்ளுங்கள்

சகோதரர்கள் தன் சகோதரியை கவனியுங்கள்...

ஸ்ரீபிரியா தயாரித்த படம் "நீயா' ?

 

"நாகின்'' படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் "நீயா'

ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

"நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது. வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார்,

ஹேமந்தகுமார். பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது. சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.

படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார்.

"அவ்வளவுதானே! கவலையைவிடு'' என்று அம்மா சொன்னார். அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது.

"நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப்படத்தில் ரீனாராய் நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள். இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல். 1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார். "நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.

அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:- "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.

ஒன்றாவதோ, இரண்டாவதோ படிக்கும் போது, இந்த ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாவில், நடனம் ஆடிய தாக நினைவு, தலையில் பொம்மை பாம்பை வைத்து கொண்டு, என் தோழி ஸ்டெல்லா என்கிற பெண்ணுடன்( சற்று உயரமாக இருந்ததால் நான் ஆண் பாம்பு! ஸ்டெல்லா பெண் பாம்பு🙂 அது முதல் வாராய் கண்ணா! என்று பாடிக் கொண்டே இருப்பேன். எவர்க்ரீன் சாங். என் ஃபேவரைட் பாடல்களில் ஒன்று.😄

Friday, March 28, 2025

ரஜினிகாந்தைப் பைரவி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் எம். பாஸ்கர்.

 ரஜினிகாந்தைப் பைரவி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அவர். வைரமுத்துவுக்கு முதல் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தவர் அவர். ஆனால், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா எனப் பரவலாக அறியப்பட்ட இயக்குநர்களைப் பற்றியும் அவர்களது படங்களைப் பற்றியும் கிடைக்கும் அளவுக்கு அவரைப் பற்றிய தகவல்கள் கிடைப்பதில்லை.

எண்பதுகளில் ஆஸ்கார் மூவிஸ் என்னும் பேனரில் சட்டம் தொடர்பான படங்களை உருவாக்கியவர் அவர். இப்போது நாற்பதுகளின் இறுதியிலும் ஐம்பதுகளின் தொடக்கத்திலும் இருப்பவர்கள் அவரது படங்களைப் பார்த்திருப்பார்கள்.

என் பள்ளிப் பருவத்தில் அவர் இயக்கிய பல படங்களைப் பார்த்த நினைவிருந்தது. ஆகவே, கரோனா காலத்தில் அவருடைய படங்களை யூடியூபில் தேடிப் பார்த்தேன்; படங்கள் கிடைத்தன; பார்த்தேன். அவரைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆகவே, அப்போது நான் பணியாற்றிய இதழின் இணையதளத்துக்காக அவரைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் எழுதினேன். அவர்தான் எம். பாஸ்கர்.

ஆலமரத்துக்குக் கீழே எதுவுமே வளராது என்று இயக்குநர் எம்.பாஸ்கர் தனது ‘பௌர்ணமி அலைகள்’ படத்தில் வசனம் ஒன்றை எழுதியிருப்பார். இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதைச் சரியான விதத்தில் சரியான இடத்தில் வசனமாகக் கையாண்டிருப்பார் அவர். தங்கள் படங்களுக்காகக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியவர்கள் என பாக்யராஜையும் டி.ராஜேந்தரையும் முன்னிறுத்தும் பலருக்கும் பாஸ்கர் பெயரை அந்த வரிசையில் ஒன்றாக நிறுத்தத் தோணாது. காரணம் மேலே வாசித்த அந்தப் பழமொழிதான்.

பாஸ்கரைப் பற்றிய உடனடி அறிமுகம் வேண்டுமென்றால் இவர்தான் ரஜினி காந்த் முதலில் கதாநாயகனாக நடித்த ‘பைரவி’படத்தை இயக்கியவர். 1978 ஜூன் 2 அன்று வெளிவந்த ‘பைரவி’ மகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. ரஜினிகாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், ரஜினிகாந்த் பைரவி பற்றிப் பேசினால் தயாரிப்பாளர் கலைஞானத்தைப் பற்றிச் சொல்வாரே தவிர இயக்குநரான எம் பாஸ்கரைப் பற்றிச் சொல்வதில்லை.

எனது பள்ளிப் பருவத்தில் இவரது படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தந்தவர் என்ற தகவல் ஆழ் மனத்தில் படிந்துபோய்க் கிடந்தது. அவரைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்தன. அவற்றைவைத்து ஒரு கட்டுரையை எழுதினேன். அது அந்த இணையதளத்தில் வெளியாகவும் செய்தது.

இன்று அவரது பிறந்தநாள் என்பதால் அவரைப் பற்றி அப்போது கிடைத்த குறிப்புகளைக் கொண்டு இந்தப் பதிவை எழுதியுள்ளேன். விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் 1935 ஏப்ரல் 3 அன்று, வி.எஸ்.மாரியப்பன் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை முடித்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராகத் திரையுலகில் கால் பதித்திருக்கிறார். இயக்குநர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து வேலைசெய்திருக்கிறார்.

ஸ்ரீதர் இயக்கிய ’வெண்ணிற ஆடை’(1965) திரைப்படம் ’வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ’வெண்ணிற ஆடை’ நிர்மலா, ஜெயலலிதா, ஸ்ரீகாந்த் ஆகியோரைப் போல பாஸ்கருக்கும் முதல் படம் என்கிறார்கள். ஆனால், அடுத்த ஆண்டில் வெளியான ’கொடி மலர்’ படத்தில்தான் டைட்டில் கார்டில் உதவி இயக்குநர் என பாஸ்கர் பெயர் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீதரின் ’நெஞ்சிருக்கும் வரை’, ’ஊட்டி வரை உறவு’, ’அவளுக்கென்று ஓர் மனம்’, ’சிவந்த மண்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் இந்திப் படங்கள் சிலவற்றிலும் பாஸ்கர் பணியாற்றியுள்ளார். பின்னர் என்.சி.சக்கரவர்த்தி இயக்கிய ’உத்தரவின்றி உள்ளே வா’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிருக்கிறார்.

இதன் பின்னர்தான் இவருக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படம் ’இன்னும் ஒரு மீரா’என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஆனால், அது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ’பைரவி’. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. ’பைரவி’ படத்தைத் தயாரித்த கலைஞானம் ரஜினியைக் கதாநாயகனாக்கியதால் அவருக்கு ஆதரவு தருவதாக வாக்களித்திருந்த சாண்டோ சின்னப்பா தேவர் கையைவிரித்துவிட்டார். அப்போது வில்லனாக நடித்து வந்த ரஜினியைக் கதாநாயகனாக்கியது தேவருக்கு உவப்பாயில்லை என்பதே காரணம். படம் வெற்றிபெறுமா என்னும் சந்தேகத்தின் காரணமாகவே கலைஞானத்துக்கு தேவர் உதவவில்லை. ஆனால், முன் வைத்த காலை பின்வைக்க விரும்பாத கலைஞானம் ரஜினிதான் கதாநாயகன் என்று உறுதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான் எம்.பாஸ்கரை இயக்குநராக்க அவர் முடிவுசெய்திருக்கிறார்.

ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இதே முத்துராமன் ரஜினிக்கு வில்லனாக ’போக்கிரி ராஜா’வில் நடித்திருந்தார். ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் கேட்டிருக்கிறார்கள், அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். படத்தின் டைட்டிலில் முதலில் ஸ்ரீகாந்த் பெயர்தான் இடம்பெறும். அதற்குக் கீழேதான் ரஜினிகாந்தின் பெயர் வரும். இப்படித்தான் ’பைரவி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் விநியோகஸ்தரான தாணு இந்தப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரம் செய்திருந்தார். படமும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.

1980-ல் பாஸ்கர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கினார் அதுதான் ஆஸ்கார் மூவிஸ். இதே ஆண்டில் இந்த நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்துப் படமாக்கிய முதல் படம் ‘சூலம்’. இந்தப் படத்தில் தான் வைரமுத்துவுக்கு முதல் பாடல் வாய்ப்பு அளித்துள்ளார். அதே நிறுவனத்தின் பெயரில் இவர் எடுத்த படமான ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ வெள்ளிவிழா கண்டது. இந்தப் படம் வெள்ளிவிழா கண்டபோதும் இது குறித்து விக்கி பீடியாவில் கூடப் பக்கம் உருவாக்கப்படவில்லை.

ஏறக்குறைய ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்து, திரைக்கதையை உருவாக்கி அதற்குப் பின்னர் அந்தத் திரைக்கதையை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, பின்னர்தான் படப்பிடிப்புக்குச் செல்வார், எம்.பாஸ்கர் என இவரைப் பற்றி நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார். பாஸ்கரின் இயக்கத்தில் சிவகுமார் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘பௌர்ணமி அலைகள்’, ‘பன்னீர் நதிகள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ’பைரவி’யும் இந்த நான்கு படங்களுமே எம்.பாஸ்கரின் திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

இதன் பின்னர் கார்த்திக் நாயகனாக நடிக்க ‘சட்டத்தின் திறப்பு விழா’, ‘சக்கரவர்த்தி’ ஆகிய படங்களை உருவாக்கியுள்ளார். மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். தனித்துவமான இயக்குநரான இவர் ’விஷ்ணு’, ’காதல் ரோஜாவே’, ’தோட்டா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

உலக சினிமா குறித்தும் உலக இயக்குநர்கள் குறித்தும்கூடத் தமிழிலே பல கட்டுரைகளும் நூல்களும் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் பங்களிப்புச் செய்துள்ள இயக்குநர்களது படங்கள் பற்றிய செய்திகளைப் பூதக்கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியதிருக்கிறது.

ஒரு மனிதன் வாழ்வது முக்கியமல்ல..திருப்தியுடன் நிறைவாக வாழ்வது எப்படி!

 

இன்று எனது காரை சர்வீஸ் செய்ய கொடுத்து இருந்தேன்.திடிரென அவசரமாக ஊருக்கு கிளம்ப‌ வேண்டிய சூழல். ஆபிஸ் வேலை நீண்டு கொண்டே இருந்தது , வேலை முடிந்து திரும்பி பார்க்கையில் மணி இரவு 11.15..OLA Auto போட்டால் கேன்சல் செய்துகொண்டே இருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் வெளியே‌ வந்து ஆட்டோவிற்காக காத்திருந்த போது கோயம்பேட்டிற்கு ஒரு ஆட்டோகார புண்ணியவான் நுங்கம்பாக்கத்தில் இருந்து 500ரூ கேட்டார். யாரும் 400ரூபாய்க்கு குறைவாக வரவில்லை. சரி பார்க்கலாம் என்று நின்று கொண்டு இருந்தபோது மெதுவாக ஒரு ஆட்டோ வந்து என் அருகில் நின்றது .

ஒரு 70வயதுள்ள முதியவர் எங்கு போகணும் என்று கேட்க , நான் கோயம்பேடு என்று கூற...அவர் சரி தம்பி மீட்டர் போடறேன், இரவு நேரம்ங்கறதால 1- 1/2மீட்டர் என்று கூற..நான் ஸ்தம்பித்து நின்றேன். சென்னையில் முதல் முதலாக ஒரு ஆட்டோ ட்ரைவரே இப்படி கேட்டது எனக்கு இதுவே முதல் முறை.

அவர் யூனிபார்ம்ல இல்லாததால் என்ன தாத்தா, எங்க யூனிபார்ம்...இந்த நேரத்துல இந்த வயசுல வண்டி ஓட்டுறீங்க என்று கேட்க..

தம்பி வரும்போது ஏதோ ஞாபகமறதில வீட்ல இருந்து 10 மணிக்கு கிளம்பும்போது போட மறந்துட்டேன் என்று கூற எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பிறகு சொன்னார். தம்பி 46 வருஷமா ஆட்டோ ஓட்டறேன். சென்னைல மூல முடுக்கு வரை தெரியும் தைரியமாக வாங்க என்று கூற நான் சிரித்தேன்.

பிறகு என்னத்த தாத்தா படுத்து ஓய்வு எடுத்து தூங்க வேண்டிய வயசுல இப்படி இன்னும் உழைக்கிறீங்கனு நான் கேட்க.

எனக்கு ஒரே புள்ள தம்பி.. ஆட்டோ ஓட்டி தான் படிக்க வெச்சேன். நல்லா படிச்சான். நல்ல வேலை கிடைச்சது ஒரு கல்யாணத்த பண்ணிட்டா நம்ம கடமை முடிஞ்சது, பிறகு நம்பள பாத்துப்பான்னு நினைச்சேன். கல்யாணம் ஆகி 18 வருஷம் கழிச்சு பொறந்த புள்ள அவன். இப்ப வரைக்கும் அவ்வளவு உசுரு அவன் மேல எனக்கு. அவனுக்கு கல்யாணம் ஆன பொறவு எதுவும் சரியில்ல. சரி நீ நிம்மதியா இருடான்னு தனியாக போகசொல்லிட்டேன்.. விருப்பமே இல்லாமல்தான் போனான். அப்பப்ப வந்து எங்கள பார்ப்பான்.

அதுக்குள்ள என் மனைவிக்கும் முடியல. பகல் பூரா அவங்க கூட இருந்து அவங்கள பார்த்துப்பேன். பகல்ல அவ்வளவு வெக்கயா இருக்கும். இந்த டிராபிக்ல என்னால வண்டி ஓட்ட முடியாது. கண்ணு கொஞ்சம் நல்லா இருக்கு. அதனால் ராத்திரி 9 மணில இருந்து காலைல 4 மணி வரைக்கும் ஆட்டோ ஓட்டிட்டு வீட்டுக்கு போய்டுவேன். சொந்த ஆட்டோ தம்பி இது ..என் முழு 45 வருட உழைப்பு .ஒரு நாளைக்கு 600ரூபாய் நிக்கும். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் அதுவே போதும்.இத்தன வயசுக்கு மேல எனக்கு எதுக்கு தம்பி அளவுக்கு மீறி பணம்‌வேணும். ஒரு நாள் 600ரூ வருதா சரி சூப்பர். இல்ல ஒரு நாள் ரூ300 தான் வருதா. ஆண்டவன் இன்னைக்கு இவ்ளோதான் படி அளந்திருக்கான். நாளைக்குபத்தி இன்னைக்கே எதுக்கு யோசிக்கணும் என பேசிக்கொண்டே சென்றார்.

ஏன் உங்க பையன் உங்களுக்கு எதுவும் ? என நான் கேட்க..

அவன் மவராசன் தம்பி..!! எப்பவுமே என் ராசா...!! இப்பவரைக்கும் அவன் கொடுத்தாலும் கொடுக்கலனாலும் தங்கமான புள்ள அவன் என்று மகனை விட்டு கொடுக்காமல் பேசினார்..!!

நான் நிஜமாகவே பிரம்மித்தேன். எப்படி தாத்தா உங்களால் இப்படி இருக்கமுடியுதுன்னு நான் கேட்க.

தவமா நான் கோவில் கோவிலாக ஏறி இறங்கி பெத்த புள்ள அது. அவன நான் முதன் முதலா கையில் வாங்கும் போது..ஆண்டவா ..!! இந்த கொழந்தைக்கு எந்த கஷ்டமும் வரமால் சந்தோஷமாக இருக்கணும். அவனுக்கு வர்ற கஷ்டத்தையெல்லாம் எனக்கு கொடுன்னுதான் வேண்டிகிட்டேன். நான் மட்டும் இல்ல ...எல்லா தாய் தகப்பனோட வேண்டுதலும் அதுவாக மட்டும் தான் இருக்கும்.

ஆனா இந்த பாழும் மனசு இருக்கே அவன் வளர வளர நாம செஞ்சத அவன் திருப்பி நமக்கு செய்யணும்னு எதிர்பார்க்கும்...அங்க தான் பிரச்சனையே ..எப்பவுமே அவன நான் பார்க்கும்‌போது முதல் முதலா அவன கையில் வாங்கியதும் அந்த வேண்டுதலும் நியாபகம் வரும். இப்ப வரைக்கும் ஒரு துளி வருத்தம் கூட எனக்கு அவன் கிட்ட இல்ல .எனக்கு எப்பவுமே என் ராசா அவன் என்று கூற விக்கித்து நின்றேன்.

வாழ்க்கையின் பெரிய பாடத்தை மீண்டும் அவரிடம் இன்று படித்தேன். பற்றற்ற தன்மை என்று பலர் சொல்லி செயல்படுத்த முடியாத மிகப்பெரிய விடயத்தை எதையும் படிக்காத ஒரு எளிய மனிதர் எனக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.

கோயம்பேடு அதற்குள் வந்துவிட மீட்டரில் 130 ரூபாய் காட்டியது. நான் இறங்கும் போது 1-1/2மீட்டர் காசாக ரூ200 கொடுக்க..தம்பி இந்தாங்க மீதி 5 ரூபாயை கொடுத்தார். நான் நெகிழ்ந்து விட்டேன்.

உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளட்டுமா என்று நான் கேட்க..தம்பி என் வாழ்க்கைல இப்படி கேட்ட முதல் ஆள் நீங்கதான. இப்ப ஆட்டோவில் வர்றவங்க எல்லாம் யாரும் வாயை திறந்து எங்ககிட்ட பேசறது கூட இல்ல. மோபைல்போன நோண்டிகிட்டே வருவாங்க. சக மனுஷனா கூட எங்கள பார்க்கமாட்டாங்க. நீங்க ரொம்ப நல்லா பேசிக்கிட்டு வந்தீங்க. ஆண்டவன் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும் என நெகிழ்ந்து கூறினார்

கடைசியாக தாத்தா உங்க பேரு என்ன என்று நான் கேட்க.. என் பேரு ராசேந்திரன் ❤️❤️என் மவன் பேரு ராசராசன் ❤️❤️என்று சொல்லும் போது அவ்வளவு பெருமிதம் , அவ்வளவு திருப்தி அவருக்கு.

ஒரு மனிதன் வாழ்வது முக்கியமல்ல..திருப்தியுடன் நிறைவாக எப்படி எதுவுமே இல்லையென்றாலும் கூட வாழ வேண்டும் என்ற வாழ்வின் பேருண்மையை அந்த எளிய மனிதர் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார்.

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்'' !

 

துபாயில் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தாராம்

அவர் ஊரில் அந்த ஹோட்டல் ரொம்ப பாப்புலர்.

அந்த ஹோட்டலுக்கு டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.

அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன.

சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன.

அதனை பார்த்த அவர்,

அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.

அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள்.

சிறுவனிடம் என்ன வேண்டுமென்று நண்பர் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன்.

உடனே அது போல மேலும் இரு பிளேட்டை நண்பர் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் சிறுமி அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து உணவை மிகவும் ருசித்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் நண்பரை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.

பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.

அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதுவரை நண்பர் அந்த குழந்தைகள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை...

பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார்.

ஹோட்டல் ஓனர் பில்லுக்கு பதிலாக ஒரு கவரை கொடுத்து அனுப்பினார்.

அதனை பார்த்ததும் அவரது கண்கள் குளமாகின.

பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்...

''மனிதாபிமானத்துக்கு பில் போட

எங்களிடம் இயந்திரம் இல்லை.

உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''

என்று இருந்ததாம்.

எங்கேயோ படித்தது !

அன்பு வாழட்டும் இந்த உலகில்!

"கமலஹாசன்" இரண்டும் கெட்டான் வயதில் "கமல்" இருக்கும் போது நடந்தது இது !

                                                                                                                                                                    யார் இந்தப் பையன் ?"

என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர்.

"இவன் பெயர் கமலஹாசன்" என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி கணேசன். "களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானவன். நடிப்புத் திறமை உள்ளவன். இவனுக்கு நீங்கள் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதற்காகத்தான் உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்."

இரண்டும் கெட்டான் வயதில் கமல் இருக்கும் போது நடந்தது இது.

ஸ்ரீதர் தன் அருகில் நின்ற கமலஹாசனை மேலும் கீழுமாக பார்த்தார்.

இளம் மீசை. ஏக்கமான பார்வையோடு ஸ்ரீதர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தார் கமலஹாசன். அவரை சிறிது நேரம் உற்று நோக்கிய பின் ஜெமினி கணேசனை நோக்கி திரும்பி இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

"அப்புறம் பார்க்கலாமே, இப்போது இவனுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது."

ஸ்ரீதர் இப்படி சொன்னவுடன் கமலஹாசனின் முகம் பரிதாபமாக மாறியது. கண்கள் இரண்டிலும் மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அருகில் நின்ற ஜெமினி கணேசன் கமலின் தோள்களில் தட்டிக் கொடுத்தார். "சரி. வாப்பா போகலாம்."

கமல் தழுதழுத்த குரலில் ஜெமினியிடம் சொன்னார் :

"நான் வீட்டுக்கு போகிறேன். அப்படியே என் சொந்த ஊருக்கும் போய் விடுகிறேன்."

புன்னகைத்தார் ஜெமினி. "ஏன் ? அதற்குள் நம்பிக்கை இழந்து விட்டாயா?"

கமல் நிமிர்ந்து ஜெமினியின் முகத்தை பார்த்தார். "உண்மையை சொல்லுங்கள். எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னமும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா ?"

"ஏன் இப்படிக் கேட்கிறாய் ?"

"இல்லை. எனக்கு பிறகு நடிக்க வந்த மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் எல்லோரும் சிவாஜியோடும் எம்ஜிஆரோடும் சேர்ந்து நடித்து, இப்போது தனியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒருவன் மட்டும் இப்படி வாய்ப்புக்கள் கிடைக்காமல் ஏதாவது ஒரு படத்தில் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் நடிப்பதற்கு ஏற்ற திறமை என்னிடம் இல்லை என்றுதானே அர்த்தம் ?"

கமல் கேட்டது நியாயமான கேள்விதான். ஏனென்றால் 1972 இல் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குறத்தி மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு முக்கியமான வேடம்.

மாஸ்டர் ஸ்ரீதர் நடிக்கும் அதே காட்சியில் ஒரு ஓரத்தில் நின்று 'ராஜா வாழ்க' என்று கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் சாதாரண கேரக்டர் கமலஹாசனுக்கு.

அந்த விரக்தியில்தான் ஜெமினியை நோக்கி அப்படி ஒரு கேள்வியை கேட்டார் கமல்.

ஆனால் கமலின் இந்த கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாத ஜெமினி,

கமலை அழைத்துக் கொண்டு, காரை ஓட்டிக் கொண்டு நேராக போன இடம் இயக்குநர் கே பாலச்சந்தர் வீடு.

ஸ்ரீதரிடம் சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே பாலசந்தரிடமும் சொன்னார் ஜெமினி.

பாலச்சந்தர் கமலஹாசன் முகத்தை உற்றுப் பார்த்தார். படபடவென துடிக்கும் இதயத்தோடு பாலச்சந்தரின் பதிலுக்காக காத்திருந்தார் கமல்.

பதில் கிடைத்தது.

வாய்ப்பும் கிடைத்தது.

அரங்கேற்றம் படத்தில் கமலஹாசனுக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தார் பாலச்சந்தர்.

300 ரூபாய் சம்பளம்.

ஜெமினி கணேசன் கமலஹாசனை தன் அருகில் அழைத்தார். "300 ரூபாய்தானே தருகிறார்கள் என்று உன் முழு திறமையையும் காட்டாமல் விட்டு விடாதே. நீ யார் என்பதை நிரூபித்துக் காட்ட இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒருபோதும் உனக்கு கிடைக்காது. நிச்சயம் நீ மிகப்பெரும் நடிகனாக வருவாய். மிகப் பெரும் புகழ் பெறுவாய். சரி. நான் போய் வருகிறேன்."

இப்படிச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார் ஜெமினி.

அரங்கேற்றம் வெளிவந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

தொடர்ந்து தம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு வெகு விரைவிலேயே சினிமா உலகத்தின் அத்தனை சிகரங்களையும் தொட்டார்.

அனைத்து சிம்மாசனங்களிலும் அமர்ந்தார் கமல்.

அந்த நேரத்தில்தான் ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஸ்டூடியோவில் தற்செயலாக ஜெமினி கணேசனை பார்த்தார்.

அருகில் ஓடினார். ஜெமினி கணேசன் சிரித்தபடி கேட்டார்: "என்னப்பா கமல், எப்படி இருக்கிறாய் ?"

கமல் பதில் சொல்வதற்கு முன் சின்னஞ் சிறு புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டார் ஜெமினி. "ஆமாம். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் ?"

யாரை குறிப்பிட்டு கேட்கிறார் என தெரியாமல் கமல் குழம்பிப் போய் நிற்க, சிரித்தபடி கேட்டார் ஜெமினி. "கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சொன்னாயே. உன்னோடு அறிமுகமான மாஸ்டர் சேகர், பிரபாகர், ஸ்ரீதர் எல்லோரும் ஓஹோ என்று ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இப்பொழுது கொஞ்சம் திரும்பி பார். நீ குறிப்பிட்ட அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்."

ஜெமினி கணேசன் சொன்னது உண்மைதான். கமலைத் தவிர அவரோடு அறிமுகமான வேறு எந்த குழந்தை நட்சத்திரமும், இப்போது திரை உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லவே இல்லை.

கமல் கண்கள் கலங்க ஜெமினி கணேசன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

கமலுக்கு ஜெமினி கை கொடுத்து உதவியதைப் போல,

நமக்கு இக்கட்டான நேரங்கள் ஏற்படும்போது, இந்த பிரபஞ்சம் யாரோ ஒருவரை எங்கிருந்தோ அனுப்பி வைத்து அற்புதங்களை நிகழ்த்துகிறது.

கடமையைச் செய்து கொண்டு பொறுமையோடு காத்திருந்தால்,

வெற்றி நிச்சயம் !