Total Pageviews

Tuesday, December 30, 2025

'கலைஞானம் !

 

தமிழ்த்திரை உலகில் வெற்றிகரமான பல படங்களைத் தந்தவர் கதாசிரியர் கலைஞானம். ஆனால் அவருக்கு அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்து சேரவில்லை. சினிமாவுக்குப் பாட்டு எழுதணும்கற ஆசையோடு சென்னை வந்ததும் கலைஞானம் ரத்தசக்தி என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அது மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதைத் தொடர்ந்து என்ன பண்றதுன்னே புரியல. 1950 முதல் 1962 வரையில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஆளானார்.

இடைப்பட்ட காலங்களில் சில நாடகங்களில் நடித்தார். அவற்றில் சிலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார். அதற்கு அவரது வருமானமே 5 முதல் 10 ரூபாய் வரைதான். அதையும் ஒருசிலர் கொடுக்கவே மாட்டார்களாம். இலவசமாகக்கூட பல நாடகக் கம்பெனிகளுக்குப் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததுன்னா 1965ல் அவர் எழுதிய அரங்கேற்றிய வெள்ளிக்கிழமை என்ற நாடகம்தான்.

அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் வெற்றி அதுதான். ஆனாலும் அந்த நாடகத்தைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தன் மனைவியையும், பிள்ளைகளையும் மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்னும் ஒரு மாதம் இங்கே இருந்து பார்க்கிறேன். அதுக்குள்ள எனக்கு சினிமா வாய்ப்பு வரலன்னா நானும் மதுரை வந்து சேர்ந்து விடுவேன் என்று அவரது மனைவியிடம் சொன்னார். அப்போது அவரது மனைவி லேசாக சிரித்தார்.

‘12 வருஷமா சினிமாவுல சேரணும்னு நீங்க போராடிக்கிட்டு இருக்கீங்க. இந்த 12 வருஷம் பெற்றுத் தராததையா இந்த ஒரு மாசம் பெற்றுத் தரப்போகுதா’ என்பதுதான் அவரது சிரிப்புக்குப் பின்னால் இருந்த கேள்வி. மனைவியை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த கலைஞானம் முருகன் படத்தைப் பார்த்தார். அவர்கிட்ட முருகா, உனக்கே இது நல்லாருக்கா? என்னை இப்படி பாடாப் படுத்துறீயே? என கடுமையாக முருகனிடம் சண்டை போட்டார்.

அன்றைக்கு அவர் சொன்னது முருகன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுத்தாளர் ஏஎஸ்.முத்து அவரை சந்திக்க வந்தார். 'கலைஞானம் கிளம்புங்க. ஜோசப் தளியத்துக்கு கதை வேணுமாம். வாங்க சொல்லிட்டு வரலாம்' என்று அழைத்தார். அங்கு போனதும் கலைஞானம் ஜோசப் தளியத்துக்கு 2 கதை சொன்னார். அதில் ஒரு கதை அவருக்குப் பிடித்துப் போனது.

அதுதான் காதல் படுத்தும் பாடு. ஜெய்சங்கரும், வாணிஸ்ரீயும் நடித்து பின்னாளில் படமானது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞானத்துக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் வந்தன? அவர் எவ்வளவு பெரிய கதாசிரியர் ஆனார் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Sunday, December 28, 2025

மின்சார பூவே - படையப்பா !

 

மின்சார பூவே - படையப்பா ! இந்தப் பாடல் ரஜினிகாந்தையே எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு பெண் பாடுற பாட்டு. திமிரும், கர்வமும், அகம்பாவமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தோட வேண்டும் என்பது தெரிந்தவுடன், A.R.ரஹ்மான் “கூப்பிடுங்க நித்யஸ்ரீ யை” என்றார்.

நித்யஸ்ரீ அதற்கு முந்தைய வருடத்தில்தான் ( பத்து வருடங்களாக கர்னாடக சங்கீதத்தில் புகழ்) ரஹ்மானின் ஜீன்ஸ் பட கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை அட்டகாசமாகப் பாடி தமிழ் சினிமாத்துறையில் அடியெடுத்து பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி ஆச்சரியப்பட வைத்தார்.

இந்தப் பாடல் ஒரு போட்டிப் பாடல். படையப்பாவுக்கும் நீலாம்பரிக்கும். படையப்பா பாட நீலாம்பரி பாடலுடன் ஆடலும் சேர்த்து என்பதாய் இருக்கும்.

மின்சார பூவே என்று ஆண் துவங்கும் வரிகள் முதலில் “செளக்கியமா கண்ணே செளக்கியமா” என்றுதான் இருந்தனவாம். (மிஸ்டர் பாரத்-தில் ரஜினியும் சத்யராஜும் என்னம்மா கண்ணு செளக்கியமா என்று பாடுவார்களே, அது மாதிரி) அப்புறம் பாடல் வளர்கையில் மின்சார பூவே , மின்சார கண்ணா என்று பரிணமித்தது. (பின்னாளில் செளக்கியமா கண்ணே செளக்கியமா என்கிற அந்த வரிகள் சங்கமம் படத்தின் பாடலாகி நித்யஸ்ரீயால் புகழடைந்தது தனி).

சிச்சுவேஷனை சொல்லி அதற்கேற்ற மாதிரி கச்சிதமான வரிகளைக் கேட்டவுடன் பாடலாசிரியர் வைரமுத்துவோ தன் பங்குக்குப் பாடலை அனாயாசமாக தனது வரிகளால் நறுக்குத் தெறித்திருப்பார். நீலாம்பரி படையப்பாவை விரும்பினாலும் “ஹேய் யூ, ஐ லவ் யூ. பதிலுக்கு புளகாங்கிதத்தோடு லவ் யூ சொல்லி காலமெல்லாம் என் காலடியில் விழுந்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்” என்று இறுமாப்போடு காதலை யாசகம் தரும் காரெக்டர். அதற்கு மிகச் சரியாக ஒரு வரி படையப்பாவின் மீதான காதலை, அவனுடைய உன்னத குணாதிசயங்களைச் சொன்னாலும் அடுத்த கணமே தனது ஈகோவை, அகம்பாவத்தைக் காட்டும், தன்னை முன்னிலைப் படுத்துமாறு இருக்கும் செருக்கை அடுத்த வரியிலேயே தப்பாமல் வந்து விடுமாறு எழுதியிருப்பார். முதல் வரி “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்” என்று சொல்லி விட்டு உடனேயே ”என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்” என்றும் ”வானம் வந்து வளைகிறதே” என்று சொல்லி விட்டு உடனேயே “காதலிக்க வா” என்று கூப்பிடாமல் “வணங்கிட வா” என்றும் வெல்லுஞ்சொல் இல்லாததாய் வெளுத்து வாங்கி இருப்பார்.

பாடலின் ஆண் குரலுக்கு ஹரிஹரன் வந்து பாடிக் கொடுத்து விட்டுப் போயாயிற்று. அந்தப் பாடலின் ஆண்குரலுக்கு ட்ராக் பாடியது ஸ்ரீனிவாஸ். கெமிக்கல் இஞ்சினியர். சில திரைப்பட பாடல்களைப் பாடி புகழடைந்து வந்திருந்தார்.என்ன நினைத்தாரோ ரஹ்மான், ஸ்ரீனிவாஸைக் கூப்பிட்டு, ஹே, அந்த மின்சார பூவே, அதுல உன்னோட வெர்ஷனையே ஃபைனல் பண்ணிட்டோம். நல்லா இருக்குது” என்றவுடன் இன்ப அதிர்ச்சி. ஹரிஹரன் வெர்ஷனை விட ஸ்ரீனிவாஸின் வெர்ஷன் கம்பீரமாக இருப்பதாக ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் அபிப்ராயப் பட்டனராம். அப்போது ஸ்ரீனிவாஸிற்கு ஹரிஹரன் எல்லாம் அண்ணாந்து பார்க்கும் லெஜண்ட் பாடகர். இந்தப் பாடலைப் பாட ஸ்ரீனிவாஸிற்கு பத்து நிமிடங்களே கொடுத்தாரம் ஏ.ஆர்.ஆர். அந்தப் பத்து நிமிடங்களில் பிரமாதமாகப் பாடி பாடலில் காதலோடு கம்பீரத்தையும் கலந்து அடித்து ஆடியிருப்பார்.

பாடலைப் படமாக்கிய விதமும், ஓளிப்பதிவு, நடனம் என்று எல்லாமே இசைக்கும் பாடலுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் அட்டகாசமான எஃபெக்டில் அமைந்திருக்கும். நீலாம்பரி அகம்பாவத்தின் அல்டிமேட் ஐடெண்டிடியாகவே தன் முக பாவங்களையும், பாடி லாங்வேஜையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தி படையப்பாவையே விஞ்சுவார். (கோரியோகிராஃபி - லலிதாமணி)

நித்யஸ்ரீ பாடலைப் பாடிச் சென்ற அனுபவத்தைப் பற்றி ஸ்ரீனிவாஸ் சொல்வது. அவங்க வந்தாங்க. ஒரு புயல் மாதிரி வந்து அசர அடித்துப் பாடி விட்டு எங்களை பேச்சு மூச்சில்லாம செஞ்சுட்டுப் போய்ட்டாங்க என்பதாய் அதை நினைந்து வியக்கிறார்.இப்படி எல்லா டிபார்மெண்ட்டும் தன் உசிரைக் கொடுத்து பெஸ்ட்டைக் கொடுக்கும் பாடல் பரிமளிப்பது மிகச்சிலவே. இந்தப் பாடல் இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.

Friday, December 26, 2025

TVS பேருந்துகள்

 

TVS பேருந்துகள்:

மதுரையில் மட்டும் அல்ல; நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ளூர் பேருந்துகள் இவர்கள் தான் நடத்தினார்கள். பெயிண்ட் அடிக்காத அலுமினியம் தகடு கொண்ட பேருந்துகள்.

01. பேருந்துகள் மிதமான வேகத்தில் தான் செல்லும்.

02. சரியான நேரத்தில் நிறுத்தத்திற்கு வரும். அப்போது சொல்லுவார்கள். டிவிஎஸ் பேருந்து வந்து விட்டது என்றால் மணி 09.00 என்று கடிகாரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளலாம் என்று.

03. தூத்துக்குடியில் 3ம் நம்பர் பேருந்து நகரத்தை ஒரு சுற்று சுற்றி கிளம்பிய இடத்திற்கு வரும். நான் அதில் சிறுவயதில் என்னுடைய உறவினர்களோடு அமர்ந்து கொள்ளுவேன். கட்டணம் 3 பைசா. (வருடம் 1963)

04. பெட்டியில் டிக்கெட்டை அவர்கள் பயணம் முடிந்தவுடன் போடச்சொல்லுவதற்கு காரணம் - நகரத்தை குப்பையாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக தான்.

(காலப்போக்கில் தான் நானும் தெரிந்து கொண்டேன் )

05. TVS பேருந்துகளில் ஸ்டாண்டிங் ஏத்த மாட்டாங்க. புருஷன் பொண்டாட்டியா போனா கூட,ஒரு சீட் காலி இருந்தா ஒருத்தர மட்டும் தான் ஏத்துவாங்க. அடுத்த ஆளு நடந்து தான் ஊருக்கு போகனும்.

06. எல்லோரும் வரிசையில் நின்று தான் பஸ்ஸில் ஏற வேண்டும். அன்றைய நாளில் பஸ் பயணம் சுகமானது. இன்று மதுரையில் கூட்டத்தில் வலுவுள்ளவன் தான் பஸ்ஸினுள் நுழைய முடியும்.

07. TVS bus Very Neat. and decent.

08. மக்கள் சேவை ,தொழிலாளர் நலன்,பாதுகாப்பு போன்ற பல விஷயங்களில் கண்டிப்பாக இருந்தார்கள். கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நேரம் தவற மாட்டார்கள். 

காலை 05:05க்கு மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து 50ஆண்டுகளுக்கு முன்பு செய்த பயணம் இன்றும் நினைவிருக்கிறது.

இவை அனைத்தும் என் பக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்தவர்களிடம்

சேகரித்த பதிவுகள்.சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு என் நன்றிகள் 🙏🙏

Classic TNSTC

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன்!

 

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனுக்கு சொந்தமான பட நிறுவனம்தான் அசோகா பிலிம்ஸ். இது கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் அமைந்தது. அசோகா பிலிம்ஸின் வருமான வரி கணக்குகளை எல்லாம் எடுத்துக் கொண்டு என்எஸ்.கிருஷ்ணனின் நிர்வாகி வருமான வரி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அனுமந்தராவ் என்பவர்தான் அதிகாரியாக இருந்தார்.

அவர் அந்தக் கணக்குகளை எல்லாம் பார்த்து விட்டு ‘என்னய்யா எப்பப் பார்த்தாலும் தருமம் தருமம் தருமம்னு எழுதி இருக்கீங்க... எவ்வளவு தருமம் பண்ணுனீங்க? நீங்க அளவுக்கு மீறி தர்மம் பண்ணியிருந்தா எப்படி நான் வரி போடாம இருக்க முடியும்?’ என்று அந்த நிர்வாகியைப் பார்த்துக் கேட்டார்.

‘ஐயா, உங்களுக்கு என்எஸ்.கிருஷ்ணனைப் பற்றித் தெரியாதுன்னு நினைக்கிறேன். அவரைப் பொருத்தவரைக்கும் வாரி வழங்குற வள்ளல. இப்ப சென்ட்ரல் ஸ்டூடியோவுல இருக்குற அசோகா பிலிம்ஸ் ஆபீஸ்லதான் அவரு இருக்காரு. நீங்க நேரா அங்கே போங்க. என் பொண்ணுக்குக் கல்யாணம். ஒரு ஆயிரம் ரூபாய் இல்லாம அது தடைபடுதுன்னு அவருக்கிட்ட சொல்லுங்க.

அங்கே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு அப்புறமா இந்தக் கணக்கைப் பார்த்தால் போதும்’ என்று அனுமந்தராவிடம் அந்த நிர்வாகி சொன்னார். இவர் சும்மா பேச்சுக்குச் சொன்னாலும் அனுமந்தராவ் சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு உடனடியாகக் கிளம்பி விட்டார். நேரா என்எஸ்.கிருஷ்ணனைப் போய் பார்த்தார். இவர் போய் பார்த்த உடனே தன்னுடைய வெற்றிலைப்பெட்டியை இவர் பக்கம் தள்ளிய என்எஸ்.கிருஷ்ணன், ‘என்ன வேணும் சொல்லுங்க’ன்னு கேட்டார்.

அதற்கு அவர், ‘என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். ஒரு ஆயிரம் ரூபாய் இல்லாம அது தடைபடுமோ என பயமா இருக்கு’ என்றார் அனுமந்தராவ். அதற்கு என்எஸ்.கிருஷ்ணன், ‘ஒரு ஆயிர ரூபாயால ஒரு கல்யாணம் தடைபடலாமா? என்னுடைய நிர்வாகி வருமான வரி அலுவலகத்துக்குப் போயிருக்காரு. அவரு வரட்டும். வந்ததும் தரச் சொல்றேன். அவரையே கார்ல உங்களை அழைத்துப் போகச் சொல்றேன்’னு சொன்னார். அசந்து போனார் அந்த அதிகாரி.

அவர், ‘உங்களுக்கு கிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பு. கர்ணன்னு பேர் வச்சிருக்கணும். உங்கள் நிர்வாகி என்னோட வருமான வரி அலுவலகத்துக்கு வந்து உங்க குணத்தைப் பற்றிச் சொன்னாரு. அதை நம்பாமத் தான் வந்தேன். இங்கே வந்து பார்த்ததும்தான் தெரியுது. நீங்க எவ்வளவு பெரிய வள்ளல்னு. மற்றவங்களுக்கு உதவுறதுக்குக் காசு கொடுக்குறதுல தப்பில்ல. ஆனா அதுக்கு முறையான ரசீதை மட்டும் வாங்கி வச்சிக்கோங்க’ன்னு அவருக்கு ஒரு அறிவுரையைக் கூறி விட்டுச் சென்றார் அந்த அனுமந்தராவ்.

Tuesday, December 9, 2025

மனோரமா நடிகை அல்ல.. அவர் ஒரு அதிசயம்!

 

நடிகை அல்ல.. அவர் ஒரு அதிசயம்..

ஒருமுறை பின்னணி பாடகி சுசீலா அம்மாவை தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் என்று குறிப்பிட்டபோது எம்ஜிஆருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..

நிகரற்ற சுசீலாவை யாருடனும் ஒப்பீடு செய்ய தேவையில்லை. சுசிலா, ஒரு சுசிலாதான் என்று பேசினார்.

அதேபோலத்தான் நடிகை மனோரமாவை "பொம்பளை சிவாஜி" என்று குறிப்பிடும்போது கடுமையாக கோபம் வரும் நமக்கு..

காரணம், யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு திரை உலகில் தனித்தன்மை கொண்டவர் நடிகை மனோரமா..

நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர்..

எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது

ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர், கோபி சாந்தா.

1950களில் டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்..

அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை.

கடைசியில் மனோரமாவுக்கு திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்..

தொடர்ந்து துண்டு ரோல்களே ... இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்..

கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்ட மனோரமாவை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம்தான்.

இதனால் கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக புரமோஷன் கிடைத்தது.. இத்துடன் அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகி.

அப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கலாம். ஆனால் தமிழ்திரையுலகின் அதிர்ஷ்டம், மனோரமாவை நகைச்சுவை பாதைக்கு மாற்றி பெரும்பாலான தமிழ்ப்படங்களில் துவம்சம் செய்யவைத்துவிட்டது.

இல்லையென்றால் காமெடி, குணச்சித்திரம் என ஆயிரம் படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கமுடியுமா?..

மனோரமா நடித்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்கள் மிகமிகக்குறைவு என்றே சொல்லக்கூடிய அளவுக்கு தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தபெருமை என்பது சாதாரண விஷயமா?

சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு. விகே.ராமசாமி என காமெடி உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அனைவருக்கும் நடிப்பில் ஈடுகொடுத்த ஒரே காமெடி பெண் திலகம் மனோரமா மட்டுமே..

இந்த திறமையால்தான் தேங்காய் சீனுவாசன், சுருளிராஜன்,கவுண்டமணி என அடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்தாலும் அவர்களுக்கும் இவர்தான் கதி என்ற கட்டாய நிலையை உருவாக்கி கொடிகட்டி பறக்கமுடிந்தது..

மனோரமாவை பொறுத்தவரை ஏராளமான நகைச்சுவை நடிகர்களுடன் நடித்து இருந்தாலும், நாகேஷ் உடன் என்பது மிகவும் ஸ்பெஷல்.

1962-ல் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மனோரமாவிடம் காதல் வலை விரித்து வார்டு பாயான நாகேஷ் அவ்வளவு சேட்டைகள் செய்வார்.

அந்தப் படத்திலிருந்து அதகளம் செய்ய ஆரம்பித்த ஜோடி தொடர்ந்து எண்ணற்ற படங்களில் விதவிதமாய் நகைச்சுவையை வாரி வாரி தெளித்தது.

எம்ஜிஆரின் வேட்டைக்காரன் படத்தில் தனியாக டூயட் கொடுக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவத்தை பெற்றது இந்த ஜோடி..

படங்களில் நடித்தாரா வாழ்ந்துவிட்டு போனாரா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப்போனார் மனோரமா.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏபி நாகராஜன் புக் செய்தபோது மனோரமாவுக்கு, கேரக்டர் பெரியதாக ஒன்றுமில்லையே என்கிற வருத்தம். ஆனால் ஏபிஎன் சொன்ன வார்த்தைகள் இவை.

''மோகனாவுக்கு ஆடத்தெரியும். சண்முக சுந்தரத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியும். ஆனா உனக்கு மட்டுமே இது ரெண்டும் தெரியும். அதுக்கும்மேல கள்ள பார்ட் வேஷமெல்லாம் போட்டு பாடவும் தெரியும்.

படத்திலேயே நீதான் சகலகலாவல்லி. அதனால் ஜில்ஜில் ரமா மணி கேரக்டர் பவர்புல் ஆனது. உங்கள் ஃலைப்பையும் தாண்டி பேசப்படும்''

ஏபிஎன் வாக்கு அப்படியே பலித்தது.. சிவாஜி, பத்மினி, நாகேஷ் போன்றோரே வியக்கும் அளவுக்கு அந்த பாத்திரத்தை துவைத்து எடுத்தவர் ஆச்சி

அதனால்தான் ஜில் ஜில் ரமாமணியை உலகமே பல்லாயிரம் தடவை பாராட்டி பாராட்டி ஓய்ந்து போகாமல் இன்னும் பாராட்டிக்கொண்டே இருக்கிறது.

சிவாஜியை வைத்து ஒன்பது வேடங்களில் எடுத்த நவராத்திரியில் பைத்தியம் வேடத்தில் மனோரமா பின்னி பெடல் எடுத்ததை மறக்காமல்.. பின்னாளில் கண்காட்சி படத்தில் ஒன்பது வேடங்களில் மனோரமாவை வரவழைத்து அழகு பார்த்தார் ஏபி நாகராஜன்.

வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜுட் விடும் கமலை தன் பக்கம் லேசாக இழுக்கப்பார்க்கும் சபலிஸ்ட் விமானப்பணிப்பெண் பாத்திரம்...

பாட்டி சொல்லை தட்டாதே படத்தை பாட்டியாகவே முழுதாக தாங்கிய அந்த கெத்து…

கம்னு கெட என்ற ஒற்றை டயலாக்கில் மற்ற பாத்திரங்களை மூட்டைக்கட்டிபோட்ட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கண்ணம்மா..

கொஞ்சம் பிசகினாலும் விரசமாகப்போகக்கூடிய அளவில் நடிகன் படத்தில் கொடுக்கப்பட்ட அந்த பேபிம்மா ரோல் மற்றும் மைக்கேல் மதன காமராஜனில் ரூபினியின் தயாராக.. மனோரமாவை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் எல்லை மீறிப் போய் இப்படியுமா என்று வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

அருந்ததியில் அனுஷ்காவுக்கு நிகராக தனது சந்திரம்மாவை அவர் உயர்த்திக்காட்டிய சாகசம் என அவரால் கிடைத்த சாகா வரம் பெற்ற பாத்திரங்கள்தான் எத்தனையெத்தனை..

அமரர் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, தாம் கேட்டதிலேயே வியப்பான குரல் மனேரமாவினுடையது என்று சொன்னபோது உண்மையிலேயே வியப்பாக இருந்தது.. மனோரமாவை புகழ்வதற்காக ஓவராக ரீல் விடுகிறாரோ என்று கூட தோன்றியது.

சோவுடன் மனோரமா நடித்த பொம்மலாட்டம் படத்தின் "வா வாத்தியார வூட்டான்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு சைதாப்பேட்டை கொக்கு" பாடல் படு காமெடி என்றாலும் பால முரளி, அந்த பாடலை அக்குவேணிவேறாக தனது குரலால் ஏற்ற இறக்கங்களை பாடி விவரித்தபோதுதான் மனோரமாவின் இசைப்புலமை புரிந்தது..

அதிலும், நைனா என்ற ஒற்றை வார்த்தையை பாடிவிட்டு அதன் பிறகு அவர் ராகத்தை இழுத்துக் கொண்டே மேலே சென்று அப்படியே கீழே இறங்கும் விதம்..முன்னணி பின்னணி பாடகிகளே மிரண்டு போன தருணம் அது..

உங்கள் விருப்பம் படத்தில் தேங்காய் சீனிவாசன் உடன் "மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா" பாடலை யூடியூபில் போய் தேடிப் போய் பாருங்கள்.. அவ்வளவு அசால்டாக சகல வித்தைகளையும் காட்டி மொத்தமாக இறக்கி ரசிகர்களை சிரிக்க செய்வார்.

அதேநேரத்தில் சென்டிமென்ட் என்றாலும் பெண்களை உருக வைப்பதில் மனோரமாவை நடிப்பு அலாதியானது.

உனக்கும் வாழ்வு வரும் படத்தில் அவர் பாடி நடித்த "மஞ்சக்கயிறு.. தாலி மஞ்சக்கயிறு... பாடல் பட்டி தொட்டியெல்லாம் எல்லா தவறாமல் ஒலித்தது.. அந்தப் பாடல் ஒலிக்காத சுபநிகழ்ச்சிகளே கிடையாது.

அனைத்து மட்ட பெண்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்தவர் மனோரமா. அதனாலேயே பெண்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.

1980களில் கதாநாயகர்களுக்கு அம்மா என்றால் அது மனோரமாதான். சின்ன கவுண்டரின் அம்மாவாகட்டும், அண்ணாமலையின் அம்மாவாகட்டும், தனித்து நின்று விளையாடி உருக வைத்திருப்பார்.. கமல் பிரபு சத்யராஜ் கார்த்தி என மனோரமாவின் பிள்ளையாய் திரையில் வராத நடிகர்களே கிடையாது என்ற நிலைமையை உருவாக்கி வைத்திருந்தார்.

எந்த சூழ்நிலையை தாங்கிக்கொண்டு திரையில் இவ்வளவு சாதனைகளை படைத்து இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் நிச்சயம் ராம் கண்களில் கண்ணீர் வந்தே தீரும்.

ராமநாதன் என்ற நடிகருடன் திருமணம். வெறும் 15 நாள் வாழ்க்கை. அதன் பிறகு அவர் பிரிந்து போய்விட்டார்.

வயிற்றில் உருவான குழந்தையுடன் எதிர்காலமே இருண்டு போன நிலையில் மனோரமா. ஆனால் அவரோ எதற்கும் கலங்கவில்லை.

வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கணவன் வாழ்கிறாரே என்று மூலையில் உட்கார்ந்துகொண்டு கதறவில்லை.

கணவனைப் போலவே அவர் மூலம் பிறந்த மகன் பூபதியாளும் நிம்மதி என்பது சொந்த வாழ்வில் மருந்துக்கும் இல்லாமல் போனது மனோரமாவிற்கு .

இருந்தபோதிலும் தன்னை அழவைக்கும் உலகத்தை சிரிக்க வைக்க வேண்டுமென்று புயலாய் கிளம்பினார். கோடிக்கணக்கான ரசிகர்களை பல தலைமுறைக்கு சிரிக்க வைத்து சிகரத்தையே தொட்டார்.

எழுத எழுத நிறைய மனோரமாக்கள் வந்தாலும் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குணச்சித்திரத்தையும் நகைச்சுவையும் சேர்த்து திணறத் திணற அடித்த அந்த அம்மா கேரக்டர்.. இன்னமும் டிஸ்டர்ப் செய்தபடியே இருக்கிறது .. ஆச்சி கைய வச்சா அது ராங்கா போனதில்லை..

இந்திய சினிமா வரலாற்றில் நம்பமுடியாத பக்கம் என குறிப்பிடப்படவேண்டிய ஆச்சி மனோரமா மறைந்து, இன்றோடு 8ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை நம்ப மறுக்கிறது, அவருடைய நடிப்புக்கு பறிகொடுத்த மனது ..

Friday, December 5, 2025

சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படம் ரங்கோன் ராதா !

 கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற வரையறையை உடைச்செறிஞ்சவர் சிவாஜி (செந்தில்வேல் சிவராஜ் பதிவு)

பராசக்தி வெளியாகியாச்சு. சிவாஜியும் தமிழ்நாட்டுலே நெம்பர் 1 நடிகரா ஆயிட்டாரு. அதுக்கு அடுத்ததா மூணு படம் பண்ணி 5 வது படத்துக்காக சிவாஜிகிட்ட கதை சொல்ல வராங்க. நீங்க தான் ஹீரோன்னு சொல்லி கதை சொல்றாங்க. கதையை கேட்டு முடிச்சா, சிவாஜியோட ரோலை கேட்டா டென்ஷன் ஆயிடும். படத்துலே ஹீரோ ஒரு பெண் பித்தன், நல்ல விஷயங்களே இல்லாத ஒரு மனுஷனா அந்த வேஷம் இருக்கு. கதையை கேட்ட சிவாஜி என்ன சொல்லியிருப்பாரு? நமக்கு அதிர்ச்சிதான். ஆனா சிவாஜி சொன்ன பதில் 'நடிக்க ரொம்ப சம்மதம்'னு சொல்லிட்டாரு.

முதல் படம் வந்து சமூகப்புரட்சி பண்ணி சிவாஜியை எங்கேயோ போய் வெச்சிருக்கு. வளர வேண்டிய நேரத்துலே இந்த மாதிரி படத்துலே யாராவது நடிக்க ஒப்புக்குவாங்களா? இங்க தான், ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற விதிய உடைச்செறிஞ்சார் சிவாஜி. திரும்பிப்பார்னு படத்துலே நடிச்சு சினிமா பீல்டையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு. அங்க ஆரம்பிச்சுச்சு சிவாஜியோட ஆட்டம். ஆன்ட்டிஹீரோ அப்படிங்கற வார்த்தையே அதில இருந்துதான் பிரபலமாச்சு.

கரெக்டா 8 மாசம் கழிச்சு ஒரு கதை வருது சிவாஜிகிட்டே. இந்த படத்துலே நீங்க நாட்டையே காட்டிக் கொடுக்கிற கதாநாயகனா நடிக்க வேண்டிய ரோல்னு சொல்றாங்க. நிஜத்துலே சிவாஜி மாதிரி தேசபக்தி நெறஞ்ச நடிகன் யாருமில்லே. இந்த குணம் இருக்கற சிவாஜி செஞ்ச அந்த படந்தான் அந்தநாள். இந்த படத்துலேயும் நிறைய புதுமைகளை செஞ்சிருப்பார் டைரக்டர். படத்துல ஹீரோவோட முதல் சீனே துப்பாக்கி குண்டு பாஞ்சு செத்துப் போற மாதிரி காட்சி. அதுவும் மனைவியே சுட்டு சாகடிக்கற மாதிரி காட்சி. படம் வெளியான பின்னாடி படம் பாத்தவங்க அரண்டு போனாங்க. பாட்டுக டான்சுன்னு வேற எதுவும் இல்லை படத்துலே.

சிவாஜியோட 12 வது படம் அந்தநாள். சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா நடிச்ச இந்த படத்தை இன்னைக்கு வரைக்கும் பிரமிப்பா பாத்துட்டுத்தான் இருக்காங்க. சிவாஜியோட 16வது படம் துளி விஷம், சிவாஜியோட சேர்ந்து கே.ஆர் ராமசாமி நடிச்ச படம். கே ஆர் ராமசாமிக்கு கதாநாயகன் வேசத்தை கொடுத்துட்டு சிவாஜி ஆன்ட்டிஹீரோவா நடிச்ச படம். இந்த படத்துக்கு முன்னாலே மனோகரான்னு பெரிய ஹிட் படத்துலே நடிச்சு அந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு 3 மொழியிலேயும் நடிச்சு டாப் ஆக்டரா தமிழ் சினிமாலே இருந்துட்டு வந்த நேரத்துலே சிவாஜி துணிஞ்சு வில்லனா நடிச்ச படம் இது.

இதுக்கு அடுத்தாகவும் ஆன்ட்டி ஹீரோவாத்தான் சிவாஜி நடிச்சாரு. ராமண்ணா ஒரு ரெண்டு ஹீரோ கதையை சொல்லி , நீங்க எந்த வேஷம் பண்றீங்கன்னு கேட்டார். ரெண்டு ஹீரோவுலே ஒரு ஹீரோ கேரக்டர் இதுதான். நண்பனோட மனைவியையே அடையத் துடிக்கிற, குடிப் பழக்கம் இருக்கற கேரக்டர் அது. இந்த கேரக்டர்லே இந்த படத்துலே நடிச்ச இன்னொரு நடிகர் (எம்ஜிஆர்) அந்த வேஷத்துலே நடிக்க ஒத்துக்கல . ஆனா சிவாஜியோ எந்த மறுப்பும் சொல்லாமே ஒப்புக்கிட்டார். அந்த படம்தான் சிவாஜியும் எம்ஜிஆரும் நடிச்ச கூண்டுக்கிளி.

சிவாஜியோட 19வது படம் எதிர்பாராதது . இதுவும் கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச கதைதான். பொதுவா நல்ல நிலைமையில் இருக்கிற ஹீரோக்கள் இந்த மாதிரி வேஷத்தை செய்ய ஒப்புக்கு மாட்டாங்க . சிவாஜியோட காதலி பத்மினி. சந்தர்ப்ப சூழ்நிலை பத்மினியோட ஏழ்மை நிலையாலே பத்மினி சிவாஜியோட அப்பா நாகையாவை கல்யாணம் பண்ணிக்குவார். சிவாஜி

வெளிநாட்டுக்கு போன பிறகு நடக்கிற சம்பவங்கள் இது. சிவாஜி பத்மினியோட காதல மறக்க முடியாமல் தவிக்கிறார். பத்மினி இப்போ சிவாஜிக்கு சித்தி முறை. ஒரு கட்டத்துல உணர்ச்சி வேகத்துல பத்மினிய கட்டித் தழுவ முயற்சிக்கிறார். அதைய பொறுத்துக்க முடியாத பத்மினி சிவாஜிய அடிச்சு தள்ளறார். இப்படி ஒரு கதையை பெரிய கதாநாயகன் கிட்ட சொன்னா நடிக்க

ஒப்புக்குவாங்களா ? வில்லங்கம் புடிச்ச இந்த கதையிலேயும் துணிஞ்சு நடிச்சவர் சிவாஜி.

சிவாஜி ஜெமினி நடித்த முதல் படம் பெண்ணின் பெருமை. சிவாஜியும் ஜெமினியும் அண்ணன் தம்பியா நடிச்ச படம் இது. இந்தப் படத்துல சிவாஜி ஜெமினிய ரொம்ப கொடுமைப் படுத்துற மாதிரி கேரக்டர். ஜெமினிகணேசன சவுக்காலே விளாசித் தள்ளுவார். அடிச்சு விரட்டுவார்.தொழிலாளர்களை மிரட்டுவார். இப்படி ஏக அட்டகாசம் பண்ணி இருப்பார் சிவாஜி இந்த படத்துல 

அதுமாதிரி சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படங்கள்லே ரொம்ப முக்கியமான படம் ரங்கோன் ராதா. கட்டுன மனைவியையே ரொம்ப கொடுமைப்படுத்துற கேரக்டர்ல சிவாஜி நடிச்சு மிரட்டி எடுத்து இருப்பார். இந்த படத்துல ரொம்ப கொடுமையான ஒரு காட்சி, கட்டுன மனைவியான பானுமதியையே நரபலி கொடுக்க துணிஞ்சுருவார் . இந்தப் படத்தோட கதை அண்ணா எழுதினது. வசனம் கருணாநிதி எழுதினது.

சிவாஜி திருடனா நடிச்ச படம் பாக்யவதி. பொய் பேசறது , ஏமாத்தறதுன்னு இந்த ஆன்ட்டி ஹீரோ வேஷத்துலே சிவாஜி நடிப்புலே பிரமாதப் படுத்தி இருப்பார். மனோகரான்னு படத்தை எடுத்த L.V.பிரசாத் மூணு வருஷம் கழிச்சு சிவாஜியை வெச்சு இந்த படத்தை எடுத்திருக்கார்னு நெனச்சா எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு. அடுத்து உத்தமபுத்திரன் படம், விக்ரமன், பார்த்திபன்னு ரெண்டு வேஷம். இளவரசனா நடிச்ச விக்ரமன் வேஷத்தைதான் அதிகம் ரசிக்கும் படி செஞ்சிருப்பார் சிவாஜி. அம்மாவா வர்ற கண்ணாம்பா சிவாஜிக்கு அறிவுரை சொல்ற மாதிரி ஒரு காட்சி . அவங்க சொல்றத காதுலேயே வாங்கிக்காத படி , ஜாலியா ஊஞ்சலாடுவார் பாருங்க. அநாயசமா , அலட்டிக்காம பண்ணியிருப்பார்.

தமிழ் சினிமாவுல ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது. இப்படித்தான் ஒரு வரையறை செஞ்சு வச்சிருக்காங்க மக்கள். இந்த மாதிரி வரையறைக்குள் தன் படங்களை அடக்கிக் கொள்ளாதவர் சிவாஜி. புனர்ஜென்மம் படத்துல குடிச்சுட்டு நிதானம் எல்லாம் தவறி, ரோட்டுல எல்லாம் படுத்து கிடக்கும் அசல் குடிகாரன் போலவே சிவாஜி நடிச்சிருப்பார்.

பார் மகளே பார் படத்துல வறட்டு கௌரவம் பிடித்த , கர்வம் பிடித்த ஒரு மனிதராக சிவாஜி நடிச்சிருப்பார். புதிய பறவை படத்தில மனைவியை கொலை செய்த கணவன் பாத்திரத்துலே நடிச்சிருப்பார் . வசந்த மாளிகை படத்துல கூட அவருடைய கேரக்டர் என்னான்னு எல்லாருக்கும் தெரியும்.

இப்படி நடிப்புக்கும் , நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிவாஜி தன் படங்களை செஞ்சிருப்பார். ஒரு மனுஷன் எப்படி வாழணும்னு நல்ல ஹீரோ படங்கள் வந்ததோ, அதே மாதிரி ஒரு மனுஷன் எந்த மாதிரி வாழக் கூடாதுன்னு சொல்லறதுக்கும் இந்த மாதிரி படங்களில் நடிச்சார் சிவாஜி.

டி.ஆர்.ராஜகுமாரி !

 

புதுக்கோட்டை மன்னரே தேடி வந்து பெண் கேட்ட தமிழ் சினிமா காந்தக் கண்ணழகி: ஏழை டிரைவரை காதலித்த கதை தெரியுமா?

1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.

தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில், அவரின் அழகில் மயங்கி புதுக்கோட்டை மன்னர் அவரை காதலித்துள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி அவரை விட்டுவிட்டு, தனது வீட்டின் டிரைவரை காதலித்தது பலரும் அறியாத ஒரு தகவல்.

1935-ம் ஆண்டு கர்வான் இ ஹையத் என்ற இந்தி படத்தில் ராணியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டி.ஆா.ராஜகுமாரி. 1936-ம் ஆண்டு குமார குலோத்துங்கன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து கச்ச தேவயானி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து, எம்.கே.தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற பெருமை ஹரிதாஸ் படத்திற்கு உண்டு. சிவாஜியுடன் அன்பு, மனோகரா, தங்கமலை ரகசியம், தங்க பதுமை, எம்.ஜி.ஆருடன், பணக்காரி, குலேபகாவலி, புதுமை பித்தன், பாசம், பெரிய இடத்து பெண் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.

கவர்க்கி கன்னி, காந்த கண்ணழகி என பல அடைமொழியுடன் வலம் வந்த டி.ஆர்.ராஜகுமாரி, தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை. இவரின் அழகில் மயங்கி அப்போது புதுக்கோட்டை மன்னாராக இருந்தவர் இவரை திருமணம் செய்துகொள்ள தூது விட்டுள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி மன்னராக இருந்தாலும் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.ராமண்ணாவும் தனது அக்காவிடம் யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்க, அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

இதன் காரணமாக அக்கா டி.ஆர்.ராஜகுமாரியை கண்காணிக்க ஒரு ஆளை தயார் செய்துள்ளார். அந்த நேரத்தில், ராஜகுமாரி வீட்டில் டிரைவர் ராகவன் என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அனைவருக்கும் தகவல் கொடுக்க, அந்த டிரைவரை சராமாரியாக அடித்து வெளியில் அனுப்பியுள்ளனர். இதை பார்த்த டி.ஆர்.ராஜகுமாரி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு அழுதுள்ளார். அதன்பிறகு டிரைவர் ராகவன், அந்த ஊரில் இருந்து கிளம்பி, நெல்லை அருகில் கேரளா எல்லையில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு டி.ஆர்.ராஜகுமாரி யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடைசிவரை தனியாக வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு தனது 77 வயதில் மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி தான் உச்சத்தில் இருந்தாலும், ஒரு டிரைவரின் எளிமையான மனதிற்கு மதிப்பு கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மன்னர் காதலித்தது, டி.ஆர்.ராஜகுமாரி டிரைவர் ராகவனை காதலித்த தகவலை இயக்குனர், தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளார்.

Ajay Manjunath.