Total Pageviews

Thursday, September 13, 2012

ஏழைகளுக்கு உதவும் அதிசய பிறவி!


வீடுகளிலும், வங்கி களிலும், பணத்தையும், நகையையும் குவித்து வைத்து, எச்சில் கையில் கூட, காக்கா ஓட்டாத கஞ்ச மகா கருமிகள், நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இல்லையென, கையேந்துவோருக்கு, ஒரு பைசா கூட, கொடுப்பதற்கு, இவர்களுக்கு மனம் வராது. இவர்களிடம், காசு, பணம், கொட்டி கிடந்தாலும், மனிதாபிமானம், சுத்தமாக இருக்காது.

ஆனால், தைவானில், காய்கறி வியாபாரம் செய்து, பிழைப்பை நடத்தும் ஒரு பெண், தான் சம்பாதிப்பதை எல்லாம், ஏழைகளுக்காக வாரிக் கொடுக்கும் அதிசய பிறவியாக வாழ்ந்து வருகிறார். அவரது பெயர், சென் சூ சு. இவருக்கு 60 வயதாகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கிழக்கு தைவானின், டாய்டுங் மாகாணத்தில் உள்ள காய்கறிச் சந்தையில், சிறிய அளவில் காய்கறி வியாபாரத்தை துவங்கினார். இளம் வயதில் வறுமையில் வாடியதால், வறுமையின் கொடுமை என்ன என்பதை, நன்கு அறிந்திருந்த சென் சூவுக்கு, இயற்கையிலேயே, ஏழைகளுக்கு உதவும், மனப் பக்குவம் வந்திருந்தது.

இதனால், தன்னுடைய வருமானம் முழுவதையும், ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற காப்பகங்கள் ஆகியவற்றுக்கு வாரி வழங்கினார். கடந்த, 40 ஆண்டுகளில், இதுவரை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், தானமாக அளித்துள்ளார். ஊட்டச் சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், நூலகம் அமைப்பதற்காகவும், உள்ளூரில் உள்ள காப்பகங்களுக்கும், அதிகமான நன்கொடை அளித்துள்ளார்.

நூறு ரூபாய், தானமாக கொடுத்தாலே, பத்திரிகை, புகைப்படக்காரர்களை கூப்பிட்டு, புகைப்படம் எடுத்து, பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொள்வோர் மத்தியில், தன் சம்பாத்தியம் முழு வதையும் வாரி வழங்கும் இவர், தன்னுடைய உதவியைப் பற்றி, வெளியில் யாரிடமும் கூறுவது இல்லை.

தினமும், அதிகாலையில் சந்தைக்கு வந்து, இரவு 8:00 மணி வரை, தீவிரமாக காய்கறி வியாபாரம் செய்கிறார் இவர். ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே தூக்கம். "டைம்' மற்றும் "போர்ப்ஸ் ஏசியா' போன்ற பத்திரிகைகள், இவரது சாதனையை, வெளி உலகிற்கு அடையாளம் காட்டினாலும், தனக்கும், அதற்கும், சம்பந்தமில்லாதவர் போல், மிகவும் எளிமையாகவே இருக்கிறார்.

"காய்கறி வியாபாரம் செய்யும் உங்களால், எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல், உதவ முடிந்தது?'என்ற, கேள்விக்கு, மிகவும் பொறுமையாக பதில் அளித்தார்...

"உணவு, உடை உள்ளிட்ட, என்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, பணத்தை செலவிடுகிறேன். மற்ற அனைத்தையும், ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன். அதனால் தான், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடிந்தது. என் உயிர் உள்ளவரை, தொடர்ந்து ஏழைகளுக்கு உதவுவேன். பீரோக்களில் பணத்தையும், நகைகளையும் அடுக்கி வைத்து, மனிதாபிமானத்தை மறந்து, குப்பையான மனதுடன், என்னால் வாழ முடியாது...' என, அழுத்தம், திருத்தமாக பேசுகிறார். உயர்ந்த லட்சியத்துடன் வாழும் இவர், ஒரு அதிசய பிறவி என்பதில், எந்த சந்தேகமுமில்லை.

Thanks to Dinamalar.com 

பணம் இல்லாதவனுக்கு வீடு  மட்டுமே  உலகம்.

பணம் இருப்பவனுக்கு உலகமே வீடு.


Thursday, September 6, 2012

துறவு என்றால் என்ன ?



வார்த்தைக்கு உலகில் பிரதானமாக அறியப் படுகிற பொருள் ஒன்று உண்டு.

பஞ்சு மெத்தையில் படுக்காமல் கட்டாந்தரையில் படுப்பது துறவு.

வண்ணவண்ணமான ஆடைகளை அணியாமல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடை அணிவது துறவு.

ருசி ருசியாண உணவுகளை உண்ணாமல் ருசிகளற்ற உணவை உணப்து துறவு.

சம்பத்திக்கச் செல்லாமல் பிச்சை எடுத்து உண்பது துறவு,

குடும்பமாக வாழமல் தனி மனிதனாக வாழ்வது துறவு என்று துறவுக்கு உலகம் ஒரு பொருளை கொண்டிருக்கிறது.

எந்த ஒரு இடத்திலும் தேவைக்கு அதிகமாக செலவ்ழிப்பது ஆடம்பரமாகும்.ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் துறவிதான்

ஆடம்பரமாக வாழாதீர்கள் அது இறைவனது விருப்பத்திற்குரியது அல்ல எனபது இதுவரை சமயவாதமாக இருந்தது. இப்போதோ ஆடம்பரமாக வாழாதீர்கள் ஆடம்பரத்தால் உலகில் விலைவாசி உயரும், ஒரு சிலர் செய்கிற ஆடமபரம் ஒட்டு மொத்த உலகின் நலனையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது பொருளாதார தத்துவமாக மாறியிருக்கிறது இருக்கிறது.

ஒருவர் தேவையின்றி ஒரு பொருளை வாங்கினால் அது அவருடைய பர்ஸை மட்டும் பாதிக்கிற விசயமல்ல. நாட்டுப் பொருளாதாரத்தின் பல்ஸையும் பாதிக்கிறது என்று கவலைப் படுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.

இப்போதைக்கு பிரதமர் துறவியாகியிருக்கிறார். நீங்களும் கொஞ்சம் துறவியாக முயறிசி செய்யுங்கள். இந்த தேசமும் “அந்த”தேசமும் வளம் பெறும்.

Thursday, July 26, 2012

பெருந்தலைவர் காமராஜர் - கதையல்ல நிஜம்

நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. – (பெருந்தலைவர் காமராஜர் சொன்ன‍து)

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார்.

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காம ராஜர் போட்ட உத்தரவு தான் அந்த கடிதம். 2  நாள் கழித்து பழைய சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடி வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனு மே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறு முனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக் கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில் லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட் டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள்.

முதல்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கா ர்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங் கட்டி முதலில் நுழைய அதி காரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண் டார்கள். நீங்க தான் மண்ணாங்கட்டி யா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்

தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதி காரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப் பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துகும் பிட்டு ‘நான் தப்பு பண்ணிட்டேன். தெரி யாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச் சே… ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லி யாமே.

சமைக்கலயாமே…. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க … எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ் சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்க கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது

தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவுசொல்ல மண்ணாங் கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப் பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிக ளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடு த்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தை ங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிற கென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறு ம் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப் பாடு வாங்கிட்டு போய் கொ டுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்கமாட் டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்ட படியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியு ம். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்..

Tuesday, July 10, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 

இல்லங்களில் இனிமை என்றும் நிலைத்திருக்க, 

துன்பங்கள் தொலைந்து அமைதியும் ஆனந்தமும் நிலைபெற்று, வாழ 

இறைவனை பிரார்த்திப்போம்!

தீபாவளி என்றால் என்ன?

 
 
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.

அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.



கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

Wednesday, June 27, 2012

பரிந்துரை


  • ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்யூஸ்.
  • நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
 -நியேட்சே.
  • வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.
- பிராய்டு.
  • அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.
  • கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- முகம்மது நபி.
  • சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி.
  •  மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்.
  • இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.
  • ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- சாமுவேல் பட்லர்.
  • வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.
  • நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.
  • தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- டிரெட்ஸி.
  • இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- மகாகவி பாரதியார்.
  • அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்.
  • நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.
  • எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்.
  • கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்
  • ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
- பெர்னாட்ஷா.
  • அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
- சர்ச்சில்.
  • தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.
  • நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது.
- சுவாமி சுகபோதானந்தா.
  • பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.
 -வைரமுத்து

பணிவு இருந்தால் எல்லாமும் அவனிடம் தானே வந்து சேரும்


உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால யாருக்கும் பயப்படாதே! 
உன்னைவிட சின்னவன் யாருமில்ல, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே!
"

இது தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் வசனம்.  எனக்கு மிகவும் பிடித்த வசனம். முதல் வரி ஒருவருடைய தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது என்றால், இரண்டாம் வரி ஒருவருக்கு பணிவைத் தூண்டுகிறது என்பது  என்  எண்ணம்.

"நேத்து எங்க ஆபீசர் என்னைக் கண்டபடி திட்டினாரு, ஆனாலும் நான் பொறுமையா இருந்துட்டேன்"என்று கூறுவது பெருமை இல்லை.  ஏனென்றால் உயர் அதிகாரியிடம் பணிவாக இருப்பது அதிசயம் இல்லை.  ஆனால், "பியூனுக்கு ஏதோ மனக் குழப்பம் போலிருக்கு, அதான், எப்பவும் சரியா செய்யறவன், நான் சொன்னது எதையும் நேத்து சரியா செய்யலை. சரி போறான்னு விட்டுட்டேன்" என்று சொல்லிப் பாருங்கள், உங்கள் இளகிய மனம் எதிராளிக்குப் புரியும்.

சின்ன வயதில் அதிகமாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை, நான் வளர்ந்த சூழல் அப்படி.  ஆனால், கேபிள் டிவி வந்தபிறகு, கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தாலும், சினிமா மோகம் என்றுமே எனக்கு இல்லை.  அதனால், இவரின் ரசிகன், அவர் சூப்பர் என்றெல்லாம் ஒரு நடிகர்/நடிகையை ஆராதிக்கும் நபரும் நான் இல்லை.  ஆனால், தமிழ்ப் படவுலகில் நான் விரும்பும் இரண்டு மனிதர்கள் (கவனிக்கவும்: நடிகர் இல்லை, மனிதர்) திரு ரஜினிகாந்த் (யாருப்பா அங்க விசில் அடிக்கறது, கோபி சாரா, வணக்கம் தல) மற்றும் திரு ஏவிஎம் சரவணன். காரணம், இவர்கள் இருவரிடமும் நான் காணும் பணிவுதான்.  தமிழ்நாடே அவர் பின்னால் இருக்கும் (அல்லது இருப்பது போல் தோன்றும்) சூழலில் கூட தனிக் கட்சி என்று ஆரம்பிக்காமல் (அல்லது ஆரம்பித்துக் காணாமல் போகாமல்) அமைதியாக இருந்தாரே, சர்வ நிச்சயமாகச் சொல்லுகிறேன், மனத்தில் பணிவு என்ற ஒன்று இல்லாத எந்த நபரும் அந்த நேரத்தில் அந்த ஒரு முடிவு எடுத்திருக்க முடியாது.  

அதேபோல், திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்களை எந்தப் பொது இடத்தில் பார்த்தாலும் இரு கைகளை கட்டிய வண்ணமே இருப்பார்.  எத்தகைய ஜாம்பவான்களை வைத்து எவ்வளவு மெகா ஹிட் படங்களை கொடுத்த எத்தனை பெரிய ஒரு பட நிறுவனம், அந்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் இவ்வளவு அமைதியாக பணிவாக தோன்றுகிறார் என்றால், அந்த பணிவுக்கு என்னுடைய பெரிய சல்யூட்.

இதைத்தான் தெய்வப் புலவர் 
                                        பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
                                        சுருக்கத்து வேண்டும் உயர்வு 

என்கிறார் (திருக்குறள் - 963)

"பணிவாக இருந்தால் நம்மைக் கோழை என்று நினைக்க மாட்டார்களா?" என்று கேட்க தோன்றலாம்.  முதலில் அப்படி நினைத்தாலும், காலப் போக்கில் நம்முடைய பணிவைக் கண்டு வியந்து அவர்கள் மனம் மாறிவிடுவார்கள்.  

குலைதள்ளிய வாழை சற்று வளைந்துதான் இருக்கும், அதுதான் பிறருக்குப் பயன் கொடுக்கும். எனவே, பணிவாய் இருப்போம், பிறருக்குப் பயன் கொடுப்போம்.