Total Pageviews

Thursday, September 13, 2012

ஏழைகளுக்கு உதவும் அதிசய பிறவி!


வீடுகளிலும், வங்கி களிலும், பணத்தையும், நகையையும் குவித்து வைத்து, எச்சில் கையில் கூட, காக்கா ஓட்டாத கஞ்ச மகா கருமிகள், நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இல்லையென, கையேந்துவோருக்கு, ஒரு பைசா கூட, கொடுப்பதற்கு, இவர்களுக்கு மனம் வராது. இவர்களிடம், காசு, பணம், கொட்டி கிடந்தாலும், மனிதாபிமானம், சுத்தமாக இருக்காது.

ஆனால், தைவானில், காய்கறி வியாபாரம் செய்து, பிழைப்பை நடத்தும் ஒரு பெண், தான் சம்பாதிப்பதை எல்லாம், ஏழைகளுக்காக வாரிக் கொடுக்கும் அதிசய பிறவியாக வாழ்ந்து வருகிறார். அவரது பெயர், சென் சூ சு. இவருக்கு 60 வயதாகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கிழக்கு தைவானின், டாய்டுங் மாகாணத்தில் உள்ள காய்கறிச் சந்தையில், சிறிய அளவில் காய்கறி வியாபாரத்தை துவங்கினார். இளம் வயதில் வறுமையில் வாடியதால், வறுமையின் கொடுமை என்ன என்பதை, நன்கு அறிந்திருந்த சென் சூவுக்கு, இயற்கையிலேயே, ஏழைகளுக்கு உதவும், மனப் பக்குவம் வந்திருந்தது.

இதனால், தன்னுடைய வருமானம் முழுவதையும், ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற காப்பகங்கள் ஆகியவற்றுக்கு வாரி வழங்கினார். கடந்த, 40 ஆண்டுகளில், இதுவரை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், தானமாக அளித்துள்ளார். ஊட்டச் சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், நூலகம் அமைப்பதற்காகவும், உள்ளூரில் உள்ள காப்பகங்களுக்கும், அதிகமான நன்கொடை அளித்துள்ளார்.

நூறு ரூபாய், தானமாக கொடுத்தாலே, பத்திரிகை, புகைப்படக்காரர்களை கூப்பிட்டு, புகைப்படம் எடுத்து, பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொள்வோர் மத்தியில், தன் சம்பாத்தியம் முழு வதையும் வாரி வழங்கும் இவர், தன்னுடைய உதவியைப் பற்றி, வெளியில் யாரிடமும் கூறுவது இல்லை.

தினமும், அதிகாலையில் சந்தைக்கு வந்து, இரவு 8:00 மணி வரை, தீவிரமாக காய்கறி வியாபாரம் செய்கிறார் இவர். ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே தூக்கம். "டைம்' மற்றும் "போர்ப்ஸ் ஏசியா' போன்ற பத்திரிகைகள், இவரது சாதனையை, வெளி உலகிற்கு அடையாளம் காட்டினாலும், தனக்கும், அதற்கும், சம்பந்தமில்லாதவர் போல், மிகவும் எளிமையாகவே இருக்கிறார்.

"காய்கறி வியாபாரம் செய்யும் உங்களால், எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல், உதவ முடிந்தது?'என்ற, கேள்விக்கு, மிகவும் பொறுமையாக பதில் அளித்தார்...

"உணவு, உடை உள்ளிட்ட, என்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, பணத்தை செலவிடுகிறேன். மற்ற அனைத்தையும், ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன். அதனால் தான், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடிந்தது. என் உயிர் உள்ளவரை, தொடர்ந்து ஏழைகளுக்கு உதவுவேன். பீரோக்களில் பணத்தையும், நகைகளையும் அடுக்கி வைத்து, மனிதாபிமானத்தை மறந்து, குப்பையான மனதுடன், என்னால் வாழ முடியாது...' என, அழுத்தம், திருத்தமாக பேசுகிறார். உயர்ந்த லட்சியத்துடன் வாழும் இவர், ஒரு அதிசய பிறவி என்பதில், எந்த சந்தேகமுமில்லை.

Thanks to Dinamalar.com 

பணம் இல்லாதவனுக்கு வீடு  மட்டுமே  உலகம்.

பணம் இருப்பவனுக்கு உலகமே வீடு.


No comments:

Post a Comment