Total Pageviews

Friday, March 29, 2013

யாகாவாராயினும் நாகாக்க யாருக்காக?

யாகாவாராயினும் நாகாக்க  யாருக்காக?

அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது.

ஒரு உறுப்பினர், “பேருந்தில், யாகாவாராய்னும் நாகாக்க என்று எழுதப்பட்டிருக்கிறதே, யாருடைய நாக்கு காக்கப்பட வேண்டும்?

பேருந்தின் நடத்துனரா? ஓட்டுனரா? இல்லை பயணிகளா?” என்று முதலமைச்சரான அண்ணாவைப் பார்த்துக் கேட்டார்.

உடனே அண்ணா, “ யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள், யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவருக்குமே எழுதப்பட்டுள்ளது” என்றார்.

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?




சமையல் செய்யும்போது தீயால் விரலைச் சுட்டுக் கொண்டால், அதற்கென்று உள்ள களிம்பையோ, மசியையோ, நெய்யையோ தடவுகிறோம். இதெல்லாம் பழைய முறைகள். ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை எளிமையானது. அதாவது தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்வது. ஐஸ் இருந்தாலும் வைக்கலாம். வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.
 
உடலில் தீப்புண் எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். ரத்த நாளங்களும், தசை நார்களும் சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப் போய் திரவத் தன்மை குறைந்து கெட்டியாகிறது.

இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் மிகக் 
கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், தீப்புண்ணுக்கு இரையானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அப்புறப்படுத்துவது அவசியம். உடலில் மூன்றில் ஒரு பாகமோ அல்லது அதற்கு மேற்பட்டோ தீயால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.

தீப்புண்கள் கிருமிகள் இல்லாதவை. எனவே அசுத்தமான கை படக் கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது. துணி, தீயால் கிருமிகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.

தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல் மருந்து. உடல் ஏதாவது திடீர் விபத்துக்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக ரத்தம் பாயும். தோல், சதைப் பாகங்கள், ஜீரணக் குழாய் போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும்.

அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக் கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் அல்லது லேசான தேயிலைப் பானம் போன்ற நீராகாரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தீப்பிடித்துக் கொண்டதும் உதவிக்காக அங்குமிங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். பக்கத்தில் இருப்பவர் உடனே தண்ணீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது, உடனே ஒரு கம்பளியால் அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தித் தீயை அணைக்க வேண்டும் என்பது. அது தவறு!

ஊரடங்கு




ஊரடங்கு’ என்பது ஆங்கிலத்தில் `கர்ப்யூ’ (Curfew) எனப்படுகிறது. இதன் பொருள், `உன் வீட்டினுள் இரு’ என்பதாகும். பிரெஞ்சுச் சொல்லான `கவுரே ப்யூ’ என்பதில் இருந்து `கர்ப்யூ’ வந்தது.
 
இதன் ஆதிகால அர்த்தம், `நெருப்பை மூடுவது’ என்பதாகும். வெற்றி வீரர் வில்லியம் (Willium the Conquerer) இவ்வார்த்தையை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது நெருப்பை மூடி வைக்க வேண்டும் என்று சமிக்ஞை அளிக்கப்படும்.

நெருப்பால் ஏற்படும் பெரிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த `கர்ப்யூ’ சட்டம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்தில் கர்ப்யூ மணி அடிக்கப்படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

. இதயம் எப்படி வேலை செய்கிறது?

நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளுள் ஒன்று, இதயம். உடம்பெங்கும் ரத்த ஓட்டத்துக்கு மூலமாக இருப்பது இதயம்தான்
.

 
இதயம் எப்படி வேலை செய்கிறது?

இதயத் தசை சுருங்கி விரியும் தன்மை உடையது. இதயம் முழுமையாக விரிந்திருக்கும்போது, அசுத்த ரத்தம் கொண்டுவரும் சிரைகள் வலது இதய அறைகளையும், சுத்த ரத்தம் கொண்டுவரும் நுரையீரல் சிரை இடது இதய அறைகளையும் நிரப்புகிறது.

கீழறைகளுக்குச் செல்வதை விட அதிகமான ரத்தம் மேலறைகளுக்குச் செல்வதால் மேலறைச் சுவர்கள் முழுமையாக விரிகின்றன. அதன்பின் மேலறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன.

இவ்வாறு மேலறைகள் சுருங்கும்போது அவற்றில் உள்ள ரத்தம், விரிந்திருக்கும் கீழ் அறைகளுக்குள் வால்வுகள் வழியாகச் செல்கிறது. கீழறைகள் நிரம்பியவுடன் உட்போக்கு வால்வுகள் ரத்தத்தில் மிதக்கின்றன. இப்போது, கீழறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன. அழுத்தப்படும் ரத்தம், மேலறைக்குச் செல்வதை வால்வுகள் தடை செய்வதால், தமனிக்குள் செல்கிறது. வலது கீழறை ரத்தம் நுரையீரல் தமனிக்குள்ளும், இடது கீழறை ரத்தம் பெருந்தமனிக்குள்ளும், பாய்குழலுக்குள் சென்ற ரத்தம் கீழறைகளுக்கும் மீண்டும் திரும்புவதை அவற்றின் நுழைவாயில் வால்வுகள் அனுமதிப்பதில்லை.

இவ்வாறு இதயத்தில் ரத்தம் நிரம்பி, வெளியேறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கீழறைகள் சுருங்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறையிலிருந்து மூன்று அவுன்ஸ் ரத்தம் வெளியேறுகிறது.

கீழறை சுருங்கும்போது இதயத்தின் நுனி முன்னுக்குத் தள்ளி மார்புச் சுவர்களை அடிப்பதால்தான் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

இதயம் முழுமையாக விரிவது, மேலறைகள் சுருங்குவது, கீழறைகள் சுருங்குவது, மீண்டும் இதயம் முழுமையாக விரிவது என்று விரிதல்- சுருங்கல் நிகழ்ச்சி இடைவிடாமல் நடைபெறுகிறது. நிமிடத்துக்குச் சுமார் 72 தடவை இதயத் தசையான கார்டியாக் தசை மாறி மாறித் தளர்ந்து சுருங்குவதாகக் கூறலாம்.

ரப்பர் பையினுள் தண்ணீரை அடைத்து அதை அழுத்தினால் பையில் ஓட்டை இருந்தால் நீர் எவ்வளவு வேகமாக வெளிவரும்! அதைப் போலவே இதயத்தின் மேலறை சுருங்கும்போது ரத்தம் மேலறையில் இருந்து கீழறைக்கும், கீழறை சுருங்கும்போது அதிலிருந்து ரத்தக் குழாய்களுக்கும் செல்கிறது என்று சொல்லலாம்.

ஒரு மனிதனை ஐந்நூறு அடி உயரம் தூக்குவதற்கு எவ்வளவு சக்தி செலவழியுமோ, அவ்வளவு வேலையை இதயம் ஒவ்வொரு நாளும் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைக்குள் அடங்கக்கூடிய இதயம் இவ்வளவு வேலை செய்வது அதிசயத்திலும் அதிசயமாகும்!

Tuesday, January 1, 2013

இந்தியாவின் `இளமை'



* இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 47 சதவீதத்தினர் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

* 54 சதவீத இளவட்டத்தினர் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கின்றனர்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவர் திருமணமானவர். அதே வயதில் நாட்டின் சரிபாதிப் பெண்கள் திருமணமானவர்கள்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் ஆண்களில் 64 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதம் பேரும் வேலை பார்க்கிறார்கள். நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.

* தேசிய கிராமப்புறப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கிராமப்புற இளைஞர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனால், கிராமப்புறப் பகுதி செலவழிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

Monday, December 31, 2012

சத்ய சாய் பாபாவின் சிந்தனைகள்

ஆசைகளை அடக்கிக் கொள்வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது
.
1) விலைவாசியைக் கட்டுப்படுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம்.
 ஆனால், யாரும் மனதைக் கட்டுப் படுத்துவதில் நாட்டம் கொள் வதில்லை.

2)இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம்.
 அதைக் காட் டிலும் மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வதில்லை.

3)புளிப்பு, கசப்பின்றி இனிமையாக இருக்கும் கனிகளை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால்,தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனம் என்னும் கனியைப் படைக்கவே அவர் விரும்புகிறார்.

4)வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது.
 நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.

5)மனிதப்பிறவி கிடைப்பது அரிது. உலக இன்பங்களைத் தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப் படுவதிலுமே பொழுதைக் கழித்து விடுகிறோம்.

6) மனித மனம், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் போன்றது. அதன் ஒவ்வொரு இதழும் உலக மாயைகளுக்கு ஆசைப்பட்டு செல்ல விரும்பும். ஆனால், நீங்கள்தான் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல மனம் கூட வீணாகப் போய் விடும். மனதை கட்டுப்படுத்தி இருப்பவர்களை, வெளியில் ஏற்படும் எத்தகைய துன்பங்களும் பாதிக்காது.

7) கடவுளை அடையவேண்டும் என விரும்புபவர்கள் அதற்காக சிரத்தையான செயல்களை செய்ய வேண்டும் என்பதில்லை. எளிதாக மூன்று வழிகளை மட்டும் பின் பற்றினால்போதும்.

1) இதயத்தை அன்பிலும்,
2) செயல்களை நேர்மையிலும்,
3) உணர்ச்சிகளை கருணையிலும் நனைத்துவிடுங்கள்
. இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே, கடவுளை வெகு சீக்கிரத்தில் அடைந்து விடலாம்.

8) இரும்புத்துண்டை நீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால், அதே இரும்பினை இலகுவாக்கி சிறிய பாத்திரமாக செய்து நீரில் விட்டால் மிதக்கும். இதைப் போலவே மனதையும் இலகுவாக மாற்றிக்கொண்டால் உலக ஆசை என்ற மாயையில் மூழ்காமல், அதன் மீது பற்றில்லாமல் மிதந்து கொண்டிருக்கும்.

9) மனதில் எப்போதும் இறைவனை மட்டுமே நினைத்துக் கொண்டிருங்கள். அவரது நாமத்தையே உச்சரியுங்கள். இறை செயல் அல்லாத வேறு செயல்களில் ஆர்வம் காட்டாதீர்கள் . இப்படிப்பட்டவர்களின் மனம், பூக்களில் இருந்து தேனை மட்டுமே எடுத்துக்கொள்ளும் தேனீக்கு சமமானதாக இருக்கும்.

10) நீருக்கு மீன் அவசியமில்லை. ஆனால், மீனுக்கு நீர் அவசியம். அதுபோல குருவுக்கு சீடன் அவசியமில்லை. ஆனால், சீடனுக்கோ குரு மிகவும் முக்கியம். குருவின் துணையில்லாவிட்டால் சீடனால் எதுவும் செய்ய முடியாது.

11) முதலில் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டை திருத்த வேண்டும். அதன் பிறகே, நமது ஊரை திருத்த வேண்டும். அடுத்து மாவட்டத்தையும், பின்னர் மாநிலத்தையும், அதற்கடுத்தபடியாக நாட்டையும் திருத்த முயல வேண்டும். இவ்வாறு படிப்படியாகத்தான் செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, எடுத்த எடுப்பிலேயே சமுதாயத்தையும் நாட்டையும் திருத்த முயல்வது அர்த்தமற்றது.

12) நீரும் நீரும் எளிதில் ஒன்றாக கலந்து விடும். ஆனால், நீரில் எண்ணையை விட்டால் அது கலக்காமல் பிரிந்தே நிற்கும். அதே போல் நல்லவர்கள் நல்லவர்களுடன் எளிதில் சேர்ந்து விடுவார்கள். ஆனால், கெட்டவர்கள் நல்லவர்கள் போல் நடித்து, அவர்களுடன் சேர முயற்சித்தாலும் அது முடியாமல் போய்விடும்.

13) குளத்தில் நீர் இருந்தால் தவளைகள் அங்கே குவிந்திருக்கும். நீர் வற்றி விட்டால் அங்கிருந்து வெளியேறிவிடும். அதே போல் ஒருவனிடம் பதவி, பணம் இருக்கும் போது மக்கள் அவனை சூழ்ந்து இருக்கின்றனர். ஆனால், அவனுக்கு வறுமை ஏற்படும் போது, உறவினர்களும், உயிர் நண்பர்களும் விலகி விடுகின்றனர்.

14) வளர்த்த பெற்றவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல், படைத்த இறைவனுக்கும் தினமும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

15) காட்டில் இருக்கும் சிறிய விறகிற்கு தீ வைத்தால், விறகு மட்டும் எரிவதோடு நின்று விடாது. காட்டையே அழித்துவிட்டுத்தான் அணையும். அது போலவே, மனிதர்களின் மனதில் உண்டாகும் தீய எண்ணம் என்னும் தீயானது அவர்களை மட்டுமின்றி, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும். ஆகவே, எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

16) எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அவை உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலை என்றாலும், உங்களை நம்பி கொடுக்கப்பட்டிருப்பதால் அதனை எத்தகைய சிரத்தை எடுத்தாவது சிறப்பாக முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல், பெயருக்கு இயந்திரம் போல செய்யக்கூடாது. இது, எண்ணெய் இல்லாத விளக்கில், பிரகாசிக்காமல் எரியும் திரிக்கு ஒப்பானதாகும். மனதில் 'ஈடுபாடு' என்ற எண்ணெய்யை விட்டு பணி செய்தால்தான், முடிவும் சுடர்போல பிரகாசமாக இருக்கும்.

17) உலோகங்களில் எல்லாம் உயர்ந்த தங்கத்தை, தீயில் போட்டு உருக்குகின்றனர். இதனை, தங்கத்தை வெறுப்பதற்காக தீயில் போடப்பட்டதாக சொல்லமுடியாது. அதை தீயில் இட்டால், அழுக்குகள் தானாக நீங்கிவிடும். அதைப்போலவே, மனிதர்கள் தங்களிடமுள்ள மன அழுக்குகளை நீக்கி, பரிசுத்தமானவர்களாக திகழவே கடவுள் துன்பங்களைக் கொடுக்கிறார். இதனைப் புரிந்து கொண்டு துன்பத்தை இன்பமாக ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இத்தகையவர்கள், கடவுளுக்கு ஒப்பானவர்கள் ஆவர்.

18) தண்ணீரில் கல்லைப்போடும்போது, அலைகள் தோன்றி நீர்நிலையின் கரை வரையிலும் பரவும். இதுபோல, நம் மனதில் ஓர் எண்ணம் விழுந்தால் அந்த எண்ணம் நல்லதோ, தீயதோ உடல் எங்கும் பரவி விடுகிறது. மனம் என்னும் குளத்தில் உருவாகும் சிந்தனை அலைகள் கைகளை அடைந்து தீய செயல்களைச் செய்கிறது. விழிகளை அடைந்து தீய காட்சிகளைக் காண்கிறது. கால்களை அடைந்து தீய இடங்களுக்குச் செல்கிறது. ஆக, எண்ணங்களுக்கேற்பவே நாம் நல்ல செயல்களையோ கெட்ட செயல்களையோ மேற்கொள்கிறோம். எனவே மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண் டும்.

19) ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை. முதலில் நல்லவராக வாழவேண்டுமென்ற உறுதியான, அசையாத நம்பிக்கை வேண்டும். இரண்டாவதாக பொறாமை, வெறுப்பு, கர்வம் ஆகிய குணங்களிலிருந்து விடுபடவேண்டும். மூன்றாவதாக நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்போ அல்லது தனி நபரோ தொண்டு செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும்.

20) சர்க்கரையை விஷம் என நினைத்து, அதை நீரில் கரைத்து சாப்பிட்டால் தீமை எதுவும் உண்டாகிவிடாது. அதேசமயம் விஷத்தை நீரில் கலந்து, அதை கரும்புச்சாறு என்று நினைத்து குடித்தால் நிச்சயம் ஆபத்துதான் விளையும். எனவே தீய செயலை நல்லதென்று நினைத்து செய்தாலும், விளைவு தீயதாகவே இருக்கும்.

21) பாரததேசம் என்பது ஒரு தனியான நாட்டை மட்டும் குறிப்பிடுவது அல்ல. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தூய்மையான ஜீவ பிரும்ம தத்துவத்தை போதிக்கக்கூடிய அமைதி நிறைந்த இடம். சரஸ்வதி, பகவதி, பாரதி என்றெல்லாம் கூறுகிறோம். சரஸ்வதி வாக்கிற்கு சக்தி கொடுக்கும் தேவதை. ஆகவே, வாக்கின் சக்தியால் நல்ல பணியை செய்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பாரதத்தின் மக்களே. இந்த பண்பு மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்.

22) ஆன்மிக, அரசியல் மற்றும் இலக்கிய துறைகளிலும் மேன்மை பெற்ற நாடு இது. ஒவ்வொரு உள்ளமும் நல்ல எண்ணங்களைக் கொண்டால், நல்ல விளைவுகள் ஏற்படும். அப்போது உலகம் முழுவதுமே நன்மை ஏற்படும். இதுவே உண்மையான பாரதத்தின் உயரிய தொண்டு.

23) மனிதன் ஒவ்வொரு உயிரையும் கடவுளின் குழந்தை என்று கருதவேண்டும். வெறுப்பை விட்டொழித்து யாருக்கும் தீங்கிழைக்காத நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு கவலை என்பதே கிடையாது. துயரமும் இல்லை. எல்லாமே நிலையற்றவை என நான் கருதுகிறேன். எதுவும் நம்முடையவை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரும்போது கொண்டுவரவில்லை. போகும்போது விலாசமும் கொடுப்பதில்லை. பிறகு இவற்றைப்பற்றிய கவலையை மட்டும் சுமப்பானேன்?

24) வாழும் குறுகிய காலத்தில் தெய்வ சிந்தனையுடன், தளராத நம்பிக்கையுடன், வேறுபாட்டு உணர்வை நீக்கி, எல்லோரும் தெய்வத்தின் உருவங்களே என்று உணர்ந்து வாழுங்கள். உங்கள் வாழ்க்கை புனிதமாகும். நாடும் உலகமும் நன்மை பெறும்.

25) உன் குற்றம் குறைகளை கண்டுபிடி. அடுத்தவரிடம் குணங்களைத் தேடு. அடுத்தவரிடமுள்ள குறைகளைத் தேடுவது பாவம். மிருக உணர்ச்சிகளை களைந்து விட்டால், தெய்வீக உணர்வுகள் பெருக்கெடுக்கும்.

26) நீ வெளிச்சத்தில் இருக்கிறாய். ஒளி உன்னிடம் இருக்கிறது. நீயே ஒளியாகிறாய். உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி. நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள். அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்துநிற்க இயலும்.

27) ஞானக்கதவுகள் திறக்கட்டும். அறியாமைத்திரை கிழிபடட்டும். தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும். நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்
.
28) முன்னதாக புறப்படு. மெதுவாக ஓட்டு. பாதுகாப்பாய் போய்ச்சேர். உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள். அது 'நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்
.
29) தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது. அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

30) மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே. கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான். இதில் சந்தேகம் வேண்டாம். நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.


31) வெப்பம், குளிர்ச்சி இவ்விரண்டும் இயற்கையின் மாறுதல்களுக்கேற்ப சுழற்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கோடை காலத்தில் வெப்பத்தை வெறுத்து, குளிர்ச்சியை விரும்புகிறோம். குளிர்காலத்தில் குளிர்ச்சியை ஒதுக்கி, வெப்பத்தை தேடிச்செல்கிறோம். ஒரு சமயத்தில் நாம் விரும்பும் சூழலை, மற்றொரு நேரத்தில் வெறுக்கவும், விரும்பவும் செய்கிறோம். வெறுப்பதாலோ, விரும்புவதாலோ இவ்விரண்டிலிருந்தும் நாம் ஒதுங்கிவிட முடியாது. அதைப்போலவே இன்பமும், துன்பமும் வாழ்க்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இவை இரண்டையும் வேறுவேறாக பார்க்காமல் சமமாக பாவித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

32)அகங்காரமும் ஆடம்பரமுமே மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முட்டுக்கட்டைகள் என்பதை ஒவ்வொருவரும் நன்றாக உணர வேண்டும்.

33)மனிதன் எவ்விதமான பணியில் ஈடுபட்டிருப்பினும் எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஆதி காரணமான மெய்ப்பொருள் மீது நாட்டத்தை விட்டுவிடக்கூடாது.

34)உலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று கோருவதுடன், பிறர் நலனுக்காகப் பாடுபடுவதிலும் ஊக்கம் கொள்ள வேண்டும்.

35)கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கேற்ப, பிறருக்குத் தீங்கு விளைவிக்க எண்ணம் கொண்டால் நமக்கே தீங்கு விளையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

36) நல்லதையே நினைத்து, நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவர்களாகத் திகழுங்கள். இதுவே பிரும்மத்துவத்தின் ரகசியம். பக்தியின் லட்சணமும் இதுவே. எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருத்தல் மனிதத் தன்மையின் சிறப்பாகும்
.
37) எவ்வித வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல் அடிப்படை ஒற்றுமையான ஒவ்வொருவரிடமும் உள்ள தெய்வத்துவத்தையே போற்ற வேண்டும். இதுவே உண்மையான மனிதத் தன்மையாகும்.

38)மனிதன் தனது உடலுறுப்புக்களின் உதவியுடன் நற்பணிகள் செய்து சீரான முறையில் கழிப்பதுதான் அவனது தலையாய கடமையாகும். இப்பூத உலகில் செய்யும் பணிகளாலேயே மனிதன் கட்டுப்படுத்தப்படுகிறான்.

39) அடுத்தவரை மகிழ்விப்பது அறம். அதற்காக நாம் பணம் தேடி ஓடவேண்டாம். நல்ல சொற்களே போதுமானது.

40) கண்டவற்றுள், கேட்டவற்றுள் பாதியையே பகர வேண்டும் என்பதற்காகவே கண் இரண்டும், வாய் ஒன்றுமாக வார்த்தளித்தான்.

41) தன்னைக் கல்லால் அடித்தவனுக்கும் இனிய கனியைத் தருகிறது மரம். நம்மைச் சொல்லால் அடிப்பவருக்கு கனிவான சொற்களைத் தரவேண்டும்
.
42) உள்ளத்தில் அன்பு இருந்தால் வார்த்தைகளில் இனிமை, பாலில் ஊறிய பழம்போல இருக்கும்.

43) வாசிக்கத் தெரிந்தவன் வாசித்தால் புல்லாங்குழலில் கீதம் ஒலிக்கும். தெரியாதவன் ஊதினால் காற்றுதான் வரும். அறிஞர்களின் பேச்சில்தான் பொருள் இருக்கும்.

44) எந்த ஒரு வார்த்தை இறை சிந்தனையில் ஒருவனை ஈடுபடுத்துமோ அதுதான் அவனுக்கு மந்திரம். மற்றவனுக்கு அந்த வார்த்தை பொருளற்றதாக இருந்தாலும் சரி, மனதை ஒருமுகப்படுத்துவதே மந்திரம்.

45) ஆன்மிகத்தின் ஆரம்பப் பாடமே பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பதுதான். பேச்சு மனிதனுக்கு இறைவன் அளித்த படைக்கலன்கள். மற்ற மிருகங்களுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள விரைந்தோட வசதியான பாதங்களும், கூரான நகங்களும் மற்றும் கொம்புகளும், தந்தங்களும், அலகுகளும் அளித்த கடவுள் மனிதனுக்கு அளித்திருப்பது இனிமையான பேச்சு ஒன்றுதான். இதன்மூலம் எதிரியைப் பலமிழக்கச் செய்து எதிர்ப்புகளைக் களைந்து வெறுப்பின் பல்வகைத் தாக்குதல்களிலிருந்து தப்பி அவற்றை முறியடித்து மனிதனால் செயல்பட முடியும்.

46) கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த பிரபஞ்சத்தில் மாறாமல் இருக்கும் சக்தி ஒன்று உள்ளது. இந்த ஆதாரமான தெய்வசக்தியை உணர்ந்தால் தான் ஆனந்தம் பெற இயலும். எந்தப் பாதையில் சென்றாலும் இந்தத் தெய்வீக அடிப்படையை மறக்காமல் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்நாளைய மனிதர்கள் தனம், பதவி, அதிகாரம் போன்றவற்றில் நாட்டம் கொண்டு செயல்படுகின்றனரேயன்றி குணத்தில் நாட்டம் கொள்வதில்லை.

47) குணமில்லாமல் அதிகாரம் செலுத்தியோ, உயர்பதவி வகித்தோ, பணம் சம்பாதித்தோ பயனில்லை. மனிதருக்கு முக்கியமான தகுதி குணமே. இதற்கு தெய்வத்துவத்தை உணர முயல வேண்டும். இயல்பை விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடும்.

48) நல்லதற்கும், கெட்டதற்கும் எண்ணமே காரணம். எல்லாமே சத்தியத்திலிருந்து வந்தவை. சத்தியமே தெய்வஸ்வரூபம். சத்தியமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். சத்தியத்தைவிட மேலான தர்மம் வேறு இல்லை. படைப்பனைத்தும் சத்தியத்தில் பிறந்து சத்தியத்திலேயே இணைகின்றன. சுத்தசத்துவமே அதன் துணை. இதில் குணத்திற்கே முக்கியத்துவம் உள்ளது.

49) எவ்வளவு தனவந்தராயினும் குணமே பிரதானமானது. தெய்வத்துடன் கூடிய நற்குணமே மனிதத் தன்மையை வெளிப்படுத்தக்கூடியது.இந்தத் தெய்வீக உணர்வினைப் பற்றிப் பாரத மக்கள்தான் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள். இன்று இப்படிப்பட்ட உயர்ந்த கலாசாரத்தை மறந்துவிட்டனர். இந்த தெய்வீக உயர்வினை மறந்துவிட்டது மிகுந்த துர்பாக்கியமே.

50) எல்லா தனங்களையும்விட மிகவும் உயர்ந்த தனம் பொறுமையே. எல்லா விரதங்களையும்விடச் சிறந்த விரதம் சத்தியமே. தாய்மையை விடச் சிறந்த பாக்கியம் ஏதுமில்லை

Tuesday, December 18, 2012

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு



இளமைப் பருவம் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

அவருடைய  தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர்  குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால்  இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.

இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும்  நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில்  திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்புக்  காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான  மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார்.  காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில்  சேர்ந்தார்.

இல்லறம் எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலில்  தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு  குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால்  இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும்  குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இதற்கிடையே  ஜானகி அம்மையாரை திரைப்படத்தில் கதாநாயகியாக சந்தித்தார். மூன்று  படங்கள்தான் ஜானகியுடன் நடித்திருந்தாலும் காதல் பிறந்தது. எனவே ஜானகி தன்  கணவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
ஜானகி அம்மையாருக்கு மகன் ஒருவனும்  இருந்தான். இருந்தும் எம்.ஜி.ஆர். தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை  மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள்  இல்லை.

வளர்ப்பு குழந்தைகள் லதா ராஜேந்திரன், ராதா  கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், ஜானகி சிவராமன் ஆகியோர் எம்.ஜி.ஆரின்  வளர்ப்பு மகள்கள் ஆவார்கள். விஜயன் என்பர் வளர்ப்பு மகனாவார்.

கல்வி உதவி எம்.ஜி.ஆர்  எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில்  முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம்  வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ்  குறிப்பிட்டுள்ளது.

செல்லப் பிராணிகள் எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற  பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா  சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர்  உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது,  அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில்  வைத்துக் கொண்டார்.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு  அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும்  வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.

சிறுகுட்டியாக  எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில்  சங்கிலி இணைக்க ஏதுவாக துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக  இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது  வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். திரைப்பட வாழ்க்கை

எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை 1936ல்  சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர்  நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.  தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக  முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான  எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும்  அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார்  முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப்  படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும்  நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக,  எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது  சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது.  தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள்  வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த  திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின்  கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப்  பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட  சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே  இயக்கினார். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை எம்.ஜி.ஆர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் 1962-ல் நடந்த தி.மு.க கூட்டத்தில் இவர்  ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார்.  அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன்  நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு.  கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட  முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

1972-இல்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர்  ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும்  வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய  வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும்,  கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும்,  அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.

1977ல் நடைபெற்ற  தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல்  கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல்  பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984  இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1987  வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப்  பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா  விருது வழங்கப்பட்டது.

இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல்  இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011  முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா  தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற  நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும்  தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து  22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில்  உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக்  காட்டுகிறது.

மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.

இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.

இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.

இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விசயத்திலும் கோபப்படமாட்டார்.

மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.

இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விசயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.

அது ரொம்ப பெரிய விசயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.

வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விசயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.

கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபாலனுக்கும் உண்டு.

அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.

இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.

நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம். இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.

அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.

ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.

ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.

அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.

இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.

அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.

சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.

மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.

இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.

அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள், 


பெயர்.................................:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்,
நாம் அறிந்த பெயர்......:(இராமச்சந்திரன்)MGR.
பிறப்பு.................................: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி (இலங்கை)
இறப்பு................................:டிசம்பர் 24, 1987,
மனைவிகள் .................: மூவர்: 1.தங்கமணி, 2. சதானந்தவதி, 3. வி. என். ஜானகி,
பிள்ளைகள்....................:கிடையாது,
தந்தை பெயர்.........................................................:திரு. கோபாலமேணன்
தாயார் பெயர்........................................................ திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர்................................................... திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர்.................................................கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு
கலை அனுபவம்...................................................7 வயது முதல்
நாடக அனுபவம்...................................................1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை................................................சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி
திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம்........................................................காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம்..........................................................ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் .....................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972
தமிழக முதல்வரானது,..........................1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்