Total Pageviews

Thursday, April 18, 2013

திருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா?

ஒன்றரையடி  குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர்  திருவள்ளுவர்.இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும் , கருத்துகளை மக்களுக்காக தந்தவர்.

 
 
திருவள்ளுவர் சிலை உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு  மட்டும்  நான்கடியில் ஒரு பாட்டு  எழுதியுள்ளார் . யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவி க்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின்  துணைவியாரின்  பெயர் வாசுகி அம்மையார்.

 

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு விமர்சனமும் செய்ததில்லை.ஏனெனில் அவர்  கணவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்ததே காரணம். தனது கணவர் செய்யும் எந்த செயலும் நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும் என்று  நினைத்தவர். தனது  கணவர் உணவு உண்ணும் போது ஒரு சிறிய ஊசியினை கையில் வைத்திருப்பார். அவர் உண்ணும் போது கீழே சிந்தும் உணவு பருக்கையினை அந்த ஊசியின் மூலம் குத்தி பின்பு தண்ணீர் நிரம்பிய குவளையில் போடுவார். பின்பு தண்ணீரினை வடித்து விட்டு பின்பு அதனை தனது சாப்பாட்டுடன் கலந்துகொள்வார். இதற்கான காரணத்தை  அந்த அம்மையார் தனது  கணவராகிய திருவள்ளுவரிடம், தாம் இறக்கும் தருவாயில்  தான்  கேட்டு  தெரிந்துகொண்டார்.

திருவள்ளுவரின் இல்லத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தார். பின்பு  இருவரும்  பழைய சாதம் உண்டனர். அப்போது வள்ளுவர் தனது  மனைவி வாசுகியிடம்  "சாதம் சூடாக உள்ளது விசிறிவிடு" என்றார்.

நாமாக இருந்தால் " பழைய சாதம் எப்படி சுடும் " என்ற கேள்வியினை கேட்டிருப்போம்.

ஆனால் வாசுகி அம்மையார் அதுபோன்று எந்த கேள்வியினையும் கேட்கவில்லை கணவரின் சொல் படி விசிற ஆரம்பித்துவிட்டார்.  இதனால் அம்மையார் ஏதும் அறியாதவர் என்ற அர்த்தமில்லை, தனது கணவர் கூறினால் அதில் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்குமமென நம்பினார். வள்ளுவர் இதன் மூலம் நிருபித்தது என்னவெனில் வாதம் செய்யாமல் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தனது துணைவியார் பெற்றிருந்தார் என்பதே.

வாசுகி அம்மையார் ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளுவர் அவரை அழைத்தார். உடனே அம்மையார் கிணற்றுக்கயிற்றினை  விட்டுவிட்டு சென்றார். ஆனால் அந்த கயிற்றுடன் கூடிய குடம் கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால் நிச்சயம் அந்த கணவன் பாக்கியசாலி தான். இப்படிப்பட்ட வள்ளுவரின் துணைவியார் வாசுகி அம்மையார் ஒருநாள் உடல்நிலை குறைவால் இறந்துபோனார்.

இந்த உலகிற்கே தனது குறள்  வரியின் மூலம்  பலம் சேர்த்தவர்
  

          " நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

            பெருமை  உடைத்துஇவ் வுலகு "                                                                         

என்ற குறள் மூலம்  அறிவுரை வழங்கிய  தெய்வப்புலவர் தனது மனைவி வாசுகியின் பிரிவினை தாங்காமல் கலங்கிவிட்டார்.

இந்த குறளின்  பொருள் என்னவெனில் " நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகிற்கே பெருமை" என்பதாகும். ஆகையால் அம்மையாரின் பிரிவினை அவர் இயற்கையின் நியதியாக எடுத்துக்  கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்மையாரின் பிரிவினை தாங்காமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே 

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி 

பின்தூங்கி  முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ]ய் 

என்  தூங்கும்  என்கண்  இரவு" 

-  என்று அவரின் பிரிவை  நினைத்து நாலுவரி  பாட்டெழுதினார். இந்த பாட்டு வரியின் பொருள் என்னவெனில்

" அடியவனுக்கு இனியவளே!  அன்புடையவளே ! என் சொல்படி நடக்க தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே ! பின்  தூங்கி முன் எழுபவளே! பேதையே!  என் கண்கள் இனி எப்படிதான் இரவில் தூங்கப் போகிறதோ! " என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.

எவ்வளவு  அருமையான இல்லறத்தை வாசுகி அம்மையார் நடத்தியிருந்தால், அவ்வளவு பகுத்தறிவு சிந்தனையை தந்த வள்ளுவர் அவரின் பிரிவுக்காக வருந்தியிருப்பார்.

 

இன்றைய காலங்களில் தேவையில்லாத சிறு சிறு காரணங்களால்  கணவன்,மனைவி இடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு,வாக்குவாதம் பெருகி திருமண முறிவு  ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இன்று எதனை விவாகரத்து வழக்குகள் உள்ளன நமது குடும்ப பெருமையினை நீதிமன்றங்களில்  விவாகரத்து என்ற பெயரில் புதைத்து  விடுகின்றோம்.  இது தேவையா?


 


"மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

 எனைமாட்சித் தாயினும் இல்" - குறள்-52

வள்ளுவர்,வாசுகி அம்மையாரின் வாழ்க்கையினை நமது மனதில் நிறுத்தி

குறைந்தபட்சமாவது ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.

நன்றியுடன்
நா சுரேஸ்  குமார்   
 

Friday, April 12, 2013

இமயமலை ஆழ்கடலுக்குள் இருந்ததா ?

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.

உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

நமது உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.

ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.

பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்' பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு' நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.

நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல்கொண்டுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.

இதேபோல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இநëதப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.

இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

Friday, March 29, 2013

மாபாவியோர் வாழும் மதுரை

சங்கரதாஸ் சுவாமிகள் மதுரையில் நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் “மாபாவியோர் கூடி வாழும் மதுரை” என்று ஒரு வசனம் வந்தது.


இதைக் கேட்ட ரசிகர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்தனர். கற்களையும், நாற்காலிகளையும் வீசி எறிந்தனர். பெரும் அமளி ஏற்பட்டது.

இதை உணர்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் மேடையில் ஏறினார். அனைவரையும் அமைதியாய் இருக்கும்படி வேண்டினார். யாரும் கேட்கவில்லை.

”முதலில் “மாபாவி” என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்கள்.

உடனே சுவாமிகள், “முதலில் மாபாவி என்பதற்கு விளக்கம் தருகிறேன். அது தங்களுக்கு சரியாகப்படவில்லையென்றால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்” என்றார்.

ரசிகர்கள் சற்று அமைதியானார்கள்.

பின் அதை சுவாமிகள் விளக்கினார்.

“மா” என்றால் மலைமகள், “பா” என்றால் கலைமகள், “வி” என்றால் திருமகள். ஆக வீரம், கல்வி மற்றும் செல்வம் கூடி வாழும் மும்மாடக் கூடல் என்பதைத்தான் மாபாவி என்றோம்.

கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


படிக்காதவனுக்கு மாலையா...?



காமராஜர் ஒரு முறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தனர்.

வந்திருந்தவர்களில் ஒரு ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்தார்.

அந்த ஆசிரியரைப் பார்த்த காமராஜர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார்.

இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது.



படம் உடைக்கப்படாமலிருக்க



ஒரு சிற்றூரில் கலைஞர் கருணாநிதி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அசோகன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அசோகன், “கஜினி முகம்மது சோமநாதபுரத்தின் மீது பதினாறு முறை படையெடுத்து பதினேழாவது முறை வெற்றி கண்டது போல், நான் தேதி கேட்டு கலைஞரிடம் பலமுறை படையெடுத்து இன்று வெற்றி கண்டேன். இப்போது கலைஞர் பேசுவார்” என்றார்.

கலைஞர், “அசோகனை இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசவிடுங்கள் என்றேன். காரணம் கஜினி முகம்மதுவின் படையெடுப்பு சிலை உடைப்பில் முடிந்தது. அசோகன் படையெடுப்பு (பலமுறை அழைத்தது) என் பட உடைப்பில் முடிந்து விடக் கூடாது என்பதால் கூட்டத்திற்கு வந்து விட்டேன்” என்றார்.

கூட்டத்தில் பலத்த கர ஒலியும், சிரிப்பொலியும் எழுந்தன.

யாகாவாராயினும் நாகாக்க யாருக்காக?

யாகாவாராயினும் நாகாக்க  யாருக்காக?

அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது.

ஒரு உறுப்பினர், “பேருந்தில், யாகாவாராய்னும் நாகாக்க என்று எழுதப்பட்டிருக்கிறதே, யாருடைய நாக்கு காக்கப்பட வேண்டும்?

பேருந்தின் நடத்துனரா? ஓட்டுனரா? இல்லை பயணிகளா?” என்று முதலமைச்சரான அண்ணாவைப் பார்த்துக் கேட்டார்.

உடனே அண்ணா, “ யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள், யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவருக்குமே எழுதப்பட்டுள்ளது” என்றார்.

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?




சமையல் செய்யும்போது தீயால் விரலைச் சுட்டுக் கொண்டால், அதற்கென்று உள்ள களிம்பையோ, மசியையோ, நெய்யையோ தடவுகிறோம். இதெல்லாம் பழைய முறைகள். ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை எளிமையானது. அதாவது தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்வது. ஐஸ் இருந்தாலும் வைக்கலாம். வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.
 
உடலில் தீப்புண் எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். ரத்த நாளங்களும், தசை நார்களும் சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப் போய் திரவத் தன்மை குறைந்து கெட்டியாகிறது.

இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் மிகக் 
கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், தீப்புண்ணுக்கு இரையானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அப்புறப்படுத்துவது அவசியம். உடலில் மூன்றில் ஒரு பாகமோ அல்லது அதற்கு மேற்பட்டோ தீயால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.

தீப்புண்கள் கிருமிகள் இல்லாதவை. எனவே அசுத்தமான கை படக் கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது. துணி, தீயால் கிருமிகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.

தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல் மருந்து. உடல் ஏதாவது திடீர் விபத்துக்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக ரத்தம் பாயும். தோல், சதைப் பாகங்கள், ஜீரணக் குழாய் போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும்.

அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக் கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் அல்லது லேசான தேயிலைப் பானம் போன்ற நீராகாரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தீப்பிடித்துக் கொண்டதும் உதவிக்காக அங்குமிங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். பக்கத்தில் இருப்பவர் உடனே தண்ணீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது, உடனே ஒரு கம்பளியால் அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தித் தீயை அணைக்க வேண்டும் என்பது. அது தவறு!