Total Pageviews

Thursday, January 1, 2026

உலகம் சுற்றும் வாலிபன் !

 

உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறு களைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டை கிடையாது திரும்பிய திசை களிலெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.

படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின் விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்திமிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.

*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .

அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குனர் பா .நீலகண்டன் ,வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .

*உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.

*உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .

*பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .

*முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்கப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .

*காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .

*லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது

.

*அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .

*டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.

*லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .

*நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .

*குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .

*ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி

மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .

தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

*அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது...

சென்னை தேவிபாரடைஸில்

தொடர்ந்து 225 காட்சிகள்

மதுரை மீனாட்சியில்

தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்

அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! 

சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்.....

#திண்டுக்கல்சமையல்

Tuesday, December 30, 2025

மணி அடித்தால் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் அற்புத சிவன் கோவில்…

  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரம்பு மலை சிவன் கோயில்.
  • இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இக்கோவிலின் நுழைவு வாயிலில் பாரியின் அவை புலவரான கபிலர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்றும் கல்வெட்டாக வடிக்கப்பட்டு உள்ளது.
  • இங்கு உள்ள கொடுங்குன்றநாதர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • வாழ்க்கையின் மூன்று அம்சங்களையும் முன்னிறுத்தி விளக்கும் விதமாக இங்கு பாதாளம், பூலோகம், மேலோகம் என மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது.
  • மலையின் அடியில் பாதாள சிவன் கோயிலும், மலையின் நடுவில் பூலோக சிவன் கோயிலும், மலையின் மேல் கைலாய சிவன் கோயிலும் பிரம்மாண் டமாக அமைந்துள்ளது.
  • பாரி மன்னன் ஆட்சி செய்த இந்த பறம்பு மலை சிவன் கோயில் மிகவும் அற்புதமான இயற்கை எழில் சூழ அமைந்திருப்பதோடு பல்வேறு மூலிகை களையும் கொண்டுள்ளது.
  • பூலோக சிவன் கோயிலில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம், பிரம்மாண்டமாக தத்ரூபமாக அமைக்க ப்பட்டுள்ளது.
  • இங்குள்ள கொடுங்குன்ற நாதர் கோவிலில் ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரையிலான காலகட்டங்களில் சிவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதாக சொல்லப்படுகிறது.
  • எனவே அன்றைய காலகட்டங்களில் இங்குள்ள சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
  • பாரி மன்னன் மலையும் மலை சார்ந்த இடத்தையும் ஆட்சி செய்து வந்ததால் இக்கோவிலில் தேன், திணை மாவு, பச்சரிசி மாவு போன்றவற்றால் செய்த பொருள்களையே சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்கின்றனர்.
  • சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த பறம்புமலை சிவன் கோயில்.
  • மேலும் இங்கு ஒலிக்கப்படும் மணி சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் சிறப்புடையதாகவும் சொல்லப் படுகிறது.
  • தேவார பாடல் பாடப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பறம்பு மலை சிவன் கோயில் இன்றளவும் பாரி மன்னனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது!

காதலிக்க நேரமில்லை படத்துக்குக் கிடைச்ச ப்ரீ விளம்பரம்..! அட இதுதான் வெற்றியின் ரகசியமா?

 

சில படங்கள் ஆரம்பத்திலேயே சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் அந்த சர்ச்சையே பெரிய அளவில் விளம்பரத்தைத் தேடித் தந்துவிடும். அப்படி ஒரு படம்தான் இது. ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தின்போது ஆரம்பத்தில் கடும் சவால்களை சந்தித்தார் ஸ்ரீதர். முதலில் ஒரு கதை எழுதி அதை 10 நாள்கள் படமாக்கினார் ஸ்ரீதர்.

அதைப் போட்டுப் பார்;த்த போது அவருக்கு திருப்தி வரல. அதனால மீண்டும் கதை எழுதி படமாக்கினார். அதுதான் நாம இப்போ பார்க்குற காதலிக்க நேரமில்லை. படம் வெளியானபோது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழகம் முழுவதும் அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. படத்தின் பெயர் ஆபாசமாக இருக்கிறது. காட்சிகளும் ஆபாசமாக இருக்கிறது. அதனால் திரையிட தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டன.

இந்த விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்தப் படத்தைப் பொருத்தவரையில் படத்தின் பெயரும் சரி. காட்சிகளும் சரி. கவர்ச்சிகரமாக இருக்கிறதே தவிர, ஆபாசமில்லை என்பதே அவர்களது கருத்தாக இருந்தது. அதனால்தான் படத்திற்கு எவ்வித தடையும் இல்லை. அந்த வகையில் படத்திற்கு இந்த விவாதமே பெரிய பிளஸ் ஆகி விளம்பரமானது. அந்தப் படம் வெள்ளிவிழா காண இதுவும் ஒரு காரணம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், டிஎஸ்.பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் சூப்பர். என்ன பார்வை, மாடிமேலே, உங்கள் பொன்னான கைகள், அனுபவம் புதுமை, நாளாம் நாளாம், மலரென்ற முகமொன்று, காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது.

 

ஒரு காலகட்டத்திலே பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது. அந்தக் கனவை ஒரு விமானப் பயணம் நிறைவேற்றி வைக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஒருமுறை பெங்களூருவுல இருந்து டெல்லிக்குப் பயணம் செய்த போது அவருக்குப் பக்கத்து சீட்ல ஸ்ரீபாலி என்பவர் அமர்ந்து இருந்தார்.

அவர் ராஜீவ்காந்தியின் பர்சனல் பிஏ. அவருடன் பேசிக் கொண்டு இருந்தபோது ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது என்னோட தணியாத ஆசை. அவரை சந்திக்கத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்செயலாகச் சொன்னார் சரோஜாதேவி. மறுநாள் காலையிலே அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு ஒரு செய்தி வந்தது. ராஜீவ்காந்தி அவர்களை நீங்கள் 12 மணிக்கு சந்திக்கலாம்.

தயாராக இருங்கள் என்று. உடனே சரோஜாதேவி அவசரம் அவசரமாக மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு ராஜீவ்காந்தியின் இல்லத்துக்குச் சென்றார். புன்னகையோடு அவரை வரவேற்ற ராஜீவ் காந்தி ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேலாக அவரோடு பேசிக் கொண்டு இருந்தார். அப்போ சரோஜாதேவியைப் பார்த்து மாண்டியால காங்கிரஸ் சார்பா நீங்க போட்டி இடுறீங்களான்னு கேட்டார்.

அதற்கு என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு அரசியல்ல அவ்வளவு நாட்டம் இல்ல. ஆனா எனது கணவருக்கு அதுல ஈடுபாடு இருந்தது. நான் அரசியல்ல ஈடுபடணும்னு தீவிரமாக விரும்பினார். இப்ப அவர் இல்லாத சூழல்ல அரசியல்ல ஈடுபட எனக்கு சுத்தமாக ஆசை இல்லைன்னு சொன்னார் சரோஜாதேவி. புகழ், பதவி, செல்வாக்கு என அத்தனை இருந்தும் ராஜீவ்காந்தி அத்தனை எளிமையாக பழகியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

நான் சந்தித்த மனிதர்கள்ல அவர் ஒரு மாமனிதர் என்று ஒரு பத்திரிகையிலே பதிவு செய்துள்ளார் சரோஜாதேவி.

எம்ஜிஆர்-சரோஜாதேவி ஜோடியை மாற்ற தேவர் செய்த ஐடியா... நடந்தது இதுதான்...!


எவன் ஒருவன் தனது அறிவை சமயோசிதமாகப் பயன்படுத்துகிறானோ அவனே வாழ்வில் வெற்றி அடைவான். இது எழுதப்படாத நியதி. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர் பிரபல தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

இவர் தம் படங்களில் தொடர்ந்து எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து வந்தார். 

அவரைத் தவிர எம்ஜிஆருக்குப் பொருத்தமான வேறு ஜோடி அமையவில்லை. என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போதுதான் தேவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி அவரை ஈர்த்தது. ஜெயலலிதா தான் எம்ஜிஆருக்கு சரியான ஜோடி என முடி வெடுத்தார் தேவர். அந்தப் படத்திற்கான படப் பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே ஜெயலலிதாவை தனது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் தேவர்.

அவர் புத்திசாலித்தனமாகத் தான் செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படம் ஜூலை மாதம் வெளியானது என்றால் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த கன்னித்தாய் படம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வெளி யானது.அந்தப் படத்தைத் தொடர்ந்து றக்குறைய அரை டஜன் படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். மேற்கண்ட தகவலை பிர பல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து ள்ளார்.

தீபாவளி தினத்தன்று ரீலீஸாகி தேசிய விருது பெற்ற பாகப்பிரிவினை திரைப்படம்…

 

தீபாவளி தினத்தன்று ரீலீஸாகி தேசிய விருது பெற்ற பாகப்பிரிவினை திரைப்படம்…

  • அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் வெளியானது.
  • சிறந்த தமிழ் படத்திற்காக, 1960ம் ஆண்டின், தேசிய விருது பெற்ற படம்..
  • மத்திய அரசின் பிராந்திய மொழிப் படங்களில், சிறந்த படமாக தேர்வானது.
  • 'மெகா ஹிட்' படமான பாகப்பிரிவினை திரைப்படம் வெளியாகி 65 ஆண்டுகள் ஆகின்றன.
  • தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் இந்தப் படமும் இன்றுவரை இடம்பெற்றிருப்பதுதான், கதையின் மிகப்பெரிய வலிமை.

திரைக்கதை

  • சிறுவயதில், மின்சாரம் பாய்ந்து, கைகால்கள் ஊனமாகிவிடும் சிறுவன் கன்னையாவிற்கு. பெரியப்பா, அப்பா என கூட்டுக்குடும்பம். ஆனால், பெரியம்மா பாகுபாடு பார்ப்பார்.
  • பட்டணம் போய் படித்துவிட்ட தம்பி நம்பியார், பெரியப்பாவின் சொந்தக்கார எம்.ஆ.ராதாவின் தங்கையை நம்பியார் மணக்க குடும்பத்துக்குள் ஏற்படும் விரிசல்கள் பாக பிரிவினையை உண்டாக்க,இறுதியில் சிவாஜிக்கு கை குணமாகி குடும்பம் ஒன்று சேர்வதே கதை.
  • படத்தில் எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சுகளும் நையாண்டிக் குறும்புகளும் செம. அதேபோல், சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’ என்று அழைக்கும் இடங்களிலெல்லாம் அப்ளாஸ் அள்ளியது
  • இந்தப் படத்தின் கதையை, எழுதிய சோலைமலை. மாமல்லபுரத்தில் உருவானது. கை, கால்கள் ஊனமான நிலையில் சிறுவன் ஒருவன் தன்னிடம் பிச்சை கேட்ட போது, அவனது பாத்திரத்தையே, அப்படியே கதாபாத்திரமாக்கினார்.(சிவாஜி கதாபாத்திரம்)
  • இப்படத்திற்கு முன்னதாக, ரத்தக்கண்ணீர்படத்தில், எம்.ஆர்.ராதா நடித்ததை பார்த்து, சரோஜாதேவி பயந்திருந்தார்.
  • பாகப்பிரிவினை படத்தில், எம்.ஆர்.ராதாவை அவர் துடைப்பத்தால் அடிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பயத்தில், இதுவும் சேர, எம்.ஆர்.ராதா திட்டும் அளவுக்கு, சரோஜாதேவியின் நிலை இருந்தது.
  • இதையடுத்து, எம்.ஆர்.ராதாவே ஒரு ஐடியாவை சொல்கிறார். 'பூட்டிய அறைக்குள் இருந்து நான் அலறியபடியே ஓடி வருகிறேன். பின்னால் நீ துடைப்பத்துடன் ஓடி வா... ரசிகர்கள் நீ அடித்ததாக நினைத்து கொள்வர்' எனக் கூறியுள்ளார்.
  • அப்படியே அந்த காட்சியும் படமாக்கப்பட்டது.
  • படத்தில் நிறைய காட்சிகளில், சிவாஜியும், சரோஜாதேவிக்கு உபகாரம் செய்துள்ளார். இப்படத்திற்கு பின் தான், சரோஜாதேவிக்கும் பெரிய அளவில் பெயர் கிடைத்தது.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கும், அண்ணன், தம்பி உறவுக்கும் இப்படம் சான்று.
  • தமிழ்நாடு முழுவதும் போட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல். சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி என மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
  • மூன்றிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகத்தில், மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பல ஊர்களிலும் 200 நாட்களைக் கடந்து ஓடி, பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்தது ‘பாகப்பிரிவினை’.

'கலைஞானம் !

 

தமிழ்த்திரை உலகில் வெற்றிகரமான பல படங்களைத் தந்தவர் கதாசிரியர் கலைஞானம். ஆனால் அவருக்கு அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்து சேரவில்லை. சினிமாவுக்குப் பாட்டு எழுதணும்கற ஆசையோடு சென்னை வந்ததும் கலைஞானம் ரத்தசக்தி என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அது மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதைத் தொடர்ந்து என்ன பண்றதுன்னே புரியல. 1950 முதல் 1962 வரையில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஆளானார்.

இடைப்பட்ட காலங்களில் சில நாடகங்களில் நடித்தார். அவற்றில் சிலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார். அதற்கு அவரது வருமானமே 5 முதல் 10 ரூபாய் வரைதான். அதையும் ஒருசிலர் கொடுக்கவே மாட்டார்களாம். இலவசமாகக்கூட பல நாடகக் கம்பெனிகளுக்குப் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததுன்னா 1965ல் அவர் எழுதிய அரங்கேற்றிய வெள்ளிக்கிழமை என்ற நாடகம்தான்.

அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் வெற்றி அதுதான். ஆனாலும் அந்த நாடகத்தைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தன் மனைவியையும், பிள்ளைகளையும் மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்னும் ஒரு மாதம் இங்கே இருந்து பார்க்கிறேன். அதுக்குள்ள எனக்கு சினிமா வாய்ப்பு வரலன்னா நானும் மதுரை வந்து சேர்ந்து விடுவேன் என்று அவரது மனைவியிடம் சொன்னார். அப்போது அவரது மனைவி லேசாக சிரித்தார்.

‘12 வருஷமா சினிமாவுல சேரணும்னு நீங்க போராடிக்கிட்டு இருக்கீங்க. இந்த 12 வருஷம் பெற்றுத் தராததையா இந்த ஒரு மாசம் பெற்றுத் தரப்போகுதா’ என்பதுதான் அவரது சிரிப்புக்குப் பின்னால் இருந்த கேள்வி. மனைவியை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த கலைஞானம் முருகன் படத்தைப் பார்த்தார். அவர்கிட்ட முருகா, உனக்கே இது நல்லாருக்கா? என்னை இப்படி பாடாப் படுத்துறீயே? என கடுமையாக முருகனிடம் சண்டை போட்டார்.

அன்றைக்கு அவர் சொன்னது முருகன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுத்தாளர் ஏஎஸ்.முத்து அவரை சந்திக்க வந்தார். 'கலைஞானம் கிளம்புங்க. ஜோசப் தளியத்துக்கு கதை வேணுமாம். வாங்க சொல்லிட்டு வரலாம்' என்று அழைத்தார். அங்கு போனதும் கலைஞானம் ஜோசப் தளியத்துக்கு 2 கதை சொன்னார். அதில் ஒரு கதை அவருக்குப் பிடித்துப் போனது.

அதுதான் காதல் படுத்தும் பாடு. ஜெய்சங்கரும், வாணிஸ்ரீயும் நடித்து பின்னாளில் படமானது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞானத்துக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் வந்தன? அவர் எவ்வளவு பெரிய கதாசிரியர் ஆனார் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Sunday, December 28, 2025

மின்சார பூவே - படையப்பா !

 

மின்சார பூவே - படையப்பா ! இந்தப் பாடல் ரஜினிகாந்தையே எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு பெண் பாடுற பாட்டு. திமிரும், கர்வமும், அகம்பாவமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தோட வேண்டும் என்பது தெரிந்தவுடன், A.R.ரஹ்மான் “கூப்பிடுங்க நித்யஸ்ரீ யை” என்றார்.

நித்யஸ்ரீ அதற்கு முந்தைய வருடத்தில்தான் ( பத்து வருடங்களாக கர்னாடக சங்கீதத்தில் புகழ்) ரஹ்மானின் ஜீன்ஸ் பட கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை அட்டகாசமாகப் பாடி தமிழ் சினிமாத்துறையில் அடியெடுத்து பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி ஆச்சரியப்பட வைத்தார்.

இந்தப் பாடல் ஒரு போட்டிப் பாடல். படையப்பாவுக்கும் நீலாம்பரிக்கும். படையப்பா பாட நீலாம்பரி பாடலுடன் ஆடலும் சேர்த்து என்பதாய் இருக்கும்.

மின்சார பூவே என்று ஆண் துவங்கும் வரிகள் முதலில் “செளக்கியமா கண்ணே செளக்கியமா” என்றுதான் இருந்தனவாம். (மிஸ்டர் பாரத்-தில் ரஜினியும் சத்யராஜும் என்னம்மா கண்ணு செளக்கியமா என்று பாடுவார்களே, அது மாதிரி) அப்புறம் பாடல் வளர்கையில் மின்சார பூவே , மின்சார கண்ணா என்று பரிணமித்தது. (பின்னாளில் செளக்கியமா கண்ணே செளக்கியமா என்கிற அந்த வரிகள் சங்கமம் படத்தின் பாடலாகி நித்யஸ்ரீயால் புகழடைந்தது தனி).

சிச்சுவேஷனை சொல்லி அதற்கேற்ற மாதிரி கச்சிதமான வரிகளைக் கேட்டவுடன் பாடலாசிரியர் வைரமுத்துவோ தன் பங்குக்குப் பாடலை அனாயாசமாக தனது வரிகளால் நறுக்குத் தெறித்திருப்பார். நீலாம்பரி படையப்பாவை விரும்பினாலும் “ஹேய் யூ, ஐ லவ் யூ. பதிலுக்கு புளகாங்கிதத்தோடு லவ் யூ சொல்லி காலமெல்லாம் என் காலடியில் விழுந்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்” என்று இறுமாப்போடு காதலை யாசகம் தரும் காரெக்டர். அதற்கு மிகச் சரியாக ஒரு வரி படையப்பாவின் மீதான காதலை, அவனுடைய உன்னத குணாதிசயங்களைச் சொன்னாலும் அடுத்த கணமே தனது ஈகோவை, அகம்பாவத்தைக் காட்டும், தன்னை முன்னிலைப் படுத்துமாறு இருக்கும் செருக்கை அடுத்த வரியிலேயே தப்பாமல் வந்து விடுமாறு எழுதியிருப்பார். முதல் வரி “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்” என்று சொல்லி விட்டு உடனேயே ”என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்” என்றும் ”வானம் வந்து வளைகிறதே” என்று சொல்லி விட்டு உடனேயே “காதலிக்க வா” என்று கூப்பிடாமல் “வணங்கிட வா” என்றும் வெல்லுஞ்சொல் இல்லாததாய் வெளுத்து வாங்கி இருப்பார்.

பாடலின் ஆண் குரலுக்கு ஹரிஹரன் வந்து பாடிக் கொடுத்து விட்டுப் போயாயிற்று. அந்தப் பாடலின் ஆண்குரலுக்கு ட்ராக் பாடியது ஸ்ரீனிவாஸ். கெமிக்கல் இஞ்சினியர். சில திரைப்பட பாடல்களைப் பாடி புகழடைந்து வந்திருந்தார்.என்ன நினைத்தாரோ ரஹ்மான், ஸ்ரீனிவாஸைக் கூப்பிட்டு, ஹே, அந்த மின்சார பூவே, அதுல உன்னோட வெர்ஷனையே ஃபைனல் பண்ணிட்டோம். நல்லா இருக்குது” என்றவுடன் இன்ப அதிர்ச்சி. ஹரிஹரன் வெர்ஷனை விட ஸ்ரீனிவாஸின் வெர்ஷன் கம்பீரமாக இருப்பதாக ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் அபிப்ராயப் பட்டனராம். அப்போது ஸ்ரீனிவாஸிற்கு ஹரிஹரன் எல்லாம் அண்ணாந்து பார்க்கும் லெஜண்ட் பாடகர். இந்தப் பாடலைப் பாட ஸ்ரீனிவாஸிற்கு பத்து நிமிடங்களே கொடுத்தாரம் ஏ.ஆர்.ஆர். அந்தப் பத்து நிமிடங்களில் பிரமாதமாகப் பாடி பாடலில் காதலோடு கம்பீரத்தையும் கலந்து அடித்து ஆடியிருப்பார்.

பாடலைப் படமாக்கிய விதமும், ஓளிப்பதிவு, நடனம் என்று எல்லாமே இசைக்கும் பாடலுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் அட்டகாசமான எஃபெக்டில் அமைந்திருக்கும். நீலாம்பரி அகம்பாவத்தின் அல்டிமேட் ஐடெண்டிடியாகவே தன் முக பாவங்களையும், பாடி லாங்வேஜையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தி படையப்பாவையே விஞ்சுவார். (கோரியோகிராஃபி - லலிதாமணி)

நித்யஸ்ரீ பாடலைப் பாடிச் சென்ற அனுபவத்தைப் பற்றி ஸ்ரீனிவாஸ் சொல்வது. அவங்க வந்தாங்க. ஒரு புயல் மாதிரி வந்து அசர அடித்துப் பாடி விட்டு எங்களை பேச்சு மூச்சில்லாம செஞ்சுட்டுப் போய்ட்டாங்க என்பதாய் அதை நினைந்து வியக்கிறார்.இப்படி எல்லா டிபார்மெண்ட்டும் தன் உசிரைக் கொடுத்து பெஸ்ட்டைக் கொடுக்கும் பாடல் பரிமளிப்பது மிகச்சிலவே. இந்தப் பாடல் இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.

Friday, December 26, 2025

TVS பேருந்துகள்

 

TVS பேருந்துகள்:

மதுரையில் மட்டும் அல்ல; நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ளூர் பேருந்துகள் இவர்கள் தான் நடத்தினார்கள். பெயிண்ட் அடிக்காத அலுமினியம் தகடு கொண்ட பேருந்துகள்.

01. பேருந்துகள் மிதமான வேகத்தில் தான் செல்லும்.

02. சரியான நேரத்தில் நிறுத்தத்திற்கு வரும். அப்போது சொல்லுவார்கள். டிவிஎஸ் பேருந்து வந்து விட்டது என்றால் மணி 09.00 என்று கடிகாரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளலாம் என்று.

03. தூத்துக்குடியில் 3ம் நம்பர் பேருந்து நகரத்தை ஒரு சுற்று சுற்றி கிளம்பிய இடத்திற்கு வரும். நான் அதில் சிறுவயதில் என்னுடைய உறவினர்களோடு அமர்ந்து கொள்ளுவேன். கட்டணம் 3 பைசா. (வருடம் 1963)

04. பெட்டியில் டிக்கெட்டை அவர்கள் பயணம் முடிந்தவுடன் போடச்சொல்லுவதற்கு காரணம் - நகரத்தை குப்பையாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக தான்.

(காலப்போக்கில் தான் நானும் தெரிந்து கொண்டேன் )

05. TVS பேருந்துகளில் ஸ்டாண்டிங் ஏத்த மாட்டாங்க. புருஷன் பொண்டாட்டியா போனா கூட,ஒரு சீட் காலி இருந்தா ஒருத்தர மட்டும் தான் ஏத்துவாங்க. அடுத்த ஆளு நடந்து தான் ஊருக்கு போகனும்.

06. எல்லோரும் வரிசையில் நின்று தான் பஸ்ஸில் ஏற வேண்டும். அன்றைய நாளில் பஸ் பயணம் சுகமானது. இன்று மதுரையில் கூட்டத்தில் வலுவுள்ளவன் தான் பஸ்ஸினுள் நுழைய முடியும்.

07. TVS bus Very Neat. and decent.

08. மக்கள் சேவை ,தொழிலாளர் நலன்,பாதுகாப்பு போன்ற பல விஷயங்களில் கண்டிப்பாக இருந்தார்கள். கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நேரம் தவற மாட்டார்கள். 

காலை 05:05க்கு மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து 50ஆண்டுகளுக்கு முன்பு செய்த பயணம் இன்றும் நினைவிருக்கிறது.

இவை அனைத்தும் என் பக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்தவர்களிடம்

சேகரித்த பதிவுகள்.சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு என் நன்றிகள் 🙏🙏

Classic TNSTC

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன்!

 

கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனுக்கு சொந்தமான பட நிறுவனம்தான் அசோகா பிலிம்ஸ். இது கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் அமைந்தது. அசோகா பிலிம்ஸின் வருமான வரி கணக்குகளை எல்லாம் எடுத்துக் கொண்டு என்எஸ்.கிருஷ்ணனின் நிர்வாகி வருமான வரி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அனுமந்தராவ் என்பவர்தான் அதிகாரியாக இருந்தார்.

அவர் அந்தக் கணக்குகளை எல்லாம் பார்த்து விட்டு ‘என்னய்யா எப்பப் பார்த்தாலும் தருமம் தருமம் தருமம்னு எழுதி இருக்கீங்க... எவ்வளவு தருமம் பண்ணுனீங்க? நீங்க அளவுக்கு மீறி தர்மம் பண்ணியிருந்தா எப்படி நான் வரி போடாம இருக்க முடியும்?’ என்று அந்த நிர்வாகியைப் பார்த்துக் கேட்டார்.

‘ஐயா, உங்களுக்கு என்எஸ்.கிருஷ்ணனைப் பற்றித் தெரியாதுன்னு நினைக்கிறேன். அவரைப் பொருத்தவரைக்கும் வாரி வழங்குற வள்ளல. இப்ப சென்ட்ரல் ஸ்டூடியோவுல இருக்குற அசோகா பிலிம்ஸ் ஆபீஸ்லதான் அவரு இருக்காரு. நீங்க நேரா அங்கே போங்க. என் பொண்ணுக்குக் கல்யாணம். ஒரு ஆயிரம் ரூபாய் இல்லாம அது தடைபடுதுன்னு அவருக்கிட்ட சொல்லுங்க.

அங்கே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு அப்புறமா இந்தக் கணக்கைப் பார்த்தால் போதும்’ என்று அனுமந்தராவிடம் அந்த நிர்வாகி சொன்னார். இவர் சும்மா பேச்சுக்குச் சொன்னாலும் அனுமந்தராவ் சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு உடனடியாகக் கிளம்பி விட்டார். நேரா என்எஸ்.கிருஷ்ணனைப் போய் பார்த்தார். இவர் போய் பார்த்த உடனே தன்னுடைய வெற்றிலைப்பெட்டியை இவர் பக்கம் தள்ளிய என்எஸ்.கிருஷ்ணன், ‘என்ன வேணும் சொல்லுங்க’ன்னு கேட்டார்.

அதற்கு அவர், ‘என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். ஒரு ஆயிரம் ரூபாய் இல்லாம அது தடைபடுமோ என பயமா இருக்கு’ என்றார் அனுமந்தராவ். அதற்கு என்எஸ்.கிருஷ்ணன், ‘ஒரு ஆயிர ரூபாயால ஒரு கல்யாணம் தடைபடலாமா? என்னுடைய நிர்வாகி வருமான வரி அலுவலகத்துக்குப் போயிருக்காரு. அவரு வரட்டும். வந்ததும் தரச் சொல்றேன். அவரையே கார்ல உங்களை அழைத்துப் போகச் சொல்றேன்’னு சொன்னார். அசந்து போனார் அந்த அதிகாரி.

அவர், ‘உங்களுக்கு கிருஷ்ணன்னு பேரு வச்சது தப்பு. கர்ணன்னு பேர் வச்சிருக்கணும். உங்கள் நிர்வாகி என்னோட வருமான வரி அலுவலகத்துக்கு வந்து உங்க குணத்தைப் பற்றிச் சொன்னாரு. அதை நம்பாமத் தான் வந்தேன். இங்கே வந்து பார்த்ததும்தான் தெரியுது. நீங்க எவ்வளவு பெரிய வள்ளல்னு. மற்றவங்களுக்கு உதவுறதுக்குக் காசு கொடுக்குறதுல தப்பில்ல. ஆனா அதுக்கு முறையான ரசீதை மட்டும் வாங்கி வச்சிக்கோங்க’ன்னு அவருக்கு ஒரு அறிவுரையைக் கூறி விட்டுச் சென்றார் அந்த அனுமந்தராவ்.

Tuesday, December 9, 2025

மனோரமா நடிகை அல்ல.. அவர் ஒரு அதிசயம்!

 

நடிகை அல்ல.. அவர் ஒரு அதிசயம்..

ஒருமுறை பின்னணி பாடகி சுசீலா அம்மாவை தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் என்று குறிப்பிட்டபோது எம்ஜிஆருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..

நிகரற்ற சுசீலாவை யாருடனும் ஒப்பீடு செய்ய தேவையில்லை. சுசிலா, ஒரு சுசிலாதான் என்று பேசினார்.

அதேபோலத்தான் நடிகை மனோரமாவை "பொம்பளை சிவாஜி" என்று குறிப்பிடும்போது கடுமையாக கோபம் வரும் நமக்கு..

காரணம், யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு திரை உலகில் தனித்தன்மை கொண்டவர் நடிகை மனோரமா..

நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர்..

எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது

ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர், கோபி சாந்தா.

1950களில் டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்..

அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை.

கடைசியில் மனோரமாவுக்கு திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்..

தொடர்ந்து துண்டு ரோல்களே ... இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்..

கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்ட மனோரமாவை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம்தான்.

இதனால் கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக புரமோஷன் கிடைத்தது.. இத்துடன் அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகி.

அப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கலாம். ஆனால் தமிழ்திரையுலகின் அதிர்ஷ்டம், மனோரமாவை நகைச்சுவை பாதைக்கு மாற்றி பெரும்பாலான தமிழ்ப்படங்களில் துவம்சம் செய்யவைத்துவிட்டது.

இல்லையென்றால் காமெடி, குணச்சித்திரம் என ஆயிரம் படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கமுடியுமா?..

மனோரமா நடித்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்கள் மிகமிகக்குறைவு என்றே சொல்லக்கூடிய அளவுக்கு தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தபெருமை என்பது சாதாரண விஷயமா?

சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு. விகே.ராமசாமி என காமெடி உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அனைவருக்கும் நடிப்பில் ஈடுகொடுத்த ஒரே காமெடி பெண் திலகம் மனோரமா மட்டுமே..

இந்த திறமையால்தான் தேங்காய் சீனுவாசன், சுருளிராஜன்,கவுண்டமணி என அடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்தாலும் அவர்களுக்கும் இவர்தான் கதி என்ற கட்டாய நிலையை உருவாக்கி கொடிகட்டி பறக்கமுடிந்தது..

மனோரமாவை பொறுத்தவரை ஏராளமான நகைச்சுவை நடிகர்களுடன் நடித்து இருந்தாலும், நாகேஷ் உடன் என்பது மிகவும் ஸ்பெஷல்.

1962-ல் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மனோரமாவிடம் காதல் வலை விரித்து வார்டு பாயான நாகேஷ் அவ்வளவு சேட்டைகள் செய்வார்.

அந்தப் படத்திலிருந்து அதகளம் செய்ய ஆரம்பித்த ஜோடி தொடர்ந்து எண்ணற்ற படங்களில் விதவிதமாய் நகைச்சுவையை வாரி வாரி தெளித்தது.

எம்ஜிஆரின் வேட்டைக்காரன் படத்தில் தனியாக டூயட் கொடுக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவத்தை பெற்றது இந்த ஜோடி..

படங்களில் நடித்தாரா வாழ்ந்துவிட்டு போனாரா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப்போனார் மனோரமா.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏபி நாகராஜன் புக் செய்தபோது மனோரமாவுக்கு, கேரக்டர் பெரியதாக ஒன்றுமில்லையே என்கிற வருத்தம். ஆனால் ஏபிஎன் சொன்ன வார்த்தைகள் இவை.

''மோகனாவுக்கு ஆடத்தெரியும். சண்முக சுந்தரத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியும். ஆனா உனக்கு மட்டுமே இது ரெண்டும் தெரியும். அதுக்கும்மேல கள்ள பார்ட் வேஷமெல்லாம் போட்டு பாடவும் தெரியும்.

படத்திலேயே நீதான் சகலகலாவல்லி. அதனால் ஜில்ஜில் ரமா மணி கேரக்டர் பவர்புல் ஆனது. உங்கள் ஃலைப்பையும் தாண்டி பேசப்படும்''

ஏபிஎன் வாக்கு அப்படியே பலித்தது.. சிவாஜி, பத்மினி, நாகேஷ் போன்றோரே வியக்கும் அளவுக்கு அந்த பாத்திரத்தை துவைத்து எடுத்தவர் ஆச்சி

அதனால்தான் ஜில் ஜில் ரமாமணியை உலகமே பல்லாயிரம் தடவை பாராட்டி பாராட்டி ஓய்ந்து போகாமல் இன்னும் பாராட்டிக்கொண்டே இருக்கிறது.

சிவாஜியை வைத்து ஒன்பது வேடங்களில் எடுத்த நவராத்திரியில் பைத்தியம் வேடத்தில் மனோரமா பின்னி பெடல் எடுத்ததை மறக்காமல்.. பின்னாளில் கண்காட்சி படத்தில் ஒன்பது வேடங்களில் மனோரமாவை வரவழைத்து அழகு பார்த்தார் ஏபி நாகராஜன்.

வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜுட் விடும் கமலை தன் பக்கம் லேசாக இழுக்கப்பார்க்கும் சபலிஸ்ட் விமானப்பணிப்பெண் பாத்திரம்...

பாட்டி சொல்லை தட்டாதே படத்தை பாட்டியாகவே முழுதாக தாங்கிய அந்த கெத்து…

கம்னு கெட என்ற ஒற்றை டயலாக்கில் மற்ற பாத்திரங்களை மூட்டைக்கட்டிபோட்ட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கண்ணம்மா..

கொஞ்சம் பிசகினாலும் விரசமாகப்போகக்கூடிய அளவில் நடிகன் படத்தில் கொடுக்கப்பட்ட அந்த பேபிம்மா ரோல் மற்றும் மைக்கேல் மதன காமராஜனில் ரூபினியின் தயாராக.. மனோரமாவை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் எல்லை மீறிப் போய் இப்படியுமா என்று வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

அருந்ததியில் அனுஷ்காவுக்கு நிகராக தனது சந்திரம்மாவை அவர் உயர்த்திக்காட்டிய சாகசம் என அவரால் கிடைத்த சாகா வரம் பெற்ற பாத்திரங்கள்தான் எத்தனையெத்தனை..

அமரர் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, தாம் கேட்டதிலேயே வியப்பான குரல் மனேரமாவினுடையது என்று சொன்னபோது உண்மையிலேயே வியப்பாக இருந்தது.. மனோரமாவை புகழ்வதற்காக ஓவராக ரீல் விடுகிறாரோ என்று கூட தோன்றியது.

சோவுடன் மனோரமா நடித்த பொம்மலாட்டம் படத்தின் "வா வாத்தியார வூட்டான்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு சைதாப்பேட்டை கொக்கு" பாடல் படு காமெடி என்றாலும் பால முரளி, அந்த பாடலை அக்குவேணிவேறாக தனது குரலால் ஏற்ற இறக்கங்களை பாடி விவரித்தபோதுதான் மனோரமாவின் இசைப்புலமை புரிந்தது..

அதிலும், நைனா என்ற ஒற்றை வார்த்தையை பாடிவிட்டு அதன் பிறகு அவர் ராகத்தை இழுத்துக் கொண்டே மேலே சென்று அப்படியே கீழே இறங்கும் விதம்..முன்னணி பின்னணி பாடகிகளே மிரண்டு போன தருணம் அது..

உங்கள் விருப்பம் படத்தில் தேங்காய் சீனிவாசன் உடன் "மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா" பாடலை யூடியூபில் போய் தேடிப் போய் பாருங்கள்.. அவ்வளவு அசால்டாக சகல வித்தைகளையும் காட்டி மொத்தமாக இறக்கி ரசிகர்களை சிரிக்க செய்வார்.

அதேநேரத்தில் சென்டிமென்ட் என்றாலும் பெண்களை உருக வைப்பதில் மனோரமாவை நடிப்பு அலாதியானது.

உனக்கும் வாழ்வு வரும் படத்தில் அவர் பாடி நடித்த "மஞ்சக்கயிறு.. தாலி மஞ்சக்கயிறு... பாடல் பட்டி தொட்டியெல்லாம் எல்லா தவறாமல் ஒலித்தது.. அந்தப் பாடல் ஒலிக்காத சுபநிகழ்ச்சிகளே கிடையாது.

அனைத்து மட்ட பெண்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்தவர் மனோரமா. அதனாலேயே பெண்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.

1980களில் கதாநாயகர்களுக்கு அம்மா என்றால் அது மனோரமாதான். சின்ன கவுண்டரின் அம்மாவாகட்டும், அண்ணாமலையின் அம்மாவாகட்டும், தனித்து நின்று விளையாடி உருக வைத்திருப்பார்.. கமல் பிரபு சத்யராஜ் கார்த்தி என மனோரமாவின் பிள்ளையாய் திரையில் வராத நடிகர்களே கிடையாது என்ற நிலைமையை உருவாக்கி வைத்திருந்தார்.

எந்த சூழ்நிலையை தாங்கிக்கொண்டு திரையில் இவ்வளவு சாதனைகளை படைத்து இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் நிச்சயம் ராம் கண்களில் கண்ணீர் வந்தே தீரும்.

ராமநாதன் என்ற நடிகருடன் திருமணம். வெறும் 15 நாள் வாழ்க்கை. அதன் பிறகு அவர் பிரிந்து போய்விட்டார்.

வயிற்றில் உருவான குழந்தையுடன் எதிர்காலமே இருண்டு போன நிலையில் மனோரமா. ஆனால் அவரோ எதற்கும் கலங்கவில்லை.

வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கணவன் வாழ்கிறாரே என்று மூலையில் உட்கார்ந்துகொண்டு கதறவில்லை.

கணவனைப் போலவே அவர் மூலம் பிறந்த மகன் பூபதியாளும் நிம்மதி என்பது சொந்த வாழ்வில் மருந்துக்கும் இல்லாமல் போனது மனோரமாவிற்கு .

இருந்தபோதிலும் தன்னை அழவைக்கும் உலகத்தை சிரிக்க வைக்க வேண்டுமென்று புயலாய் கிளம்பினார். கோடிக்கணக்கான ரசிகர்களை பல தலைமுறைக்கு சிரிக்க வைத்து சிகரத்தையே தொட்டார்.

எழுத எழுத நிறைய மனோரமாக்கள் வந்தாலும் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குணச்சித்திரத்தையும் நகைச்சுவையும் சேர்த்து திணறத் திணற அடித்த அந்த அம்மா கேரக்டர்.. இன்னமும் டிஸ்டர்ப் செய்தபடியே இருக்கிறது .. ஆச்சி கைய வச்சா அது ராங்கா போனதில்லை..

இந்திய சினிமா வரலாற்றில் நம்பமுடியாத பக்கம் என குறிப்பிடப்படவேண்டிய ஆச்சி மனோரமா மறைந்து, இன்றோடு 8ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை நம்ப மறுக்கிறது, அவருடைய நடிப்புக்கு பறிகொடுத்த மனது ..

Friday, December 5, 2025

சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படம் ரங்கோன் ராதா !

 கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற வரையறையை உடைச்செறிஞ்சவர் சிவாஜி (செந்தில்வேல் சிவராஜ் பதிவு)

பராசக்தி வெளியாகியாச்சு. சிவாஜியும் தமிழ்நாட்டுலே நெம்பர் 1 நடிகரா ஆயிட்டாரு. அதுக்கு அடுத்ததா மூணு படம் பண்ணி 5 வது படத்துக்காக சிவாஜிகிட்ட கதை சொல்ல வராங்க. நீங்க தான் ஹீரோன்னு சொல்லி கதை சொல்றாங்க. கதையை கேட்டு முடிச்சா, சிவாஜியோட ரோலை கேட்டா டென்ஷன் ஆயிடும். படத்துலே ஹீரோ ஒரு பெண் பித்தன், நல்ல விஷயங்களே இல்லாத ஒரு மனுஷனா அந்த வேஷம் இருக்கு. கதையை கேட்ட சிவாஜி என்ன சொல்லியிருப்பாரு? நமக்கு அதிர்ச்சிதான். ஆனா சிவாஜி சொன்ன பதில் 'நடிக்க ரொம்ப சம்மதம்'னு சொல்லிட்டாரு.

முதல் படம் வந்து சமூகப்புரட்சி பண்ணி சிவாஜியை எங்கேயோ போய் வெச்சிருக்கு. வளர வேண்டிய நேரத்துலே இந்த மாதிரி படத்துலே யாராவது நடிக்க ஒப்புக்குவாங்களா? இங்க தான், ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது அப்படிங்கிற விதிய உடைச்செறிஞ்சார் சிவாஜி. திரும்பிப்பார்னு படத்துலே நடிச்சு சினிமா பீல்டையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு. அங்க ஆரம்பிச்சுச்சு சிவாஜியோட ஆட்டம். ஆன்ட்டிஹீரோ அப்படிங்கற வார்த்தையே அதில இருந்துதான் பிரபலமாச்சு.

கரெக்டா 8 மாசம் கழிச்சு ஒரு கதை வருது சிவாஜிகிட்டே. இந்த படத்துலே நீங்க நாட்டையே காட்டிக் கொடுக்கிற கதாநாயகனா நடிக்க வேண்டிய ரோல்னு சொல்றாங்க. நிஜத்துலே சிவாஜி மாதிரி தேசபக்தி நெறஞ்ச நடிகன் யாருமில்லே. இந்த குணம் இருக்கற சிவாஜி செஞ்ச அந்த படந்தான் அந்தநாள். இந்த படத்துலேயும் நிறைய புதுமைகளை செஞ்சிருப்பார் டைரக்டர். படத்துல ஹீரோவோட முதல் சீனே துப்பாக்கி குண்டு பாஞ்சு செத்துப் போற மாதிரி காட்சி. அதுவும் மனைவியே சுட்டு சாகடிக்கற மாதிரி காட்சி. படம் வெளியான பின்னாடி படம் பாத்தவங்க அரண்டு போனாங்க. பாட்டுக டான்சுன்னு வேற எதுவும் இல்லை படத்துலே.

சிவாஜியோட 12 வது படம் அந்தநாள். சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா நடிச்ச இந்த படத்தை இன்னைக்கு வரைக்கும் பிரமிப்பா பாத்துட்டுத்தான் இருக்காங்க. சிவாஜியோட 16வது படம் துளி விஷம், சிவாஜியோட சேர்ந்து கே.ஆர் ராமசாமி நடிச்ச படம். கே ஆர் ராமசாமிக்கு கதாநாயகன் வேசத்தை கொடுத்துட்டு சிவாஜி ஆன்ட்டிஹீரோவா நடிச்ச படம். இந்த படத்துக்கு முன்னாலே மனோகரான்னு பெரிய ஹிட் படத்துலே நடிச்சு அந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு 3 மொழியிலேயும் நடிச்சு டாப் ஆக்டரா தமிழ் சினிமாலே இருந்துட்டு வந்த நேரத்துலே சிவாஜி துணிஞ்சு வில்லனா நடிச்ச படம் இது.

இதுக்கு அடுத்தாகவும் ஆன்ட்டி ஹீரோவாத்தான் சிவாஜி நடிச்சாரு. ராமண்ணா ஒரு ரெண்டு ஹீரோ கதையை சொல்லி , நீங்க எந்த வேஷம் பண்றீங்கன்னு கேட்டார். ரெண்டு ஹீரோவுலே ஒரு ஹீரோ கேரக்டர் இதுதான். நண்பனோட மனைவியையே அடையத் துடிக்கிற, குடிப் பழக்கம் இருக்கற கேரக்டர் அது. இந்த கேரக்டர்லே இந்த படத்துலே நடிச்ச இன்னொரு நடிகர் (எம்ஜிஆர்) அந்த வேஷத்துலே நடிக்க ஒத்துக்கல . ஆனா சிவாஜியோ எந்த மறுப்பும் சொல்லாமே ஒப்புக்கிட்டார். அந்த படம்தான் சிவாஜியும் எம்ஜிஆரும் நடிச்ச கூண்டுக்கிளி.

சிவாஜியோட 19வது படம் எதிர்பாராதது . இதுவும் கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச கதைதான். பொதுவா நல்ல நிலைமையில் இருக்கிற ஹீரோக்கள் இந்த மாதிரி வேஷத்தை செய்ய ஒப்புக்கு மாட்டாங்க . சிவாஜியோட காதலி பத்மினி. சந்தர்ப்ப சூழ்நிலை பத்மினியோட ஏழ்மை நிலையாலே பத்மினி சிவாஜியோட அப்பா நாகையாவை கல்யாணம் பண்ணிக்குவார். சிவாஜி

வெளிநாட்டுக்கு போன பிறகு நடக்கிற சம்பவங்கள் இது. சிவாஜி பத்மினியோட காதல மறக்க முடியாமல் தவிக்கிறார். பத்மினி இப்போ சிவாஜிக்கு சித்தி முறை. ஒரு கட்டத்துல உணர்ச்சி வேகத்துல பத்மினிய கட்டித் தழுவ முயற்சிக்கிறார். அதைய பொறுத்துக்க முடியாத பத்மினி சிவாஜிய அடிச்சு தள்ளறார். இப்படி ஒரு கதையை பெரிய கதாநாயகன் கிட்ட சொன்னா நடிக்க

ஒப்புக்குவாங்களா ? வில்லங்கம் புடிச்ச இந்த கதையிலேயும் துணிஞ்சு நடிச்சவர் சிவாஜி.

சிவாஜி ஜெமினி நடித்த முதல் படம் பெண்ணின் பெருமை. சிவாஜியும் ஜெமினியும் அண்ணன் தம்பியா நடிச்ச படம் இது. இந்தப் படத்துல சிவாஜி ஜெமினிய ரொம்ப கொடுமைப் படுத்துற மாதிரி கேரக்டர். ஜெமினிகணேசன சவுக்காலே விளாசித் தள்ளுவார். அடிச்சு விரட்டுவார்.தொழிலாளர்களை மிரட்டுவார். இப்படி ஏக அட்டகாசம் பண்ணி இருப்பார் சிவாஜி இந்த படத்துல 

அதுமாதிரி சிவாஜி ஆன்ட்டி ஹீரோவா பண்ணுன படங்கள்லே ரொம்ப முக்கியமான படம் ரங்கோன் ராதா. கட்டுன மனைவியையே ரொம்ப கொடுமைப்படுத்துற கேரக்டர்ல சிவாஜி நடிச்சு மிரட்டி எடுத்து இருப்பார். இந்த படத்துல ரொம்ப கொடுமையான ஒரு காட்சி, கட்டுன மனைவியான பானுமதியையே நரபலி கொடுக்க துணிஞ்சுருவார் . இந்தப் படத்தோட கதை அண்ணா எழுதினது. வசனம் கருணாநிதி எழுதினது.

சிவாஜி திருடனா நடிச்ச படம் பாக்யவதி. பொய் பேசறது , ஏமாத்தறதுன்னு இந்த ஆன்ட்டி ஹீரோ வேஷத்துலே சிவாஜி நடிப்புலே பிரமாதப் படுத்தி இருப்பார். மனோகரான்னு படத்தை எடுத்த L.V.பிரசாத் மூணு வருஷம் கழிச்சு சிவாஜியை வெச்சு இந்த படத்தை எடுத்திருக்கார்னு நெனச்சா எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு. அடுத்து உத்தமபுத்திரன் படம், விக்ரமன், பார்த்திபன்னு ரெண்டு வேஷம். இளவரசனா நடிச்ச விக்ரமன் வேஷத்தைதான் அதிகம் ரசிக்கும் படி செஞ்சிருப்பார் சிவாஜி. அம்மாவா வர்ற கண்ணாம்பா சிவாஜிக்கு அறிவுரை சொல்ற மாதிரி ஒரு காட்சி . அவங்க சொல்றத காதுலேயே வாங்கிக்காத படி , ஜாலியா ஊஞ்சலாடுவார் பாருங்க. அநாயசமா , அலட்டிக்காம பண்ணியிருப்பார்.

தமிழ் சினிமாவுல ஒரு கதாநாயகன் அப்படினா அவன் எந்த தப்பும் செய்யக்கூடாது, அவனுக்கு எந்த கெட்ட குணமும் இருக்கக் கூடாது. இப்படித்தான் ஒரு வரையறை செஞ்சு வச்சிருக்காங்க மக்கள். இந்த மாதிரி வரையறைக்குள் தன் படங்களை அடக்கிக் கொள்ளாதவர் சிவாஜி. புனர்ஜென்மம் படத்துல குடிச்சுட்டு நிதானம் எல்லாம் தவறி, ரோட்டுல எல்லாம் படுத்து கிடக்கும் அசல் குடிகாரன் போலவே சிவாஜி நடிச்சிருப்பார்.

பார் மகளே பார் படத்துல வறட்டு கௌரவம் பிடித்த , கர்வம் பிடித்த ஒரு மனிதராக சிவாஜி நடிச்சிருப்பார். புதிய பறவை படத்தில மனைவியை கொலை செய்த கணவன் பாத்திரத்துலே நடிச்சிருப்பார் . வசந்த மாளிகை படத்துல கூட அவருடைய கேரக்டர் என்னான்னு எல்லாருக்கும் தெரியும்.

இப்படி நடிப்புக்கும் , நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிவாஜி தன் படங்களை செஞ்சிருப்பார். ஒரு மனுஷன் எப்படி வாழணும்னு நல்ல ஹீரோ படங்கள் வந்ததோ, அதே மாதிரி ஒரு மனுஷன் எந்த மாதிரி வாழக் கூடாதுன்னு சொல்லறதுக்கும் இந்த மாதிரி படங்களில் நடிச்சார் சிவாஜி.

டி.ஆர்.ராஜகுமாரி !

 

புதுக்கோட்டை மன்னரே தேடி வந்து பெண் கேட்ட தமிழ் சினிமா காந்தக் கண்ணழகி: ஏழை டிரைவரை காதலித்த கதை தெரியுமா?

1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.

தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில், அவரின் அழகில் மயங்கி புதுக்கோட்டை மன்னர் அவரை காதலித்துள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி அவரை விட்டுவிட்டு, தனது வீட்டின் டிரைவரை காதலித்தது பலரும் அறியாத ஒரு தகவல்.

1935-ம் ஆண்டு கர்வான் இ ஹையத் என்ற இந்தி படத்தில் ராணியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டி.ஆா.ராஜகுமாரி. 1936-ம் ஆண்டு குமார குலோத்துங்கன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து கச்ச தேவயானி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து, எம்.கே.தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம் என்ற பெருமை ஹரிதாஸ் படத்திற்கு உண்டு. சிவாஜியுடன் அன்பு, மனோகரா, தங்கமலை ரகசியம், தங்க பதுமை, எம்.ஜி.ஆருடன், பணக்காரி, குலேபகாவலி, புதுமை பித்தன், பாசம், பெரிய இடத்து பெண் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1963-ம் ஆண்டு வெளியான புதுமைப்பெண் திரைப்படம் தான் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த கடைசி திரைப்படமாகும். இவரது தம்பி டி.ஆர்.ராமண்ணா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளராக இருந்தவர்.

கவர்க்கி கன்னி, காந்த கண்ணழகி என பல அடைமொழியுடன் வலம் வந்த டி.ஆர்.ராஜகுமாரி, தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை. இவரின் அழகில் மயங்கி அப்போது புதுக்கோட்டை மன்னாராக இருந்தவர் இவரை திருமணம் செய்துகொள்ள தூது விட்டுள்ளார். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி மன்னராக இருந்தாலும் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.ராமண்ணாவும் தனது அக்காவிடம் யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்க, அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

இதன் காரணமாக அக்கா டி.ஆர்.ராஜகுமாரியை கண்காணிக்க ஒரு ஆளை தயார் செய்துள்ளார். அந்த நேரத்தில், ராஜகுமாரி வீட்டில் டிரைவர் ராகவன் என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அனைவருக்கும் தகவல் கொடுக்க, அந்த டிரைவரை சராமாரியாக அடித்து வெளியில் அனுப்பியுள்ளனர். இதை பார்த்த டி.ஆர்.ராஜகுமாரி வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு அழுதுள்ளார். அதன்பிறகு டிரைவர் ராகவன், அந்த ஊரில் இருந்து கிளம்பி, நெல்லை அருகில் கேரளா எல்லையில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு டி.ஆர்.ராஜகுமாரி யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடைசிவரை தனியாக வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு தனது 77 வயதில் மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி தான் உச்சத்தில் இருந்தாலும், ஒரு டிரைவரின் எளிமையான மனதிற்கு மதிப்பு கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மன்னர் காதலித்தது, டி.ஆர்.ராஜகுமாரி டிரைவர் ராகவனை காதலித்த தகவலை இயக்குனர், தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளார்.

Ajay Manjunath.