Total Pageviews

Friday, March 6, 2026

🌹நடிகவேள் எம்.ஆர்.ராதா..!

🌹நடிகவேள் எம்.ஆர்.ராதா..!
 

வரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!

"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்!

அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!

நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!

"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கியவர்..!

ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி "ஐயர்" என்பவர் தலைமை தாங்கியிருந்தார்... முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும் பார்த்து கொண்டிருந்தார்..!

அதில் ஒரு காட்சியில், "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, "பார்ப்பான் பார்ப்பான்" என்றாராம் சத்தமாக.

அதேபோல, கம்பர் விழாவில் பேச, ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராதா, "பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே... நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே..." என்று ஆரம்பித்தார்.

அப்போது, ஒருவர் குறுக்கிட்டு, 'அய்யா... கம்பர் நாடாரு இல்ல..' என்றார்.

'நாடார் இல்லயா... நம்மாளு போலருக்கு, இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...'

'அய்யா... அவரு முதலியாரும் இல்ல...' என்றார்.

'முதலியாரும் இல்லயா சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...'

'அய்யா... அவரு அய்யரும் இல்ல...'

'என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா... அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா... அப்ப ஜாதி கிடையாதா... சரி தான், இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே..." என, ராதாவின் அந்த பேச்சு தொடர்ந்தது..!

இப்படி எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியாலும் பேரன்பாலும் பெருங்கருணையாலும் நிறைந்தது..!

"பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்" என்றார்.

பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன.

ராதாவின் நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின.. அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து சென்று விழுந்தன..!!

சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா..!

திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது.. அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!

ஸ்ரீநிவாஸ்.....

நடிகர் சசிகுமார் !

 

நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.

சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்களில் அகப்பட்டு இருக்கிறார்.

நண்பர்தான் அனைத்து வரவு செலவுகளும் அவரும் உயிரை மாய்த்துக்கொள்ள நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.

முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.

பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.

அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,

"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது.முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் பிறகு நம் மனம் சோர்ந்து விடாமல் இதில் இருந்து எப்படி மீளப்போறோம் என யோசிக்க வேண்டும்.நான் கடன்காரர்களிடம் வலிய போன் செய்து டைம் கேட்டு அடைத்தேன்"என பேட்டியில் சொல்கிறார்.

தனக்கு ஏற்படும் இன்னல்கள்,தடைகள்,கஷ்டங்கள் என எல்லாவற்றிற்கும் யார் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்களோ அவர்களால் அதை கடந்து வெற்றிப்பெற முடியாது.

பொதுவாக எனக்கு காதல் தோல்வி பாடல்கள் பிடிக்காது காரணம் அந்த பாடல்களில் வரிகள் எல்லாமே என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என புலம்பலாகத்தான் இருக்கும்.

ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்,"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்"பாடல் மிகவும் பிடிப்பதற்கு காரணம்,

காதல் தோல்வி பாடல்களில் இந்த பாடல் மட்டும்தான்,"என் மேலதான் தவறு,எனக்கு அதிர்ஷ்டம் இல்லை"என காதலியை உயர்வாக சொல்லப்பட்டு இருக்கும்.

"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்"என நாயகன் பாடுவதாக வாலி எழுதி இருப்பார்.

எப்போதெல்லாம் வாழ்வில் பின்னடைவை சந்திக்கிறீர்களோ,அப்போது உங்களின் வாழ்வில் பின்னடைவுக்கு யாரும் காரணம் இல்லை நாம் மட்டும் காரணம் என எப்போது எண்ண தொடங்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் வெற்றிப்பெற தொடங்கிறீர்கள் என அர்த்தம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Saturday, February 28, 2026

ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

 

2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் தனக்கு போன் செய்து நலம் விசாரித்தாகவும், ட்ரீட்மெண்ட் முடிந்தும்கூட சி.எம்.சொன்னால் தான் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, போக்கிரி ராஜா, பில்லா, மிஸ்டர் பாரத், ப்ரியா என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் ரஜினிகாந்த் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவருடன் தொடர்ந்து சர்ச்கைள் மற்றும் பொய்யான தகவல்களும் பரவ தொடங்கியது.அந்த வகையில் 1978-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, அம்ரீஷ் ஆகியோர் நடிப்பில வெளியான பிரியா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று  ஓடிக்கொண்டிருக்கும் போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவரை பிடிக்காதவர்கள், ரஜினிகாந்த் இனி நடிக்க மாட்டார். அவர் பைத்தியம் அவரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பரப்ப தொடங்கியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த நிகழ்வுகள் குறித்தும், எம்.ஜி.ஆர் தன்னிடம் நலம் விசாரித்தது குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில், பணம் கொடுத்தே சிவந்த கை எம்.ஜி.ஆர், அவர் எப்போதே எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கார் என்பது தெரியாது. ஏனென்றால் விஜயா ஹாஸ்பிடல் வந்து அட்மிட்டாயிருக்கேன்.

நர்வஸ் பிரேக்டாம். எம்.ஜி.ஆர் அவர்கள் வாரத்திற்கு இருமுறை போன் பண்ணி எப்படியிருக்கார் என்று விசாரிப்பார். அங்கே இரண்டு மாதம் சிகிச்சை எடுத்து நான் குணமான பிறகும், என்னை வெளியே விடடாமல் அப்படியே உட்கார வச்சிட்டாங்க. ஏனென்றால் சி.எம். ஆபிஸில் இருந்து ஒரு போன் வருகிறது. நான் டிஸ்ஜார்ஜ் ஆன பிறகு அவருக்கிட்ட சொல்லிவிட்டு தான் போகனும் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் எனக்கு போன் செய்தார். எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்கலா? நான் டெல்லி போய்ட்டு இருக்கேன். வந்தவுடன் வந்து என்ன பாருங்க என்று சொன்னார்.

அதன்படி அவரை பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது என்கிட்ட சொன்னாங்க. பார்ப்பா தம்பி ஒரு நடிகனுக்கு உடம்புதான் மூலதனம். அந்த உடம்பை ஜாக்கர்த்தியா பாத்துக்கொணும். ஸ்ட்ண்ட் பண்றேனு சொல்லி ரிஸ்க் எடுக்காதே. ஸ்டெண்ட் பண்ணதற்கு வேற ஆளங்க இருக்காங்க என்று அறிவுரை கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

செம்மீன் ஷீலா !

 

17 வயதில் அறிமுகம்; ஒரே நடிகருடன் 107 படங்கள் நடித்து சாதனை: 2 முதல்வர்களுடன் நடித்தவர் இந்த நடிகை!

2 முதல்வர்களுடன் நடித்துள்ள இந்த நடிகை ஒரே நடிகருடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2 முதல்வர்களுடன் நடித்துள்ள இந்த நடிகை ஒரே நடிகருடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது 17 வயதில் சினிமாவில் அறிமுகமாகி சுமார் 480 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஒருவர், 2 மாநில முதல்வர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான் செம்மீன் ஷீலா.

1945-ம் ஆண்டு, கேரளாவில் பிறந்த இவர், தனது 17 வயதில் 1962-ம் ஆண்டு, பாக்யசித்தகம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதே ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில் வெளியான பாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷீலா, அடுத்து எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்திருந்தார். மேலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

1995-ம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் நடித்திருந்த ஷீலா 10 வருட இடைவெளிக்கு பிறகு 2005-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தில், பிரபுவின் அத்தை அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகர் பிரேம் நசீருடன் இணைந்து 107 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த ஷீலா, இன்றுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை செய்துள்ளார்.

அதேபோல் தமிழில் எம்.ஜி.ஆருடன் நடித்த ஷீலா, தெலுங்கில் என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார். இவர்கள் இருவருமே பின்னாளில், முதல்வர்களாக முத்திரை பதித்தனர். 1966-ம் ஆண்டு மலையாளத்தில் சத்யன் நடிப்பில் வெளியான செம்மீன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அன்று முதல் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்பட்ட இவர், அழகிலும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குனர், நாவல் ஆசிரியர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓவியர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய நடிகை செம்மீன் ஷீலா, காதலிக்க நேரமில்லை பட நடிகர் ரவிச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜார்ஜ் விஷ்ணு என்ற ஒரு மகன் இருக்கிறார். தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜார்ஜ் விஷ்ணு, கடைசியாக சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 80 வயதை கடந்துள்ள நடிகை ஷீலா, கடைசியாக மலையாளத்தில் ‘அனுராகம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். யக்ஷகானம், சிகரங்கள் என இரு படங்களை இயக்கியுள்ள ஷீலா, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மகன் விஷ்ணு தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழச்சி கயல்விழி

Wednesday, February 25, 2026

சுருளி ராஜன் !

 படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எம்ஜிஆர் ரஜினியை விட படு பிசியான நடிகர்.. 1 ஆண்டில் 50 படம்!! இந்த பழக்கத்தால் பறிபோன உயிர்..
 
சினிமாவில் சிலரது குரலும், அவர்களது உடல்மொழியும் தனித்துவமானது. அதை பிரதியெடுக்க முயற்சித்தாலும், அந்த நேர்த்தியை வார்த்தெடுக்க வாய்ப்பில்லை. அப்படியான கலைஞர்கள் காலம் கடந்து வாழ்பவர்கள். அப்படி ஒருவர் தான் மறைந்த நடிகர் சுருளி ராஜன். ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்து கரியரின் உச்சத்தில் இருந்தவர். அவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள் காத்திருந்த காலம் இருந்தது.
 
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி ராஜனின் பெற்றோர் சிறு வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் தனது அண்ணன் பராமரிப்பிலேயே வளர்ந்தார். தொடக்கத்தில் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தவர், சினிமா கனவை எட்டிப்பிடிக்க சென்னை வந்தார். திமுகவின் தேர்தல் நிதியில் தயாரிக்கப்பட்ட கருணாநிதி வசனம் எழுதிய ‘காகிதப் பூ’ என்ற நாடகத்தில் நடிக்க சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
 
இந்த நாடகம் வெற்றிபெற்றதால் சுருளி ராஜனுக்கான சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ‘காகித பூ’ நாடகத்தை பார்த்த நடிகர் ஜெய்சங்கர், அவர் நடிப்பில் 1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.அடுத்து ‘அன்று கண்ட முகம்’ படத்தில் நடித்தார். 
 
ஜெய்சங்கர் - சுருளிராஜன் இடையிலான பிணைப்பு அதிகரித்ததால், அடுத்தடுத்து ஜெய் சங்கர் நடித்த ‘காதல் படுத்தும் பாடு’, ‘உயிர் மேல் ஆசை’ ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் ‘தண்ணீர் திருவிழா’, சிவாஜியுடன் ‘அஞ்சல் பெட்டி 520’ படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 
 
தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினியுடன் அன்புக்கு நான் அடிமை, எல்லாமே உன் கைராசி, ஜானி, காளி, முரட்டுக்காளை, நான் போட்ட சவால், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1980-ம் ஆண்டு மட்டும் 50 படங்கள் நடித்து சாதனை படைத்தார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சுருளி ராஜன் நடித்துள்ளார்கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு விஜயகாந்தின் ‘ஏமாறாதே ஏமாறாதே’ திரைப்படம் தான் சுருளி ராஜன் நடிப்பில் வெளியான கடைசி படம்.
 
அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையானதால் சுருளிராஜனின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து அனைவரும் சிரிக்க வைத்த சுருளி ராஜன் கடந்த 1980-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு பிறகும் பல திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Sunday, February 8, 2026

பட்டிமன்றம் ராஜா'

 

பட்டிமன்றம் ராஜா'

பட்டிமன்றம்' ராஜா. வங்கியில் உயர் பதவி யிலிருந்து இன்றோடு ஓய்வு பெறுகிறார். நீண்ட கால வங்கிப் பணியை நிம்மதியாக நிறைவு செய்ததற்காக மதுரை மீனாட்சியம்மனை தரிசிப்பதற்குச் சென்று கொண்டிருந்தவரிடம் பேசினேன். ''ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு. 1984-ம் ஆண்டு படிப்பு முடித்த கையோடு ஏதாவது நல்ல வேலை கிடைக்காதானுதான் பேங்க் வேலைக்கு வந்தேன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்துவிட்டேன். இப்போது எனக்கு, 59 வயது ஆகிறது. மக்களுடன் மக்களாக வங்கியிலும் பட்டிமன்றப் பேச்சாளராக இத்தனை வருடம் நான் பயணித்ததற்கும் மீனாட்சி அம்மனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் மீனாட்சி அம்மனை வணங்கி விட்டு த்தான் தொடங்குவேன். இதோ, இத்தனை வருட காலம் என் உடல் நலத்தைப் பேணிக்காத்த அம்மனை வணங்கத்தான் செல்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டவர்,

உழைக்க ஒரு காலம், ஓய்வு எடுக்க ஒரு காலம் என ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்தையும் தாண்டி வருவான். அப்படி எனக்கு உழைப்பதற்கான வயதையும் ஓய்வுக்கான வயதையும் சரியான நேரத்தில் செலவிடுகிறேன். இடையில், நடிப்பு, பேச்சு என எனக்காகச் சலுகைகள் தந்த வங்கிக்கு எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் பணிபுரிந்த இடமும் சரி, குடும்பமும் சரி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்'' என்றவரிடம், "இனி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடிக்கலாமே. நடிப்பையும் பேச்சையும் தொடர்வீர்களா..?'' எனக் கேட்டதற்கு, 'நிச்சயமாக... பேச்சுதான் எனக்கு உயிர் மூச்சு. அதை விட முடியாது. கண்டிப்பாக என்னைப் பட்டிமன்ற மேடைகளில் தொடர்ந்து பார்க்கலாம்.

சாலமன் பாப்பையாவுடன் இணைந்து சன் டிவிக்காகப் பட்டிமன்றங்களில் பேசிவரும் இவர், 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கருடன் இணைந்து அந்தந்த நாள்களுக்கான சிந்தனைகள் பற்றிப் பேசியவர். தன் நகைச்சுவையான பேச்சின் இடையே சமூக சிந்தனைக் கருத்துகளைப் பேசுவது ராஜாவின் பலம். பாரதி பாஸ்கரும் ராஜாவும் எப்போதும் எதிரெதிர் அணியில் இருப்பவர்கள். ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு பேசும்போதுதான் கைத்தட்டலால் அரங்கே அதிரும். 7,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கும் சிறப்புக்கு உரியவர் 'பட்டிமன்றம்' ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பணியை நிறைவு செய்திருக்கும் ராஜா

Tuesday, January 20, 2026

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-டி.ராஜேந்தர் இசையில் ஒரு பாடலை பாட 16 மணி நேரம் எடுத்துக்கொண்ட பாட்டு !

 ஒரே பாட்டுக்கு நள்ளிரவு வரை இடைவிடாமல் ரீடேக்; எஸ்.பி.பி-ஐ படுத்திய டி.ஆர்; எந்த பாட்டு அது?

தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான்.

தமிழ் சினிமாவில், பிரபல பாடகரான பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஒரு சில பாடல்களை சிரமப்பட்டு பாடியிருந்தாலும், டி.ராஜேந்தர் இசையில் ஒரு பாடலை பாட 16 மணி நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். அது என்ன பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் தான் டி.ராஜேந்தர். ஒரு தலைராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

அதேபோல் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான். 1980-90 காலக்கட்டங்களில் இவரது படங்கள் வெளியாவது, இவரது படங்களின் இசை வெளியீட்டு விழா நடப்பது என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தனது படங்கள் மட்டுமல்லதமல், மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள ராஜேந்தர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

டி.ராஜேந்தர் இசையில் பல பாடகர்கள் ஹிட் பாடல்களை பாடியிருந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், டி.ராஜேந்தர் படத்தில் பாடல் பாட வந்து தெறித்து ஓடியுள்ளார். 1986-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கம், நடிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவில் வெளியான படம் தான் மைதிலி என்னை காதலி. நடிகை அமலா இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 11 பாடல்கள் இடம்பெற்ற இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் டி.ராஜேந்தர் எழுதியிருந்தார்.

8 பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க பாடல் ‘’நானும் உந்தன் உறவை’’ என்ற பாடல். இந்த பாடலை பாட வந்த எஸ்.பி.பி முதலில் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட டி.ராஜேந்தர், இல்லை மீண்டும் ஒருமுறை பாடுங்கள் என்று சொல்ல, மீண்டும் என்.பி.பி அந்த பாடலை பாடியுள்ளார். அதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லி மீண்டும் மீண்டும் பாடுமாறு கூறியுள்ளார். இதில் எஸ்.பி.பி. பாடுவது அவருக்கு திருப்தியாக இருந்தாலும் டி.ராஜேந்தருக்கு திருப்தி இல்லை.

அப்போது அவரிடம் பாடல் நன்றாக வருமே என்பதற்காக என் பாலு இன்னும் நன்றாக பாடுவாரே என்று டி.ராஜேந்தர் சொல்ல, அப்படியோ என்று உற்சாகத்துடன் எஸ்.பி.பி மீண்டும் ஒருமுறை பாடுவாராம். அடுத்து எஸ்.பி.பி பாட மீண்டும் அதே வார்த்தையை சொல்லி டி.ஆர், பாட சொல்லியுள்ளார். ஒரு கால்ஷீட்க்கு 7 பாடல்கள் பாடியிருந்த எஸ்.பி.பி., இந்த ஒரு பாடலை பாட கால்ஷீட் தாண்டி இரவு 12 மணிவரை சென்றுள்ளது.

அப்போதும் திருப்தி இல்லாத டி.ஆர் இன்னொரு முறை போலாமா பாலு சார் என்று கேட்க, இதுக்கு மேல் என்னால் முடியாது. நான் பாடியதை நீங்கள் கேட்டுப்பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் நாளை மீண்டும் ஒருமுறை வந்து பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் எஸ்.பி.பி. ஆனால் இந்த பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 1, 2026

உலகம் சுற்றும் வாலிபன் !

 

உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறு களைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டை கிடையாது திரும்பிய திசை களிலெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.

படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின் விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்திமிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.

*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .

அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குனர் பா .நீலகண்டன் ,வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .

*உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.

*உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .

*பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .

*முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்கப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .

*காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .

*லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது

.

*அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .

*டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.

*லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .

*நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .

*குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .

*ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி

மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .

தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

*அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது...

சென்னை தேவிபாரடைஸில்

தொடர்ந்து 225 காட்சிகள்

மதுரை மீனாட்சியில்

தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்

அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! 

சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்.....

#திண்டுக்கல்சமையல்

Tuesday, December 30, 2025

மணி அடித்தால் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் அற்புத சிவன் கோவில்…

  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரம்பு மலை சிவன் கோயில்.
  • இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இக்கோவிலின் நுழைவு வாயிலில் பாரியின் அவை புலவரான கபிலர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்றும் கல்வெட்டாக வடிக்கப்பட்டு உள்ளது.
  • இங்கு உள்ள கொடுங்குன்றநாதர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • வாழ்க்கையின் மூன்று அம்சங்களையும் முன்னிறுத்தி விளக்கும் விதமாக இங்கு பாதாளம், பூலோகம், மேலோகம் என மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது.
  • மலையின் அடியில் பாதாள சிவன் கோயிலும், மலையின் நடுவில் பூலோக சிவன் கோயிலும், மலையின் மேல் கைலாய சிவன் கோயிலும் பிரம்மாண் டமாக அமைந்துள்ளது.
  • பாரி மன்னன் ஆட்சி செய்த இந்த பறம்பு மலை சிவன் கோயில் மிகவும் அற்புதமான இயற்கை எழில் சூழ அமைந்திருப்பதோடு பல்வேறு மூலிகை களையும் கொண்டுள்ளது.
  • பூலோக சிவன் கோயிலில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம், பிரம்மாண்டமாக தத்ரூபமாக அமைக்க ப்பட்டுள்ளது.
  • இங்குள்ள கொடுங்குன்ற நாதர் கோவிலில் ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரையிலான காலகட்டங்களில் சிவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதாக சொல்லப்படுகிறது.
  • எனவே அன்றைய காலகட்டங்களில் இங்குள்ள சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
  • பாரி மன்னன் மலையும் மலை சார்ந்த இடத்தையும் ஆட்சி செய்து வந்ததால் இக்கோவிலில் தேன், திணை மாவு, பச்சரிசி மாவு போன்றவற்றால் செய்த பொருள்களையே சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்கின்றனர்.
  • சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த பறம்புமலை சிவன் கோயில்.
  • மேலும் இங்கு ஒலிக்கப்படும் மணி சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் சிறப்புடையதாகவும் சொல்லப் படுகிறது.
  • தேவார பாடல் பாடப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பறம்பு மலை சிவன் கோயில் இன்றளவும் பாரி மன்னனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது!

காதலிக்க நேரமில்லை படத்துக்குக் கிடைச்ச ப்ரீ விளம்பரம்..! அட இதுதான் வெற்றியின் ரகசியமா?

 

சில படங்கள் ஆரம்பத்திலேயே சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் அந்த சர்ச்சையே பெரிய அளவில் விளம்பரத்தைத் தேடித் தந்துவிடும். அப்படி ஒரு படம்தான் இது. ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தின்போது ஆரம்பத்தில் கடும் சவால்களை சந்தித்தார் ஸ்ரீதர். முதலில் ஒரு கதை எழுதி அதை 10 நாள்கள் படமாக்கினார் ஸ்ரீதர்.

அதைப் போட்டுப் பார்;த்த போது அவருக்கு திருப்தி வரல. அதனால மீண்டும் கதை எழுதி படமாக்கினார். அதுதான் நாம இப்போ பார்க்குற காதலிக்க நேரமில்லை. படம் வெளியானபோது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழகம் முழுவதும் அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. படத்தின் பெயர் ஆபாசமாக இருக்கிறது. காட்சிகளும் ஆபாசமாக இருக்கிறது. அதனால் திரையிட தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டன.

இந்த விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்தப் படத்தைப் பொருத்தவரையில் படத்தின் பெயரும் சரி. காட்சிகளும் சரி. கவர்ச்சிகரமாக இருக்கிறதே தவிர, ஆபாசமில்லை என்பதே அவர்களது கருத்தாக இருந்தது. அதனால்தான் படத்திற்கு எவ்வித தடையும் இல்லை. அந்த வகையில் படத்திற்கு இந்த விவாதமே பெரிய பிளஸ் ஆகி விளம்பரமானது. அந்தப் படம் வெள்ளிவிழா காண இதுவும் ஒரு காரணம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், டிஎஸ்.பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் சூப்பர். என்ன பார்வை, மாடிமேலே, உங்கள் பொன்னான கைகள், அனுபவம் புதுமை, நாளாம் நாளாம், மலரென்ற முகமொன்று, காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது.

 

ஒரு காலகட்டத்திலே பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது. அந்தக் கனவை ஒரு விமானப் பயணம் நிறைவேற்றி வைக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஒருமுறை பெங்களூருவுல இருந்து டெல்லிக்குப் பயணம் செய்த போது அவருக்குப் பக்கத்து சீட்ல ஸ்ரீபாலி என்பவர் அமர்ந்து இருந்தார்.

அவர் ராஜீவ்காந்தியின் பர்சனல் பிஏ. அவருடன் பேசிக் கொண்டு இருந்தபோது ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது என்னோட தணியாத ஆசை. அவரை சந்திக்கத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்செயலாகச் சொன்னார் சரோஜாதேவி. மறுநாள் காலையிலே அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு ஒரு செய்தி வந்தது. ராஜீவ்காந்தி அவர்களை நீங்கள் 12 மணிக்கு சந்திக்கலாம்.

தயாராக இருங்கள் என்று. உடனே சரோஜாதேவி அவசரம் அவசரமாக மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு ராஜீவ்காந்தியின் இல்லத்துக்குச் சென்றார். புன்னகையோடு அவரை வரவேற்ற ராஜீவ் காந்தி ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேலாக அவரோடு பேசிக் கொண்டு இருந்தார். அப்போ சரோஜாதேவியைப் பார்த்து மாண்டியால காங்கிரஸ் சார்பா நீங்க போட்டி இடுறீங்களான்னு கேட்டார்.

அதற்கு என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு அரசியல்ல அவ்வளவு நாட்டம் இல்ல. ஆனா எனது கணவருக்கு அதுல ஈடுபாடு இருந்தது. நான் அரசியல்ல ஈடுபடணும்னு தீவிரமாக விரும்பினார். இப்ப அவர் இல்லாத சூழல்ல அரசியல்ல ஈடுபட எனக்கு சுத்தமாக ஆசை இல்லைன்னு சொன்னார் சரோஜாதேவி. புகழ், பதவி, செல்வாக்கு என அத்தனை இருந்தும் ராஜீவ்காந்தி அத்தனை எளிமையாக பழகியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

நான் சந்தித்த மனிதர்கள்ல அவர் ஒரு மாமனிதர் என்று ஒரு பத்திரிகையிலே பதிவு செய்துள்ளார் சரோஜாதேவி.

எம்ஜிஆர்-சரோஜாதேவி ஜோடியை மாற்ற தேவர் செய்த ஐடியா... நடந்தது இதுதான்...!


எவன் ஒருவன் தனது அறிவை சமயோசிதமாகப் பயன்படுத்துகிறானோ அவனே வாழ்வில் வெற்றி அடைவான். இது எழுதப்படாத நியதி. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர் பிரபல தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

இவர் தம் படங்களில் தொடர்ந்து எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து வந்தார். 

அவரைத் தவிர எம்ஜிஆருக்குப் பொருத்தமான வேறு ஜோடி அமையவில்லை. என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போதுதான் தேவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி அவரை ஈர்த்தது. ஜெயலலிதா தான் எம்ஜிஆருக்கு சரியான ஜோடி என முடி வெடுத்தார் தேவர். அந்தப் படத்திற்கான படப் பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே ஜெயலலிதாவை தனது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் தேவர்.

அவர் புத்திசாலித்தனமாகத் தான் செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படம் ஜூலை மாதம் வெளியானது என்றால் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த கன்னித்தாய் படம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வெளி யானது.அந்தப் படத்தைத் தொடர்ந்து றக்குறைய அரை டஜன் படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். மேற்கண்ட தகவலை பிர பல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து ள்ளார்.

தீபாவளி தினத்தன்று ரீலீஸாகி தேசிய விருது பெற்ற பாகப்பிரிவினை திரைப்படம்…

 

தீபாவளி தினத்தன்று ரீலீஸாகி தேசிய விருது பெற்ற பாகப்பிரிவினை திரைப்படம்…

  • அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் வெளியானது.
  • சிறந்த தமிழ் படத்திற்காக, 1960ம் ஆண்டின், தேசிய விருது பெற்ற படம்..
  • மத்திய அரசின் பிராந்திய மொழிப் படங்களில், சிறந்த படமாக தேர்வானது.
  • 'மெகா ஹிட்' படமான பாகப்பிரிவினை திரைப்படம் வெளியாகி 65 ஆண்டுகள் ஆகின்றன.
  • தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் இந்தப் படமும் இன்றுவரை இடம்பெற்றிருப்பதுதான், கதையின் மிகப்பெரிய வலிமை.

திரைக்கதை

  • சிறுவயதில், மின்சாரம் பாய்ந்து, கைகால்கள் ஊனமாகிவிடும் சிறுவன் கன்னையாவிற்கு. பெரியப்பா, அப்பா என கூட்டுக்குடும்பம். ஆனால், பெரியம்மா பாகுபாடு பார்ப்பார்.
  • பட்டணம் போய் படித்துவிட்ட தம்பி நம்பியார், பெரியப்பாவின் சொந்தக்கார எம்.ஆ.ராதாவின் தங்கையை நம்பியார் மணக்க குடும்பத்துக்குள் ஏற்படும் விரிசல்கள் பாக பிரிவினையை உண்டாக்க,இறுதியில் சிவாஜிக்கு கை குணமாகி குடும்பம் ஒன்று சேர்வதே கதை.
  • படத்தில் எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சுகளும் நையாண்டிக் குறும்புகளும் செம. அதேபோல், சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’ என்று அழைக்கும் இடங்களிலெல்லாம் அப்ளாஸ் அள்ளியது
  • இந்தப் படத்தின் கதையை, எழுதிய சோலைமலை. மாமல்லபுரத்தில் உருவானது. கை, கால்கள் ஊனமான நிலையில் சிறுவன் ஒருவன் தன்னிடம் பிச்சை கேட்ட போது, அவனது பாத்திரத்தையே, அப்படியே கதாபாத்திரமாக்கினார்.(சிவாஜி கதாபாத்திரம்)
  • இப்படத்திற்கு முன்னதாக, ரத்தக்கண்ணீர்படத்தில், எம்.ஆர்.ராதா நடித்ததை பார்த்து, சரோஜாதேவி பயந்திருந்தார்.
  • பாகப்பிரிவினை படத்தில், எம்.ஆர்.ராதாவை அவர் துடைப்பத்தால் அடிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பயத்தில், இதுவும் சேர, எம்.ஆர்.ராதா திட்டும் அளவுக்கு, சரோஜாதேவியின் நிலை இருந்தது.
  • இதையடுத்து, எம்.ஆர்.ராதாவே ஒரு ஐடியாவை சொல்கிறார். 'பூட்டிய அறைக்குள் இருந்து நான் அலறியபடியே ஓடி வருகிறேன். பின்னால் நீ துடைப்பத்துடன் ஓடி வா... ரசிகர்கள் நீ அடித்ததாக நினைத்து கொள்வர்' எனக் கூறியுள்ளார்.
  • அப்படியே அந்த காட்சியும் படமாக்கப்பட்டது.
  • படத்தில் நிறைய காட்சிகளில், சிவாஜியும், சரோஜாதேவிக்கு உபகாரம் செய்துள்ளார். இப்படத்திற்கு பின் தான், சரோஜாதேவிக்கும் பெரிய அளவில் பெயர் கிடைத்தது.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கும், அண்ணன், தம்பி உறவுக்கும் இப்படம் சான்று.
  • தமிழ்நாடு முழுவதும் போட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல். சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி என மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
  • மூன்றிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகத்தில், மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பல ஊர்களிலும் 200 நாட்களைக் கடந்து ஓடி, பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்தது ‘பாகப்பிரிவினை’.

'கலைஞானம் !

 

தமிழ்த்திரை உலகில் வெற்றிகரமான பல படங்களைத் தந்தவர் கதாசிரியர் கலைஞானம். ஆனால் அவருக்கு அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்து சேரவில்லை. சினிமாவுக்குப் பாட்டு எழுதணும்கற ஆசையோடு சென்னை வந்ததும் கலைஞானம் ரத்தசக்தி என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அது மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதைத் தொடர்ந்து என்ன பண்றதுன்னே புரியல. 1950 முதல் 1962 வரையில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஆளானார்.

இடைப்பட்ட காலங்களில் சில நாடகங்களில் நடித்தார். அவற்றில் சிலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார். அதற்கு அவரது வருமானமே 5 முதல் 10 ரூபாய் வரைதான். அதையும் ஒருசிலர் கொடுக்கவே மாட்டார்களாம். இலவசமாகக்கூட பல நாடகக் கம்பெனிகளுக்குப் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததுன்னா 1965ல் அவர் எழுதிய அரங்கேற்றிய வெள்ளிக்கிழமை என்ற நாடகம்தான்.

அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் வெற்றி அதுதான். ஆனாலும் அந்த நாடகத்தைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தன் மனைவியையும், பிள்ளைகளையும் மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்னும் ஒரு மாதம் இங்கே இருந்து பார்க்கிறேன். அதுக்குள்ள எனக்கு சினிமா வாய்ப்பு வரலன்னா நானும் மதுரை வந்து சேர்ந்து விடுவேன் என்று அவரது மனைவியிடம் சொன்னார். அப்போது அவரது மனைவி லேசாக சிரித்தார்.

‘12 வருஷமா சினிமாவுல சேரணும்னு நீங்க போராடிக்கிட்டு இருக்கீங்க. இந்த 12 வருஷம் பெற்றுத் தராததையா இந்த ஒரு மாசம் பெற்றுத் தரப்போகுதா’ என்பதுதான் அவரது சிரிப்புக்குப் பின்னால் இருந்த கேள்வி. மனைவியை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த கலைஞானம் முருகன் படத்தைப் பார்த்தார். அவர்கிட்ட முருகா, உனக்கே இது நல்லாருக்கா? என்னை இப்படி பாடாப் படுத்துறீயே? என கடுமையாக முருகனிடம் சண்டை போட்டார்.

அன்றைக்கு அவர் சொன்னது முருகன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுத்தாளர் ஏஎஸ்.முத்து அவரை சந்திக்க வந்தார். 'கலைஞானம் கிளம்புங்க. ஜோசப் தளியத்துக்கு கதை வேணுமாம். வாங்க சொல்லிட்டு வரலாம்' என்று அழைத்தார். அங்கு போனதும் கலைஞானம் ஜோசப் தளியத்துக்கு 2 கதை சொன்னார். அதில் ஒரு கதை அவருக்குப் பிடித்துப் போனது.

அதுதான் காதல் படுத்தும் பாடு. ஜெய்சங்கரும், வாணிஸ்ரீயும் நடித்து பின்னாளில் படமானது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞானத்துக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் வந்தன? அவர் எவ்வளவு பெரிய கதாசிரியர் ஆனார் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Sunday, December 28, 2025

மின்சார பூவே - படையப்பா !

 

மின்சார பூவே - படையப்பா ! இந்தப் பாடல் ரஜினிகாந்தையே எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு பெண் பாடுற பாட்டு. திமிரும், கர்வமும், அகம்பாவமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தோட வேண்டும் என்பது தெரிந்தவுடன், A.R.ரஹ்மான் “கூப்பிடுங்க நித்யஸ்ரீ யை” என்றார்.

நித்யஸ்ரீ அதற்கு முந்தைய வருடத்தில்தான் ( பத்து வருடங்களாக கர்னாடக சங்கீதத்தில் புகழ்) ரஹ்மானின் ஜீன்ஸ் பட கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை அட்டகாசமாகப் பாடி தமிழ் சினிமாத்துறையில் அடியெடுத்து பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி ஆச்சரியப்பட வைத்தார்.

இந்தப் பாடல் ஒரு போட்டிப் பாடல். படையப்பாவுக்கும் நீலாம்பரிக்கும். படையப்பா பாட நீலாம்பரி பாடலுடன் ஆடலும் சேர்த்து என்பதாய் இருக்கும்.

மின்சார பூவே என்று ஆண் துவங்கும் வரிகள் முதலில் “செளக்கியமா கண்ணே செளக்கியமா” என்றுதான் இருந்தனவாம். (மிஸ்டர் பாரத்-தில் ரஜினியும் சத்யராஜும் என்னம்மா கண்ணு செளக்கியமா என்று பாடுவார்களே, அது மாதிரி) அப்புறம் பாடல் வளர்கையில் மின்சார பூவே , மின்சார கண்ணா என்று பரிணமித்தது. (பின்னாளில் செளக்கியமா கண்ணே செளக்கியமா என்கிற அந்த வரிகள் சங்கமம் படத்தின் பாடலாகி நித்யஸ்ரீயால் புகழடைந்தது தனி).

சிச்சுவேஷனை சொல்லி அதற்கேற்ற மாதிரி கச்சிதமான வரிகளைக் கேட்டவுடன் பாடலாசிரியர் வைரமுத்துவோ தன் பங்குக்குப் பாடலை அனாயாசமாக தனது வரிகளால் நறுக்குத் தெறித்திருப்பார். நீலாம்பரி படையப்பாவை விரும்பினாலும் “ஹேய் யூ, ஐ லவ் யூ. பதிலுக்கு புளகாங்கிதத்தோடு லவ் யூ சொல்லி காலமெல்லாம் என் காலடியில் விழுந்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்” என்று இறுமாப்போடு காதலை யாசகம் தரும் காரெக்டர். அதற்கு மிகச் சரியாக ஒரு வரி படையப்பாவின் மீதான காதலை, அவனுடைய உன்னத குணாதிசயங்களைச் சொன்னாலும் அடுத்த கணமே தனது ஈகோவை, அகம்பாவத்தைக் காட்டும், தன்னை முன்னிலைப் படுத்துமாறு இருக்கும் செருக்கை அடுத்த வரியிலேயே தப்பாமல் வந்து விடுமாறு எழுதியிருப்பார். முதல் வரி “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்” என்று சொல்லி விட்டு உடனேயே ”என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்” என்றும் ”வானம் வந்து வளைகிறதே” என்று சொல்லி விட்டு உடனேயே “காதலிக்க வா” என்று கூப்பிடாமல் “வணங்கிட வா” என்றும் வெல்லுஞ்சொல் இல்லாததாய் வெளுத்து வாங்கி இருப்பார்.

பாடலின் ஆண் குரலுக்கு ஹரிஹரன் வந்து பாடிக் கொடுத்து விட்டுப் போயாயிற்று. அந்தப் பாடலின் ஆண்குரலுக்கு ட்ராக் பாடியது ஸ்ரீனிவாஸ். கெமிக்கல் இஞ்சினியர். சில திரைப்பட பாடல்களைப் பாடி புகழடைந்து வந்திருந்தார்.என்ன நினைத்தாரோ ரஹ்மான், ஸ்ரீனிவாஸைக் கூப்பிட்டு, ஹே, அந்த மின்சார பூவே, அதுல உன்னோட வெர்ஷனையே ஃபைனல் பண்ணிட்டோம். நல்லா இருக்குது” என்றவுடன் இன்ப அதிர்ச்சி. ஹரிஹரன் வெர்ஷனை விட ஸ்ரீனிவாஸின் வெர்ஷன் கம்பீரமாக இருப்பதாக ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் அபிப்ராயப் பட்டனராம். அப்போது ஸ்ரீனிவாஸிற்கு ஹரிஹரன் எல்லாம் அண்ணாந்து பார்க்கும் லெஜண்ட் பாடகர். இந்தப் பாடலைப் பாட ஸ்ரீனிவாஸிற்கு பத்து நிமிடங்களே கொடுத்தாரம் ஏ.ஆர்.ஆர். அந்தப் பத்து நிமிடங்களில் பிரமாதமாகப் பாடி பாடலில் காதலோடு கம்பீரத்தையும் கலந்து அடித்து ஆடியிருப்பார்.

பாடலைப் படமாக்கிய விதமும், ஓளிப்பதிவு, நடனம் என்று எல்லாமே இசைக்கும் பாடலுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் அட்டகாசமான எஃபெக்டில் அமைந்திருக்கும். நீலாம்பரி அகம்பாவத்தின் அல்டிமேட் ஐடெண்டிடியாகவே தன் முக பாவங்களையும், பாடி லாங்வேஜையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தி படையப்பாவையே விஞ்சுவார். (கோரியோகிராஃபி - லலிதாமணி)

நித்யஸ்ரீ பாடலைப் பாடிச் சென்ற அனுபவத்தைப் பற்றி ஸ்ரீனிவாஸ் சொல்வது. அவங்க வந்தாங்க. ஒரு புயல் மாதிரி வந்து அசர அடித்துப் பாடி விட்டு எங்களை பேச்சு மூச்சில்லாம செஞ்சுட்டுப் போய்ட்டாங்க என்பதாய் அதை நினைந்து வியக்கிறார்.இப்படி எல்லா டிபார்மெண்ட்டும் தன் உசிரைக் கொடுத்து பெஸ்ட்டைக் கொடுக்கும் பாடல் பரிமளிப்பது மிகச்சிலவே. இந்தப் பாடல் இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.

Friday, December 26, 2025

TVS பேருந்துகள்

 

TVS பேருந்துகள்:

மதுரையில் மட்டும் அல்ல; நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ளூர் பேருந்துகள் இவர்கள் தான் நடத்தினார்கள். பெயிண்ட் அடிக்காத அலுமினியம் தகடு கொண்ட பேருந்துகள்.

01. பேருந்துகள் மிதமான வேகத்தில் தான் செல்லும்.

02. சரியான நேரத்தில் நிறுத்தத்திற்கு வரும். அப்போது சொல்லுவார்கள். டிவிஎஸ் பேருந்து வந்து விட்டது என்றால் மணி 09.00 என்று கடிகாரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளலாம் என்று.

03. தூத்துக்குடியில் 3ம் நம்பர் பேருந்து நகரத்தை ஒரு சுற்று சுற்றி கிளம்பிய இடத்திற்கு வரும். நான் அதில் சிறுவயதில் என்னுடைய உறவினர்களோடு அமர்ந்து கொள்ளுவேன். கட்டணம் 3 பைசா. (வருடம் 1963)

04. பெட்டியில் டிக்கெட்டை அவர்கள் பயணம் முடிந்தவுடன் போடச்சொல்லுவதற்கு காரணம் - நகரத்தை குப்பையாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக தான்.

(காலப்போக்கில் தான் நானும் தெரிந்து கொண்டேன் )

05. TVS பேருந்துகளில் ஸ்டாண்டிங் ஏத்த மாட்டாங்க. புருஷன் பொண்டாட்டியா போனா கூட,ஒரு சீட் காலி இருந்தா ஒருத்தர மட்டும் தான் ஏத்துவாங்க. அடுத்த ஆளு நடந்து தான் ஊருக்கு போகனும்.

06. எல்லோரும் வரிசையில் நின்று தான் பஸ்ஸில் ஏற வேண்டும். அன்றைய நாளில் பஸ் பயணம் சுகமானது. இன்று மதுரையில் கூட்டத்தில் வலுவுள்ளவன் தான் பஸ்ஸினுள் நுழைய முடியும்.

07. TVS bus Very Neat. and decent.

08. மக்கள் சேவை ,தொழிலாளர் நலன்,பாதுகாப்பு போன்ற பல விஷயங்களில் கண்டிப்பாக இருந்தார்கள். கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நேரம் தவற மாட்டார்கள். 

காலை 05:05க்கு மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து 50ஆண்டுகளுக்கு முன்பு செய்த பயணம் இன்றும் நினைவிருக்கிறது.

இவை அனைத்தும் என் பக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்தவர்களிடம்

சேகரித்த பதிவுகள்.சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு என் நன்றிகள் 🙏🙏

Classic TNSTC