Total Pageviews

Friday, March 28, 2025

"கமலஹாசன்" இரண்டும் கெட்டான் வயதில் "கமல்" இருக்கும் போது நடந்தது இது !

                                                                                                                                                                    யார் இந்தப் பையன் ?"

என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர்.

"இவன் பெயர் கமலஹாசன்" என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி கணேசன். "களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானவன். நடிப்புத் திறமை உள்ளவன். இவனுக்கு நீங்கள் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதற்காகத்தான் உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்."

இரண்டும் கெட்டான் வயதில் கமல் இருக்கும் போது நடந்தது இது.

ஸ்ரீதர் தன் அருகில் நின்ற கமலஹாசனை மேலும் கீழுமாக பார்த்தார்.

இளம் மீசை. ஏக்கமான பார்வையோடு ஸ்ரீதர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தார் கமலஹாசன். அவரை சிறிது நேரம் உற்று நோக்கிய பின் ஜெமினி கணேசனை நோக்கி திரும்பி இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

"அப்புறம் பார்க்கலாமே, இப்போது இவனுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது."

ஸ்ரீதர் இப்படி சொன்னவுடன் கமலஹாசனின் முகம் பரிதாபமாக மாறியது. கண்கள் இரண்டிலும் மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அருகில் நின்ற ஜெமினி கணேசன் கமலின் தோள்களில் தட்டிக் கொடுத்தார். "சரி. வாப்பா போகலாம்."

கமல் தழுதழுத்த குரலில் ஜெமினியிடம் சொன்னார் :

"நான் வீட்டுக்கு போகிறேன். அப்படியே என் சொந்த ஊருக்கும் போய் விடுகிறேன்."

புன்னகைத்தார் ஜெமினி. "ஏன் ? அதற்குள் நம்பிக்கை இழந்து விட்டாயா?"

கமல் நிமிர்ந்து ஜெமினியின் முகத்தை பார்த்தார். "உண்மையை சொல்லுங்கள். எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னமும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா ?"

"ஏன் இப்படிக் கேட்கிறாய் ?"

"இல்லை. எனக்கு பிறகு நடிக்க வந்த மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் எல்லோரும் சிவாஜியோடும் எம்ஜிஆரோடும் சேர்ந்து நடித்து, இப்போது தனியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒருவன் மட்டும் இப்படி வாய்ப்புக்கள் கிடைக்காமல் ஏதாவது ஒரு படத்தில் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் நடிப்பதற்கு ஏற்ற திறமை என்னிடம் இல்லை என்றுதானே அர்த்தம் ?"

கமல் கேட்டது நியாயமான கேள்விதான். ஏனென்றால் 1972 இல் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குறத்தி மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு முக்கியமான வேடம்.

மாஸ்டர் ஸ்ரீதர் நடிக்கும் அதே காட்சியில் ஒரு ஓரத்தில் நின்று 'ராஜா வாழ்க' என்று கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் சாதாரண கேரக்டர் கமலஹாசனுக்கு.

அந்த விரக்தியில்தான் ஜெமினியை நோக்கி அப்படி ஒரு கேள்வியை கேட்டார் கமல்.

ஆனால் கமலின் இந்த கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாத ஜெமினி,

கமலை அழைத்துக் கொண்டு, காரை ஓட்டிக் கொண்டு நேராக போன இடம் இயக்குநர் கே பாலச்சந்தர் வீடு.

ஸ்ரீதரிடம் சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே பாலசந்தரிடமும் சொன்னார் ஜெமினி.

பாலச்சந்தர் கமலஹாசன் முகத்தை உற்றுப் பார்த்தார். படபடவென துடிக்கும் இதயத்தோடு பாலச்சந்தரின் பதிலுக்காக காத்திருந்தார் கமல்.

பதில் கிடைத்தது.

வாய்ப்பும் கிடைத்தது.

அரங்கேற்றம் படத்தில் கமலஹாசனுக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தார் பாலச்சந்தர்.

300 ரூபாய் சம்பளம்.

ஜெமினி கணேசன் கமலஹாசனை தன் அருகில் அழைத்தார். "300 ரூபாய்தானே தருகிறார்கள் என்று உன் முழு திறமையையும் காட்டாமல் விட்டு விடாதே. நீ யார் என்பதை நிரூபித்துக் காட்ட இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒருபோதும் உனக்கு கிடைக்காது. நிச்சயம் நீ மிகப்பெரும் நடிகனாக வருவாய். மிகப் பெரும் புகழ் பெறுவாய். சரி. நான் போய் வருகிறேன்."

இப்படிச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார் ஜெமினி.

அரங்கேற்றம் வெளிவந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

தொடர்ந்து தம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு வெகு விரைவிலேயே சினிமா உலகத்தின் அத்தனை சிகரங்களையும் தொட்டார்.

அனைத்து சிம்மாசனங்களிலும் அமர்ந்தார் கமல்.

அந்த நேரத்தில்தான் ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஸ்டூடியோவில் தற்செயலாக ஜெமினி கணேசனை பார்த்தார்.

அருகில் ஓடினார். ஜெமினி கணேசன் சிரித்தபடி கேட்டார்: "என்னப்பா கமல், எப்படி இருக்கிறாய் ?"

கமல் பதில் சொல்வதற்கு முன் சின்னஞ் சிறு புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டார் ஜெமினி. "ஆமாம். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் ?"

யாரை குறிப்பிட்டு கேட்கிறார் என தெரியாமல் கமல் குழம்பிப் போய் நிற்க, சிரித்தபடி கேட்டார் ஜெமினி. "கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சொன்னாயே. உன்னோடு அறிமுகமான மாஸ்டர் சேகர், பிரபாகர், ஸ்ரீதர் எல்லோரும் ஓஹோ என்று ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இப்பொழுது கொஞ்சம் திரும்பி பார். நீ குறிப்பிட்ட அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்."

ஜெமினி கணேசன் சொன்னது உண்மைதான். கமலைத் தவிர அவரோடு அறிமுகமான வேறு எந்த குழந்தை நட்சத்திரமும், இப்போது திரை உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லவே இல்லை.

கமல் கண்கள் கலங்க ஜெமினி கணேசன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

கமலுக்கு ஜெமினி கை கொடுத்து உதவியதைப் போல,

நமக்கு இக்கட்டான நேரங்கள் ஏற்படும்போது, இந்த பிரபஞ்சம் யாரோ ஒருவரை எங்கிருந்தோ அனுப்பி வைத்து அற்புதங்களை நிகழ்த்துகிறது.

கடமையைச் செய்து கொண்டு பொறுமையோடு காத்திருந்தால்,

வெற்றி நிச்சயம் !

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு !

 கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..

ரஜினிகாந்த - கமலஹாசன் ஓர் ஒப்பீடு !

 கமல் ஹாயாக ஹோட்டல் அறையில் படுத்து தூங்கிய போது, அந்த அறை வாசலில் தரையில் படுத்து தூங்கியவர் ரஜினி. கமலுக்கு ஷுட்டிங் இடத்தில் இளநீர் கொடுத்த போது ரஜினிக்கும் காந்திமதிக்கும் சிறிய மசால் வடை கொடுத்தார்கள்.

ரஜினி எதிர்பார்த்தார், கமல் பெரிய நடிக்கிராக வருவார் என்று. ஆனால், கமல் ஒரு போதும் நினைத்து பார்த்திருக்க வில்லை, தன்னை 2 வது இடத்துக்கு தள்ளி ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவார் என்று.

கமல் படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த ரஜினி கமலுக்கே போட்டியாக வந்து வீழ்த்தியவர். ஒரு கட்டத்தில் ரஜினி 5 மொழிகளில் முன்னணி நடிகராக இருந்தார். கமல் 4 மொழிகளில் முண்ணனி நடிகராக இருந்தார். கமல் போகும் இடம் எல்லாம் ரஜினி பின்னாலே போய் அவரை முந்துவார். இதெல்லாம் ரஜினி ஸ்டைல். கமல் ஆஸ்கர் நாயகன், ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுனு சொல்லுவாங்க. 16 வயதினிலே சாப்பானியாக யார் வேணா நடிக்கலாம்., ஆனால், பரட்டையாக ரஜினி தவிர மற்றவர் நடித்தால் எடுபடாது.மூன்று முடிச்சு படத்திலும் கமலை ஓரம் கட்டி நடிப்பில் ரஜினி அசத்தியிருப்பார். அதே போல் ஹிந்தியில் கிராப்தர் படம் பார்த்தால் தெரியும். ஹிரோ கமலை, அமிதாப்பும் ரஜினியும் டம்மியாக்கி இருப்பார்கள்.

நாயகன், தேவர் மகன், இந்தியன் கமலை ரஜினிக்கும் மேல் கொண்டு சென்றது. இந்திய சினிமாவின் ஒப்பற்ற திரைக்கதை கமல் எழுதிய தேவர் மகன் தான். இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் ரஜினியின் நடிப்பை மற்ற நடிகர்களால் கொண்டு வரவே முடியாது. 10 வருடங்களாக கமல் மார்க்கட்டில் பின் தங்கி விட்டார். ரஜினி ஹிந்தி பாடத்தை காப்பி அடிப்பார். கமல் இங்கிலிஷ் படத்தை காப்பி அடிப்பார்.

கமல் பல்துறை வித்தகர். ரஜினி மார்க்கட்டில் நம்பர் 1. ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர மோடியே பல முறை முயன்றார் . மூப்பனாரும், பா. சிதம்பரமும் ரஜினியை காங்கிரசில் சேர்க்க முயற்சி செய்தனர். கமலை எந்த கட்சியும் கூப்பிட வில்லை.. பாஜகவும் தன் கட்சியில் கமலை இணைக்க ஆர்வம் காட்டவில்லை.

திறமை அடிப்படையில் பார்த்தால் கமல் 150%, ரஜினி 60% தான். ஆனால், ரஜினிக்கு வெற்றி பெரும் வித்தை தெரியும். கமலுக்கு அந்த வித்தை தெரியாது. தொழில் நுட்ப ரீதியில் தமிழ் சினிமாவை முன்னேற்றியதில் கமல் பங்கு அதிகம். சொல்லப் போனால் இன்றைய பல நுட்பங்களை தமிழில் முதலில் பயன் படுத்தியதே கமல் தான். ரஜினிக்கு எந்த பங்கும் இல்லை.

இறுதியாக பார்த்தால் ரஜினி - கமல் இல்லை என்றால் தமிழ் சினிமா வளர்ந்து இருக்காது. தமிழை இந்தியா முழுக்க பரப்பியவர்கள் இவர்களே. இந்தியா முழுவதும் அறிந்த இரு தமிழ் நடிகர்களும் இவர்களே. அதிலும் அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்கள். ரஜினி - கமல் இடத்தினை விஜய், அஜீத்தினால் பிடிக்கவே முடியாது..

ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக்கண்டு பிரமித்துப்போகிறார்!

 

நிறைய பேர் கேட்கிறார்கள்...

கமல் ஏன் இவருக்கு உதவவில்லை?...ரஜினி ஏன் அவருக்கு உதவ வில்லை?

உதவி செய்பவர்கள் ஒரு ரகம். உதவி ஏற்பவர்கள் ஒரு ரகம்.

'துடிக்கும் கரங்கள்' என்றொரு ரஜினி படம். இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம். 1982 டிசம்பர் 12ல் அதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது.

தயாரிப்பாளரான இயக்குனர் ஸ்ரீதருக்கு ரஜினியின் பிறந்த நாள் வருவது தெரிந்ததும் தடபுடல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டார். ரஜினி "வேண்டாம் சார். சிம்பிளா உங்க வாழ்த்து மட்டும் போதும்" எனச்சொல்லியும் ஸ்ரீதர் கேட்கவில்லை. பிறந்தநாள் ஆனதால் மனைவி லதாவும் குழந்தைகளோடு வந்துவிட்டார் ஊட்டிக்கு. ஸ்ரீதர் யூனிட்டில் உள்ள ஒரு ஆள் விடாமல் அழைத்து ரஜினி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். ரஜினியே ஸ்ரீதரின் ஏற்பாடுகளை பார்த்து அசந்து விட்டார். லதாரஜினிக்கும் சர்ப்ரைஸ்..

பல வருடங்களுக்குப்பிறகு ரஜினி சில நலிந்து போன தயாரிப்பாளர்களுக்காக 'அருணாச்சலம்' எடுக்கிறார். அதில் இயக்குனர் ஸ்ரீதரையும் சேர்க்க அவர் வீட்டிற்கே செல்கிறார் ரஜினி.

விஷயத்தை சொன்னதும் ஸ்ரீதர் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். "சார்...இந்தப்படத்தில் எட்டு பேரை சேர்த்திருக்கிறேன். அதில் உங்களையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ள ஆசை..."

ரஜினி இப்படிச்சொல்லக் காரணம் அப்போது ஸ்ரீதர் லெதர் தொழிற்சாலை தொழில் நடத்தி பெரும் நஷ்டத்தில் இருப்பது ரஜினிக்கு தெரிந்ததால்.

"வேண்டாம் ரஜினி. நான் அந்தளவுக்கு கஷ்டப்படவில்லை. இதை வேறு யாருக்காவது கொடுங்க...நன்றி..." என ஸ்ரீதர் ரஜினியிடம் மறுத்து விடுகிறார். அமைதியாக இருந்த ரஜினி "ஓகே சார்...கிளம்புகிறேன்..." எனக்கிளம்ப...

"ரஜினி...ஒரு நிமிஷம்....எனக்கு உதவி செய்யணும்னு நீங்க நினைச்சா இந்தப்படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்குக்கொடுங்க...அதுக்கு சம்பளம் கொடுங்க...வாங்கிக்கொள்கிறேன்..இனாமா வேண்டாம்..."

கேட்ட ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக்கண்டு பிரமித்துப்போகிறார்.

உண்மையில் ஸ்ரீதர் கஷ்டத்தில் இல்லையென்றால் வசனம் எழுதும் வாய்ப்பையும் சம்பளத்தையும் கேட்டிருக்க மாட்டார். அவருக்கு தேவை இருந்தும் மறுத்து விட்டார். Great man...

இப்படித்தான் உதவுவோர் ஒரு ரகமென்றால் உதவியை ஏற்பவர் ஒரு ரகம். எல்லோரும் எல்லோரிடமும் கையேந்தி விடுவதில்லை. அதனால் கையேந்துபவர் கேவலமானவர்கள் என்பதுமில்லை. நமக்கு தெரியாமல் நாம் கமல், ரஜினி ஏன் உதவவில்லை என பழிக்க வேண்டும்?.

நாம் பார்க்கும் வானத்துக்கு அப்புறமும் நாம் பார்க்காத ஒரு வானம் இருக்கத்தான் செய்கிறது.

Thursday, March 20, 2025

பசங்க திரைப்படம் ஜெயப்பிரகாஷ்!

 பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து கலக்கியவர் ஜெயப்பிரகாஷ். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகும். ஆரம்பத்தில் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீனுடன் சேர்ந்து பொற்காலம், கோபாலா கோபாலா என எண்ணற்ற படங்களை இணைந்து தயாரித்தவர் பின்பு சிஜே பிலிம்ஸ் என்ற பெயரில் தற்போதைய ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுடன் இணைந்து தவசி உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.இவர் முதன் முதலில் நடித்த படம் தொண்டன் என்ற திரைப்படம். இருப்பினும் இவரை எல்லோருக்கும் அடையாளப்படுத்தியது பசங்க திரைப்படம்தான் அதுதான் இவரை அடையாளப்படுத்தியது.

நடிகை சுஜாதா !

 

நடிகை சுஜாதா..கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையில் பிறந்தார், மலையாள சினிமாவில் அறிமுகமானார்..

தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனார், தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தார், ஆனால் வெள்ளித்திரையின் பணம் புகழ் பரபரப்பை விட்டு எப்போதும் விலகி இருந்தார்.. சுஜாதா

வாழ்ந்த காலம் போலவே கடந்த 2011ம் ஆண்டு இவரது மரணமும் அடுத்த சந்ததியை உருவாக்காமல் போனது.

திரையில் பல சோகமான கதாபாத்திரங்களில் நடித்த சுஜாதா சொந்த வாழ்க்கையும் சோகமானது ..

இளையராஜா முதன் முதலில் இசை அமைத்த அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளியாக நடித்தார் சுஜாதா..

இந்த படம் நல்ல ஓட வேண்டும் என்று நினைத்தார் இளையராஜா ஆனால் இந்த படம் ஓடக்கூடாது என்று நினைத்தார் சுஜாதா.

அன்னக்கிளி படத்தின் போது உடன் ஹீரோவாக நடித்த சிவக்குமாரிடம் சுஜாதா சார் இந்த படம் ஓடக்கூடாது கூடாது ஓடக்கூடாது இதோட நான் சினிமாவை விட்டு போய்விட ரொம்ப நல்லது.. சினிமாவில் நடிக்க சொல்லி வீட்டில் ரொம்ப தொந்தரவு பண்றாங்க பொதுவா என்ன படம் யார் ஹீரோ எனக்கு என்ன சம்பளம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது சொந்தமாக பேங்க் அக்கவுண்ட் கூட எனக்கு கிடையாது இந்த படம் ஓடலைன்னா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு யாரையாவது கல்யாணம் பண்ணிவிட்டு போய்விடலாம் இருக்கேன் என்றாராம்..

சுஜாதாவின் சொந்த விதி எப்படி இருந்தாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்த படம் விதி.

1984 ஆம் ஆண்டு சுஜாதா மோகன், ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், படத்தில் வெளியே வந்த 'விதி' திரைப்படத்தை கே. விஜயன் இயக்கியிருந்தார் ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார்..

இந்தப் படத்தில் சுஜாதா வக்கீலாக நடித்திருந்தார் வசனங்களுக்காகவே புகழ் பெற்ற படம் ''விதி' அக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் "விதி" வசனங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன..

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு நீதிமன்ற காட்சிக்கு பல பக்கங்கள் வசனம் எழுதி இருந்தார் ஆரூர்தாஸ் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுஜாதா உடன் ஆரூர்தாஸை தொடர்பு கொண்டு என்னை சினிமாவை விட்டு விரட்டி அடித்து விடலாம் என்று நினைத்தீர்களா? இத்தனை பக்கம் வசனங்களை நான் எப்படி பேச முடியும் என்று கேட்டார் சுஜாதா..

அதற்கு ஆரூர்தாஸ் உங்களுக்கு அந்த அளவு திறமை இருக்கிறது.. நீங்கள் மிக சிறப்பாக இந்த வசனங்களை பேசுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று ஊக்கம் தந்தார்...

அவரின் நம்பிக்கையின்படியே "விதி"படத்தின் வெற்றியில் சுஜாதாவின் ஆவேசமான.உணர்ச்சிகரமான நடிப்புக்கு. வசன வீச்சுக்கு பெரும் பங்கு இருந்ததை யாராலும் மறுக்க முடியாது உண்மை...

இருவர் உள்ளம்’ வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன

 

சிவாஜியுடன் ஜெயலலிதாவின் தாயார் நடித்த படம்; கலைஞர் வசனம்; மறக்க முடியாத மெகா ஹிட் படத்தின் கதை

சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் சிவாஜி மிகவும் பணக்காரர். அதிக பணம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் இவர் உல்லாசமாக இருப்பார். எல்லா பெண்களுடனும் பழகுவார். எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பார்.

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் சிவாஜி, சென்னைக்கு வந்து மாமா நிறுவனத்தை கவனித்து கொள்வார். இந்நிலையில் அப்போது சரோஜா தேவியை பார்ப்பார்.

இதனால் மனம் மாறி சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். ஆனால் சரோஜா தேவி இவரது பழைய குணத்தைப் பார்த்து அவரை வெறுப்பார். இந்த நேரத்தில் சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க சரோஜாதேவி வருவார். இந்நிலையில் இதை பார்க்கும் சிவாஜியின் அம்மா- அப்பா இருவரும், சிவாஜிக்கும் சரோஜா தேவிக்கும் பொருத்தம் நன்றாக இருக்கும் என்று இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார்கள்.

திருமணமான பிறகும் கூட, சரோஜாதேவிக்கு நம்பிக்கை ஏற்படாது. அதன் பின்னர் சில திடுக்கிடும் திருப்பங்கள் நடைபெறும். சிவாஜி மீது கொலைப் பழி போடப்படும்? யார் உண்மையான கொலையாளி ? கணவன் மனைவி இணைவார்களா? என்பதுதான் மீதிக் கதை.

இந்த படத்தின் மிகப் பெரிய பலம் எழுத்தாளர் லட்சுமியின் கதை என்று கூறலாம். லட்சுமி எழுதிய நாவலுக்கு மிக அருமையாக கலைஞர் கருணாநிதி வனம் எழுதியிருப்பார். ஆங்காங்கே தன் குசும்புத்தனத்தையும் நையாண்டியையும் நக்கலையும் அவர் வசனத்தில் இணைத்து இருப்பார் என்பதும் அவை படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சரோஜாதேவி, சிவாஜிகணேசன் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். இந்த படத்தில் சிவாஜி கணேசன் அப்பாவாக எஸ்.வி.ரங்காராவ், அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருப்பார்கள். இருவருமே மகன் மீது பாசத்தை பொழியும் அற்புதமான கேரக்டரில் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக சந்தியாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். பறவைகள் பலவிதம் இதயவீணை, அழுகு சிரிக்கின்றது. நதி எங்கே போகிறது போன்ற பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றன என்பதும் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியன என்பதும் அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

1963ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ’இருவர் உள்ளம்’ வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் இந்த படத்தின் கதை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். திருந்தி வாழ்பவர்களுக்கு சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகோர்த்துக் கொண்டால் நல்லவனை கூட கெட்டவனாகதான் இந்த உலகம் நம்பும் என்பதை ஒவ்வொருவரும் புரியும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும்.