Total Pageviews

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் 


1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன. 

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

THANKS TO MALAIMALAR.COM

Tuesday, December 23, 2014

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு 1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார்.


வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன.


தயாரிப்பு நிறுவனம்:1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரால் உருவான நடிகர்கள்:தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி.

இவரால் வந்த நடிகைகள்: ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.

புதுமுக நடிகர்கள் படம்:அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம் ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.

பிறமொழி நடிகர்கள்:பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (கல்கி) ஆகியோர் அடங்குவர்.

செஞ்சுரி:இதுவரை 101 படங்கள் இயக்கியுள்ளார். முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு...:எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

நடிகராக அவதாரம்:கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

ரஜினிக்கு பிடித்த படம்:பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.

நிறைவேறாத கனவு:தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே.

யாருக்கு அதிக வாய்ப்பு:* தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

* சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார்.

* சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.

* பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம் நிழல் நிஜமாகிறது.

* துவக்க காலத்தில் நாடக பாணியிலான திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தனது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இதன் பின் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை சிறந்த வெற்றியை பெற்றன.


* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.

* பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.

* பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

* ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார்.

இந்தி படங்கள்:ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.

நான்கு மொழி:தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.

டிவி தொடர்கள்:தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.

8 தேசிய விருது:இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.

விருதுகள்:1968 - 1993 - தமிழக அரசு விருது

1973ல் - கலைமாமணி விருது

1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)

1976 - 1982 - நந்தி விருது

1981ல் - பிலிம்பேர் விருது

1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

1992ல் - அறிஞர் அண்ணா விருது

2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'

2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.

கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலைகழகங்கள்

 மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்.

நன்றி
தமிழ் நண்பர்கள்

Saturday, June 14, 2014

பணம் அங்கு இல்லை தேவை அன்பு எனும் அச்சு !


தேவை அன்பு எனும் அச்சு !

வாழ்க்கை  சக்கிரத்திற்குத் தேவை
அன்பு என்ற  அச்சு !

குடும்பத்திற்க்குத்  தேவை ,
ஒற்றுமை என்ற மூச்சு !

திருமணப்பெண்ணிற்குத் தேவை ,
கணவனின்  உண்மையான அன்பு !

நற்பெயர் எடுக்கத்த தேவை 
அரவணைத்துப்போகும்  பண்பு !


கணவனின்  மகிழ்ச்சிக்குத் தேவை .
மனதைப் புரிந்துக்கொள்ளும் தாரம்..

இன்றையத் தலைமுறைக்குத் தேவை,
பணிவு என்ற போர்வை !

புத்திசாலிப் பாவைக்குத் தேவை ,
அடக்கத்துடன்  கருணைப் பார்வை !

புகுந்த வீட்டில் போகும் பெண்ணிற்கு
தாயாக  மாறும்  மாமியார் தேவை !.

மருமகளாக  நுழையும் பெண்ணிற்கு
மகளாகும்   மாற்றம்   தேவை !

காதலன்  காதலிக்கு தேவை மனப்பொருத்தம்
கண்ணோடு கண் பேச ஓடிப்போகும் வருத்தம் ,

கணவனை இழந்தத் தாயிற்கு
தேவை மகனின் அன்பு எனும்ஆதரவு ! 

வயதான மூத்தோருக்குத் தேவை
பேரன் பேத்திகளின் அன்புக்கூட்டம்!

பணம் அங்கு இல்லை தேவை
பாசம் என்பதே அங்குத் தேவை!.

Monday, July 22, 2013

நேர்காணலை எதிர் கொள்ளும் போது செய்யக்கூடாத விஷயங்கள்



வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றி கரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.
இவ்வாறான கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த நிலையான நேர்காணலை எதிர் கொள்ளும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் சில தவறுகளை செய்ய நேர்ந்தால் அது நமது பணிவாய்ப்பை பாதித்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் எந்த முக்கிய தவறுகளை செய்யக்கூடாது என்பதை தருவதே இந்த படைப்பின் நோக்கம்.
1. போதுமான தயாரிப்பின்மை: பணி வாய்ப்பாளர்களால் பெரிதும் வெறுக்கப்படும் தவறு இதுதான். ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் தங்களிடம் நேர்காணலை எதிர்கொண்டு வேலை தேடி வரும் ஒவ்வொருவரும் போது மான தயாரிப்புகளுடன் தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவே முனை கிறார்கள். அதனால் வேலை தேடுபவர்கள் இதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர வேண்டும். உங்கள் பணியின் தன்மை, பணி வாய்ப்பாளர் பற்றிய விபரங்கள், எதிர்பார்க் கப்படும் கேள்விகளுக்கான தயாரிப்புகள் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
2. தாமதமாக செல்லுதல்: ஒரு நேர் காணலுக்கு தாமதமாக வருவது பணி வாய்ப்பாளரால் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கப்படும். நமது தாமதத்திற்கு என்னதான் காரணங்களை கூறி நியாயப்படுத்த நாம் முயன்றாலும், அது நமது பணி வாய்ப்பை பாதிக்கும். எனவே நேர்காணலுக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்.
3. பொருத்தமற்ற உடை அணிதல்: ஒரு நேர்காணல் அறைக்குள் நாம் நுழையும் போது நம்மைப்பற்றிய முதல் பதிவை நமது ஆடைகளே செய்கின்றன என்பதை கவனத்தில் வைக்கவும். இதன் பின்னரே நமது திறமை, தகவல் பரிமாற்றத்திறன் போன்ற இதர விஷயங்கள் உள்ளன. அதனால் உங்களுக்கு மன நிறைவைத் தரும் பொருத்தமான உடைகளை மட்டுமே அணியவும்.
4. உங்கள் ஊதியத்தைப் பற்றி பேசத் தயங்காதீர்கள்: இன்றைய வேலை தேடுபவர் களில் பலரும் தங்கள் ஊதியம் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். அதே போல் இது தொடர் பான கேள்விகள் உங்களிடம் எழுப்பப்பட்டால் அவற்றுக்கு எப்படி பதில் சொல்வது என்பதிலும் போதுமான தயாரிப்புகள் கட்டாயம் தேவைப் படும். நாம் பதில் தேடும் தொழில் அரங்கில் நடப்பில் உள்ள ஊதிய விகிதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடியான பதில்களைத் தருவது நல்ல பயன் தரும்.

மருத்துவர்கள் தினம் ஜுலை 1




மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் இறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தி யாவில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவர் பி.சி.ராய் (பிதான் சந்திர ராய்), பீகாரில் உள்ள பான்கிபூரில் 1888ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர். மருத்துவ படிப்பை முடித்து விட்டு, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2ஆவது முதல்வராக பதவி வகித்தார்.

1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண் டுகள் காங்கிரஸ் முதல்வராக தொடர்ந்து இருந்தார். பி.சி.ராய் சுதந்திர போராட்ட வீரராக மட்டும் இல்லாமல், சிறந்த மருத்து வராகவும் சேவை புரிந்துள்ளார். ஏழை,எளிய மக்களுக்காக பல மருத் துவமனைகளை தொடங்கினார்.

பி.சி.ராய் முதல்வராக இருந்த போதும், எழை,எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என்று பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார். இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப் படுகிறது. பி.சி.ராய் தனது 80ஆவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி இறந்தார்.

அவரது நினைவாகவே அந்த நாளை மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கடைபிடிக்கிறோம்.

கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் வெடித்து எண்ணெய் சிதறும் ஏன்?



கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் பலத்த சத்தத்துடன் வெடித்து எண்ணெய் சிதறும். அதே நேரத்தில் கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இது ஏன்? எண்ணெய் கொதிக்கும் போது அதன் வெப்பம் 150 டிகிரி சென்டி கிரேடுக்கும் அதிகமாக இருக்கும். தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி சென்டிகிரேடு தான்.

இதனால் தான் கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் துளி பட்டதும் அதன் வெப்பம் அதிகரித்து உடனடியாக ஆவியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது தண்ணீர் சூடாகி ஆவியாவது ஆயிரம் மடங்கு வேகத்தில் நடைபெறுகிறது. இந்த திடீர் மாற்றம் காரணமாக கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் பட்டதும் அது சிதறி வெடிக்கிறது. இதற்கு காரணம் தண்ணீரின் கொதிநிலையை விட எண்ணையின் கொதிநிலை அதிகம்.

இதனால் தண்ணீரில் படும் எண்ணெய் மிக விரைவாக ஆவியாவது இல்லை. எனவே தான் தண்ணீரில் எண்ணெய் கொட்டினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.

Thursday, May 9, 2013

காந்திஜி


காந்திஜியைப் பற்றி அனைவரும் பெரிய அளவில் எழுதி விட்டார்கள். அவருடைய சுயசரிதை போதும் அவரைப் பற்றி சொல்வதற்கு, இன்றும் சுயசரிதைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது காந்தியுடைய சுய சரிதை (சத்திய சோதனை) தான். பெயரே பாருங்கள் சத்திய சோதனை. அதுவும் அவரே கைப்பட எழுதியது அதை படிக்குபோது சில சமயங்களில் மெய் சிலிர்க்கும் என்பார்களே அதை அனுபவிக்கலாம்.

எல்லோரும் அவரை மகாத்மா என்கின்றனரே ஏன்? -  ஒரு சின்ன நிகழ்ச்சி,

காந்திஜி ஒரு சமயம் ரயில் வண்டியில் ஏறும் சமயம் அவர் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்து விட்டது. அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா தன்னுடைய மற்றொரு காலின் செருப்பை கழற்றி அந்த தண்டவாளங்களுக்கிடையே வீசிவிட்டார். அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு இந்த வண்டி புறப்பட்டவுடன் இங்கே இருக்கும் செருப்பை எடுத்து செல்பவன் எப்படி பயன்படுத்துவான் அவன் உபயோகபடுத்த மற்றொரு செருப்பு தேவையல்லவா அதனால் தான் மற்றொரு செருப்பை வீசினேன் என்றார். அதாவது அந்த சமயத்திலும் அவரின் சமயோசித செயல் வியப்புக்குரியதே.

அதே போன்று காந்திஜி அவர்கள் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அங்கிருந்த ஏழை விவசாயிகள் ஒரேயொரு துண்டினை மட்டும் கட்டி வேலை செய்வதை கண்டவுடன் நமது நாட்டில் இவ்வளவு பேர் மேல்சட்டையில்லாமல் இருக்கிறார்கள் நான் மட்டும் எதற்கு இப்படி மேலாடை தரிக்க வேண்டும் என்று மேலாடையை உதறித் தள்ளினார், ஆனால் இதே காந்திஜி இங்கிலாந்தில் வக்கீலாக வேலை பார்க்குபோது பட்டுத் தொப்பி கணுக்கால் உறை (பேன்ட்) தரித்து கையில் ஒரு பிரம்பும் வைத்து இளவரசனாகவே இருந்து வந்தார். அவர் தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக இருக்கும்போது ஆண்டுக்கு 15000 டாலர் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால்  அதையெல்லாம் விட்டு நம் நாடு இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது அது சுதந்திரமடைவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இந்தியா வந்து சத்தியகிரகம் என்ற உயர்ந்த ஆயுதத்தை கையில் எடுத்து சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தையே ஒரு ஆட்டம் காட்டி அவர்களை இங்கிருந்து ஓட்டி நாமெல்லாம் இவ்வாறு நடக்கவேண்டும் என்று நம்மை வழி நடத்திசென்ற அந்த ஆத்மாவை மகாத்மா என்று கூறுவது நியாயந்தானே.