Total Pageviews

Tuesday, December 23, 2014

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு 1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார்.


வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன.


தயாரிப்பு நிறுவனம்:1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரால் உருவான நடிகர்கள்:தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி.

இவரால் வந்த நடிகைகள்: ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.

புதுமுக நடிகர்கள் படம்:அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம் ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.

பிறமொழி நடிகர்கள்:பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (கல்கி) ஆகியோர் அடங்குவர்.

செஞ்சுரி:இதுவரை 101 படங்கள் இயக்கியுள்ளார். முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு...:எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

நடிகராக அவதாரம்:கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

ரஜினிக்கு பிடித்த படம்:பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.

நிறைவேறாத கனவு:தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே.

யாருக்கு அதிக வாய்ப்பு:* தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

* சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார்.

* சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.

* பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம் நிழல் நிஜமாகிறது.

* துவக்க காலத்தில் நாடக பாணியிலான திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தனது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இதன் பின் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை சிறந்த வெற்றியை பெற்றன.


* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.

* பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.

* பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

* ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார்.

இந்தி படங்கள்:ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.

நான்கு மொழி:தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.

டிவி தொடர்கள்:தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.

8 தேசிய விருது:இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.

விருதுகள்:1968 - 1993 - தமிழக அரசு விருது

1973ல் - கலைமாமணி விருது

1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)

1976 - 1982 - நந்தி விருது

1981ல் - பிலிம்பேர் விருது

1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

1992ல் - அறிஞர் அண்ணா விருது

2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'

2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.

கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலைகழகங்கள்

 மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்.

நன்றி
தமிழ் நண்பர்கள்

Saturday, June 14, 2014

பணம் அங்கு இல்லை தேவை அன்பு எனும் அச்சு !


தேவை அன்பு எனும் அச்சு !

வாழ்க்கை  சக்கிரத்திற்குத் தேவை
அன்பு என்ற  அச்சு !

குடும்பத்திற்க்குத்  தேவை ,
ஒற்றுமை என்ற மூச்சு !

திருமணப்பெண்ணிற்குத் தேவை ,
கணவனின்  உண்மையான அன்பு !

நற்பெயர் எடுக்கத்த தேவை 
அரவணைத்துப்போகும்  பண்பு !


கணவனின்  மகிழ்ச்சிக்குத் தேவை .
மனதைப் புரிந்துக்கொள்ளும் தாரம்..

இன்றையத் தலைமுறைக்குத் தேவை,
பணிவு என்ற போர்வை !

புத்திசாலிப் பாவைக்குத் தேவை ,
அடக்கத்துடன்  கருணைப் பார்வை !

புகுந்த வீட்டில் போகும் பெண்ணிற்கு
தாயாக  மாறும்  மாமியார் தேவை !.

மருமகளாக  நுழையும் பெண்ணிற்கு
மகளாகும்   மாற்றம்   தேவை !

காதலன்  காதலிக்கு தேவை மனப்பொருத்தம்
கண்ணோடு கண் பேச ஓடிப்போகும் வருத்தம் ,

கணவனை இழந்தத் தாயிற்கு
தேவை மகனின் அன்பு எனும்ஆதரவு ! 

வயதான மூத்தோருக்குத் தேவை
பேரன் பேத்திகளின் அன்புக்கூட்டம்!

பணம் அங்கு இல்லை தேவை
பாசம் என்பதே அங்குத் தேவை!.

Monday, July 22, 2013

நேர்காணலை எதிர் கொள்ளும் போது செய்யக்கூடாத விஷயங்கள்



வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றி கரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.
இவ்வாறான கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த நிலையான நேர்காணலை எதிர் கொள்ளும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் சில தவறுகளை செய்ய நேர்ந்தால் அது நமது பணிவாய்ப்பை பாதித்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் எந்த முக்கிய தவறுகளை செய்யக்கூடாது என்பதை தருவதே இந்த படைப்பின் நோக்கம்.
1. போதுமான தயாரிப்பின்மை: பணி வாய்ப்பாளர்களால் பெரிதும் வெறுக்கப்படும் தவறு இதுதான். ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் தங்களிடம் நேர்காணலை எதிர்கொண்டு வேலை தேடி வரும் ஒவ்வொருவரும் போது மான தயாரிப்புகளுடன் தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவே முனை கிறார்கள். அதனால் வேலை தேடுபவர்கள் இதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர வேண்டும். உங்கள் பணியின் தன்மை, பணி வாய்ப்பாளர் பற்றிய விபரங்கள், எதிர்பார்க் கப்படும் கேள்விகளுக்கான தயாரிப்புகள் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
2. தாமதமாக செல்லுதல்: ஒரு நேர் காணலுக்கு தாமதமாக வருவது பணி வாய்ப்பாளரால் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கப்படும். நமது தாமதத்திற்கு என்னதான் காரணங்களை கூறி நியாயப்படுத்த நாம் முயன்றாலும், அது நமது பணி வாய்ப்பை பாதிக்கும். எனவே நேர்காணலுக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்.
3. பொருத்தமற்ற உடை அணிதல்: ஒரு நேர்காணல் அறைக்குள் நாம் நுழையும் போது நம்மைப்பற்றிய முதல் பதிவை நமது ஆடைகளே செய்கின்றன என்பதை கவனத்தில் வைக்கவும். இதன் பின்னரே நமது திறமை, தகவல் பரிமாற்றத்திறன் போன்ற இதர விஷயங்கள் உள்ளன. அதனால் உங்களுக்கு மன நிறைவைத் தரும் பொருத்தமான உடைகளை மட்டுமே அணியவும்.
4. உங்கள் ஊதியத்தைப் பற்றி பேசத் தயங்காதீர்கள்: இன்றைய வேலை தேடுபவர் களில் பலரும் தங்கள் ஊதியம் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். அதே போல் இது தொடர் பான கேள்விகள் உங்களிடம் எழுப்பப்பட்டால் அவற்றுக்கு எப்படி பதில் சொல்வது என்பதிலும் போதுமான தயாரிப்புகள் கட்டாயம் தேவைப் படும். நாம் பதில் தேடும் தொழில் அரங்கில் நடப்பில் உள்ள ஊதிய விகிதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடியான பதில்களைத் தருவது நல்ல பயன் தரும்.

மருத்துவர்கள் தினம் ஜுலை 1




மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் இறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தி யாவில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவர் பி.சி.ராய் (பிதான் சந்திர ராய்), பீகாரில் உள்ள பான்கிபூரில் 1888ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர். மருத்துவ படிப்பை முடித்து விட்டு, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2ஆவது முதல்வராக பதவி வகித்தார்.

1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண் டுகள் காங்கிரஸ் முதல்வராக தொடர்ந்து இருந்தார். பி.சி.ராய் சுதந்திர போராட்ட வீரராக மட்டும் இல்லாமல், சிறந்த மருத்து வராகவும் சேவை புரிந்துள்ளார். ஏழை,எளிய மக்களுக்காக பல மருத் துவமனைகளை தொடங்கினார்.

பி.சி.ராய் முதல்வராக இருந்த போதும், எழை,எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என்று பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார். இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப் படுகிறது. பி.சி.ராய் தனது 80ஆவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி இறந்தார்.

அவரது நினைவாகவே அந்த நாளை மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கடைபிடிக்கிறோம்.

கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் வெடித்து எண்ணெய் சிதறும் ஏன்?



கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் பலத்த சத்தத்துடன் வெடித்து எண்ணெய் சிதறும். அதே நேரத்தில் கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இது ஏன்? எண்ணெய் கொதிக்கும் போது அதன் வெப்பம் 150 டிகிரி சென்டி கிரேடுக்கும் அதிகமாக இருக்கும். தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி சென்டிகிரேடு தான்.

இதனால் தான் கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் துளி பட்டதும் அதன் வெப்பம் அதிகரித்து உடனடியாக ஆவியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது தண்ணீர் சூடாகி ஆவியாவது ஆயிரம் மடங்கு வேகத்தில் நடைபெறுகிறது. இந்த திடீர் மாற்றம் காரணமாக கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் பட்டதும் அது சிதறி வெடிக்கிறது. இதற்கு காரணம் தண்ணீரின் கொதிநிலையை விட எண்ணையின் கொதிநிலை அதிகம்.

இதனால் தண்ணீரில் படும் எண்ணெய் மிக விரைவாக ஆவியாவது இல்லை. எனவே தான் தண்ணீரில் எண்ணெய் கொட்டினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.

Thursday, May 9, 2013

காந்திஜி


காந்திஜியைப் பற்றி அனைவரும் பெரிய அளவில் எழுதி விட்டார்கள். அவருடைய சுயசரிதை போதும் அவரைப் பற்றி சொல்வதற்கு, இன்றும் சுயசரிதைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது காந்தியுடைய சுய சரிதை (சத்திய சோதனை) தான். பெயரே பாருங்கள் சத்திய சோதனை. அதுவும் அவரே கைப்பட எழுதியது அதை படிக்குபோது சில சமயங்களில் மெய் சிலிர்க்கும் என்பார்களே அதை அனுபவிக்கலாம்.

எல்லோரும் அவரை மகாத்மா என்கின்றனரே ஏன்? -  ஒரு சின்ன நிகழ்ச்சி,

காந்திஜி ஒரு சமயம் ரயில் வண்டியில் ஏறும் சமயம் அவர் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்து விட்டது. அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா தன்னுடைய மற்றொரு காலின் செருப்பை கழற்றி அந்த தண்டவாளங்களுக்கிடையே வீசிவிட்டார். அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு இந்த வண்டி புறப்பட்டவுடன் இங்கே இருக்கும் செருப்பை எடுத்து செல்பவன் எப்படி பயன்படுத்துவான் அவன் உபயோகபடுத்த மற்றொரு செருப்பு தேவையல்லவா அதனால் தான் மற்றொரு செருப்பை வீசினேன் என்றார். அதாவது அந்த சமயத்திலும் அவரின் சமயோசித செயல் வியப்புக்குரியதே.

அதே போன்று காந்திஜி அவர்கள் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அங்கிருந்த ஏழை விவசாயிகள் ஒரேயொரு துண்டினை மட்டும் கட்டி வேலை செய்வதை கண்டவுடன் நமது நாட்டில் இவ்வளவு பேர் மேல்சட்டையில்லாமல் இருக்கிறார்கள் நான் மட்டும் எதற்கு இப்படி மேலாடை தரிக்க வேண்டும் என்று மேலாடையை உதறித் தள்ளினார், ஆனால் இதே காந்திஜி இங்கிலாந்தில் வக்கீலாக வேலை பார்க்குபோது பட்டுத் தொப்பி கணுக்கால் உறை (பேன்ட்) தரித்து கையில் ஒரு பிரம்பும் வைத்து இளவரசனாகவே இருந்து வந்தார். அவர் தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக இருக்கும்போது ஆண்டுக்கு 15000 டாலர் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால்  அதையெல்லாம் விட்டு நம் நாடு இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது அது சுதந்திரமடைவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இந்தியா வந்து சத்தியகிரகம் என்ற உயர்ந்த ஆயுதத்தை கையில் எடுத்து சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தையே ஒரு ஆட்டம் காட்டி அவர்களை இங்கிருந்து ஓட்டி நாமெல்லாம் இவ்வாறு நடக்கவேண்டும் என்று நம்மை வழி நடத்திசென்ற அந்த ஆத்மாவை மகாத்மா என்று கூறுவது நியாயந்தானே.

Tuesday, April 23, 2013

பூம்புகார் – தமிழ்ப் பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்





சுமார் 11 500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் பூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1,800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்ட பூம்புகார் நகரின் அழகிய தோற்றத்தை, புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன், பிரமாண்ட ஓவியமாகத் தீட்டி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்.  "டிரை பேஸ்டல்' எனும் வண்ணக் கட்டிடங்களை கொண்டு, 12 அடி நீளம், 6 அடி அகலமுள்ள காகிதத்தில், இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில், பூம்புகாரின் அன்றைய காட்சிகளை இலக்கிய நயத்தோடு மிகப்பெரிய ஓவியமாகத் தீட்டியுள்ளார்.

பூம்புகார் நகரின் பிரதான வீதி, வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள் உள்ளிட்டவை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.மேலும், சாலையோர கடைகளும், கடலில் நங்கூரமிட்டுள்ள வர்த்தக கப்பல்களும், பரபரப்பான பண்டக சாலைகள் என ஓவியக் காட்சிகள் நீள்கிறது. ஓவியத்தின் இடதுபுறம் சோழ மன்னரின் யானையும், அருகில் பாதுகாப்புக்காக அரேபிய குதிரையில் யவன வீரர் செல்லும் காட்சியும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நெடிய அகன்ற வீதியில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறு தேசத்தவர்கள் தமிழர்களுடன் நடந்து செல்வதும், அறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்த சதுக்க பூதம் (நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது) என, பூம்புகாரின் எழிலான காட்சிகளை ராஜராஜனின் ஓவியம் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கு, "டிரை பேஸ்டல்' ஓவியம் தீட்டும் நுட்பத்தையும், இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கும் முறையைக் கற்பிற்கும் நோக்கிலும் இந்த பூம்புகார் நகர ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மூன்றாமாண்டு ஓவிய பட்டப்படிப்பு வகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.

பூம்புகாரை கலைக் கண்களோடும் வரலாற்றுப் பார்வையோடும் காணச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு, ஒரு நாள் மாலைப்பொழுது இனிமையானதாக அமையும்.

நாகப்பட்டணம் மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ளது பூம்புகார். சீர்காழியிலிருந்து 21 கி.மீ. தூரம். மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ. தூரம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பூம்புகாருக்கு வரலாம். காரில் வருபவர்களுக்கு பயணம் மேலும் வசதியாக இருக்கும்.

மாலை 4 மணியளவில் பூம்புகாருக்கு வந்தால் கலைக்கூடம் உள்ளிட்ட ஒவ்வொரு கட்டடத்தையும் ரசித்துவிட்டு, 6 மணியளவில் கடற்கரைக்கு வரலாம். அந்தி சாயும் பொழுதை கடல்காற்றுடனும் அலைகளுடனும் கழித்துவிட்டு உற்சாக மனநிலையுடன் திரும்பலாம்.

பூம்புகாருக்கு அருகே தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மயிலாடுதுறை நகரத்தில் தங்குவதற்கு பல ஹோட்டல்கள் உள்ளன.

மழையும் வெயிலும் அதிகமில்லாத ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணிப்பது சிறப்பு.

கடல் கொண்ட நிலப்பகுதிகளால் தமிழகம் இழந்தவை ஏராளம்.

1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாளன்று வீசிய புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகால 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால்  ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான வர்கள் பலியாயினர். சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்பவர்கள் தனுஷ்கோடி வரை போட்மெயில் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குச் செல்வது அன்றைய வழக்கம். அந்த போட்மெயில் எக்ஸ் பிரஸையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது, அந்த ஆழிப்பேரலை.  கடல் கொண்ட தனுஷ்கோடியில் இன்று எஞ்சியிருப்பது, சிதிலமடைந்த ஒருதேவாலயமும் சிலகட்டிடங் களும் மட்டுமே.

புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகம் கண்ட ஆழிப்பேரலையை அறிவோம். 26-12-2006-ல் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் தொடங்கி, அந்தமான்-நிகோபர் தீவுகளின் இந்திரா முனை வழியாக தமிழகக் கடற்கரையைத் தாக்கிய அந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தின் 1000 கி.மீ. நீள கடலோரப்பகுதிகளில் பெரும்பாலானவை பெரும் பாதிப்புக்குள்ளாயின. ராமேஸ்வரம், திருச்செந்தூரைத் தவிர மற்ற கடலோரப் பகுதிகளில் பெரும் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டன.  பல மீனவ கிராமங்கள்  மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகளற்றுப் போயின. தமிழகத்தின் கடல் எல்லைகள்  இயற்கையின் கரங்களால் திருத்தியமைக்கப்பட்டன.

இப்படித் திருத்தியமைக்கப்படுவது நெடுங்கால மாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில பகுதிகள் கடலுக்குள் சென்றதுபோல, சில பகுதிகள் கடலிலிருந்து வெகுதூரம் சென்றிருப் பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்னை கடற்கரையின் மணற்பகுதி கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்திருப்பதாக நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு கடலோரமாக இருந்த சீர்காழி தற்போது கடற்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் உள்ளடங்கியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியின் ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலிருந்து சத்தியவேடுவரை காணப்படும் கடலால் உரு வாக்கப்பட்ட மணல் திட்டுகளும், நேராகப் பாயும் பாலாற்றில் செங்கல்பட்டுக்கு அருகே காணப் படும் திடீர் வளைவும், கடலைச் சந்திக் காமல் திருவெண்ணைநல்லூர் அருகே புதையுறும் மலட்டாறும், வேதாரண்யத் திலிருந்து திருத்துறைப்பூண்டிவரை காணப்படும் மணல் திட்டுகளும், வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்களும் இங் கெல்லாம் ஒருகாலத்தில் கடல் இருந்தது  என்பதைக் காட்டுவனவாக இருக்கின்றன என்கிறது, ஆய்வு முடிவு.

சுமார் 65ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் தாழ்ந்ததால் தமிழகமும், இலங்கையும் ஒரே நிலப்பரப்பாகச் சேர்ந்திருந்தன என்றும், சுமார் 27ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும், தமிழகமும் பிரிந்தன என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 17ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இதேபோல கடல் மட்டும் தாழ்ந்தும், உயர்ந்தும் மாறுபாடுகளை உருவாக்கியதால் தமிழக-இலங்கை நிலப்பரப்பு சேர்ந்து-பிரிய வேண்டிய சூழல் மறுபடியும் ஏற்பட்டது, என்கின்றனர்.  இப்படி இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. இராமர் இலங்கைக்குச் செல்ல, அனுமன் கட்டிய பாலம் என்று சொல்லப் படுவது இந்த மணல் திட்டுகளைத்தான்.

புவி அமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அண்டார்டிகா-க்ரீன்லாந்து-ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்தால், தாழ்வான கடற்கரையைக் கொண்டி ருக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பல மூழ்கடிக்கப்படுமாம். இந்த எச்சரிக்கை,  தமிழகத் தின் கடலோர வரைபடம்- இயற்கையின் கைகளால் மீண்டும் திருத்தியமைக்கப்படும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வொரு கடற்கோளும் மண்ணோடு சேர்த்து பண்பாட்டு-வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் தமிழகம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குள்ளாகிறது. இயற்கையைச் சிதைக்காமல் வாழும் கலையையும் கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியையும் கைக்கொண்டால், முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் காப்பாற்றலாம்.

பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியதென்றும், இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது என்றும், மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது என்றும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதல்-இடைச் சங்கங்களை வளர்த்த தென்மதுரையும், கபாடபுரமும் கடலுக்கு இரையானதால் தமிழின் தொன்மையான நூல்கள் பல அழிந்து போயின. மருத்துவம், வானியல், கணிதம், அறநெறி என ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்களை கடல்தாய் தன்னகத்தே கைப்பற்றிக்கொள்ள, நிலத்தோடு சேர்த்து பல சிந்தனை வளங்களின் குவியலையும் இழந்தாள், தமிழ்த்தாய். இன்று தமிழர்களிடம் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் கடைச்சங்கம் அமைந்திருந்த இன்றைய மதுரையிலிருந்தும் சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களுமேயாகும் என்கின்றனர், புலவர் பெருமக்கள்.

அன்றைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள், காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி  போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார். சோழர்களின் ஆட்சிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந் நகரத்தைப் பற்றி சிலப்பதிகாரம்,  பட்டினப்பாலை, மணி மேகலை ஆகிய நூல்கள் விவரித்துக் கூறுகின்றன. பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்ட நகரத்தில் சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் என பூம்புகார் நகரத்தின் எழிலை விளக்கும் பட்டினப்பாலை- அந்த எழிலை கடற் கரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. கிரேக்கத் திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் வருகைதரும் வணிகர்களோடு கடல்வாணிபம் நடத்தும் சிறப்பைப் பெற்றிருந்திருக்கிறது அன்றைய பூம்புகார்.

நான்காம் கடற்கோளில் பூம்புகார் நகரத்தை கடல்கொண்டதை கிரகாம் குக் என்ற ஆய்வாளர் வீடியோ படமாகவே எடுத்திருக்கிறார். மொழி ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் இப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்பதை கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ படங்கள் நிரூபிக்கின்றன. மீனவர்களின் உதவியுடன் இந்திய நிலவியல் வல்லுநர்களால் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் இருப்பதும் மண் மற்றும் கல்லால் செய்யப்பட்ட கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர்கள், முற்றங்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், பெரிய குதிரைவடிவ பொம்மைகள் ஆகியவை படம் பிடிக்கப்பட்டுள்ளன என்று கிரகாம் குக் தெரிவிக்கிறார். கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வல்லுநர்களுக்கு கிரகாம் குக்கின் வீடியோ படம் புதிய அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத் திருக்கிறது.

தமிழர்களின் நாகரிக சிறப்பின் அடையாளமாக விளங்கிய பூம்புகாரை மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில், தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1973-ல் தற்போதைய பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டை யும் விளக்கும் நினைவுச் சின்னங்களை உரு வாக்கினார். எழு நிலை மாடம், நெடுங்கல் மன்றம், மகர தோரணவாயில், இலஞ்சி மன்றம், கொற்றப்பந்தல், பாவை மன்றம் என இலக்கி யங்கள் காட்டும் பூம்புகாரை சிற்பி கணபதி ஸ்தபதியின் துணையுடன் அமைத்தார். பண்பாட்டு- நாகரிகச் சின்னமாக  பூம்புகார் கலைக் கூடம் விளங்குகிறது. முதல்வர் கலைஞரின் பெருமுயற்சி, இன்றைய தலை முறையினருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத்தைப் புரிய வைக்கிறது. அதேவேளையில், கடலில் மூழ்கிய பூம்புகார் குறித்து மேலும் பல கடலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால்; மேலும் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும்.