
காமெடி எனக்கு வராது.. மீசையையும் எடுக்க மாட்டேன்!! ரஜினியையே மாற்றிய பாலச்சந்தர்!
ரஜினிகாந்த் என்றாலே இன்று ஆக்ஷன், ஸ்டைல் மட்டுமல்லாமல் அவரது காமெடி காட்சிகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஆனால் ஒரு காலத்தில்,
‘என்னால் முழுக்க முழுக்க காமெடி படத்தில் நடிக்க முடியுமா?’
என்ற சந்தேகம் ரஜினிக்கே இருந்திருக்கிறது.
அந்த சந்தேகத்தை உடைத்து, ரஜினிக்குள் இருந்த காமெடி நடிகரை ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம்தான் ‘தில்லு முல்லு’.
1981ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘தில்லு முல்லு’, 1979ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘கோல் மால்’ திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கம்.
அந்த காலகட்டத்தில் ரஜினி என்றாலே ரசிகர்களுக்கு கோபம், வேகம், சண்டை, ஸ்டைல், வில்லத்தனமான சிரிப்பு போன்ற ஒரு குறிப்பிட்ட பிம்பம் இருந்தது.
அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர் அவரது குருவான கே.பாலச்சந்தர்.
ரஜினியை வைத்து முழுநீள நகைச்சுவைப் படம் எடுக்க முடிவு செய்தார்.
ஆனால் கதையை கேட்ட ரஜினிக்கே முதலில் தயக்கம் ஏற்பட்டது.
அதுவரை முழுமையான நகைச்சுவை கதையில் நடித்த அனுபவம் இல்லாததால்,
‘நான் எப்படி காமெடி செய்வேன்? இதற்கு நாகேஷ் மாதிரி ஒரு காமெடி நடிகரை வைத்துக்கொள்ளலாமே’
என்ற ரீதியில் பாலச்சந்தரிடம் ரஜினி கூறியதாக படத்தின் தயாரிப்பு தொடர்பான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பாலச்சந்தர் அதை ஏற்கவில்லை.
அவருக்கு ஒரு காமெடி நடிகரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல.
அதுவரை ஆக்ஷன் நடிகராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு ஹீரோவை வைத்து காமெடி செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணம்.
‘நீ நடி... நான் பார்த்துக்கொள்கிறேன்’
என்ற நம்பிக்கையை ரஜினிக்கு கொடுத்து படத்தில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர்.
இதற்கிடையே இன்னொரு விஷயத்திலும் ரஜினிக்கு தயக்கம் ஏற்பட்டது.
அது அவரது மீசை.
அந்த காலகட்டத்தில் ரஜினியின் முகத்தோற்றத்தில் மீசையும் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது.
ஆனால் ‘தில்லு முல்லு’ கதையில் சந்திரன் மற்றும் அவர் உருவாக்கும் கற்பனையான இரட்டை சகோதரன் இந்திரன் ஆகிய இருவருக்கும் வித்தியாசம் காட்ட வேண்டியிருந்தது.
சந்திரனுக்கு மீசை இருக்கும்.
இந்திரனுக்கு மீசை இருக்காது.
இதனால் படத்திற்காக தனது மீசையை முழுமையாக எடுக்க வேண்டும் என்று ரஜினியிடம் பாலச்சந்தர் கூறினார்.
அதற்கும் ரஜினி முதலில் தயங்கியிருக்கிறார்.
அதுவரை ரசிகர்கள் பார்த்து பழகிய தனது தோற்றத்தை மாற்றினால் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விஷயத்திலும் பாலச்சந்தர் விடவில்லை.
இறுதியில் தனது குருவின் பேச்சைக் கேட்டு ரஜினி மீசையை எடுத்தார்.
ரஜினிகாந்த் மீசையில்லாமல் திரையில் தோன்றிய முதல் திரைப்படமாகவும் ‘தில்லு முல்லு’ அமைந்தது.
படத்தின் கதை மிகவும் எளிமையானது.
வேலை தேடும் சந்திரன், தேங்காய் சீனிவாசன் நடித்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியிடம் வேலைக்கு சேர்கிறார்.
அவரது முதலாளி மிகவும் கண்டிப்பானவர்.
வேலைக்கு சேர்ந்த பிறகு ஒரு நாள் விடுமுறை பெறுவதற்காக தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லிவிட்டு சந்திரன் கால்பந்து போட்டி பார்க்க செல்கிறார்.
ஆனால் அதே இடத்தில் முதலாளியும் இருப்பார்.
அவரிடம் மாட்டிக் கொண்ட சந்திரன், தான் அங்கு வரவே இல்லை என்றும், முதலாளி பார்த்தது தனது இரட்டை சகோதரன் இந்திரன் என்றும் இன்னொரு பொய்யை சொல்கிறார்.
அந்த ஒரு பொய்யை காப்பாற்றுவதற்காக மீசையுடன் சந்திரனாகவும், மீசையில்லாமல் இந்திரனாகவும் மாறி மாறி நடிக்க வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படும்.
அதன் பிறகு நடக்கும் குழப்பங்கள்தான் படம் முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையாக தேங்காய் சீனிவாசனின் நடிப்பும் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
குறிப்பாக சந்திரன் - இந்திரன் குழப்பத்தில் தேங்காய் சீனிவாசன் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
மாதவி கதாநாயகியாக நடித்திருந்தார். சௌகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
படத்தின் கிளைமாக்ஸில் கமல்ஹாசன் வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் வந்ததும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக அமைந்தது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்களும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தன.
குறிப்பாக ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
படம் 1981 மே 1ஆம் தேதி வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
அதுவரை,
‘ரஜினி என்றால் ஆக்ஷன்... ஸ்டைல்’
என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு,
‘ரஜினியால் இரண்டு மணி நேரம் முழுக்க காமெடியும் செய்ய முடியும்’
என்பதை நிரூபித்தது ‘தில்லு முல்லு’.
பின்னாளில் ரஜினியின் பல திரைப்படங்களில் நகைச்சுவை மிக முக்கியமான அம்சமாக மாறியது.
மன்னன், அண்ணாமலை, முத்து, படையப்பா என அவர் நடித்த பல படங்களில் ரஜினியின் காமெடிக்கே தனி வரவேற்பு கிடைத்தது.
ஆனால் அதற்கான மிக முக்கியமான ஆரம்பப் புள்ளிகளில் ஒன்று ‘தில்லு முல்லு’.
காமெடி செய்யவே தயங்கிய ரஜினி...
மீசையை எடுக்கவும் முதலில் தயங்கிய ரஜினி...
இந்த இரண்டு தயக்கங்களையும் உடைத்தவர் கே.பாலச்சந்தர்.
அந்த முயற்சிதான் இன்று வரை தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘தில்லு முல்லு’ திரைப்படத்தை உருவாக்கியது.
No comments:
Post a Comment