Total Pageviews

Monday, April 6, 2026

தீதும் நன்றும் பிறர் தர வாரா..,பஞ்சு அருணாசலம்!

 

பஞ்சு அருணாசலம் தன் வீட்டு பங்சன் வரவேற்பு இன்னிசை நிகழ்ச்சிக்கு சங்கர்-கணேஷ் அவர்களை அழைத்திருந்தார்!

வரவேற்பு நாளன்று சங்கர்-கணேஷ் அவர்களை எதிர் பார்த்து வாசலிலே பார்த்துக் கொண்டு இருந்தவர் கடைசியில் ஏமாந்து போனார்.

ஆம் அவர்கள் கடைசி வரை சொன்ன படி நிகழ்ச்சிக்கு வரவில்லை!

காரணம்,அவர்கள் அப்போது இசையமைப்பாளர் விஸ்வநாதன்- இராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளர்களாக இருந்தனர்.ஏற்கனவே பஞ்சு அருணாசலத்தின் மீது ஏதோ காரணத்திற்காக கோபமாக இருந்ந விஸ்வநாதன்,சங்கர்-கணேஷ் அவர்களை தடுத்து விடுகிறார்.

இந்த அவமானம் பஞ்சு அருணாசலத்திற்கு மனதில் தீராத வடுவாக பதிந்து விடுகிறது!

இசையமைப்பாளர் விஸ்வநாதனோடு தீராத கோபத்தில் இருந்த பஞ்சு அருணாசலம்,வைராக்கியதோடு பல தடைகளை கடந்து இளையராஜாவை அறிமுகப்படுத்துகிறார்!

அதன் பிறகு விஸ்வநாதன் அவர்களுக்கு இறங்கு முகமாகிறது.

0

புது புது அர்த்தங்கள் படத்தில் இசைஞானி இளையராஜா -க்கும்,பாலசந்தர் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வருகிறது.

ஏதோ ஒரு விசயத்தில் இளையராஜா பிடிவாதமாக இருந்ததால் அவர் மீதான பாலசந்தரின் கோபம்,

தன் தயாரிப்பான ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகப்படுத்துகிறார்!

அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏறுமுகம்தான்!

சிங்கார வேலன் படப்பிடிப்பில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கும் கவுண்டமணியிடம்,ஒருவர்"இந்த படத்தில் உங்களுடன் செந்தில் இல்லையா"என கேட்கிறார்!

"அதான் சிவப்பு செந்திலுடன் நடிக்கிறேனே"என கமலை சிகப்பு செந்தில் என கிண்டலடித்ததை காதில் வாங்கிய கமல்,கவுண்டமணி மீது பயங்கர கோபமாகிறார்.

இந்த கோபத்தின் வெளிப்படாக சின்ன,சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்த வடிவேலுக்கு,தனது தேவர் மகன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கிறார்.

அதன் பிறகு வடிவேலுக்கு படி படியாக ஏறுமுகம்தான்!

வாழ்வில் வெற்றியாளராக உச்சத்தில் இருக்கும்போது திடீரென சறுக்கலை ஒருவர் சந்திக்கிறார் என்றால்,அதற்கு ஏதாவது ஒரு வகையில் அவரே காரணமாக இருப்பார்.

இதைத்தான் பெரியவர்கள் இப்படி சொல்வார்கள்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர்  ுப்பிரமணியன்.

Tuesday, March 31, 2026

ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ” ! இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - பாடல் உருவான கதை...!

 

இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - பாடல் உருவான கதை...!

தமிழ் திரையிசை உலகில் சில பாடல்கள் வெறும் இசை மட்டுமல்ல, அவை உயிரோட்டத்துடன் இருப்பதோடு, கேட்பவர்களின் உணர்வுகளோடு ஒன்றி விடும். அப்படிப்பட்ட ஒரு பாடல் உருவான கதை தான் இது. இளையராஜாவின் ஸ்டுடியோவில் அன்று எல்லாம் தயாராக இருந்தது. இசைக் கலைஞர்கள் தங்கள் இடங்களில் அமர்ந்திருந்தனர். காத்திருந்தது ஒரே ஒரு குரலுக்காக மட்டுமே. அந்தக் குரல் வேறுயாருமில்லை கே.ஜே.யேசுதாஸுடையது தான். நேரம் கடந்தது. யேசுதாஸ் வரவில்லை.

நேரத்தை வீணடிக்காத இளையராஜா

"வீணாக நேரம் போகிறது, ஒரு ட்ரையல் பார்ப்போம்" என்று முடிவெடுத்த இளையராஜா, தானே அந்த பாடலை பாடி ஒலிப்பதிவு செய்தார். பிறகு வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போனதற்கு வருந்தினார் யேசுதாஸ். மறுநாள் ஸ்டுடியோவுக்கு வந்த யேசுதாஸிடம், இளையராஜா தான் முன்தினம் பாடிய ட்ரையல் பதிவை கொடுத்தார். "ஒரு முறை கேட்டுவிட்டு தயாராகுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

பாடலைக் கேட்டு கண்ணீர்விட்ட யேசுதாஸ்

பாடலை முழுமையாகக் கேட்ட யேசுதாஸின் கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டன. அவர் நேரடியாக இளையராஜாவிடம் சென்று சொன்னார், "இந்தப் பாடலை என்னால் பாட மனசு வரவில்லை. இந்த உணர்வை, இந்த ஆழத்தை என்னால் தர முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்றால், அது உங்கள் குரலில் மட்டுமே சாத்தியம்" என சொல்லி இருக்கிறார். ஆனால் இளையராஜா அவருடைய வெர்ஷனை ரெக்கார்டு செய்துவிடலாம் என காத்திருக்க, அவர் எவ்வளவு வற்புறுத்தியும் யேசுதாஸ் இணங்கவில்லை.

பாட மறுத்த யேசுதாஸ்

இப்படி ஒரு தலைசிறந்த பாடகராக இருந்தும், ஒரு பாடல் சரியான குரலில் வாழ வேண்டும் என்பதற்காக, யேசுதாஸ் தனக்கு வந்த வாய்ப்பை ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார். அன்று இளையராஜாவின் குரலில் உலகிற்கு வந்த அந்த பாடல் தான்... "ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ” பாடல். அந்த பாடல் கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த தாய் மூகாம்பிகை என்கிற படத்தில் இடம்பெற்று இருந்தது. அப்பாடலை இன்று கண்ணை மூடி கேட்டால் கூட உங்களின் கண்களில் கண்ணீர் வரும். அந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக அப்பாடலை திறம்பட பாடி இருப்பார் இளையராஜா. அதனால் தான் அது மாஸ்டர் பீஸ் பாடலாக திகழ்கிறது.

தேன் மொழி

மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?..

 

மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. நடிப்பாசையைத் தாண்டி சொந்தப்படம் எடுப்பதில் தான் அவர் சிக்கினார் ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை!

ரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வசீகரக்குரல் திடீரென நின்று போனது ஏன்? இவரது வெண்கலக் குரலில் தண்ணீ கருத்துருச்சி, ஆகாய கங்கை, ஆசை 100 வகை, கூடையிலே கருவாடு, பட்டு வண்ண சேலைக்காரி ஆகிய பாடல்கள் இன்றும் இனிப்பவை.

சந்திரபோஸ் இசையில் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு. இது ரஜினிக்கே தெரியாது. இந்தப் பாட்டை நம்ம படத்துல வைத்தால் என்னன்னு கேட்கிறார் ரஜினி. அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது இது நம்ம படத்தோட பாட்டு தான் என்று. முதலில் இந்தப் பாடலைப் படத்தில் எங்கு வைப்பது என்று சிக்கல் வந்ததாம். அதன்பிறகு தான் டைட்டிலில் வைத்தார்களாம்.

தமிழ்சினிமாவில் மலேசியா வாசுதேவனின் குரல் மாறுபட்டது. குரலில் பாவங்களைக் கொண்டுவதில் ஆற்றல் மிக்கவர் தான் அவர். முதல் மரியாதை படத்தில் அவரது பூங்காற்று திரும்புமா என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரே வரியில் உங்களைப் பாட்டோடு கலக்கச் செய்து விடுவார் அந்தப் பாடகர். அவர் ஒரு பாடலைப் பாடி விட்டார் என்றால் அது சக்சஸ் தான்.

பாரதவிலாஸ் படத்தில் தான் மலேசியா வாசுதேவன் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு வாய்ப்பு வரவே இல்லையாம். இளையராஜா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல் சம்பந்தமாக ஒரு இசை ஆல்பம் பண்ணினாராம். அதில் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். 16 வயதினிலே படத்தில் இருந்து தான் அவர் ஹிட் ஆனார். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற அந்தப் பாடல் உண்மையிலேயே சூப்பர்ஹிட். பட்டிக்காட்டுல எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிப் பயலின் உணர்ச்சிகளை குரலிலேயே கொடுத்து விடுகிறார் மலேசியா வாசுதேவன்.

எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் சம கால நண்பர்கள். கல்யாணராமன் படத்திலும் அப்பாவி, அறிவாளிக்குமான சிறுவித்தியாசத்தை மலேசியா வாசுதேவன் குரலில் கொண்டு வந்து அசத்தியிருப்பார். அதுதான் காதல் வந்திரிச்சி…பாடல். எதுக்கு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக்கூடிய குரல் அம்சம் கொண்டவர் தான் மலேசியா வாசுதேவன்.

சினிமாவிலும் வில்லத்தனத்தில் வெளுத்துக்கட்டினார். ஒரு கைதியின் டைரி படத்தில் இவரது வில்லத்தனத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவ்வளவு அருமையாக நடித்து இருப்பார். அந்த நக்கல், நய்யாண்டி, குறும்புத்தனம் எல்லாம் ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கும்.

நடிப்பாசையைத் தாண்டி சொந்தப்படம் எடுப்பதில் தான் அவர் சிக்கினார். இதில் தான் அவர் ஒரு இடத்துக்கு மேல் அவரால் பண்ண முடியவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் படங்கள் இல்லாமல் இருந்தார். அதனால் தான் அவர் பாடுவதையே நிறுத்தி விட்டார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

தேன் மொழி

பாலசந்தர் சொன்னதை தேவவாக்காக கடைபிடித்த ரஜினி...அதனால்தான் அப்படி வர்ராறா?


திரையுலகில் எப்படிப்பட்ட செல்வாக்கு உடைய நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைக்கு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். தமிழ்சினிமா உலகைப் பொருத்தவரை பல நடிகர்கள் பொது நிகழ்ச்சிக்கு வரும்போது தலையில் விக் முடியோடுதான் வருவார்கள்.

ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அதுமாதிரியான தோற்றத்தில் எந்த விழாவிலும் நீங்கள் பார்க்க முடியாது. அவர் எப்படியான தோற்றத்தில் இருக்கிறாரோ அதே மாதிரி தான் விழாக்களிலும் கலந்து கொள்வார். தலையில் வெள்ளை முடி இருந்தால் அப்படியே தான் வருவார்.

அவருடைய இந்தப் பழக்கத்திற்கு முக்கியமான காரணம் அவரது குருநாதரான கே.பாலசந்தர். அவர் ஒருமுறை ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறினார். கேமராவுக்கு முன்னாடி எவ்வளவு வேணுமானாலும் நில்லு. ஆனால் கேமராவுக்குப் பின்னாடி ஒருநாளும் நடிக்காதே என்றார்.

அந்த அறிவுரையை அப்படியே தேவவாக்காகக் கொண்டார் ரஜினிகாந்த். பொதுவிழாக்களில் தன்னோட முடியை எல்லாம் மறைத்து அதுக்கு விக் வச்சிக்கிட்டாலும் நடிக்கிறதாகத்தானே அர்த்தம். அதனால்தான் அது மாதிரி தோற்றத்தில் இல்லாமல் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே விழாக்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டார் ரஜினி.

அதே மாதிரி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் உள்ள சிறப்பம்சம் என்னன்னா அவங்க வீட்டுக்கு யார் போனாலும் சரி. எழுந்து நின்று வரவேற்பார். அவங்க வீட்டை விட்டுப் போகும்போது அவர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி. சிறியவர்களாக இருந்தாலும் சரி. வாசல் வரை வந்து வழியனுப்புவார். இதுமாதிரியான சில அபூர்வ குணங்கள் தான் தமிழ்சினிமா உலகில் அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

Friday, March 20, 2026

காஜா ஷெரீப் என்று ஒரு நடிகர் இருந்தாரே, அவர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?


  1. காஜா ஷெரீஃப் இவர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சார்ந்தவர்.
  2. இராமநாதபுரம் மாவட்டம் கமல், விக்ரம், ராஜ்கிரண் போன்ற முன்னணி கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அது போல இவரும் சினிமாவில் பேசப்பட்ட வேண்டிய கலைஞராவார்.
  3. ஏனென்றால் 80களில் இருந்து 90கள் வரை அப்போதைய விஜய் சேதுபதி போல காஜா ஷெரீஃப் நடிக்காத படங்களே இல்லை எனலாம்.
  4. துண்டு துக்கடா வேடங்கள் என்றாலும் சரி, கனமான கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, நகைச்சுவை பாத்திரங்கள் என்றாலும் சரி இவர் நடிக்க தவறியதே இல்லை.
  5. எல்லா கதாபாத்திரங்களிலும் நன்றாக நடிக்க கூடியவர் ஏனென்றால் இவர் படித்தது பாக்யராஜ் ஸ்கூலில்.
  6. ஸ்கூல் என்றால் பாக்யராஜ் சொல்லி கொடுத்த திரைப்பாடம் அதை குறிப்பிட்டேன்.
  7. பாக்யராஜின் பட்டறையில் இவர் வளர்ந்ததால் இவர் நடிப்பில் பிய்த்து உதறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
  8. இயக்குனர் பாரதிராஜா இயக்கி பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் படத்தில்தான் காஜா ஷெரிஃப் அறிமுகமானார்.
  9. தொடர்ந்து பாக்யராஜின் படங்களான சுவரில்லாத சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது மனதை கவர்ந்தார் யார் இந்த சிறுவன் இப்படி நடிக்கிறானே என ஆச்சரியப்பட வைத்தார்.
  10. குறிப்பாக அந்த ஏழு நாட்கள் படம் மிகவும் சீரியசான கதை கொண்ட படம் அந்த படத்தில் ஆஸானே ஆஸானே என படம் முழுவதும் பாக்யராஜை அழைத்து கலகலப்பூட்டி இருப்பார்.
  11. ஏடா கோபி என பாக்யராஜ் அழைப்பதும் ஆசானே என காஜா ஷெரிஃப் அழைப்பதும் இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அப்போ செம ஒர்க் அவுட் என்றுதான் சொல்ல வேண்டும்.
  12. பாக்யராஜ் ஆடையை எல்லாம் கழற்றி காஜா ஷெரிஃபை பார்த்து கொள்ள சொல்லி குளித்து கொண்டிருக்க, வெளியில் எங்கோ சாவு ஊர்வலம் தாரை தப்பட்டை அடித்து செல்ல அந்த தாரை தப்பட்டை சத்தம் கேட்டு நிர்வாணமாக குளித்து கொண்டிருந்த பாக்யராஜை விட்டு விட்டு காஜா ஷெரிஃப் டான்ஸ் ஆடிக்கொண்டே செல்ல பாக்யராஜ் டிரஸ் இல்லாமல் செய்வதறியாது தவிப்பார்.
  13. ஒரு வழியாக காஜா ஷெரிஃப்ஃபை பார்த்த உடன் அடியை போட்டு வெளுத்து விடுவார்.
  14. இதில் எல்லாம் காஜா ஷெரிஃப் குறும்புத்தனத்தின் உச்சிக்கே சென்று இருப்பார் என சொல்லலாம்.
  15. அது போல் பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் டெய்லரான கவுண்டமணியிடம் காஜா போடும் பையனாக சிறுவயதிலேயே சிகரெட் எல்லாம் அடிக்கும் குறும்புத்தன பையனாக நடித்திருப்பார்.
  16. கவுண்டமணி கடையில் உட்கார்ந்து ஏதாவது தைத்துக்கொண்டே பேச அதை எல்லாம் மனதிற்குள் முனகிக்கொண்டே நக்கல் செய்வதும் கவுண்டமணியிடம் அடிவாங்குவதும் காஜா ஷெரிஃபின் வேலை.
  17. கவுண்டமணியிடம் கோவித்து வேலையை விட்டு செல்லும் காஜா ஷெரிஃப் அவர் கடைக்கு முன்பே நின்று சுருள் சுருளாக புகை விட்டு சிகரெட் குடிப்பதும் அதை பார்த்து கவுண்டமணி அதிர்ச்சியடைவதும் செம ரகளையான காட்சியாக இருக்கும்.
  18. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, இன்னும் எண்ணற்ற முன்னணி நடிகர்களுடனும் காஜா ஷெரிஃப் நடித்து கலக்கி இருப்பார்.
  19. கமல் நடித்த காதல் பரிசு படத்தில் கமலுக்கு சால்ட் கோட்ட சிலுவை என்ற கதாபாத்திரம் அதில் கமல் உடன் வரும் குப்பத்து பையனாக காஜா ஷெரிஃப் கலகலப்பூட்டி இருப்பார்.
  20. ரஜினி நடித்த காளி, நான் சிகப்பு மனிதன் இன்னும் எண்ணற்ற படங்களில் ரஜினியுடன் காஜா ஷெரிஃப் நடித்துள்ளார்.
  21. மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படத்தில் சிறு குழந்தை நட்சத்திரமாக அருமையான வேடம் இவருக்கு.இவரை பார்த்த உடன் ஏதோ சாதாரண நடிகர் என்றே பலரும் நினைப்பர்.
  22. ஆனால் இவர் அந்த நாளைய லெஜண்ட் இயக்குனர்களின் படங்களில் எல்லாம் நடித்திருப்பார்.
  23. பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ், பாலு மகேந்திரா, எஸ்.ஏ சந்திரசேகர், விசு என முன்னணி இயக்குனர்கள் படங்களில் எல்லாம் காஜா ஷெரிஃப்க்கு ஒரு முக்கிய வேடம் கண்டிப்பாய் உண்டு.
  24. பல படங்களில் ஹீரோக்களின் சிறு வயது கதாபாத்திரத்தில் காஜா ஷெரிஃப்தான் நடித்திருப்பார்.
  25. காஜா ஷெரிஃப் நடிப்பில் சிறப்பான பல படங்களை கூறிக்கொண்டே இருக்கலாம். இருந்தாலும் எல்லாருக்கும் தெரிந்த படம் சம்சாரம் அது மின்சாரம்.
  26. இப்படத்தில் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ண முடியாமல் தவிக்கும் வேடத்தில் காமெடியாக கலக்கி இருப்பார்.
  27. முதலில் காமெடியாக வரும் ஃபோர்ஷன்ஸ் எல்லாம் அவர் பாஸ் செய்த பிறகு சீரியஸாக வரும். சீரியஸான அந்த காட்சிகளிலும் அழகாக நடித்திருப்பார்.
  28. அஜீத் நடித்த சிட்டிஸன் படத்தில் ஒரு வெயிட் ஆன ரோலில் நடித்திருப்பார் அதன் பிறகு இவர் சொல்லிக் கொள்ளும் படி சினிமாக்களில் வரவில்லை என சொல்லலாம்.
  29. சரத்குமார் நடித்த 2006ல் வந்த தலைமகன் படத்துக்கு பிறகு இவர் சுத்தமாக நடிக்கவில்லை.
  30. 90களின் ஆரம்பத்திலேயே அப்போதைய சிறு வேட நடிகர்களான உசிலைமணி, ஓமக்குச்சி, கிங்காங், தவக்களை இது போல சிறு சிறு காமெடி நடிகர்களை வைத்து பல கிராம கோவில் திருவிழாக்கள், கிராம முளைப்பாரி திருவிழா, கோவில் கொடை விழாக்கள், தீ மிதி திருவிழா, சந்தனக்கூடு திருவிழா என பல திருவிழாக்களில் சின்ன சின்ன காமெடி நடிகர்களை ஒன்றினைத்து நட்சத்திர இரவு என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார்.

ஆனால் தற்போது இந்த ஹாஜா ஷெரீப் எந்த திரைப்படத்திலும் நடிப்பதில்லை . இப்போது அவர் மலேசிய, துபாய், கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

இதில் தமிழ் நடிகர், நடிகைகளை அங்கு அழைத்து சென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும், ஏற்பாட்டாளாராக பணியாற்றி வருகிறார்.

Tuesday, March 17, 2026

கவியரசர் கண்ணதாசனின் வாராயோ தோழி வாராயோ !

 சென்சார் போர்டையே திணறடித்த கவிஞரின் வரிகள்…!


தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டாராம். இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது.
 
பாசமலர். 

இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.

முதல் இரவுக்கு முன்ப முன் ஒரு தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார். 

இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.

பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.

மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ… என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நையாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.

திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். இது காலம் கடந்தும் நிற்கும் பாடல். கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கடைசி வரிகளைப் பாருங்கள். மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும். மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும். இதை விட கண்ணியமாக எந்தக் கவிஞராலும் சொல்ல முடியாது. தொடர்ந்து வரும் வரிகள் முத்தாய்ப்பானவை. இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ… இதுவல்லவோ பாடல் என்று நம்மை வியக்க வைக்கிறது.

Friday, March 6, 2026

🌹நடிகவேள் எம்.ஆர்.ராதா..!

🌹நடிகவேள் எம்.ஆர்.ராதா..!
 

வரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!

"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்!

அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!

நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!

"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்" என்று பொதுமேடையிலேயே முழங்கியவர்..!

ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி "ஐயர்" என்பவர் தலைமை தாங்கியிருந்தார்... முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும் பார்த்து கொண்டிருந்தார்..!

அதில் ஒரு காட்சியில், "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?" என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, "பார்ப்பான் பார்ப்பான்" என்றாராம் சத்தமாக.

அதேபோல, கம்பர் விழாவில் பேச, ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராதா, "பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே... நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே..." என்று ஆரம்பித்தார்.

அப்போது, ஒருவர் குறுக்கிட்டு, 'அய்யா... கம்பர் நாடாரு இல்ல..' என்றார்.

'நாடார் இல்லயா... நம்மாளு போலருக்கு, இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...'

'அய்யா... அவரு முதலியாரும் இல்ல...' என்றார்.

'முதலியாரும் இல்லயா சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...'

'அய்யா... அவரு அய்யரும் இல்ல...'

'என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா... அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா... அப்ப ஜாதி கிடையாதா... சரி தான், இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே..." என, ராதாவின் அந்த பேச்சு தொடர்ந்தது..!

இப்படி எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியாலும் பேரன்பாலும் பெருங்கருணையாலும் நிறைந்தது..!

"பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்" என்றார்.

பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன.

ராதாவின் நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின.. அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து சென்று விழுந்தன..!!

சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா..!

திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது.. அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!

ஸ்ரீநிவாஸ்.....