Total Pageviews

Tuesday, December 30, 2025

மணி அடித்தால் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் அற்புத சிவன் கோவில்…

  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரம்பு மலை சிவன் கோயில்.
  • இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இக்கோவிலின் நுழைவு வாயிலில் பாரியின் அவை புலவரான கபிலர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்றும் கல்வெட்டாக வடிக்கப்பட்டு உள்ளது.
  • இங்கு உள்ள கொடுங்குன்றநாதர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • வாழ்க்கையின் மூன்று அம்சங்களையும் முன்னிறுத்தி விளக்கும் விதமாக இங்கு பாதாளம், பூலோகம், மேலோகம் என மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது.
  • மலையின் அடியில் பாதாள சிவன் கோயிலும், மலையின் நடுவில் பூலோக சிவன் கோயிலும், மலையின் மேல் கைலாய சிவன் கோயிலும் பிரம்மாண் டமாக அமைந்துள்ளது.
  • பாரி மன்னன் ஆட்சி செய்த இந்த பறம்பு மலை சிவன் கோயில் மிகவும் அற்புதமான இயற்கை எழில் சூழ அமைந்திருப்பதோடு பல்வேறு மூலிகை களையும் கொண்டுள்ளது.
  • பூலோக சிவன் கோயிலில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம், பிரம்மாண்டமாக தத்ரூபமாக அமைக்க ப்பட்டுள்ளது.
  • இங்குள்ள கொடுங்குன்ற நாதர் கோவிலில் ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரையிலான காலகட்டங்களில் சிவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதாக சொல்லப்படுகிறது.
  • எனவே அன்றைய காலகட்டங்களில் இங்குள்ள சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
  • பாரி மன்னன் மலையும் மலை சார்ந்த இடத்தையும் ஆட்சி செய்து வந்ததால் இக்கோவிலில் தேன், திணை மாவு, பச்சரிசி மாவு போன்றவற்றால் செய்த பொருள்களையே சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்கின்றனர்.
  • சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த பறம்புமலை சிவன் கோயில்.
  • மேலும் இங்கு ஒலிக்கப்படும் மணி சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் சிறப்புடையதாகவும் சொல்லப் படுகிறது.
  • தேவார பாடல் பாடப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பறம்பு மலை சிவன் கோயில் இன்றளவும் பாரி மன்னனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது!

காதலிக்க நேரமில்லை படத்துக்குக் கிடைச்ச ப்ரீ விளம்பரம்..! அட இதுதான் வெற்றியின் ரகசியமா?

 

சில படங்கள் ஆரம்பத்திலேயே சர்ச்சையைக் கிளப்பும். ஆனால் அந்த சர்ச்சையே பெரிய அளவில் விளம்பரத்தைத் தேடித் தந்துவிடும். அப்படி ஒரு படம்தான் இது. ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தின்போது ஆரம்பத்தில் கடும் சவால்களை சந்தித்தார் ஸ்ரீதர். முதலில் ஒரு கதை எழுதி அதை 10 நாள்கள் படமாக்கினார் ஸ்ரீதர்.

அதைப் போட்டுப் பார்;த்த போது அவருக்கு திருப்தி வரல. அதனால மீண்டும் கதை எழுதி படமாக்கினார். அதுதான் நாம இப்போ பார்க்குற காதலிக்க நேரமில்லை. படம் வெளியானபோது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழகம் முழுவதும் அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. படத்தின் பெயர் ஆபாசமாக இருக்கிறது. காட்சிகளும் ஆபாசமாக இருக்கிறது. அதனால் திரையிட தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டன.

இந்த விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்தப் படத்தைப் பொருத்தவரையில் படத்தின் பெயரும் சரி. காட்சிகளும் சரி. கவர்ச்சிகரமாக இருக்கிறதே தவிர, ஆபாசமில்லை என்பதே அவர்களது கருத்தாக இருந்தது. அதனால்தான் படத்திற்கு எவ்வித தடையும் இல்லை. அந்த வகையில் படத்திற்கு இந்த விவாதமே பெரிய பிளஸ் ஆகி விளம்பரமானது. அந்தப் படம் வெள்ளிவிழா காண இதுவும் ஒரு காரணம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், டிஎஸ்.பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பாடல்கள் சூப்பர். என்ன பார்வை, மாடிமேலே, உங்கள் பொன்னான கைகள், அனுபவம் புதுமை, நாளாம் நாளாம், மலரென்ற முகமொன்று, காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளித்தா ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது.

 

ஒரு காலகட்டத்திலே பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது. அந்தக் கனவை ஒரு விமானப் பயணம் நிறைவேற்றி வைக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஒருமுறை பெங்களூருவுல இருந்து டெல்லிக்குப் பயணம் செய்த போது அவருக்குப் பக்கத்து சீட்ல ஸ்ரீபாலி என்பவர் அமர்ந்து இருந்தார்.

அவர் ராஜீவ்காந்தியின் பர்சனல் பிஏ. அவருடன் பேசிக் கொண்டு இருந்தபோது ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது என்னோட தணியாத ஆசை. அவரை சந்திக்கத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்செயலாகச் சொன்னார் சரோஜாதேவி. மறுநாள் காலையிலே அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு ஒரு செய்தி வந்தது. ராஜீவ்காந்தி அவர்களை நீங்கள் 12 மணிக்கு சந்திக்கலாம்.

தயாராக இருங்கள் என்று. உடனே சரோஜாதேவி அவசரம் அவசரமாக மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு ராஜீவ்காந்தியின் இல்லத்துக்குச் சென்றார். புன்னகையோடு அவரை வரவேற்ற ராஜீவ் காந்தி ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேலாக அவரோடு பேசிக் கொண்டு இருந்தார். அப்போ சரோஜாதேவியைப் பார்த்து மாண்டியால காங்கிரஸ் சார்பா நீங்க போட்டி இடுறீங்களான்னு கேட்டார்.

அதற்கு என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு அரசியல்ல அவ்வளவு நாட்டம் இல்ல. ஆனா எனது கணவருக்கு அதுல ஈடுபாடு இருந்தது. நான் அரசியல்ல ஈடுபடணும்னு தீவிரமாக விரும்பினார். இப்ப அவர் இல்லாத சூழல்ல அரசியல்ல ஈடுபட எனக்கு சுத்தமாக ஆசை இல்லைன்னு சொன்னார் சரோஜாதேவி. புகழ், பதவி, செல்வாக்கு என அத்தனை இருந்தும் ராஜீவ்காந்தி அத்தனை எளிமையாக பழகியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

நான் சந்தித்த மனிதர்கள்ல அவர் ஒரு மாமனிதர் என்று ஒரு பத்திரிகையிலே பதிவு செய்துள்ளார் சரோஜாதேவி.

எம்ஜிஆர்-சரோஜாதேவி ஜோடியை மாற்ற தேவர் செய்த ஐடியா... நடந்தது இதுதான்...!


எவன் ஒருவன் தனது அறிவை சமயோசிதமாகப் பயன்படுத்துகிறானோ அவனே வாழ்வில் வெற்றி அடைவான். இது எழுதப்படாத நியதி. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர் பிரபல தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

இவர் தம் படங்களில் தொடர்ந்து எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து வந்தார். 

அவரைத் தவிர எம்ஜிஆருக்குப் பொருத்தமான வேறு ஜோடி அமையவில்லை. என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போதுதான் தேவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி அவரை ஈர்த்தது. ஜெயலலிதா தான் எம்ஜிஆருக்கு சரியான ஜோடி என முடி வெடுத்தார் தேவர். அந்தப் படத்திற்கான படப் பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே ஜெயலலிதாவை தனது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் தேவர்.

அவர் புத்திசாலித்தனமாகத் தான் செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படம் ஜூலை மாதம் வெளியானது என்றால் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த கன்னித்தாய் படம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வெளி யானது.அந்தப் படத்தைத் தொடர்ந்து றக்குறைய அரை டஜன் படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். மேற்கண்ட தகவலை பிர பல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து ள்ளார்.

தீபாவளி தினத்தன்று ரீலீஸாகி தேசிய விருது பெற்ற பாகப்பிரிவினை திரைப்படம்…

 

தீபாவளி தினத்தன்று ரீலீஸாகி தேசிய விருது பெற்ற பாகப்பிரிவினை திரைப்படம்…

  • அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘பாகப்பிரிவினை’ திரைப்படம் வெளியானது.
  • சிறந்த தமிழ் படத்திற்காக, 1960ம் ஆண்டின், தேசிய விருது பெற்ற படம்..
  • மத்திய அரசின் பிராந்திய மொழிப் படங்களில், சிறந்த படமாக தேர்வானது.
  • 'மெகா ஹிட்' படமான பாகப்பிரிவினை திரைப்படம் வெளியாகி 65 ஆண்டுகள் ஆகின்றன.
  • தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களில் இந்தப் படமும் இன்றுவரை இடம்பெற்றிருப்பதுதான், கதையின் மிகப்பெரிய வலிமை.

திரைக்கதை

  • சிறுவயதில், மின்சாரம் பாய்ந்து, கைகால்கள் ஊனமாகிவிடும் சிறுவன் கன்னையாவிற்கு. பெரியப்பா, அப்பா என கூட்டுக்குடும்பம். ஆனால், பெரியம்மா பாகுபாடு பார்ப்பார்.
  • பட்டணம் போய் படித்துவிட்ட தம்பி நம்பியார், பெரியப்பாவின் சொந்தக்கார எம்.ஆ.ராதாவின் தங்கையை நம்பியார் மணக்க குடும்பத்துக்குள் ஏற்படும் விரிசல்கள் பாக பிரிவினையை உண்டாக்க,இறுதியில் சிவாஜிக்கு கை குணமாகி குடும்பம் ஒன்று சேர்வதே கதை.
  • படத்தில் எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சுகளும் நையாண்டிக் குறும்புகளும் செம. அதேபோல், சிவாஜி இவரை ‘சிங்கப்பூரான்’ என்று அழைக்கும் இடங்களிலெல்லாம் அப்ளாஸ் அள்ளியது
  • இந்தப் படத்தின் கதையை, எழுதிய சோலைமலை. மாமல்லபுரத்தில் உருவானது. கை, கால்கள் ஊனமான நிலையில் சிறுவன் ஒருவன் தன்னிடம் பிச்சை கேட்ட போது, அவனது பாத்திரத்தையே, அப்படியே கதாபாத்திரமாக்கினார்.(சிவாஜி கதாபாத்திரம்)
  • இப்படத்திற்கு முன்னதாக, ரத்தக்கண்ணீர்படத்தில், எம்.ஆர்.ராதா நடித்ததை பார்த்து, சரோஜாதேவி பயந்திருந்தார்.
  • பாகப்பிரிவினை படத்தில், எம்.ஆர்.ராதாவை அவர் துடைப்பத்தால் அடிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பயத்தில், இதுவும் சேர, எம்.ஆர்.ராதா திட்டும் அளவுக்கு, சரோஜாதேவியின் நிலை இருந்தது.
  • இதையடுத்து, எம்.ஆர்.ராதாவே ஒரு ஐடியாவை சொல்கிறார். 'பூட்டிய அறைக்குள் இருந்து நான் அலறியபடியே ஓடி வருகிறேன். பின்னால் நீ துடைப்பத்துடன் ஓடி வா... ரசிகர்கள் நீ அடித்ததாக நினைத்து கொள்வர்' எனக் கூறியுள்ளார்.
  • அப்படியே அந்த காட்சியும் படமாக்கப்பட்டது.
  • படத்தில் நிறைய காட்சிகளில், சிவாஜியும், சரோஜாதேவிக்கு உபகாரம் செய்துள்ளார். இப்படத்திற்கு பின் தான், சரோஜாதேவிக்கும் பெரிய அளவில் பெயர் கிடைத்தது.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கும், அண்ணன், தம்பி உறவுக்கும் இப்படம் சான்று.
  • தமிழ்நாடு முழுவதும் போட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்புல். சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி என மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
  • மூன்றிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். தமிழகத்தில், மதுரை சிந்தாமணி உள்ளிட்ட பல ஊர்களிலும் 200 நாட்களைக் கடந்து ஓடி, பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்தது ‘பாகப்பிரிவினை’.

'கலைஞானம் !

 

தமிழ்த்திரை உலகில் வெற்றிகரமான பல படங்களைத் தந்தவர் கதாசிரியர் கலைஞானம். ஆனால் அவருக்கு அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்து சேரவில்லை. சினிமாவுக்குப் பாட்டு எழுதணும்கற ஆசையோடு சென்னை வந்ததும் கலைஞானம் ரத்தசக்தி என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அது மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அதைத் தொடர்ந்து என்ன பண்றதுன்னே புரியல. 1950 முதல் 1962 வரையில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு ஆளானார்.

இடைப்பட்ட காலங்களில் சில நாடகங்களில் நடித்தார். அவற்றில் சிலவற்றுக்குப் பாடல்கள் எழுதினார். அதற்கு அவரது வருமானமே 5 முதல் 10 ரூபாய் வரைதான். அதையும் ஒருசிலர் கொடுக்கவே மாட்டார்களாம். இலவசமாகக்கூட பல நாடகக் கம்பெனிகளுக்குப் பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததுன்னா 1965ல் அவர் எழுதிய அரங்கேற்றிய வெள்ளிக்கிழமை என்ற நாடகம்தான்.

அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் வெற்றி அதுதான். ஆனாலும் அந்த நாடகத்தைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் தன் மனைவியையும், பிள்ளைகளையும் மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்னும் ஒரு மாதம் இங்கே இருந்து பார்க்கிறேன். அதுக்குள்ள எனக்கு சினிமா வாய்ப்பு வரலன்னா நானும் மதுரை வந்து சேர்ந்து விடுவேன் என்று அவரது மனைவியிடம் சொன்னார். அப்போது அவரது மனைவி லேசாக சிரித்தார்.

‘12 வருஷமா சினிமாவுல சேரணும்னு நீங்க போராடிக்கிட்டு இருக்கீங்க. இந்த 12 வருஷம் பெற்றுத் தராததையா இந்த ஒரு மாசம் பெற்றுத் தரப்போகுதா’ என்பதுதான் அவரது சிரிப்புக்குப் பின்னால் இருந்த கேள்வி. மனைவியை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு வந்த கலைஞானம் முருகன் படத்தைப் பார்த்தார். அவர்கிட்ட முருகா, உனக்கே இது நல்லாருக்கா? என்னை இப்படி பாடாப் படுத்துறீயே? என கடுமையாக முருகனிடம் சண்டை போட்டார்.

அன்றைக்கு அவர் சொன்னது முருகன் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. மறுநாள் காலையில் எழுத்தாளர் ஏஎஸ்.முத்து அவரை சந்திக்க வந்தார். 'கலைஞானம் கிளம்புங்க. ஜோசப் தளியத்துக்கு கதை வேணுமாம். வாங்க சொல்லிட்டு வரலாம்' என்று அழைத்தார். அங்கு போனதும் கலைஞானம் ஜோசப் தளியத்துக்கு 2 கதை சொன்னார். அதில் ஒரு கதை அவருக்குப் பிடித்துப் போனது.

அதுதான் காதல் படுத்தும் பாடு. ஜெய்சங்கரும், வாணிஸ்ரீயும் நடித்து பின்னாளில் படமானது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞானத்துக்கு எப்படிப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் வந்தன? அவர் எவ்வளவு பெரிய கதாசிரியர் ஆனார் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Sunday, December 28, 2025

மின்சார பூவே - படையப்பா !

 

மின்சார பூவே - படையப்பா ! இந்தப் பாடல் ரஜினிகாந்தையே எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு பெண் பாடுற பாட்டு. திமிரும், கர்வமும், அகம்பாவமும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தோட வேண்டும் என்பது தெரிந்தவுடன், A.R.ரஹ்மான் “கூப்பிடுங்க நித்யஸ்ரீ யை” என்றார்.

நித்யஸ்ரீ அதற்கு முந்தைய வருடத்தில்தான் ( பத்து வருடங்களாக கர்னாடக சங்கீதத்தில் புகழ்) ரஹ்மானின் ஜீன்ஸ் பட கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை அட்டகாசமாகப் பாடி தமிழ் சினிமாத்துறையில் அடியெடுத்து பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகி ஆச்சரியப்பட வைத்தார்.

இந்தப் பாடல் ஒரு போட்டிப் பாடல். படையப்பாவுக்கும் நீலாம்பரிக்கும். படையப்பா பாட நீலாம்பரி பாடலுடன் ஆடலும் சேர்த்து என்பதாய் இருக்கும்.

மின்சார பூவே என்று ஆண் துவங்கும் வரிகள் முதலில் “செளக்கியமா கண்ணே செளக்கியமா” என்றுதான் இருந்தனவாம். (மிஸ்டர் பாரத்-தில் ரஜினியும் சத்யராஜும் என்னம்மா கண்ணு செளக்கியமா என்று பாடுவார்களே, அது மாதிரி) அப்புறம் பாடல் வளர்கையில் மின்சார பூவே , மின்சார கண்ணா என்று பரிணமித்தது. (பின்னாளில் செளக்கியமா கண்ணே செளக்கியமா என்கிற அந்த வரிகள் சங்கமம் படத்தின் பாடலாகி நித்யஸ்ரீயால் புகழடைந்தது தனி).

சிச்சுவேஷனை சொல்லி அதற்கேற்ற மாதிரி கச்சிதமான வரிகளைக் கேட்டவுடன் பாடலாசிரியர் வைரமுத்துவோ தன் பங்குக்குப் பாடலை அனாயாசமாக தனது வரிகளால் நறுக்குத் தெறித்திருப்பார். நீலாம்பரி படையப்பாவை விரும்பினாலும் “ஹேய் யூ, ஐ லவ் யூ. பதிலுக்கு புளகாங்கிதத்தோடு லவ் யூ சொல்லி காலமெல்லாம் என் காலடியில் விழுந்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்” என்று இறுமாப்போடு காதலை யாசகம் தரும் காரெக்டர். அதற்கு மிகச் சரியாக ஒரு வரி படையப்பாவின் மீதான காதலை, அவனுடைய உன்னத குணாதிசயங்களைச் சொன்னாலும் அடுத்த கணமே தனது ஈகோவை, அகம்பாவத்தைக் காட்டும், தன்னை முன்னிலைப் படுத்துமாறு இருக்கும் செருக்கை அடுத்த வரியிலேயே தப்பாமல் வந்து விடுமாறு எழுதியிருப்பார். முதல் வரி “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்” என்று சொல்லி விட்டு உடனேயே ”என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்” என்றும் ”வானம் வந்து வளைகிறதே” என்று சொல்லி விட்டு உடனேயே “காதலிக்க வா” என்று கூப்பிடாமல் “வணங்கிட வா” என்றும் வெல்லுஞ்சொல் இல்லாததாய் வெளுத்து வாங்கி இருப்பார்.

பாடலின் ஆண் குரலுக்கு ஹரிஹரன் வந்து பாடிக் கொடுத்து விட்டுப் போயாயிற்று. அந்தப் பாடலின் ஆண்குரலுக்கு ட்ராக் பாடியது ஸ்ரீனிவாஸ். கெமிக்கல் இஞ்சினியர். சில திரைப்பட பாடல்களைப் பாடி புகழடைந்து வந்திருந்தார்.என்ன நினைத்தாரோ ரஹ்மான், ஸ்ரீனிவாஸைக் கூப்பிட்டு, ஹே, அந்த மின்சார பூவே, அதுல உன்னோட வெர்ஷனையே ஃபைனல் பண்ணிட்டோம். நல்லா இருக்குது” என்றவுடன் இன்ப அதிர்ச்சி. ஹரிஹரன் வெர்ஷனை விட ஸ்ரீனிவாஸின் வெர்ஷன் கம்பீரமாக இருப்பதாக ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் அபிப்ராயப் பட்டனராம். அப்போது ஸ்ரீனிவாஸிற்கு ஹரிஹரன் எல்லாம் அண்ணாந்து பார்க்கும் லெஜண்ட் பாடகர். இந்தப் பாடலைப் பாட ஸ்ரீனிவாஸிற்கு பத்து நிமிடங்களே கொடுத்தாரம் ஏ.ஆர்.ஆர். அந்தப் பத்து நிமிடங்களில் பிரமாதமாகப் பாடி பாடலில் காதலோடு கம்பீரத்தையும் கலந்து அடித்து ஆடியிருப்பார்.

பாடலைப் படமாக்கிய விதமும், ஓளிப்பதிவு, நடனம் என்று எல்லாமே இசைக்கும் பாடலுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் அட்டகாசமான எஃபெக்டில் அமைந்திருக்கும். நீலாம்பரி அகம்பாவத்தின் அல்டிமேட் ஐடெண்டிடியாகவே தன் முக பாவங்களையும், பாடி லாங்வேஜையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தி படையப்பாவையே விஞ்சுவார். (கோரியோகிராஃபி - லலிதாமணி)

நித்யஸ்ரீ பாடலைப் பாடிச் சென்ற அனுபவத்தைப் பற்றி ஸ்ரீனிவாஸ் சொல்வது. அவங்க வந்தாங்க. ஒரு புயல் மாதிரி வந்து அசர அடித்துப் பாடி விட்டு எங்களை பேச்சு மூச்சில்லாம செஞ்சுட்டுப் போய்ட்டாங்க என்பதாய் அதை நினைந்து வியக்கிறார்.இப்படி எல்லா டிபார்மெண்ட்டும் தன் உசிரைக் கொடுத்து பெஸ்ட்டைக் கொடுக்கும் பாடல் பரிமளிப்பது மிகச்சிலவே. இந்தப் பாடல் இதை இசைத்தவர்களின் உன்னதத்தை மட்டுமல்ல, அங்குலம் அங்குலமாக ரசிப்பவர்களுடைய மகிழ்ச்சியையும் உச்சத்தில் தொட வைக்கிறது.