Total Pageviews

Tuesday, December 31, 2024

மனதுக்குப் பட்டதை அசாத்திய துணிவோடு சொன்னவர் எம் ஆர் ராதா!

 

தமிழ்நாட்டில் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும்தான் அந்த அசாத்திய துணிச்சல் இருந்தது.

எம் ஆர் ராதா.

அவரைப்போல ஜாதி மத துவேஷங்களுக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுத்த நடிகர் வேறு எவரும் இல்லை.

எதைப்பற்றியும் கவலைப்படாமல்

யாரைப்பற்றியும் கண்டுகொள்ளாமல்

தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று துணிவோடு சொன்னவர் எம் ஆர் ராதா.

தன்னுடைய ஆணித்தரமான கருத்துக்களை அழுத்தமாகச் சொல்வதற்கு, தான் நடித்த நாடகங்களை பயன்படுத்திக் கொண்டார் அவர்.

ஒரு நாடகத்தில் எம் ஆர் ராதா இப்படிப் பேசுவார்.

“பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே !

நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...” என்று ஆரம்பிக்கும்போது ஒருவர் குறுக்கிட்டுச் சொல்வார்.

“ அய்யா... அவரு நாடாரு இல்ல...”

“நாடார் இல்லயா ? அப்ப இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...”

“அய்யா... அவரு முதலியாரும் இல்ல...”என்பார் கூட்டத்தில் ஒருவர்.

“முதலியாரும் இல்லயா ?

சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...”

“அய்யா... அவரு அய்யரும் இல்ல...”

“என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல ... அய்யரும் இல்லயா...

அப்போ, இப்போதான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா ? அந்தக் காலத்தில ஜாதி கிடையாதா ?

சரிதான்..! இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே...” என எம்.ஆர். ராதாவின் பேச்சு தொடருமாம்..!

ஜாதி மத வேறுபாடுகளுக்கு எதிராக இத்தனை தைரியமாகக் குரல் கொடுத்த எம்.ஆர்.ராதாவின் இந்தத் துணிவு அவருக்குப் பின் வேறு எந்த நடிகருக்கும் வரவில்லை.

நடிகன் ஒரு கருத்தைச் சொன்னால், அதை நாடே கவனிக்கிறது.

அதை உணர்ந்து உருப்படியாக பயன்படுத்திக் கொண்ட ஒரே நடிகர் எம் ஆர் ராதா மட்டும்தான!

Monday, December 30, 2024

பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் (1973)

 

அரங்கேற்றம்(1973)

கத்தியின்றி இரத்தமின்றி கே.பாலச்சந்தர் செய்த சமூக யுத்தம்..!

  • ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்திற்காக வழி தவறி அதன் பிறகு தனது குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு பைத்தியமாக மாறும் ஒரு பரிதாபமான கதாபாத்திரம் தான் அரங்கேற்றம் படத்தின் நாயகியான பிரமிளாவின் கதாபாத்திரம்.
  • கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்போது மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

கதை:

  • அந்த கிராமத்தில் மிகவும் ஆச்சாரமான ஒரு குடும்பம்.ஆனால் அவர்களுக்கு ஏகப்பட்ட குழந்தைகள்.
  • ஆனால் அந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத அளவுக்கு வறுமை.
  • வறுமையாக இருந்தாலும் அந்த குடும்ப தலைவர் எஸ்.வி.சுப்பையா தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர்.
  • குழந்தைகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, ஆனால் தனது கௌரவத்தை விட மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்.
  • இந்த நிலையில் வீட்டில் வறுமை கண்ட மூத்த மகள் பிரமிளா அப்பாவிடம் போராடி வேலைக்கு செல்ல அனுமதி வாங்குவார்.
  • இதனை அடுத்து அவர் சென்னைக்கு வேலைக்காக செல்வார்.
  • அப்போது தனது மூத்த தம்பியான கமல்ஹாசன் எம். பி. பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டதால் சிபாரிசுக்காக ஒரு பெரிய மனிதரிடம் பிரமிளா செல்வார். அப்போது அங்கு அவரால் சூறையாடப்படுவார்.
  • அதன் பிறகு கமல்ஹாசனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்து விடும்.
  • இதனை அடுத்து அவர் வேறு ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்வார். அந்த இடத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளியால் சூறையாடப்படுவார்.
  • அதன் பிறகு தங்கையின் பாடகி ஆசையை நிறைவேற்ற ஒரு பெரிய மனிதரிடம் செல்வார். அங்கும் அவர் சூறையாடப்படுவார்.அதன் பிறகு தங்கை பாடகியாகி விடுவார்.
  • ஒரு கட்டத்தில் பிரமிளா விபச்சாரியாக மாறி விடுவார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் அவர் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைப்பார்.
  • தம்பி கமல்ஹாசன் ஒரு பக்கம் மருத்துவம் படிக்க, மற்ற தம்பி, தங்கைகள் நன்றாக படிக்க, அப்பா, அம்மா, பாட்டி உள்பட அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, நல்ல உடை என திருப்தியான வாழ்க்கை அவர் செய்த விபச்சார தொழிலால் தான் என்பது குடும்பத்தினருக்கு தெரியாது.
  • இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் தங்கையின் கல்யாணத்திற்காக அவர் ஊருக்கு வருவார்.
  • அப்போது தனது தாயார் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவார்.
  • இந்த நிலையில் தனது தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை தன்னை தேடி வந்த கஸ்டமர்களில் ஒருவர் என்பது அவருக்கு தெரிய வந்து அதிர்ச்சி அடைவார்.
  • இந்த நிலையில் பிரமிளா சென்னையில் விபச்சாரம் செய்து தான் தனது குடும்பத்தை காப்பாற்றி இருப்பார் என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஊருக்கே தெரிய வரும்.
  • அதன் பின் என்ன நடந்தது?
  • கடைசி 20 நிமிடம் பொங்கி எழுந்து பிரமிளா பேசும் வசனங்கள் என்ன?
  • இறுதியாக பிரமிளாவின் கேரக்டருக்கு கிடைத்த பரிதாபமான முடிவு என்ன?

என்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

  • இந்த படத்தின் டைட்டிலிலே முதலில் பிரமிளா என்று தான் போடுவார்கள்.
  • அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
  • கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில் முதல் முதலாக வாலிபராக நடித்த படமிது.
  • அதுமட்டுமின்றி அவருக்கு இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டர் தான்.
  • இந்த படத்தில் கே.பாலசந்தரின் வசனம் அபாரமாக இருக்கும்.
  • கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு சமூக யுத்தத்தையே அவர் தனது வசனம் மூலம் செய்திருப்பார்.
  • இந்த திரைப்படம் 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது.
  • பாலச்சந்தர் இயக்கிய சிறந்த படங்களின் வரிசையில் கண்டிப்பாக இந்த படத்தையும் சொல்லலாம்.

விஜய்காந்த் !

விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்.

"நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட் கேளுங்க" என ஐடியா சொல்ல மோகனோ படுபிஸி. கால்ஷீட் இல்லாமல் திரும்பவும் விஜய்காந்திடம் வர அவர்ரவடிவுக்கரசிக்கு நடித்துக்கொடுத்தப்படம் தான் 'அன்னை என் தெய்வம்'.

கலைஞரின் மருமகன் அமிர்தம். எம்.ஜி.ஆர் காலங்களில் படங்களை இயக்கியவர். ஜெய்சங்கர், மு.க.முத்து படங்களை இயக்கிய அவர் கடைசியாக இயக்கிய படம் 'தூக்குமேடை'. அவர் எண்பது கால இளைஞர்களோடு பணி புரிய ஆசைப்பட்டு விஜய்காந்திடம் ஒரு கதை சொல்கிறார். அந்தக்கதை அவருக்கு பிடித்து விடுகிறது. அப்போது பானுப்ரியா படம் தயாரிக்கக்கேட்க இருவரின் ஆசையையும் நிறைவேற்ற நடித்தது தான் 'சிறையில் பூத்த சின்ன மலர்.'

ஏவிஎம் சகோதரர்களில் எம்.குமரன் மட்டும் தனித்து வந்து படமெடுக்க ஆசைப்பட்டு விஜய்காந்திடம் கால்ஷீட் கேட்கிறார். குமரனுக்காக நடித்துக்கொடுத்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக திரைப்படங்களில் பிரச்சார பீரங்கிகளாய் சில நடிகர்கள் இருந்தனர். ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், டி.ராஜேந்தர், சந்திரசேகர், ராமநாராயணன் இப்படி. இதில் நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேட்க ராம.நாராயணன் இயக்கினார். அதில் விஜய்காந்த் தானும் பங்கேற்பதாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அதற்கு எஸ்.எஸ்.சந்திரனிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ள வில்லை. டி.ஆர் இசையமைத்த அந்தப்படம் 'எங்கள் குரல்'.

தாணு இயக்குனராக ஆசைப்பட 'தெருப்பாடகன்', மணிவண்ணன் தயாரிக்க ஆசைப்பட 'சந்தனக்காற்று', ஜெயப்ரதாவுக்கு கர்நாடக எம்.எல்.ஏ ரமேஷ் மூலம் 'ஏழைஜாதி', இயக்குனர் ரங்கராஜ் தயாரிக்க 'தர்மம் வெல்லும்', மணிரத்னத்துக்கு 'சத்ரியன், இளையராஜா-கங்கை அமரனுக்கு 'கோவில் காளை', பழ.கருப்பையாவுக்கு 'பொறுத்தது போதும்', சங்கிலி முருகனுக்கு 'கரிமேடு கருவாயன்', பெரியமருது, பாரதிராஜாவுக்கு 'தமிழ்செல்வன்', அவரது மைத்துனர் இயக்குனர் மனோஜ்குமார் தயாரிக்க 'ராஜ்ஜியம்',.......

தனது கூடவே இருந்த ரசிகர் மன்ற நிர்வாகியான ராமு.வசந்தனை 'தாயகம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கியதும் விஜய்காந்த் தான்.பல வருடங்களாக தனது உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையாவை தயாரிப்பாளராக்கி அவர் நடித்தப்படம் தான் 'பெரியண்ணா'. அதில் கிடைத்த பணத்தை பணமாக கொடுத்தால் செலவாக்கி விடுவார் என வீடாக வாங்கிக்கொடுத்தவரும் விஜய்காந்த் தான்.

தனது சொக்கத்தங்கம் படத்தை இயக்க சேரன் சம்பளப்பிரச்சினையில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பின்றி இருந்த பாக்யராஜை அழைத்து மறுப்பின்றி இயக்க வைத்தார்.

இவ்வளவு ஏன்?.... விஜய்காந்த் நடிக்க வந்த புதிதில் சண்டைக் காட்சிகளுக்காக ஆரம்பக்காலத்தில் மாடக்குளம் தர்மலிங்கத்திடம் சிலம்பம் கற்றுக் கொண்டிருந்தார். தன் சிலம்ப ஆசானையும் விடவில்லை விஜயகாந்த். அவரையும் தயாரிப்பாளராக்கி அவர் நடித்துக்கொடுத்தப்படம் தான்

'ஏமாறாதே...ஏமாற்றாதே.....'

150 படங்களில் நடித்தாலும் பல சிறிய ஆட்களை தயாரிப்பாளராக்கும் தைரியமும், தன்னம்பிக் கையும் விஜய்காந்துக்கு இருந்தது. அவர் ஐநூறு, ஆயிரம் படங்களாவது நடித்திருந்தால்......💗💗

Sunday, December 29, 2024

இப்படிக் கூட உதவி செய்யலாம் நடிகர் - ஜெய்சங்கர் !

 

அந்த நடிகருக்கு இப்படியும் கூட ஒரு முகம் உண்டு என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் !

அந்த நடிகர் தனது வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவாராம்.

முழு செலவையும் அவரே ஏற்று நடத்தி வைக்கும் அந்த விருந்தை அவரே முன் நின்று பரிமாறுவதுதானே முறை ?

அதுதான் இல்லை !

ஒவ்வொரு விருந்துக்கும் யாராவது ஒரு பிரபலத்தை அழைத்து வந்து அவர்கள் கையால் அந்த அனாதைக் குழந்தைகளுக்கு விருந்து பரிமாற வைத்து அதைப் பார்த்து மகிழ்வாராம் அந்த நடிகர்.

அந்த நடிகர் - ஜெய்சங்கர் !

சரி, ஏன் இப்படிச் செய்தார் ஜெய்சங்கர் ?

புரிந்து கொள்ள முடியாத ஒரு நண்பர் இந்தக் கேள்வியை ஜெய்சங்கரிடமே கேட்டு விட்டாராம்.

“ஏங்க ஜெய், விருந்துக்கான எல்லா செலவையும் நீங்க பண்றீங்க. அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா ?”

ஜெய்சங்கர் புன்னகைத்தாராம்.

நண்பர் விடவில்லை : “சிரிக்காதீங்க ஜெய், ஒண்ணு நீங்க பரிமாறுங்க. அல்லது உங்க மனைவி குழந்தைகளை விட்டு பரிமாற சொல்லுங்க. யாரோ ஒரு மூணாவது மனிதர்...”

நண்பரின் பேச்சை இடைமறித்த ஜெய்சங்கர் சிரித்தபடி சொன்னாராம் இப்படி :

“கொஞ்சம் பொறுங்க. நான் கூப்பிட்டுட்டு வர்ற பிரபலங்களை கவனிச்சு இருக்கீங்களா ? அவங்க யாருமே இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கெல்லாம் போய் உதவி செய்யற பழக்கம் இல்லாதவங்க. அதுக்கான நேரம் இல்லாதவங்க. அது பற்றின விவரம் தெரியாதவங்களாக கூட இருக்கலாம் .

அதனால இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி அவங்களை நான் கூப்பிடறேன். இந்த மாதிரியும் இடம் இருக்கு. இப்படிக் கூட உதவி செய்யலாம் என்று அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான் ! இப்படி வர்ற பத்து பேர்ல ஒரே ஒருத்தர் மனசில இந்த உதவி பதிஞ்சா கூடப் போதுமே ! எதிர்காலத்தில அவங்களும் கூட இதுமாதிரி உதவிகளைச் செய்ய முயற்சி செய்யலாம் இல்லையா ? அதுக்காகத்தான் இப்படி கூப்பிடறேன்!"

ஜெய்சங்கரின் இந்தப் பதிலைக் கேட்ட நண்பர் மௌனமாகிப் போனாராம்.

(2000 ஜூன் 3 ): நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம் .

Saturday, December 28, 2024

இளையராஜா !

 

1990-ம் ஆண்டு.

தான் முதன்முதலாக இயக்கும் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று ஒருவர் வந்து நிற்கிறார். வந்தவரை பார்த்தது ராஜாவிற்கு அதிர்ச்சி. இவர் ப்ரொடியூசர், டிஸ்ட்ரிப்யூட்டர் ஆச்சே, இவர் எதுக்கு திடீர்னு டைரக்ட் பண்றேன்னு வராரு என்று சந்தேகத்தில் பார்க்கிறார்.

ஆனால் பஞ்சு அய்யாவின் ரெகமண்டேஷன் என்பதால் ராஜாவும் ஒப்புக் கொள்கிறார். தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அந்த நபர் தான் திரு.கேயார் அவர்கள். தமிழில் அவர் இயக்கியமுதல் படமான ஈரமான ரோஜாவே படத்திற்கு இசையமைக்க ஒரு வழியாக ராஜாவை சம்மதிக்க வைத்து விட்டார்.

கம்போசிங்கிற்கு எங்காவது வெளியூர் செல்லலாம் என்கிற போது ராஜாவே கொச்சினுக்கு போகலாம் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் ரயிலில் தான் செல்ல வேண்டும் என்று சொல்ல, கேயாரும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ராஜாவும், அவரது மனைவியுடன் வர, கடைசி நேரத்தில் ஒருவருக்கு மட்டும் டெக்கெட் கன்பார்ம் ஆகவில்லை. டி டி ஆர் ராஜாவைப் பார்த்துவிட்டு, நீங்க எங்க வேணா உக்காருங்க சார், என்று அனுமதி கொடுத்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை கொச்சின் வந்து இறங்கியாகிற்று. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை. காலை 7.30 மணிக்கு கேயாருக்கு அழைப்பு வருகிறது. இவர் போனால் அங்கே குளித்து முடித்து ரெடியாகி, வெள்ளை உடையில் தயாராக இருக்கிறார் ராஜா. "கம்போசிங் ஆரம்பிக்கலாமா" என்று கேட்கவும் கேயாருக்கு அதிர்ச்சி. "இப்பத்தானே வந்துருக்கோம், கொஞ்ச ரெஸ்ட் எடுங்க, டிபன் சாப்பிடுங்க, சுத்திப் பார்க்க போவோம், அப்புறமா வந்து கம்போசிங் வச்சுக்கலாம்" என்று கேயார் சொல்லவும், அதெல்லாம் வேணாம்யா, முதல்ல வந்த வேலையை முடிப்போம் என்று வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குனர் கேயார் ஒவ்வொரு சிச்சுவேஷனாக சொல்ல அரைமணிக்குள் 6 பாடல்கள் ரெடி. இதே பயணத்தில் இன்னும் இரண்டு படத்திற்கான கம்போசிங் செய்ய இயக்குனர்களை வரவழைத்திருக்கிறார் இளையராஜா. கேயார் வேலை முடிந்ததும் அவர்களை அழைக்க, சிவாஜி ப்ரொடக்‌ஷன் சார்பில் பிரபு, குஷ்பூ நடிக்க தயாரான படம் "மை டியர் மார்த்தாண்டன்". அவரும் சிச்சுவேஷன் சொல்ல அந்தப் படத்திற்கு 9 பாடல்கள் ரெடி.

அதற்கடுத்து ராஜாவின் நீண்ட நாள் நண்பர் பாரதிராஜாவுடன் இணையும் படம் " நாடோடி தென்றல்". அதற்கு 6 பாடல்கள் என மொத்தமாக 21 பாடல்களுக்கான ட்யூன்கள் ரெடி. இவை அனைத்து காலை 10 மணிக்குள் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தான் சுற்றிப் பார்க்க கிளம்பி இருக்கிறார் ராஜா.

உடன் வந்த கேயார் "ஏங்க சென்னைல இருந்தா     7மணிக்கு ஸ்டுடியோல வேலையை ஆரம்பக்கிறிங்க. வெளியூர் வந்தாலும் அதே             7 மணிக்கு வேலை செய்யறதுக்கு, பேசாம சென்னைலேயே இருந்திருக்கலாமே" என்று ராஜாவிடம் கேட்டிருக்கிறார். "எனக்கும் நாலு இடத்தைப் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, அதுக்குத் தான் வரோம். வேலையையும் முடிச்சுட்டா நிம்மதியா இருக்கலாம்ல" என்று சொன்னபடி வேட்டியை தூக்கிவிட்டபடி கடலைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார் ராஜா..

மை டியர் மார்த்தாண்டன் படம் தான் முதலில் வந்தது. அதற்கடுத்து ஈரமான ரோஜாவே, நாடோடி தென்றல் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1992-ல் தான் வெளிவந்தது. 3 படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அன்றிலிருந்து இன்று வரை மனிதர் மாறவே இல்லை. மே மாதம் நான் சிம்பொனி எழுதி விட்டேன் என்றார், இப்போது ஜனவரியில் சிம்பொனி வெளியாகும் என்கிறார். 1990-2024 34 வருடங்கள் ஓடியிருந்தாலும், ராஜாவுக்கு 80 வயதாகியிருந்தாலும் அவர் வேலை செய்வது இன்னும் நிற்கவில்லை. இன்னும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

முதல் மரியாதை !

 

🌹முதல் மரியாதை!

தன்னை வளர்த்த மாமனின் கெளரவம் கருதி, அவர் காலில் விழுந்து கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மாமனின் மகளான ‘பொன்னாத்தா’வை திருமணம் செய்து கொள்கிறார் மலைச்சாமி.

விருப்பமற்ற இல்லற வாழ்க்கையின் மனப்புழுக்கத்தை பல வருடங்களாக சகிச்த்துக் கொண்டிருப்பவர். பெறாத மகளாக இருந்தாலும் அவள் மீது உண்மையான தகப்பனை விடவும் அதிக பாசத்தைக் கொட்டுபவர்.

🌹‘உள்ளே அழுகறேன்… வெளியே சிரிக்கறேன்’ என்கிற கதையாக விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவரின் பாலைவன வாழ்க்கையில் இளம் தென்றலாய் நுழைகிறாள்

🌹 ‘குயில்’. வழக்கமான கிராமத்துக் குசும்புகளுடன் ஆரம்பிக்கும் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் களங்கமற்ற அன்பாகவும் குற்றமற்ற நேசமாகவும் மாறுகிறது. ஊராரின் எதிர்ப்பிற்கும் அவதூறுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் இவர்களின் உறவு ஒரு காவியத் துயரத்துடன் நிறைவடைவதை உருக்கத்துடன் சித்திரித்திருந்தார் பாரதிராஜா.

🌹கணவனை எப்போதும் கரித்துக் கொட்டும் ‘சிடுசிடு’ மனைவியின் பாத்திரத்தில் நடிக்க வடிவுக்கரசி

🌹சிவாஜி முதல் நாள் படப்பிடிப்பிற்குத் தயாராகி வரும்போது தன்னுடைய வழக்கப்படி ‘பெரிய விக், மீசை’ என்று சினிமாவிற்கான தோரணையுடன் வந்தததைப் பார்த்து திகைத்துப் போன பாரதிராஜா

🌹 “ஐயா... நீங்க இயல்பான தோற்றத்தில் வந்தால் போதும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்ல

🌹 “அப்படியா சொல்ற... சரிப்பா” என்று சிவாஜி உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தத் திரைப்படம் என்றல்ல, தனது எல்லாத் திரைப்படங்களிலும் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதுதான் சிவாஜியின் வழக்கம்.

🌹குயில்’ பாத்திரம் என்பது

ராதாவிற்கு

ஊர்ப் பெரியவரான சிவாஜியிடம் துடுக்குத்தனமாக பேசுவதாகட்டும், மறைந்திருந்து எசப்பாட்டு பாடுவதாகட்டும், அவரின் சொந்தக்கதையை அறிந்து வருந்துவதாகட்டும், அதுவே பிறகு பாசமாகவும் நேசமாகவும் மலர்வதாகட்டும்,

🌹 “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகட்டும். ‘குயில்’ பாத்திரத்திற்குள் அற்புதமாக கூடு புகுந்தார் ராதா. .

இந்தத் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை

மலேசியா வாசுதேவனின் குரல் சிவாஜிக்கு மிகப் பொருத்தமாக அமைந்தது என்பதை ‘முதல் மரியாதை’ பாடல்கள் மீண்டும் நிரூபித்தன.

🌹 ‘பூங்காற்று திரும்புமா’ பாடலில் உள்ள ஏக்கம், அதற்கு முரணாக

🌹 ‘ஹே... குருவி. சிட்டுக்குருவி’ பாடலில் உள்ள உற்சாகம் என்று அசத்தியிருந்தார்

மலேசியா.

இன்னொரு பக்கம் ஜானகியம்மாவின் ராஜாங்கம்.

🌹 ‘அந்த நெலாவத்தான் கையில பிடிச்சேன்' என்று ரொமான்ஸில் பின்னியெடுத்தவர்,

🌹‘வெட்டிவேரு வாசத்தில்’ நம்மை உருக்கியெடுத்துவிட்டார்.

🌹 ராதா சமைக்கும் மீனை வெட்டி வீறாப்புடன் முதலில் மறுத்துவிட்டு பிறகு ‘உனக்கு வயித்த வலிக்கும். அதான் சாப்பிடறேன்’ என்று குழந்தைத்தன்மையுடன் சிவாஜி சொல்லும் காட்சி அற்புதமானது.

🌹 “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று கேட்கும் ராதாவின் கன்னத்தில் அறைந்து விட்டு

🌹“பச்சைப் புள்ளன்னு நெனச்சு பழகினது தப்பாப் போச்சு” என்று பாவனையாகக் கோபப்படும் சிவாஜி,

கடைசிக்காட்சியில் தன் காதலை ஒப்புக் கொள்வது உருக்கமானது.

🌹“என் புருஷனை நீ வெச்சிருக்கியா சொல்லுடி” என்று துடைப்பைக் கட்டையால் ராதாவை வடிவுக்கரசி அடிப்பதும், ஊராரின் அவதூறு தாங்காமல்

🌹 “ஆமாம். நான் அவளை வெச்சிருக்கேன்” என்று பஞ்சாயத்தின் நடுவில் சிவாஜி வாக்குமூலம் தருவதும் அந்த வார்த்தைகளை மலர் தூவல்களாக ராதா கற்பனை செய்து கொள்வதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

ஸ்ரீநிவாஸ்....

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன் !

 

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த டாப் 10 படங்களில் ஒன்று 'நெற்றிக் கண்'. இந்த படத்தின் கதையை விசு எழுதியிருந்தார். இந்த கதையில் சிறப்பு என்னவென்றால், அதற்கு முன் வந்த படங்கள் அனைத்திலும் அப்பா நல்லவராக இருப்பார், மகன் தீயவனாக இருப்பான். அப்பா, மகனை திருத்துவது மாதிரி இருக்கும். ஆனால் இந்த கதையில் அப்பா பெண் பித்தராக இருப்பார். மகன் அவரை திருத்துவதாக மாற்றி எழுதப்பட்ட கதை.

இந்த கதை விசு நாடகத்திற்காக எழுதியது. பாலச்சந்தரிடம் படித்து பார்க்க கொடுத்தார். கதையை படித்த கே.பாலச்சந்தர் இதை படமாகவே தயாரிக்கலாம் என்று கூறி உடனே எஸ்.பி.முத்துராமனை வரச் செய்து இந்த கதையை நீங்களே இயக்குங்கள், ரஜினி நடிக்கட்டும் என்றார். கதையை படித்து பார்த்த எஸ்.பி.முத்துராமன் “இந்த படத்தை நான் இயக்க மாட்டேன். வேறு யாரையாவது இயக்க சொல்லுங்கள், அல்லது ரஜினிக்கு பதிலாக வேறு யாராவது நடித்தால் நான் இயக்குகிறேன். ரஜினியை ஒரு போதும் பெண்பித்தராக என்னால் காட்ட முடியாது. நான் தடுமாறி விடுவேன்” என்று கூறிவிட்டார்.

உடனே ரஜினியை அழைத்த பாலச்சந்தர் அவருக்கு கதை சொன்னார். “ரஜினியும் சூப்பரா இருக்கே. எனக்கு நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிப்பது நான் ரெடி” என்று கூறிவிட்டார். ஒரு வழியாக எஸ்.பி.முத்துராமனை சம்மதிக்க வைத்து படத்தை உருவாக்கினார்கள்.

இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடம் என்பதால் ஒளிப்பதிவாளர் பாபு அப்போது அறிமுகமாகி இருந்த 'மாஸ்க் ஷாட்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் படத்தை எடுத்தார். 90 மாஸ்க் ஷாட்கள் படத்தில் இடம் பெற்றது. இரட்டை வேட தொழில்நுட்பத்தில் அது ஒரு மைல் கல்லாக இருந்தது. படத்தின் மகன் சந்தோஷ் கேரக்டரை விட தந்தை சக்ரவர்த்தி கேரக்டர்தான் பேசப்பட்டது.

தேன் மொழி