Total Pageviews

Thursday, March 20, 2025

இருவர் உள்ளம்’ வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன

 

சிவாஜியுடன் ஜெயலலிதாவின் தாயார் நடித்த படம்; கலைஞர் வசனம்; மறக்க முடியாத மெகா ஹிட் படத்தின் கதை

சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் சிவாஜி மிகவும் பணக்காரர். அதிக பணம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் இவர் உல்லாசமாக இருப்பார். எல்லா பெண்களுடனும் பழகுவார். எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பார்.

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் சிவாஜி, சென்னைக்கு வந்து மாமா நிறுவனத்தை கவனித்து கொள்வார். இந்நிலையில் அப்போது சரோஜா தேவியை பார்ப்பார்.

இதனால் மனம் மாறி சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். ஆனால் சரோஜா தேவி இவரது பழைய குணத்தைப் பார்த்து அவரை வெறுப்பார். இந்த நேரத்தில் சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க சரோஜாதேவி வருவார். இந்நிலையில் இதை பார்க்கும் சிவாஜியின் அம்மா- அப்பா இருவரும், சிவாஜிக்கும் சரோஜா தேவிக்கும் பொருத்தம் நன்றாக இருக்கும் என்று இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார்கள்.

திருமணமான பிறகும் கூட, சரோஜாதேவிக்கு நம்பிக்கை ஏற்படாது. அதன் பின்னர் சில திடுக்கிடும் திருப்பங்கள் நடைபெறும். சிவாஜி மீது கொலைப் பழி போடப்படும்? யார் உண்மையான கொலையாளி ? கணவன் மனைவி இணைவார்களா? என்பதுதான் மீதிக் கதை.

இந்த படத்தின் மிகப் பெரிய பலம் எழுத்தாளர் லட்சுமியின் கதை என்று கூறலாம். லட்சுமி எழுதிய நாவலுக்கு மிக அருமையாக கலைஞர் கருணாநிதி வனம் எழுதியிருப்பார். ஆங்காங்கே தன் குசும்புத்தனத்தையும் நையாண்டியையும் நக்கலையும் அவர் வசனத்தில் இணைத்து இருப்பார் என்பதும் அவை படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சரோஜாதேவி, சிவாஜிகணேசன் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். இந்த படத்தில் சிவாஜி கணேசன் அப்பாவாக எஸ்.வி.ரங்காராவ், அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருப்பார்கள். இருவருமே மகன் மீது பாசத்தை பொழியும் அற்புதமான கேரக்டரில் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக சந்தியாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். பறவைகள் பலவிதம் இதயவீணை, அழுகு சிரிக்கின்றது. நதி எங்கே போகிறது போன்ற பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றன என்பதும் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியன என்பதும் அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

1963ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ’இருவர் உள்ளம்’ வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் இந்த படத்தின் கதை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். திருந்தி வாழ்பவர்களுக்கு சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகோர்த்துக் கொண்டால் நல்லவனை கூட கெட்டவனாகதான் இந்த உலகம் நம்பும் என்பதை ஒவ்வொருவரும் புரியும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும்.

எப்பேர்ப்பட்ட மன பக்குவம் கண்டிருந்தால் இந்த வார்த்தைகள் வெளி வரும்.....

 

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.......

எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார்....

அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். ......

இந்த வாத்தியார் பாடம் போதுமே!...அந்த மஹான் எப்பேர்ப்பட்ட மன பக்குவம் கண்டிருந்தால் இந்த வார்த்தைகள் வெளி வரும்.....

80 களில் கலக்கிய இசையமைப்பாளர் சந்திரபோஸ் !

 

"சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா" முதல் "பாட்டி சொல்லை தட்டாதே" வரை.. 80களில் கலக்கிய சந்திரபோஸ்

தமிழ் சினிமாவில் 1980களில் இளையராஜா கொடி கட்டிப்பறந்த காலகட்டத்தில் மற்றும் சிலரும் தமிழ் சினிமாவில் நல்ல இசையைக் கொடுக்கத்தான் செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

Live Tamil News - தமிழ் செய்திகள்

சந்திரபோஸின் ஆரம்பம்: ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். இசையமைப்பாளர் சந்திரபோஸின் இசை என்பது சாமானிய இசைக்கலைஞர்களும் இசைக்கும் வகையில் எளிமையாக இருக்கும். இதனால் அன்றைய காலத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் பல பாட்டுக் கச்சேரிகளில் ஒலித்துள்ளன.

தஞ்சை மாவட்டம், சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரபோஸ், இசை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சென்னை வந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை செய்துவந்தார். இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார், சந்திரபோஸ்.

1977ஆம் ஆண்டு ஸ்ரீவித்யா, விஜயகுமார், ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பில் இவர் மதுர கீதம் என்னும் படத்திற்காக முதன்முதலாக இசையமைக்கிறார். இப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இடம்பெற்ற ‘கண்ணன் எங்கே.. ராதை மனம் ஏங்குதம்மா’ என்னும் பாடல் நல்லதொடக்கத்தைக் கொடுத்தது.

இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு: 1982ஆம் ஆண்டு விஜயகாந்தின் நடிப்பில் வெளியான பார்வையின் மறுபக்கம் படத்தில் ‘தேவதை புரியும் தவங்கள்’ என்னும் பாடல் சந்திரபோஸின் இசையில் கவனம்பெற்றது. அடுத்து நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேஷன், விஷ்ணு வர்தன் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ படத்தில், 'நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்டுப்பாருங்க.. அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க’,’தங்கமணி ரங்கமணி வாம்மா நீ.. வெள்ளிமணி வைரமணி பூமேனி’ஆகிய ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், சந்திரபோஸ்.

அதேபோல், 1987ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘சங்கர் குரு’ படத்தில் ‘காக்கி சட்டை போட்ட மச்சான்.. களவு செய்ய கன்னம் வைச்சான்’ என்னும் பாடலும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ படத்தில், ‘காளை காளை... முரட்டுக்காளை நீதானே.. போக்கிரி ராஜா நீதானே’ எனப் பல பாடல்கள் சந்திரபோஸின் இசையில் ஹிட்டடித்தன. இதனைத்தொடர்ந்து, சத்யராஜ் நடித்த ‘அண்ணாநகர் முதல் தெரு’ படத்தில் இடம்பெற்ற, 'மெதுவா.. மெதுவா ஒரு காதல் பாட்டு' இவரது இசையில் எவர்கிரீன் ரகம்.

அதேபோல், அர்ஜூன் நடித்த ‘தாய் மேல்’ ஆணை திரைப்படத்தில், 'மல்லிகைப்பூ பூத்திருச்சு' என்னும் பாடலும் ‘சின்ன கண்ணா செல்லக் கண்ணா’ ஆகியப் பாடல்களும் ஹிட்டடித்தன. 1989ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடித்த ‘ராஜா சின்ன ரோஜா’ படத்திற்கு இசையமைத்த சந்திரபோஸ், ‘சூப்பர் ஸ்டாருன்னு யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும், ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தாராம், ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை, ஒங்கப்பனுக்கும் பே பே’ ஆகியப் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டாகின.

சந்திரபோஸின் அற்புத இசை: ஏவிஎம்மின் 150வது தயாரிப்பு படமான ‘மாநகர காவல்’ படத்தில் சிலிர்ப்பூட்டும் தீம் மியூசிக்கையும், அற்புதமான பாடல்களையும் வழங்கியிருந்தார், சந்திரபோஸ். அதில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் என்றால் ’வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை’ எனலாம். மேலும், பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் ‘டெல்லிக்கே ராஜானாலும் பாட்டி சொல்லைத்தட்டாதே’ பாடல், இன்னும் பல கிராமங்களின் திருவிழாக்களில் ஒலிக்கத் தவறுவதில்லை.

சீரியலிலும் இசையமைத்த சந்திரபோஸ்: இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்த சந்திரபோஸ், டிவி சீரியலிலும் கவனம் செலுத்தினார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிம்மதி உங்கள் சாய்ஸ், கலாட்டா குடும்பம், சொந்தம், மங்கை, பொறந்த வீடா.. புகுந்த வீடா என்னும் சீரியல்களுக்கும் இசையமைத்தார், சந்திரபோஸ்.

இப்படி பாட்டுக்கச்சேரி, சினிமா, சீரியல் அனைத்திலும் இசையை மட்டுமே நம்பி பணித்த நாம் பெரும்பாலும் அறிந்திடாத அற்புதமான இசைக்கலைஞன், சந்திரபோஸ்.

30.9.2010-ல் இதே தேதியில் இயற்கை எய்திய அவரை, அவரது இசை வாயிலாக நினைவுகூர்வோம். மிஸ் யூ சந்திரபோஸ்!

Tuesday, December 31, 2024

ஏ. ஆர். ரஹ்மானின் இசை ஆசிரியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட மதன் பாப்.

 

ஏ. ஆர். ரஹ்மானின் இசை ஆசிரியர் மதன் பாப்.

எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

காமெடி நடிகர் மதன் பாபின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையில் ஒரு இசைக்கலைஞர். ஆஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார். 1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார்.

நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, உடன் பிறப்பு, தேவர் மகன், புள்ளக்குட்டிக்காரன், ஜதி மாலை, உழைப்பாளி, நம்மவர், மகளிர் மட்டும், சதி லீலாவதி, பூவே உனக்காக, ப்ரியம், சுந்தர புருசன், கோபுரதீபம், சாச்சி 420, நேருக்கு நேர், ரோஜா மலரே, விவசாயி மகன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், காதலா காதலா, ஜூலி, நீ வருவாய் என, எதிரும் புதிரும், ஆனந்த பூங்காற்றே, உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணுக்குள் நிலவு, தெனாலி, ரிசி, பெண்ணின் மனதைத் தொட்டு, பார்த்தாலே பரவசம், லூட்டி, பிரண்ட்ஸ், அள்ளித்தந்த வானம், காமராசு, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, கிருஷ்ணா கிருஷ்ணா, புன்னகை தேசம், ஜெமினி, வில்லன், யூத், நள தமயந்தி, பிரியமான தோழி, தித்திக்குதே, விஷ்வதுளசி, பம்மல் கே. சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜெய் ராம், ஏபிசிடி, கற்க கசடற, ஐயா, மழை, ஜித்தன், குஷி, ஜெர்ரி, ஆதி, வரலாறு, முதன் முதலாய், மருதமலை, தொட்டால் பூ மலரும், வேல், அறை எண் 305ல் கடவுள், சேவல், ஐந்தாம் படை, பாரமரம், ஆனந்த தாண்டவம், தீ திரைப்படம், எங்கள் ஆசான், சுறா, பெண் சிங்கம், காவலன், மாப்பிள்ளை, பத்தாயிரம் கோடி, சிங்கம் 2, எதிர்நீச்சல், துள்ளி விளையாடு, சாகசம்

ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மனதுக்குப் பட்டதை அசாத்திய துணிவோடு சொன்னவர் எம் ஆர் ராதா!

 

தமிழ்நாட்டில் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும்தான் அந்த அசாத்திய துணிச்சல் இருந்தது.

எம் ஆர் ராதா.

அவரைப்போல ஜாதி மத துவேஷங்களுக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுத்த நடிகர் வேறு எவரும் இல்லை.

எதைப்பற்றியும் கவலைப்படாமல்

யாரைப்பற்றியும் கண்டுகொள்ளாமல்

தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று துணிவோடு சொன்னவர் எம் ஆர் ராதா.

தன்னுடைய ஆணித்தரமான கருத்துக்களை அழுத்தமாகச் சொல்வதற்கு, தான் நடித்த நாடகங்களை பயன்படுத்திக் கொண்டார் அவர்.

ஒரு நாடகத்தில் எம் ஆர் ராதா இப்படிப் பேசுவார்.

“பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே !

நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...” என்று ஆரம்பிக்கும்போது ஒருவர் குறுக்கிட்டுச் சொல்வார்.

“ அய்யா... அவரு நாடாரு இல்ல...”

“நாடார் இல்லயா ? அப்ப இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...”

“அய்யா... அவரு முதலியாரும் இல்ல...”என்பார் கூட்டத்தில் ஒருவர்.

“முதலியாரும் இல்லயா ?

சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...”

“அய்யா... அவரு அய்யரும் இல்ல...”

“என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல ... அய்யரும் இல்லயா...

அப்போ, இப்போதான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா ? அந்தக் காலத்தில ஜாதி கிடையாதா ?

சரிதான்..! இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே...” என எம்.ஆர். ராதாவின் பேச்சு தொடருமாம்..!

ஜாதி மத வேறுபாடுகளுக்கு எதிராக இத்தனை தைரியமாகக் குரல் கொடுத்த எம்.ஆர்.ராதாவின் இந்தத் துணிவு அவருக்குப் பின் வேறு எந்த நடிகருக்கும் வரவில்லை.

நடிகன் ஒரு கருத்தைச் சொன்னால், அதை நாடே கவனிக்கிறது.

அதை உணர்ந்து உருப்படியாக பயன்படுத்திக் கொண்ட ஒரே நடிகர் எம் ஆர் ராதா மட்டும்தான!

Monday, December 30, 2024

பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் (1973)

 

அரங்கேற்றம்(1973)

கத்தியின்றி இரத்தமின்றி கே.பாலச்சந்தர் செய்த சமூக யுத்தம்..!

  • ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்திற்காக வழி தவறி அதன் பிறகு தனது குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு பைத்தியமாக மாறும் ஒரு பரிதாபமான கதாபாத்திரம் தான் அரங்கேற்றம் படத்தின் நாயகியான பிரமிளாவின் கதாபாத்திரம்.
  • கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1973-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்போது மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

கதை:

  • அந்த கிராமத்தில் மிகவும் ஆச்சாரமான ஒரு குடும்பம்.ஆனால் அவர்களுக்கு ஏகப்பட்ட குழந்தைகள்.
  • ஆனால் அந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத அளவுக்கு வறுமை.
  • வறுமையாக இருந்தாலும் அந்த குடும்ப தலைவர் எஸ்.வி.சுப்பையா தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர்.
  • குழந்தைகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, ஆனால் தனது கௌரவத்தை விட மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்.
  • இந்த நிலையில் வீட்டில் வறுமை கண்ட மூத்த மகள் பிரமிளா அப்பாவிடம் போராடி வேலைக்கு செல்ல அனுமதி வாங்குவார்.
  • இதனை அடுத்து அவர் சென்னைக்கு வேலைக்காக செல்வார்.
  • அப்போது தனது மூத்த தம்பியான கமல்ஹாசன் எம். பி. பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டதால் சிபாரிசுக்காக ஒரு பெரிய மனிதரிடம் பிரமிளா செல்வார். அப்போது அங்கு அவரால் சூறையாடப்படுவார்.
  • அதன் பிறகு கமல்ஹாசனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்து விடும்.
  • இதனை அடுத்து அவர் வேறு ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்வார். அந்த இடத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளியால் சூறையாடப்படுவார்.
  • அதன் பிறகு தங்கையின் பாடகி ஆசையை நிறைவேற்ற ஒரு பெரிய மனிதரிடம் செல்வார். அங்கும் அவர் சூறையாடப்படுவார்.அதன் பிறகு தங்கை பாடகியாகி விடுவார்.
  • ஒரு கட்டத்தில் பிரமிளா விபச்சாரியாக மாறி விடுவார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் அவர் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைப்பார்.
  • தம்பி கமல்ஹாசன் ஒரு பக்கம் மருத்துவம் படிக்க, மற்ற தம்பி, தங்கைகள் நன்றாக படிக்க, அப்பா, அம்மா, பாட்டி உள்பட அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, நல்ல உடை என திருப்தியான வாழ்க்கை அவர் செய்த விபச்சார தொழிலால் தான் என்பது குடும்பத்தினருக்கு தெரியாது.
  • இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் தங்கையின் கல்யாணத்திற்காக அவர் ஊருக்கு வருவார்.
  • அப்போது தனது தாயார் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவார்.
  • இந்த நிலையில் தனது தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை தன்னை தேடி வந்த கஸ்டமர்களில் ஒருவர் என்பது அவருக்கு தெரிய வந்து அதிர்ச்சி அடைவார்.
  • இந்த நிலையில் பிரமிளா சென்னையில் விபச்சாரம் செய்து தான் தனது குடும்பத்தை காப்பாற்றி இருப்பார் என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஊருக்கே தெரிய வரும்.
  • அதன் பின் என்ன நடந்தது?
  • கடைசி 20 நிமிடம் பொங்கி எழுந்து பிரமிளா பேசும் வசனங்கள் என்ன?
  • இறுதியாக பிரமிளாவின் கேரக்டருக்கு கிடைத்த பரிதாபமான முடிவு என்ன?

என்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

  • இந்த படத்தின் டைட்டிலிலே முதலில் பிரமிளா என்று தான் போடுவார்கள்.
  • அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
  • கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில் முதல் முதலாக வாலிபராக நடித்த படமிது.
  • அதுமட்டுமின்றி அவருக்கு இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டர் தான்.
  • இந்த படத்தில் கே.பாலசந்தரின் வசனம் அபாரமாக இருக்கும்.
  • கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு சமூக யுத்தத்தையே அவர் தனது வசனம் மூலம் செய்திருப்பார்.
  • இந்த திரைப்படம் 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது.
  • பாலச்சந்தர் இயக்கிய சிறந்த படங்களின் வரிசையில் கண்டிப்பாக இந்த படத்தையும் சொல்லலாம்.

விஜய்காந்த் !

விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்.

"நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட் கேளுங்க" என ஐடியா சொல்ல மோகனோ படுபிஸி. கால்ஷீட் இல்லாமல் திரும்பவும் விஜய்காந்திடம் வர அவர்ரவடிவுக்கரசிக்கு நடித்துக்கொடுத்தப்படம் தான் 'அன்னை என் தெய்வம்'.

கலைஞரின் மருமகன் அமிர்தம். எம்.ஜி.ஆர் காலங்களில் படங்களை இயக்கியவர். ஜெய்சங்கர், மு.க.முத்து படங்களை இயக்கிய அவர் கடைசியாக இயக்கிய படம் 'தூக்குமேடை'. அவர் எண்பது கால இளைஞர்களோடு பணி புரிய ஆசைப்பட்டு விஜய்காந்திடம் ஒரு கதை சொல்கிறார். அந்தக்கதை அவருக்கு பிடித்து விடுகிறது. அப்போது பானுப்ரியா படம் தயாரிக்கக்கேட்க இருவரின் ஆசையையும் நிறைவேற்ற நடித்தது தான் 'சிறையில் பூத்த சின்ன மலர்.'

ஏவிஎம் சகோதரர்களில் எம்.குமரன் மட்டும் தனித்து வந்து படமெடுக்க ஆசைப்பட்டு விஜய்காந்திடம் கால்ஷீட் கேட்கிறார். குமரனுக்காக நடித்துக்கொடுத்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் மறைமுகமாக திரைப்படங்களில் பிரச்சார பீரங்கிகளாய் சில நடிகர்கள் இருந்தனர். ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், டி.ராஜேந்தர், சந்திரசேகர், ராமநாராயணன் இப்படி. இதில் நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேட்க ராம.நாராயணன் இயக்கினார். அதில் விஜய்காந்த் தானும் பங்கேற்பதாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அதற்கு எஸ்.எஸ்.சந்திரனிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கிக்கொள்ள வில்லை. டி.ஆர் இசையமைத்த அந்தப்படம் 'எங்கள் குரல்'.

தாணு இயக்குனராக ஆசைப்பட 'தெருப்பாடகன்', மணிவண்ணன் தயாரிக்க ஆசைப்பட 'சந்தனக்காற்று', ஜெயப்ரதாவுக்கு கர்நாடக எம்.எல்.ஏ ரமேஷ் மூலம் 'ஏழைஜாதி', இயக்குனர் ரங்கராஜ் தயாரிக்க 'தர்மம் வெல்லும்', மணிரத்னத்துக்கு 'சத்ரியன், இளையராஜா-கங்கை அமரனுக்கு 'கோவில் காளை', பழ.கருப்பையாவுக்கு 'பொறுத்தது போதும்', சங்கிலி முருகனுக்கு 'கரிமேடு கருவாயன்', பெரியமருது, பாரதிராஜாவுக்கு 'தமிழ்செல்வன்', அவரது மைத்துனர் இயக்குனர் மனோஜ்குமார் தயாரிக்க 'ராஜ்ஜியம்',.......

தனது கூடவே இருந்த ரசிகர் மன்ற நிர்வாகியான ராமு.வசந்தனை 'தாயகம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கியதும் விஜய்காந்த் தான்.பல வருடங்களாக தனது உதவியாளராக இருந்த எஸ்.கே.சுப்பையாவை தயாரிப்பாளராக்கி அவர் நடித்தப்படம் தான் 'பெரியண்ணா'. அதில் கிடைத்த பணத்தை பணமாக கொடுத்தால் செலவாக்கி விடுவார் என வீடாக வாங்கிக்கொடுத்தவரும் விஜய்காந்த் தான்.

தனது சொக்கத்தங்கம் படத்தை இயக்க சேரன் சம்பளப்பிரச்சினையில் ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பின்றி இருந்த பாக்யராஜை அழைத்து மறுப்பின்றி இயக்க வைத்தார்.

இவ்வளவு ஏன்?.... விஜய்காந்த் நடிக்க வந்த புதிதில் சண்டைக் காட்சிகளுக்காக ஆரம்பக்காலத்தில் மாடக்குளம் தர்மலிங்கத்திடம் சிலம்பம் கற்றுக் கொண்டிருந்தார். தன் சிலம்ப ஆசானையும் விடவில்லை விஜயகாந்த். அவரையும் தயாரிப்பாளராக்கி அவர் நடித்துக்கொடுத்தப்படம் தான்

'ஏமாறாதே...ஏமாற்றாதே.....'

150 படங்களில் நடித்தாலும் பல சிறிய ஆட்களை தயாரிப்பாளராக்கும் தைரியமும், தன்னம்பிக் கையும் விஜய்காந்துக்கு இருந்தது. அவர் ஐநூறு, ஆயிரம் படங்களாவது நடித்திருந்தால்......💗💗