Total Pageviews

Monday, November 14, 2011

2012 ல் உலகம் அழியும் - பைபிள் சொல்கிறதாம்!


2000ல் உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்கள், இப்போது 2012 என்கிறார்கள். பெரிய வித்தியாசம் என்னவென்றால், இப்போது விதவிதமாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பைபிளி'லும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறது என்ற 'ஜெய்ஹிந்த்புரத்'தின் பின்வரும் ஒரு 'ட்வீட்' டைப் பார்த்தபின்தான் இந்த ''7 காரணம் மேட்டரைப்'' பற்றி தெரியவந்தது.

'ஜெய்ஹிந்த்புரத்'தின் ட்வீட்டு.
//7s to end world 2012-Mayan Calendar, Sun Storms, The Atom Smasher, The Bible says..(?), Super Volcano,The Physicists,Slip-Slop-Slap-BANG//

இணையத்தில் இதுபோல நிறைய உலாவுகிறது. கூகிளில் தேடினால் ஆயிரக்கணக்கில் பக்கங்கள் வந்து குவிகின்றன.

2012ல் பூமி அழிந்துவிடுமாம். அதற்கு ஏழு காரணங்கள்:
1) மாயன் காலண்டர்.
2)சூரியப் புயல்.
3)CERN ல் உள்ள லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (இயக்கத்தில் இருந்தால்).
4)பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
5)சக்திவாய்ந்த எரிமலை.
6)இயற்பியலாளர்களின் கணிதம்.
7)புவிகாந்த துருவ மாற்றம்.

பைபிள்னு ஏதோ சொல்லியிருக்கிறார்களே, என்று மீண்டும் கூகிளினால் மேலதிகத் தகவல்கள் கிடைத்தன.

பைபிளில் என்னதான் உள்ளது?
''பூமியில் மிகப்பெரும் போர் நடக்கும். அந்தப் போரின் முடிவில், கடவுள் பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டு பூமியை ஆள்வார், அதற்குப் பிறகு இறந்த அனைவரும் மறு உயிர் பெற்று நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் கெட்டவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள்''. இதுதாங்க!


ஆனால் 2012ல்தான் இந்தப் போர் நடக்கவிருப்பதாக பலபேர் சொல்கிறார்கள். இது நடக்குமா, நடக்காதா? என்று தெரிந்துகொள்ளும் முன்பு பைபிளில் இது தொடர்பாக உள்ள விசயங்களைச் சிறிது 'விம்' பார் போட்டு அலசினால் நல்லது.

யார், எப்போது சொன்னது?
பைபிள் புத்தகங்களில் கடைசியாக உள்ளது 'திருவெளிப்பாடு (அ) வெளிப்படுத்தல்' (Revelation). இதை எழுதியவராகச் சொல்லப்படுபவர் 'ஜான்'. காலம், கி.பி.1 அல்லது 2 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படி 'நாஸ்ட்ராடமஸ்' என்பவர் பல முன்னறிவுப்புகளை சொல்லிவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்களோ, அதேபோல் உலகத்தின் இறுதிநாட்களைப் பற்றி 'கடவுள் தனக்கு சொன்னதாக' இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூறிக்கொள்கிறார். இதில் 17 - ம் அதிகாரத்தில் மேற்கண்ட இறுதிப் போர் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதற்கு முந்தைய அதிகாரங்களில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும் முன்னறிவித்திருக்கிறார் ஜான்.


முந்தைய 16 அதிகாரங்களில் சொல்லப்பட்ட விசயங்கள் நடந்தால் மட்டுமே 17-ம் அதிகாரத்தில் வரும் விசயத்தையும் நாம் நடக்கும் என்று நம்ப முடியும். முதல் பதினாறு அதிகாரத்தில், ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு, புதிய இஸ்ரேல், ஏழு எக்காளம், அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும், நாடுகள் ஒன்றுதிரட்டப்படுதல்.... இப்படி பல விசயங்கள் நடக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நடந்துவிட்டனவா? அல்லது நடந்துகொண்டிருக்கின்றனவா? என்று கேட்டால், அதற்குச் சரியான பதில் இல்லை. அதேநேரம், இவை நேரடியாகச் சொல்லப்பட்டவை அல்ல, சில உருவகங்ள் குறிப்புகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.

முந்தைய 16 அதிகாரங்களில் உள்ள விசயங்களை நிரூபிக்காமல் சும்மா மொட்டையாக "உலகம் அழிந்துவிடும்'' என்று சொல்லிக்கொள்வது அறியாமை. மேலும், மிகப்பெரும் 'போதகர்கள்' கூட நிச்சயம் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் - கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஒரு தொழிலை 2012 வரைக்குமா அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள்?


  • இந்த இடுகையைப் படித்து நீங்கள் மரணபயம் கொண்டால்(!) அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல. 
  •  
  • இந்த மாதிரி விசயங்களையெல்லாம் நம்பி 2011 வரை, எல்லா கேடித்தனமும் செய்துவிட்டு 2012 முதல் நாள் பாவமன்னிப்பு வாங்கிக்கொள்ளலாம் என யாரேனும் முடிவெடுத்தால் அதற்கும் இந்த ஊர்சுற்றி பொறுப்பல்ல! 
  •  
  • ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டில் இருந்து ஆரம்பித்திருப்பதால் இது அவருக்கு எதிரான இடுகை அல்ல.

தகவல்:
வரும் காலங்களில் மேலே கூறப்பட்டுள்ள 7 காரணங்களையும் தனித்தனியாக இடுகையிடலாம் என்று இருக்கிறேன். ஜெய்கிந்த்புரத்தின் 'ட்வீட்'டுக்கு நன்றி. :)



மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
 

No comments:

Post a Comment