நவரத்தினம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டத்துல அந்த படத்தின் இயக்குனர் ஏபி.நாகராஜனிடம் இருந்து வாலிக்கு ஒரு நாள் அழைப்பு வந்தது. எம்ஜிஆர் உங்களைப் பார்க்கணும்னு விரும்புறாரு. அதனால உடனடியா சத்யா ஸ்டூடியோவுக்கு வாருங்கள் என்றார் ஏபி.நாகராஜன். அந்தக் காலகட்டத்துல வாலி எங்கே போனாலும் பாகவதர் என்று அழைக்கப்படுற நபர் கூடவே போவார்.
வாலியும் அவரை அழைத்துக் கொண்டு சத்யா ஸ்டூடியோவுக்குப் போனார். எம்ஜிஆரின் மேக்கப் அறைக்கு வெளியில் பாகவதரை நிறுத்தி விட்டு, அவரை சந்திப்பதற்கு அறைக்குள் போனார் வாலி. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதற்குள் மதிய உணவு வேளை வந்தது. வாங்க சாப்பிடலாம்னு பக்கத்துல இருந்தவரைக் கூப்பிட்டு இலை போடச் சொன்னாரு எம்ஜிஆர்.
நடுவுல எம்ஜிஆர் இருந்தார். வலது பக்கத்துல லதாவும், இடது பக்கத்துல வாலியும் உட்கார, எம்ஜிஆருடைய உதவியாளர் பரிமாறத் தொடங்கினார். அப்போ திடீர்னு எழுந்தார் வாலி. என்ன எழறீங்கன்னு கேட்டார் எம்ஜிஆர். எங்கூட பாகவதர்னு ஒருத்தர் வந்துருக்காரு. அவரு வெளியே இருக்காரு. காசு கொடுத்து அவரை வெளியே சாப்பிட்டு வந்துட சொல்றேன். அப்படின்னு வாலி சொன்னதுதான் தாமதம். எம்ஜிஆர் உடனே தன்னோட இருப்பிடத்தில் இருந்து எழுந்து விட்டார்.
கதவை திறந்துகிட்டு வெளியே போய் இங்கே பாகவதர்னு வாலி கூட வந்தது யார்? அப்படின்னு கேட்க, அந்த பாகவதர் கூனி குறுகி, நான்தான் பாகவதர் என்றார். உடனே அவரது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்த எம்ஜிஆர், லதாவை எழுந்திருக்கச் சொல்லி அந்த இடத்திலே அவரை அமரச் சொல்லி சாப்பாடு பரிமாறச் சொன்னார்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த வாலியின் கண்களிலே கண்ணீர். அண்ணே, மனிதர்களில் நான் எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கேன். நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதர் நீங்க தான் என்று எம்ஜிஆரைப் பார்த்து சொன்னார் வாலி. அவர் அப்படி சொன்னதும் எம்ஜிஆர் அதுக்குக் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா? வழக்கம்போல ஒரு புன்னகைதான்.
No comments:
Post a Comment